புதன், 15 மே, 2013

தன்னம்பிக்கையையும், தைரியமும் தான் தேவை !

வணக்கம்,

எல்லா வருடமும் மே மாதத்தில் வரும் முக்கியமான செய்திகளில் ஒன்று, பன்னிரெண்டாம் மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தான். கடந்த வாரத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. வழக்கம் போல இந்த வருடமும், மாணவிகளே அதிகமாக தேர்ச்சி  பெற்றுள்ளனர். ஆனாலும் இம்முறை ஜெய சூர்யா என்ற மாணவர் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எடுத்துள்ளார். அதே போல தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மறு நாள் செய்திதாள்களில் அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களின் தேர்ச்சிப்பட்டியலைப் பற்றி  போட்டிருந்தனர். அதை படித்து கொண்டிருக்கும் போதே என் கண்ணில் பட்ட ஒரு செய்தித் தலைப்பு, "மாணவி தற்கொலை!"

செய்தியை  விரிவாக வாசித்தப் பின் எனக்கு பகீரென்றது. அந்த மாணவி தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொள்ளவில்லை. பொதுத் தேர்வில் 1200 -க்கு 1000 த்துக்கும் மேல் மதிப்பெண் வாங்கியுள்ளாள். மருத்துவ படிப்புக்கு அந்த மதிப்பெண் போதாது என்பதால் அவளது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாள். அதே போல இன்னொரு மாணவனும் 900 த்துக்கும் மேல் மதிப்பெண் வாங்கியும், பொறியியல் படிப்பில் சேர மதிப்பெண் போதாது என்பதால் தற்கொலை செய்துள்ளான்.

தேர்வில் தோல்வி அடைந்தாலே தற்கொலை செய்து கொள்வது முட்டாள்தனம் என்று சொல்லும் போது,  இவர்கள் ஏன் இப்படி செய்தார்கள்  என எனக்கு தெரியவில்லை.


இந்த தவறுகளுக்கு எல்லாம் காரணம்  என்ன என்று யோசித்து பார்க்கும் பார்க்கும் போது, ஆள்க்காட்டி விரல் சமூகத்தையே காட்டுகிறது. படிப்பும் , மதிப்பெண்ணும் தான் வாழ்க்கை என்று இன்றைய தலைமுறையினருக்கு, குறிப்பாக மாணவருக்கு காட்டியுள்ளது. ஆசிரியர்களும், பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை  நன்றாக இருக்க வேண்டும் என நினைத்து, படிப்பை (அதிக மதிப்பெண்) பெறுவது மட்டுமே, குறிக்கோளாக எண்ணுகின்றனர். +2 பொது தேர்வில் 90%  மேல் வாங்கி விட்டால், நல்ல  பொறியியல் கல்லூரியிலோ, மருத்துவ கல்லூரியிலோ இடம் கிடைத்து விடும். இதனால் இவர்கள் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்று நினைத்து விடுகின்றனர்.

பெற்றோர்கள் நினைப்பதில் தவறேதும் இல்லை என்றாலும், பொது தேர்வில் அதிக மதிப்பெண் வாங்குவதற்காக மாணவர்களை பிழிந்து, வாட்டி எடுத்து, பரீட்சை முடிவதற்குள் ஒரு வழியாக ஆக்கிவிடுகிறனர்.
இதில் பள்ளிக்கூடங்களும் சேர்ந்து கொண்டு, மாலை நேர வகுப்பு, இரவு நேர வகுப்பு, என பத்தாம் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களை பெண்டு நிமிர்த்தி விடுகின்றனர். இவர்கள் இப்படி மன அழுத்ததுடன் படித்து, எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை என்றால், அவர்கள் தவறான முடிவுக்கு தான் போவார்கள்.  

இந்த பிரச்சனைகள் தீர, மாணவருக்கு சரியான கலந்தாய்வு உரையாடல் தேவை. கலந்தாய்வில், "பரீட்சை முடியும் வரை தொலைக்காட்சி பார்க்காதே!,  ஒரு நிமிடம்  கூட வீணாக்காதே! காலை முதல் மாலை வரை படிப்பு ! படிப்பு ! படிப்பு ! என வழக்கப்படுத்திக் கொள்." அது மட்டுமல்லாமல் எந்த கேள்விக்கு எவ்வளவு நேரம் எடுத்து கொள்ள வேண்டும் என்ற பழைய  பாட்டையே அவர்களுக்கு சொல்லாமல், அவர்களுக்கு பரீட்சைக்கு பயமில்லாமல் எழுதுவது பற்றியும், தன்னம்பிக்கையையும் வளர்க்க வேண்டும்.

பொறியியலும், மருத்துவமும் மட்டுமே படிப்பல்ல. அதை தவிர வேறு என்னஎன்ன படிப்புகள் இருக்கிறது என்று சொல்லித்தர வேண்டும்.
ஒருவேளை பரீட்சையில் தோல்வியடைந்தாலோ, மதிப்பெண் குறைவாக இருந்தாலோ, மனம் தளராமல், தைரியத்துடனும், மனோபலத்துடனும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக முடிவு செய்ய வேண்டும் என்பதை மாணவர்களுக்கு சொல்லி தர வேண்டும்.

வெறும் படிப்பையும் மதிப்பெண்ணையும் மட்டுமே குறிவைத்து மாணவர்களுக்கு போதிக்க கூடாது. இவ்வாறு செய்யாமல், அவர்களுக்கு தனி மனித ஒழுக்கத்தையும், தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் போதித்தால், எதிர்காலத்தில் இது போன்ற மாணவர்களின் தேவையில்லா உயிர்பலிகள் குறையும்.      


நன்றி !!!

-பி .விமல் ராஜ் 

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

போதை ஏறும் முன் ஒரு நிமிடம் யோசிக்கவும்...

வணக்கம்,

கடந்த வியாழனன்று (ஏப்ரல் 25) அலுவலகம் முடிந்து வீட்டுக்கு கிளம்ப தயாராகி கொண்டிருந்தேன். நண்பர்கள் சிலர் அலுவலகம் அருகில் உள்ள நாவலூர் பாரில் தண்ணி அடிக்க கிளம்பி கொண்டிருந்தனர். அதற்கு முந்தைய நாளும் சரக்கடிக்க கிளம்பி, எல்லா மது கடைகளும் மூடி இருந்ததால் (மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு) மிகுந்த ஏமாற்றத்துடன் இருந்தனர். அதனால் இன்று கண்டிப்பாக மலையேறி விட வேண்டும் என்ற முடிவில் இருந்தனர். ஆனால் மீண்டும் அவர்களுக்கு எமாற்றமே மிஞ்சியது. மாமல்லபுரத்தில் ஒரு கட்சி பொதுகூட்டம். அங்கே சாதியை பற்றி வாய் கிழிய பேச போவதால், சுற்று வட்டாரத்தில் ஓ.எம்.ஆர் சாலையில் கிட்ட தட்ட 20 கி.மீ  தொலைவுக்கு எல்லா மது கடைகளையும் மூட சொல்லி உத்தரவு. ஆனாலும் தங்களது முயற்சியில் சற்றும் மனம் தளராத என் நண்பர்கள், நேரே கிண்டி வரை சென்று சரக்கு அடிக்கலாம் என்று முடிவு செய்து சென்றுவிட்டனர்.

இவர்களை நினைத்தபடியே நான் பேருந்தில் பயணித்து கொண்டிருந்தேன். இந்த பதிவும் இவர்களை போலவர்களை பற்றிதான்.  மரியாதை  நிமித்தமாக நம்மவர்களுக்கு புனைப்பெயர்களை வைத்துள்ளேன். என் அலுவலக நண்பர்களான சேலம் கைப்புள்ள, திருச்செந்தூர் சாமி,  தூத்துக்குடி 'உத்தம' சீலர்,  பரமக்குடி தண்ணிவண்டி மற்றும் எல்லோரையும் வழிநடத்தி கொண்டு செல்லும் (சரக்கடிக்க தான் ) 'கருப்பு தங்கம்' கோவில்பட்டி பூலோக வாசி.

இவர்களும் எல்லா கார்ப்பரேட் கம்பனியிலும் வேலை செய்யும் பொறியாளர்கள் போலத்தான். பிறந்தது வேறு இடமானாலும், சென்னையை நோக்கி வேலைக்காக வந்தவர்கள். சம்பளம்  வாங்கிய முதல் நாளில், முதல் வாரத்தில் ,"ஐயோ!!! இப்போ நான் எதையாவது வாங்கியே தீர வேண்டுமே .. இந்த தெருவையாவது வாங்க வேண்டுமே!!! " என்று துடிப்பவர்கள். சம்பளத்தில் பாதி பணம்  தண்ணியடிக்கவே செலவாகிவிடும். பரமக்குடி தண்ணிவண்டியும், கோவில்பட்டி பூலோக வாசியும் காசு இருந்தால் வாரம் 7 நாளும், எட்டு முறையாவது சரக்கடிப்பவர்கள். திருச்செந்தூர் சாமி, எப்போவாவது ஒரு முறை. தூத்துக்குடி சீலர் உண்மையிலேயே உத்தமர் தான். ஒவ்வொருமுறை நண்பர்களுடன் பாருக்கு சென்றாலும், வெறும் சைடு டிஷும், மிரிண்டாவின் தங்கை மாசாவையும் மட்டுமே சுவைப்பவர். ( அட ! கூல் ட்ரிங்க்ஸ் தாங்க..)

சேலம் கைப்புள்ள, எல்லோரையும்  விட இளையவர் .வேலையில் இருந்தபடியே பகுதி நேரமாக பொறியியல் படிப்பவர். ஆரம்பத்தில் கட்டுப்பாடுடன் இருந்தாலும், சேர்க்கை சரியில்லாததால், வாரம் ஓரிரு முறை மட்டும் போதையுடன் காணப்படுவார்.  இவர்களிடம் காசு கொஞ்சம் கரைப்புரண்டால் உடனே சொல்வது," Join the Party with Bacardi"  (உயர் ரக ரம்மாம்!!! ).

பகலில் வேலை நேரத்தில் கைப்புள்ள, செமஸ்டர் பரீட்சைக்கு படிக்க வேண்டிய பாடங்களை பற்றி திட்டமிட்டு கொண்டிருப்பார். நானும் இந்த ஒரு மாதம் மட்டும் தண்ணியடிக்காமல் இரு. ரூமிற்கு சென்று 2 மணி நேரமாவது படி. மற்றதை பிறகு பார்த்து கொள்ளலாம் என கூறும் பொது, சரி..சரி..  என மண்டையை ஆட்டிவிட்டு, மாலையில்  "மச்சி..போலாமாடா??" என்று சக குடிமகன்கள் கேட்டவுடன், பேட்-மென் படத்தில் வருவது போல கண் மூடி திறப்பதற்குள் காணாமல் போய் விடுவார். நானும் வேறு வழி இல்லாமல், என் தலையில் அடித்து கொண்டு சென்று விடுவேன்.


நான் இவர்களை, இங்கு அசிங்கபடுத்தவோ, அவமானபடுத்தவோ இந்த பதிவை  போடவில்லை. இந்த பாழாய் போன குடியினால்  இப்படி சீரழியிரார்களே என்ற வேதனை தான் எனக்கு. இவர்கள் மட்டுமல்ல, நம் நாட்டில் பல குடிமகன்களும், இந்த குடியால் அவர்களுடைய வேலைகளை சரியாக செய்ய முடியாமல் தவிக்கின்றனர். பணமும், உடலும் வீணாய் போகிறதே என்று  பலருக்கு புரியவில்லை. வெறும் சொற்ப போதைக்காகவா , நண்பர்களுடைய பலவந்தத்தாலையோ, அல்லது வேறு ஏதும் சொந்த பிரச்சனைக்காகவோ,  இல்லையென்றால்  வெறும் பகட்டுகாகவோ தான் இந்த குடிப்பழக்கம். ஹ்ம்ம்... படிப்பறிவில்லாதவருக்கு புத்திமதி சொல்லி புரிய வைக்கல்லாம். படித்தவருக்கு???

முன்பெல்லாம் குடிகாரர்களை ஒரு கேவலமாக பார்ப்பார்கள். ஆனால் இன்று, நான் குடிக்க/புகைக்க மாட்டேன் என்று சொன்னாலே, ஏதோ ஒரு வித்தியாசமான ஜந்துவை பார்ப்பது போல பார்க்கிறனர். இந்த பழக்கங்கள் இல்லாதவர்களிடம், " நீயெல்லாம் என்னத்துக்கு உயிரோட இருக்கே??? " என்று என்னிடம் கேட்டவர்களும் உண்டு.  

"குடி குடியைக் கெடுக்கும். குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது... " என்பதை வக்கணையாக படித்து விட்டு பாரில் உட்கார்ந்து கொண்டு 'ஒன்மொர்  லார்ஜ் 'கேட்கும் படித்த குடிமக்களுக்கு என்ன சொல்ல ????

இவர்களுக்கெல்லாம் எத்தனை தடவை முகேஷ்-க்கு நடந்ததை போட்டு காட்டினாலும் திருந்த மாட்டார்கள். முகேஷ் பற்றி தெரியாதவர்கள், அருகில் உள்ள திரையரங்கிற்கு சென்று படம் ஆரம்பிக்கும் முன்னால் போடப்படும் "புகை மற்றும் போதையினால்  உண்டாகும் தீங்கு" பற்றிய செய்தி சுருளை பாருங்கள், புரியும்.

"உன்னால் செய்ய முடிந்தை எல்லாம் நானும் செய்வேன். என் திருப்திக்காக/ சந்தோஷத்திற்காக தண்ணியடிக்கிறேன், உனக்கு என்னடா வந்தது????" என்று வரிந்து கட்டுபவர்களுக்கு என்னுடைய ஒரே பதில். என்னால் செய்ய முடிந்த ஒன்று, அது உங்களால் கண்டிப்பாக செய்ய முடியாது. இரத்தம் மற்றும் உடலுருப்பு தானம் செய்வது தான். ஊர் பேர் தெரியாதவனுக்கு நீங்கள் கொடுக்க வேண்டாம்.  மிகவும் வேண்டியவருக்கு கொடுக்க முடியாமல் போகும் போது தான் அதன் அருமை உங்களுக்கு புரியும். நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் உங்கள் கண்ணும்,உடலுருப்பும்  வீணாக மண்ணுக்கோஅல்லது தீயிற்கோ தான் இரையாக போகிறது...

குடிபழக்கத்தினால் இறந்து விடுவார்கள், நோய் வாய்ப்பட்டு கிடப்பார்கள், குடும்பம் சீரழியும் என்றுதான் எல்லோரும் சொல்லுவார்கள் .எனக்கு தெரிந்தவரை இந்த மேலான கருத்தை எந்த திரைபடங்களிலும் சொன்னதாக தெரியவில்லை. யாரவது எழுத்தாளர்கள் வேண்டுமானால் பதிவு செய்து இருக்கலாம்.

இந்த பதிவைப் படித்த பின் நீங்கள் சத்தியமாக திருந்தி விட மாட்டீர்கள்  என்று எனக்கு நன்றாக தெரியும். ஆனாலும், என் மன நிம்மதிக்காகவும், யாரவது ஒருவர் இதை படித்து ஒரு நிமிடம் யோசித்துவிட்டு ,"ச்சே.. ஆமாம். நம்முடைய உடலுருப்பு யாருக்கும் கொடுக்க முடியாது இல்ல..." என நினைத்தாலே எனக்கு போதுமானது.

இதையெல்லாம் படித்து விட்டு என்னை கெட்ட வார்த்தையில் திட்டினாலும், சண்டையிட்டாலும் பரவில்லை. என் பயமெல்லாம்,  நம்மை பற்றி வலைப் பதிவில் வந்து விட்டது என்று கூறி சரக்கடிக்க என்னிடமே, Join the Party with Bacardi  என ட்ரீட் கேட்டால் என்ன செய்வது என்றுதான் யோசித்து கொண்டிருக்கிறேன்...


நன்றி !!!

-பி .விமல் ராஜ் 

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

தொலைக்காட்சி சேனல்கள் என்ன காட்டுகிறது ?

வணக்கம்,

நம்மில் பலருக்கு பொழுதுபோக்கு, தொலைக்காட்சி பார்ப்பது தான். அந்த தொலைக்காட்சி சேனல்களில் என்னென்ன காட்டுகிறார்கள் என்பதை பற்றி இங்கு பகிர்கிறேன். தொலைக்காட்சியில் நாம் பார்ப்பது செய்திகள், நெடுந்தொடர்கள், விளையாட்டு போட்டிகள், திரைப்படங்கள், நகைச்சுவை காட்சிகள் என பட்டியல் அவரவர் விருப்பதிற்கேற்ப நீள்கிறது. அதை பற்றி ஒவ்வொன்றாக இங்கு காண்போம். புதிதாக சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும், என்னுடைய எண்ணங்களை உங்களிடம் கொட்டித் தீர்ப்பதற்க்காகவே பதிவு செய்கிறேன்.

தொலைக்காட்சி சேனல்கள் 90-களின் ஆரம்பம் வரை, அரசாங்கத்தையே நம்பியே இருந்தது. அதில் மக்களுக்கு பயன்படும் வகையில் அறிவியல் நிகழ்ச்சி , குழந்தைகளுக்கான நிகழ்ச்சி, மாணவருக்கான நிகழ்ச்சி என்று  ஒளிப்பரப்பினர். பின்னர் தான் தனியார் தொலைக்காட்சி சேனல்களின் வரவால் அவை ஒதுக்கப்பட்டன. இன்று பல தனியார் தொலைக்காட்சி சேனல்கள் , பணம் சம்பாதிக்கும் எண்ணத்தில், கண்டபடி நிகழ்சிகளை ஒளிப்பரப்புகின்றனர்.

முதலில் செய்திகள். நாட்டுநடப்பை மக்களுக்கு கொண்டு செல்வதற்கு தான் செய்திகள். ஒவ்வொரு சேனலிலும்  ஒவ்வொரு விதமாக செய்திகள் வாசிக்கும் போது எது உண்மை, எது பொய் என்று மக்களுக்கு தெரியவில்லை. இப்போதுதான் ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி சேனல் இருக்கிறதே! ஒவ்வொன்றிலும் அவர்கள்கொள்கைக்கு தகுந்த படி செய்திகளை மாற்றி மாற்றி சொல்கின்றனர். ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும் போது அந்த கட்சி தலைவர்/தலைவியின் புராணம் பாடும் செய்திகளும், அதுவே அவர்கள் எதிர்கட்சியாக இருந்தால், ஆளும்கட்சிக்கு அறிக்கை விடும் செய்திகள் தான் சொல்கின்றனர். இதை தான் எல்லா கட்சி சேனல்களும் செய்கிறது.

எந்த செய்தியை காட்ட வேண்டுமோ அதை காட்டாமல், தேவையில்லா குப்பை செய்திகளையும், விளம்பரங்களையும் காட்டி அவர்கள் மதிப்பை அவர்களே குறைத்து கொள்கின்றனர். போலிச்சாமியாரின் சில்மிஷங்களை ரகசிய கேமராவில் பதிந்து, நொடிக்கு ஒரு முறை காட்டியும், அவர்கள் வாங்கி வெளியிட்டுள்ள திரைப்படம் திரையரங்கை விட்டே ஓடினாலும், 'வெற்றி நடைபோடுகிறது ' என்று விளம்பரம் செய்து அவர்களது  டி .ஆர்.பி. ரேட்டிங் -ஐ (T.R.P Rating) ஏற்றி கொள்கின்றனர்.  

நாட்டில் விண்கலம் புதிதாக விண்ணில் செலுத்தப்படும் போதும், நம் மாநிலத்தில் ஒருவர் உலக அளவில் விருது வாங்கினர் என்றோ, அறிய அறிவியல் கண்டுப்பிடிப்பை பற்றியோ அடிக்கடி போட்டுக்காட்டுவதில்லை.

அடுத்து தொலைக்காட்சி நெடுந்தொடர்ககளை  எடுத்து கொண்டால், அதற்கு திரைப்படங்களே பரவாயில்லை என்று கூறலாம். எல்லா தொடரிலும் நாயகனுக்கோ, நாயகிக்கோ ஒன்றுக்கும் மேற்பட்ட தாரங்கள் இருக்கும். அல்லது பெண்களே,பெண்களைப்பற்றி  தவறாக வஞ்சிப்பதும், சூழ்ச்சி செய்து குடும்பத்தை  குலைப்பதும் தான் நடக்கிறது. பக்தி தொடர்கள், மேன்மேலும் மக்களின் காதுகளில் பூ சுற்றி கொண்டே போகின்றனர். அந்த அளவுக்கு மூடநம்பிக்கைகளை கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் விதைக்கின்றனர்.

தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சில விஞ்ஞான நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பலாம். அது மாணவருக்கும், மற்றவருக்கும் பயன்படுமாறும் செய்யலாம். மொழியின் சிறப்பை அறியும் வகையில் புதிதாக விளையாட்டு போட்டிகளை நடத்தி ஒளிப்பரப்பலாம். சிறுவர் சிறுமியருக்காக இதிகாச புராணங்களையும்,சில நீதி கதைகளையும் பற்றி பொம்மை (கார்ட்டூன்) படம் போட்டு காட்டலாம். 

அடுத்து, சில நாட்களாக எல்லா சேனல்களிலும் பிரபலமாகி வரும், 'ரியாலிட்டி ஷோக்கள் ' (Reality Show).  சூப்பர் சிங்கர் , சூப்பர்  டான்சர் , சூப்பர் டைரக்டர் , சூப்பர் காமெடியன்  என  பல நிகழ்ச்சிகள் உள்ளது. இவை மக்களின் திறமைகளை வெளி கொண்டுவருவதை விட, சேனல்களுக்கு பணம் ஈட்டித்தான் தருகிறது. மக்களுக்கு பண மோகம் அதிகமாக இருப்பதை அறிந்து, முன்பெல்லாம் விளையாட்டு போட்டிகளில் ஆயிரக்கணக்கில் பரிசு தந்தவர்கள், இப்போது  லட்சங்களிலும் கோடிகளிலும் தான் புரள்கிறார்கள். பொதுமக்களை அழைத்து விளையாடாமல், பிரபலங்களை அழைத்து பரிசு பணத்தை வாரியிரைத்து ,விளம்பரம் செய்து வருவாயை பெருக்கி கொள்கிறார்கள்.

இவை எல்லாவற்றையும் விட என்னை மிகவும் வெறுப்பெற்றுவது,
"குற்றங்களும் அதன் பின்னணியும், நடந்தது என்ன? " என்று உப்பு சப்பில்லாத விஷயத்தை பெரும் பீடிகையுடன் சொல்வது தான். கடைசி வரை சொல்ல வந்ததை சொல்லவே மாட்டார்கள். அதை விட,"உண்மையை சொல்லும் " ஓர் உன்னத (?!?) நிகழ்ச்சியில், குடும்ப பிரச்சனைகளை  இரு பிரிவினரும் பேசி, திட்டி, சண்டையிட்டு நம்மையும்  கடுப்பாக்கி வைப்பார்கள். அதில், பஞ்சாயத்தை தீர்க்க வரும் 'பெண் நாட்டமை', "அவன் உன் மனைவியை தள்ளிக்கொண்டு போய்விட்டானா??? பரவாயில்லை. நீ அவன் மனைவியுடன் இரு...   " என்ற தோணியில் மத்யத்சம் பேசுவது கொடுமையின் உச்சம். சில சமயங்களில் தாலியை (நிகழ்ச்சியிலேயே )கழட்டி தூக்கியெரிந்து விட்டு  சென்றும் உள்ளனர். பணம் படைத்தவர்களிடம்  இந்த மாதிரி பிரச்சனையே இல்லாதது போல, பெரும்பாலும் அடித்தட்டு மக்களை குறிவைத்தே இந்த நிகழ்ச்சிகள் நடத்தபடுகிறது.

அடுத்து 'கருத்து விவாதம்' நடக்கும் மேடை. முக்கிய பிரச்சனைகளை விட்டுவிட்டு ,நடிகை வீட்டை விட்டிவிட்டு ஓடியதையும், அழகிய பெண்களையும்,ஆண்களையும் வைத்து ஒப்பிடுவதும் தான் முக்கிய விவாதங்களா?  சில நேரங்களில், நல்ல தலைப்புகளையும் அவர்கள் தேர்ந்தெடுத்து கையாள்வதும் கட்டாயம் இங்கு பதிய வேண்டியது தான். 
     
திரைப்படங்களும், அடிக்கடி போடப்படும் நகைச்சுவை காட்சிகளும் தான் சிறிது நேரம் தொலைக்கட்சியில் பார்க்க முடிகிறது. சில போராட்டங்களுக்கு பின், தொலைகாட்சியில் போடப்படும் படங்களில் ஆபாச காட்சிக்களும், வன்முறை காட்சிகளும் , மது அருந்தும் காட்சிகளும் நீக்கபட்டு காண்பிக்கபடுகின்றன. பண்டிகை நாட்களில் ஒவ்வொரு சேனலிலும் 'இந்திய தொலைக்கட்சிகளில் முதன்முறையாக ' என்று போடும் போது நமக்கு தான் எதை பார்ப்பது என்று திணறல். இங்கே கூத்தாடிகள் இரண்டுபட்டால் மக்களுக்கு தான் கொண்டாட்டம். 

'தமிழை வளர்கிறோம் பேர்வழி'  என்ற பெயரில் உள்ள சேனல் , முழுக்க முழுக்க  தமிழ் கலாச்சாரத்துடனும், மக்களுக்கு பயனுறும் வகையிலும் நிகழ்சிகளை தமிழிலேயே  பேசி ஒளிப்பரப்புகிறது. இவர்களும் செய்திகளை அவர்கள் கட்சிக்கு சாதிக்கு ஆதரவாகவே ஒளிப்பரப்புகிறார்கள். இவர்களுடைய 'தலைவர் அய்யா' பேசும் பொது கூட்டங்களை ஒளிப்பரப்பும் நிகழ்ச்சியை பார்த்தாலே நாட்டில் சாதி வெறி சண்டைகள் வந்துவிடும்.


அரசாங்கம் நடத்தும் பொது வேலைநிறுத்ததின் போது, எல்லா வணிக நிறுவனமும், தனியார்/ அரசு நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும். ஆனால் சேனல்களுக்கு மட்டும் அன்று விடுப்பு இல்லை. வழக்கமாக போடும் பழைய படங்களை போடாமல் 'விடுமுறை தின கொண்டாட்டம்' என்று நட்சத்திரங்களின் திரைபடங்களை போட்டு வருவாய் தேடி கொள்வார்கள். மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தம், அவர்களுக்கு மட்டும் இல்லையா?!?!?!

விளையாட்டு - எவனோ ஒருவன் விளையாடி சம்பாதிப்பதை , தேசத்திற்காக என கூறி விளையாட்டே கதி என்று உள்ளவர்களும் உண்டு. கிரிக்கெட் மட்டும் என்ன இந்தியவின் பண்டைய காலத்து விளையாட்டா?? அதை பெரிதாக காட்டி, விளம்பரம் செய்து கோடிகளில் புரளும் வியாபாரமாக மாற்றியது தொலைகாட்சிகள் தான். தேசிய விளையாட்டை நேரடியாக ஒளிப்பரப்பமல், விளம்பரம் செய்யாமல், அந்நிய தேசத்து மட்டை விளையாட்டை மட்டும் காட்டுவது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை. இதனால் கிரிக்கெட்    பார்ப்பது/ ஊக்குவிப்பதோ தப்பு என்று  சொல்லவில்லை. அதை போல எல்லா விளையாட்டையும்  ஊக்குவித்தால் நல்லது என்பது என் கருத்து.    

இவ்வளவு சொத்தை சொல்கிறேனே என்பதற்காக,  இந்த தனியார் தொலைக்காட்சி சேனல்களையெல்லாம் வணிக ரதியாக பணமே சம்பாதிக்க கூடாது என்று சொல்லவில்லை. அவர்களும் வியாபாரிகள் தானே! மக்களுக்கு உதவுவது போலவும், மொழியை வளர்ப்பது போலவும் , சில பல நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பினால்  நன்றாக இருக்கும் என்பதே என் வாதம்.     

நன்றி !!!    

-பி .விமல் ராஜ் 

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

பொறியியல் படித்து என்ன பிரயோஜனம் ???

வணக்கம்,

நாள் : ஏப்ரல் 5. காலை 8:30 மணி. அலுவலக பேருந்தில் எப்போதும் போல தூங்கி கொண்டே பயணித்து கொண்டிருந்தேன். தீடீரென முழிப்பு வர, தனியார் பண்பலை வரிசையில் (FM) ஒரு முக்கிய தலைப்பை பற்றி பேசி கொண்டிருந்ததை கேட்டேன். தலைப்பு என்னவென்று பார்த்தால், நாட்டில் பல தரமில்லாத பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பது பற்றி தான். அட ! இதை கேட்டவுடன் இதை பற்றியே ஒரு பதிவு போடலாமே என்று எண்ணம் தோன்றியது. பாதி தூக்கத்தில், தொகுப்பாளர் ' அஜய் விக்னேஷ்' பேசியதையும், என்னுடைய சில கருத்துகளையும் உங்களிடம் பகிர்கிறேன்.

சுமார் 6 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் வெறும் 231 சுயநிதி கல்லூரிகள் தான் இருந்தது. ஆனால் இன்றோ, 570 சுயநிதி கல்லூரிகளும் 37 பல்கலைகழங்களும் இருக்கின்றது. இந்த ஏழு ஆண்டுகளில் கிட்டத்தட்ட இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட  தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நூறுக்கும்  மேற்பட்ட கல்லூரிகள் அனுமதி கோரிக் காத்துள்ளன. பொறியியல் கல்லூரி மட்டுமல்லாமல் புதிதாய் முளைக்கும் சில கலைக்கல்லூரிகளும் இதே நிலைமையில் தான் உள்ளது.

இதில் பெரும்பாலான கல்லூரிகள் தரமானதாக இருப்பதில்லை. போதிய வசதிகள் கிடையாது. திறமையான விரியுரையாளர்கள் கிடையாது. வசதியுள்ள ஆய்வகங்கள் இருப்பதில்லை. இங்கு படிக்கும் மாணவர்கள் பலர் கல்லூரிக்கு அருகில் உள்ள சுற்றுவட்டாரத்திலிருந்து வருகின்றனர். சிலர் பல்கலைகழக ஆலோசனைப்படி வந்து சேர்கின்றனர். அவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதில்லை. அதனால் அவர்கள் பெயரளவில் மட்டும் பொறியியல் படித்தவர்களாக இருகின்றனர். 15/ 20 ஆண்டுகளுக்கு முன்னால் பொறியியல் மாணவர் என்றாலோ, அல்லது அரசு/தனியார் நிறுவனத்தில் பொறியியலாளர்  என்றாலோ தனி மதிப்பு தான். என் மகள்/மகன் பி.ஈ (B.E)  படிக்கிறாள்(ன்) என பெற்றோர்கள் பெருமையுடன் சொல்வார்கள்.

ஆனால் இப்போது ஊருக்கு 10 சுயநிதி கல்லூரிகளை திறந்து வைத்து, அதுவும் ஓர் கலைகல்லூரி படிப்பை போல ஆக்கிவிட்டனர். இந்த கல்லூரிகளில் படித்து விட்டு வருடந்தோறும் 10 லட்சம் பேருக்கும் அதிகமானோர் வருகின்றனர். அதில் ஒரு சிலர் மட்டும் வேலை வாய்ப்பு பெற்று தப்பிவிடுகின்றனர். முக்கால்வாசி பேர் தரமான பொறியியல் கல்வி  இல்லாததாலும், சரியான உரையாடல் திறன் இல்லதாதலும் (BPO) பி.பி.ஒ-விலும் மற்ற சிறிய நிறுவனங்களிலும் தங்கள் படிப்புக்கு சம்பந்தமில்லாத வேலையில் போய் சேர்கின்றனர். ( ஹ்ம்ம்! ஒரு சிலர் நல்ல கல்லூரியில் சேர்ந்தும், சரியாக படிக்கத்தால் சரியான வேலையின்றி இருக்கின்றனர் !!!)

அதுமட்டுமல்லாமல் இப்போதெல்லாம் எந்த வேலைக்கும் எந்த கல்வித்தகுதியும் (பட்டப்படிப்பும்) பரவாயில்லை என்ற  நிலை வந்துவிட்டது.


எனக்கு தெரிந்த வரை மருத்துவ மாணவர்கள் மட்டும் தான் படிப்புக்கு பிறகு, அவர்தம் துறையில் போய் வேலை செய்கின்றனர். பொறியியல் படித்த மாணவரும், கலைகல்லூரி மாணவரும் சேர்ந்தே எல்லா வேலைவாய்ப்புக்கும் வருகின்றனர். கிட்டத்தட்ட ஒரே  அளவு சம்பளமும் சிலர் வாங்குகின்றனர். அதில் பெரிதாக  தப்பு ஏதும் இல்லை என எல்லோருக்கும் தெரியும் . ஒரு வளமான சமுதாயம் வளர இந்த நிலை தேவைதான். எல்லா பொறியியல் மாணவருக்குமுள்ள வாதம் என்னவென்றால், எல்லா வித பட்டதாரிகளும்  ஒன்றாக வேலை செய்து சம்பளமும் வாங்க, நாம் மட்டும் ஏன் கஷ்டப்பட்டு கடன் வாங்கி,  நான்கு வருடம் படிக்க வேண்டும்? நாம் மட்டும் ஏன் அதிகமாக கல்லூரி கட்டணம் செலுத்த வேண்டும்? பேசாமல், நாமும் இளங்கலையோ (B.A), அறிவியல் இளங்கலையோ(B.Sc)  படித்து விட்டு தபால் முலமாக ஒரு முதுகலை படிப்பை படித்து இருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது. என் வீட்டில் "நீயெல்லாம் இன்ஜினியரிங் படித்து என்ன பிரயோஜனம் ??? " என்று திட்டுவது ஞாபகம் வருகிறது.

திருமண பத்திரிக்கையில் மணமகன்(ள்) பெயருடன் பி.ஈ /பி.டெக் என்று போட்டு கொள்ளவும், வரதட்சணையாக 50 பவுன் நகைக்காகவும் ,மாமனார் வீட்டில் கார் வாங்கி தர சொல்லவும் தான் பொறியியல் படிப்பு உபயோகமாக இருக்கிறது.

நாம் எவ்வளவோ பொருமினாலும் சில பொறியியல் படித்த மாணவர்கள், உயர்ந்த நிறுவனத்தில் லகரங்களில் சம்பளம் வாங்குவதை யாராலும் ஓப்பு கொள்ளாமல் இருக்க முடியாது. 

இதையெல்லாம் பண்பலையில் கேட்டு கொண்திருந்த நண்பர் ,
"போதும் பா!, -(FM) எஃப். எம் - ஐ  நிறுத்த சொல்லுங்க. காலங்காத்தாலேயே வெறுப்பபேத்துறது போல இருக்கு .. " என்று நொந்து கொண்டார் .

தலைப்பு முழுசாக முடியும் முன், அலுவலகம் வந்ததால், பேருந்தில் உள்ள அனைவருக்கும் நமூட்டு சிரிப்புடன் இறங்கி சென்றோம். 
      

நன்றி !!!    

-பி .விமல் ராஜ் 


ஞாயிறு, 31 மார்ச், 2013

இடஒதுக்கீடுக்கு இடம் இல்லை !!!

வணக்கம்,

"சாதிகள் இல்லையடி பாப்பா! " 
- பாரதி 

" சாதி இரண்டொழிய வேறில்லைசாற்றுங்கால் 
நீதி வழுவா நெறிமுறையின் -மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ளபடி"    
ஒளவையார்

இவையெல்லாம் நாம் பள்ளிக்கூட வகுப்புக்களில் படித்ததோடு சரி.

சுதந்திர காற்று நம் நாட்டில் வீச தொடங்கிய நாள் முதல் இருப்பது இந்த சாதி/ மத பிரச்சனையும், சாதிவாரியிலான இடஒதுக்கீடும் தான். ஆரம்ப காலத்தில் இந்தியாவில் ஏற்றதாழ்வு அதிகமாக இருந்து வந்தது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எந்த வித சலுகைகளும், அடிப்படை வசதி வாய்ப்பும் கூட கிடைக்கவில்லை.எல்லா வகையிலும் உயர்ந்த சாதி மக்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டது. நம் நாடு விடுதலை பெற்ற பின்னரும் இதே நிலைமை தான் நீடித்தது.

இதனால் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் உட்பட பல தலைவர்கள்  பிற்படுத்தபட்டோருக்குக்காக போராடினர். இதன் முலம் எல்லார்க்கும்  எல்லா சலுகைகளும்,வாய்ப்பும் கிடைக்கும் என எண்ணி, 'சாதிவாரியிலான இடஒதுக்கீடு ' என்ற சட்ட முறையை கொண்டு வந்தனர். அன்று முதல் இன்று வரை, கல்விப்படிப்பு, வேலைவாய்ப்பு, விளையாட்டு, அரசியல் என எல்லா துறைகளிலும் இடஒதுக்கீட்டில் எல்லா வாய்ப்புகளுமே உரிமைகளும் அளிக்கப்படுகிறது.

அன்றைய காலகட்டத்தில் பிற்படுத்தபட்டவருக்கு அங்கீகாரம் கிடைக்க இடஒதுக்கீடு ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது.இன்றோ,நிலையே தலைகீழ். கிட்டத்தட்ட 50/60 ஆண்டுகளாக இந்த சட்ட முறையினால் பல நலிந்த பிரிவினரும், சாதியால் பிற்படுத்தபட்டவரும், நிறைய சலுகைகளும், வாய்ப்புகளும் பெற்றுள்ளனர். ஆனால் இப்போதும் இடஒதுக்கீடு  தேவையா என்ற கேள்வியே என் மனதில் எழுந்துள்ளது. மற்ற சாதியினருக்கும் கிடைக்க வேண்டிய வாய்ப்பை  பிற்படுத்தபட்ட சாதியினரே பறித்து கொள்ளும் நிலை வந்துவிட்டது. திறமையை பார்க்காமல் சாதிப்பிரிவை  பார்த்து வாய்ப்பு தருவது என்பது எந்த வகையில் நியாயம்?

இது எப்படி நடக்கிறது என்று பார்ப்போம். உதாரணமாக கல்வித்துறையை எடுத்து கொண்டால், உயர்ந்த சாதியை  சேர்ந்த மாணவர் ஒருவர் பள்ளி படிப்பில் 90 விழுக்காடு எடுத்தபோதிலும், 80 விழுக்காடு எடுத்த பிற்படுத்தபட்ட சாதியை  சேர்ந்த மாணவருக்கே கல்லூரியில் முன்னுரிமை என்ற நிலை வந்து விட்டது.

அரசாங்க வேலைவாய்ப்புகளிலும்  இப்படி தான் நடக்கிறது. ஒரு அரசு நிறுவனத்திற்கு நூறு பேர் தேவை என்றால், ஒவ்வொரு சாதி பிரிவினருக்கும் தனித்தனி சதவிகிதத்தில் ஆட்கள் தேர்ந்தெடுக்கபடுகிறார்கள். அரசியலிலும் இதே கதை தான்.

இந்த சாதிவாரியிலான இடஒதுக்கீடு ஏன் என்று கேட்டால், எல்லா சாதியினருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கருத்தையே முன்வைக்கிறார்கள். இந்த சாதி ரீதியிலான அரசியலையே காட்டுகிறது. தகுதியானவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் சாதியை பார்த்து  இடஒதுக்கீடு என்பது தேவையில்லாதது.

சாதி இடஒதுக்கீடுப்பற்றி  பல கிண்டல்,நையாண்டிகளும் இணையதளதிலும், சமூக வலைத்தளங்களிலும் உலா வருகின்றன . இந்நிலை நீடிக்குமாயின், கிழே படத்தில் உள்ளது போல் நம் நாட்டில் எதிர்காலத்தில் வந்தாலும் ஆச்சிர்யபடுவதற்க்கில்லை .



நாம் நாட்டில் இன்றைய சூழலில் அனைத்து தரப்பினரும் கல்விபயின்று நல்ல வேலைக்கு சென்ற  போதிலும், ஒரு சில கிராமங்களில் இன்றும்  பிற்படுத்தபட்ட சாதியை சேர்ந்தவருக்கு சமமான /சரியான வசதியும், வாய்ப்பும், உரிமையும் கிடைப்பதில்லை என்பது மறைக்க முடியாத உண்மை.  இன்றளவிலும் சாதியை காட்டி கல்வியறிவு கூட கிட்டாத நிலையில் தான் நம் நாடு உள்ளது. இந்த சாதி கொடுமைகளை களைந்து, அவற்றை சீர் செய்ய சட்டங்களை கொண்டு வந்தாலே போதும், இடஒதுக்கீடு பற்றி பேசவே தேவை இல்லை. அரசு எல்லாருக்கும் எல்லா வசதியும், உ ரிமையும் திறமைக்கு ஏற்ப வாய்ப்பும் கிடைக்க வழி செய்து  கொடுத்தாலே தரமான, வளமான சமுதயம் அமையும்.




நன்றி !!!    

-பி .விமல் ராஜ் 

பி.கு : பதிவை படித்த பின் தங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டம் (comment) இடுமாறு கேட்டு கொள்கிறேன்.

ஞாயிறு, 24 மார்ச், 2013

புதிய விடியலை நோக்கி...

வணக்கம் !!!

சில தினங்களாக எல்லா ஊடகங்களிலும் முதன்மை செய்தியாக இருப்பது இலங்கை தமிழர்கள் பிரச்சனையும், தமிழக மாணவர்களின் போராட்டமும் தான். ஆளாளுக்கு அறிக்கை விட்டுக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் நானும் எனது கருத்துக்களை பகிர விரும்புகிறேன்.

2009-ல் இலங்கை அரசின் கொலைவெறி தாக்குதலால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெடிகுண்டு தாக்குதலில் பலியானார்கள். பலஆயிரம் பேர் காயங்களோடு இந்தியாவிற்கு அகதிகளாக வந்தனர். பல ஆயிரம் பேரை இலங்கைப்படையை சேர்ந்த வீரர்கள் வெறியர்கள், ஈழத்தமிழர்களை நிர்வாணபடுத்தி சித்திரவதை செய்து இரக்கமே இல்லாமல் கொன்று குவித்தனர். அதை நாமும் சேனல் 4 உதவியுடன் பல காணொளிகளை  நாமும் பார்த்துள்ளோம்.

இதைத்தவிர, அடிக்கடி இலங்கை கடற்படையினரால் நாகை, ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கி தாக்குதலும், அவர்தம் மீன்பிடி வலைகளை அறுத்தும்,சிறைபிடித்தும், அவர்களின் வாழ்வாதாரத்தை நாசம் செய்தும் விடுகின்றனர்.


இவ்வளவு போர்க்குற்றங்களை செய்தபின் வீரன் வேலுபிள்ளை பிரபாகரனை சூழ்ச்சி செய்து கொன்று, போரில் வென்றுவிட்டதாக மார்தட்டி கொள்ளும் சிங்கள வெறியர்கள், போர் முடிந்த பின்பும் ஈழ மக்களை பெண்கள், குழந்தைகள், எனவும் பாராமல் சித்திரவதை செய்து கொன்று குவிக்கிறனர். 

இத்தகைய போர்க்குற்றங்களையும் அராஜகங்களையும்  நிறுத்தக்கோரி தமிழக மக்களும், தமிழ் அமைப்பினரும் தமிழக அரசும் பலவித போராட்டங்களை நடத்தியுள்ளனர். மேலும் ஐ.நா சபையின் வாயிலாகவும் இந்த கொடூர செயல்களை தடுக்க முயற்சித்து  ஒவ்வொரு முறையும் தோல்வியே அடைந்துள்ளனர். மத்திய அரசோ இதைப்பற்றி கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. இலங்கை  உள்நாட்டு விஷயத்தில் நாம் ஓரளவு தான் தலையிட முடியும் என்றும், வெளியுறவு அமைச்சர் இலங்கையில் பேச்சுவார்த்தையில் உள்ளார் என்றும், திரும்ப திரும்ப ஒரே பதிலை தான் சொல்கின்றனர்.                                      

இவர்கள் தான் இப்படி என்றால், தமிழக அரசு இன்னும் மோசம். கடந்த ஆட்சியின்போது,  இலங்கை பிரச்னைக்கு  ஒரு தீர்வுக்கு வராவிட்டால் மத்திய அரசிடமிருந்து ஆதரவை  திரும்ப பெற்று கொள்வோம் என பூச்சாண்டி காட்டியதுடன் சரி. மக்கள் நம்புவார்கள் என எண்ணி ஒரு நாள் (3 மணி நேர) உண்ணாவிரத போராட்ட நாடகமும் நடத்தி, இவர்கள் சொன்னதால் இலங்கை அரசு போரை நிறுத்திவிட்டதாக சொல்லியும்  விளம்பரத்தை தேடி கொண்டனர். இப்போதுள்ள ஆட்சியிலும் பழிவாங்கும் படலத்தை தவிட வேறு எதுவும் இவர்கள் செய்ததாக தெரியவில்லை.

இந்த இனப்படுகொலைகள் கிட்டத்தட்ட 30/40 ஆண்டுகளுக்கு மேல் நடந்து வருகிறது. பல பிரதமர்களும், முதலமைச்சர்களும் வந்து சென்றாலும் உருப்படியாக ஒன்றும் நடக்கவில்லை. இனப்படுகொலைகள் காரணமாக அவ்வபோது சில பேச்சாளர்களை இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினார்கள் என கூறி கைது செய்தது தான் மிச்சம். எனக்கு இருக்கும் சந்தேகம் என்னவென்றால் எந்த அரசும், (சில) அரசியல்வாதிகளும் ஆட்சியில் இருக்கும் போது இந்த பிரச்சனைகளை பற்றி குரல் கொடுக்க மாட்டர்கள். அனால்,அவர்களே எதிர்க்கட்சிகளாக மாறும்போது இனப்பற்று அதிகமாகி, அவர்களும்  தமிழினத்தை சேர்ந்தவர்கள் என தெரிந்து நாளோரு அறிக்கையும், மாதமொரு போராட்டமும் நடத்துகின்றனர். இவர்கள் யாரை
ஏமாற்றுகிறார்கள் ???            

இலங்கை தமிழர் பிரச்சனை வெடிக்கும் போதெல்லாம் ஒவ்வொருவரும், ஒவ்வொரு அமைப்பினரும், தனித்தனியே போராடி தங்கள் எதிர்ப்பை காட்டுகின்றனர். சினிமா துறையினரும் தனியே போராட்டம் நடத்தி அவர்களுடைய விளம்பரத்தை தேடி கொண்டனர். இவர்களால் இந்த பிரச்சனையை தீர்க்க முடியது என தெரிந்தும் தங்கள் தமிழ்பற்றை காட்டவும், மற்றவர் யாரும் தங்களை இனப்பற்று இல்லாதவர் என சொல்லிவிட கூடாது என்பதற்காகவும் இப்படி செய்கிறனர்.
  
ஆனால் இவற்றிற்கெல்லாம் விதிவிலக்காக இப்போது தமிழக மாணவர்களின் அறப்போராட்டம் எந்தவித சொந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி போராடுவது ,சற்றே மனதை நெகிழ செய்கிறது.

'பஸ் டே'  கொண்டாடும் போது இவர்கள் பண்ணாத அட்டூழியம் இல்லை. குறிப்பாக லயோலா, பச்சையப்பா மற்றும் நியூ கல்லூரி மாணவர்கள் தான். இவர்களை திட்டாத வாயே இல்லை எனவும் கூறலாம். ஆனால் இப்போது எட்டு பேருடன் ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம், இன்று எட்டுத்திக்கும் பரவி எல்லா கல்லூரி மாணவ மாணவியரும் கலந்து கொள்ள செய்துள்ளது. மாணவ/மாணவியருடன் பொது மக்களும் அதற்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.

இது ஒட்டுமொத்த தமிழக மாணவர்களின் ஒற்றுமையை காட்டுகிறது. எனக்கு என்னவோ எதிர்ப்பை காட்டவோ,கோரிக்கைகளை நிறைவேற்றவோ, தமிழகத்தில் போராடுவதை விட, டில்லியில் பெரிய "கை" களின்  வீட்டின் முன்னே அறப்போராட்டம் நடத்தினால் என்ன என்று தான் தோன்றுகிறது.அப்போது தான் ஒட்டுமொத்த நாட்டிற்க்கும் இந்த பிரச்சனைகள் தெரிய வரும். மற்ற மாநில/ மொழி  ஊடகங்களும் இதை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வேறு இனமக்களுக்கும்  புரிய வைப்பார்கள்.

1969-ல்  மாணவர்களும், மற்ற தமிழ் அமைப்பினரும் மொழிப்போருக்காக போராடி  வெற்றியும் அடைந்தனர். அதுபோல இப்போது மாணவர்களின் கிளர்ச்சி பலரையும் தட்டி எழுப்பி உள்ளது. இதுவும் வெற்றி பெறும் என்று நம்புவோமாக!!!

எவ்வளவு தடைகள் வந்தாலும் இலங்கையில், தனி ஈழம் நாடு கிடைக்கும் வரையிலும்,போரில் எல்லாவற்றையும் இழந்தவர்களுக்கு தக்க உதவியும் செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை ஐ.நா சபை ஏற்று போர்க்குற்றவாளிகளை தண்டித்து ஈழமக்களுக்கு புதிய வாழ்க்கையை ஏற்படுத்த வேண்டும். இனியாவது அவர்களுக்கு புதிய விடியல் மலரட்டும்...

மலரட்டும் தனி ஈழம் !!! வெல்லட்டும் தமிழினம் !!!  



நன்றி !!!    

-பி .விமல் ராஜ் 

ஞாயிறு, 17 மார்ச், 2013

சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா !!!

வணக்கம், 

எல்லோர்க்கும் அவர்களுடைய சொந்த ஊரை பற்றி மற்றவருக்கு சொல்ல வேண்டும் என ஆசை உண்டு. எனக்கும் தான். அதை பற்றி தான் இங்கு பதிய போகிறேன். நான் பிறந்து வளர்ந்தெல்லாம் சிங்கார சென்னை என்றாலும் எனது அப்பா, தாத்தா பிறந்து வளர்ந்தது எல்லாம் ஒரு சிறு கிராமத்தில் தான். கும்பகோணத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் நன்னிலத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சேங்கனூர் என்னும் குக்கிராமம்.  

ஊர் பேர் சொன்னவுடன் அனைவருக்கும் தெரியும் அளவுக்கு பிரபலம் இல்லை என்றாலும், எங்கள் ஊரில் உள்ள சோமநாத சுவாமி கோவில் அந்த வட்டாரத்தில் மிகவும் பிரச்சியத்தம்.  சேங்கனூரிலிருந்து சற்று தூரத்தில் உள்ள திருவாஞ்சியம் ஊரில் உள்ள சிவன் கோவிலும் மிகவும் பிரபலம். திருவாஞ்சியத்தில் சிவபெருமான் தான் மூலக்கடவுள் என்றாலும் எமதர்மராஜனுக்கு தனி சன்னதி இங்கு மட்டும் தான் உள்ளது. முதல்வர் ஜெயலலிதா உட்பட பல முக்கிய பிரமுகர்கள் இங்கு வந்து சென்றுள்ளனர்.   

சிறு வயது முதல் நகர வாழ்க்கையை பார்த்து வளர்ந்த நான், எங்க ஊருக்கு செல்வது என்பது மிகவும் பிடித்தமான விஷயம். பொதுவாக குலதெய்வ வழிபாட்டிற்காகவோ அல்லது எங்கள் வீட்டு சுட்டிகளுக்கு மொட்டையடித்து காது குத்தவோதான் ஊருக்கு செல்வோம் (எனக்கும் அங்குதான் !!!). முன்பெல்லாம் ஊருக்கு போகும் போது, சேங்கனூர் பேருந்து 
நிலையத்திலிருந்து வீட்டுக்கு அழைத்து போக மாட்டு வண்டி வரும். அதில் வைக்கோல் 'குஷனில்' உட்கார்ந்து கொண்டு வண்டி குலுங்க குலுங்க வீட்டுக்கு செல்வோம். ஆனால் இப்போதெல்லாம் நங்கள் வரும்முன் சித்தப்பாவின் கார் வந்துவிடுகிறது.

சினிமாவிலும்,கதைகளிலும் நான் பார்த்த கிராமங்களை போலவே, இங்கும், கண்ட இடமெல்லாம் பச்சை பசெலன வயல்வெளி,தண்ணீர் நிறைந்த குளம், வரிசையாக தென்னை மரங்கள், ஓட்டு வீடு, கூரையின் மீது மயில், வைக்கல்போர்,பெரிய கொல்லை, முங்கில் காடு, மாந்தோப்பு, ஒத்தை மரத்து பாலம்,மாட்டுவண்டி, டிராக்டர் , கதிரறுக்கும் இயந்திரம் என நகர வாழ்க்கையில் பார்த்திராத காட்சிகள். சிறு வயதில் என் தம்பி 
தங்கையருடன் வைக்கோல் போரிலும், மாட்டுவண்டியிலும்  ஏறி விளையாடிய நாட்களும் உண்டு.   

சேங்கனூரைப்  பற்றி மேலும் சொல்ல வேண்டுமானால், இங்குள்ள மக்கள்  மற்ற கிராமங்களை போல விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர். பெரியார் காலத்தில் ,பெரும்பாலானோர் திராவிட கழகத்தை சேர்ந்தவர்களாக இருந்ததால் இந்த ஊரில் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற முக்கிய இந்து பண்டிகைகளை விமர்சையாக கொண்டாடுவதில்லை என் சொல்கிறனர். இன்னும் சிலர், சில ஆண்டுகளுக்கு முன் தீபாவளியன்று ஊரில் உள்ள பெரிய வீட்டு பெரியவர் ஒருவர் இறந்ததால், அதிலிருந்து நம் ஊருக்கு தீபாவளி இல்லை என என் பாட்டி சொல்லி கேட்டதுண்டு. உழவர் திருநாளாம் பொங்கல் விழாவின் பொது மட்டும் ஊரே களைக்கட்டும். கோவிலில் விசேஷ பூஜை, பெரியவர்கள் முதல்  சிறியவர்கள் வரை அனைவருக்கும் தனித்தனியே விளையாட்டு போட்டிகள் என கொண்டாடி மகிழ்வர். 

மாட்டு பொங்கலின் போது காளைகளை அலங்கரித்து தெருக்களில் ஓட விடுவார்கள். அவ்வளவுதான் எங்க ஊர் ஜல்லிகட்டு. அதுமட்டுமல்ல மாட்டு பொங்கலன்று பெரியவர்கள் காலில் விழுந்து வணங்கினால், ஆசியோடு, பரிசாக பணமும் தருவார்கள் (எனக்கு இதுதான் ரொம்ப பிடித்தது!!!).



சமீபத்தில் நாங்கள் குல தெய்வ வழிப்பாட்டிற்காக ஊருக்கு சென்றிருந்தோம். சுற்றி பார்க்கும் போது தங்களுடைய நிலத்தில் சவுக்குத்தோப்பு போட்டிருப்பதாக என் சித்தப்பா கூறினார். நேரில் சவுக்குத்தோப்பை பார்க்காத நான் அதை காண தயாரானேன். அந்த உச்சி வேலையிலும் வெயிலே தெரியாமல் ரம்மியமாக இருந்தது. தரையில் சவுக்கை மர இலைகள் கிழே விழுந்து தார்ப்பாய் போல விரிந்திருந்தது. நான் சுற்றி பார்க்கும் போதே என் தம்பி சவுக்குத்தோப்பை வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்து கொண்டிருந்தான். காற்று அடிக்கும் போது மரங்கள் ஆடுவது கண்களுக்கு விருந்தாக அமைந்தது. 

அடுத்தது எங்கள் குலதெய்வ கோவில். கோவில் என்றவுடன் அடுக்கு கோபுரமும்,கலசமும், பெரிய தூண்களும் இருக்கும் 
என்றோ,அல்லது  வெட்டவெளியில் ஆறடி உயரத்தில் வீச்சரிவாளோடு நிற்கும் காவல் தெய்வமோ என்று எண்ணி விட வேண்டாம். ஊருக்கு வெளியே, வயல்களுக்கு நடுவே  சிறிய திட்டு,அதில் ஒரு சிறு அம்மன் கோவிலும், அதனருகே அலுமினிய கூரையின் கிழ் ஒரு முழு செங்கல் அளவுள்ள கருங்கல்லை முக்கால்வாசி மண்ணில் புதைத்து,வெள்ளை துணியால் சுற்றி, சந்தனம்,குங்குமம் வைத்து இது தான்  நம்ம குலசாமி வீரன் என்று சொல்லுவர். ஒவ்வொரு முறையும் பூஜை போடும் போது , கிடவோ/கோழி கறியோ வைத்து கும்பிடுவார்கள் என நினைப்பேன். ஆனால் அதெல்லாம் நமக்கு பழக்கம் இல்லை என கூறி வெறும் மாவிளக்கும், பொட்டுகடலையும் வைத்து படைத்தது விடுவார்கள்.


வீரன் கோவில் 
என்னதான் விழுந்து விழுந்து வர்ணித்தாலும் இரண்டு நாட்களுக்கு மேல் அங்கு இருந்தால் நமக்கு பொழுது போகவே மாட்டேன்கிறது. என்ன இருந்தாலும் சென்னையிலேயே இருந்து விட்டு கிராமத்திற்கு சென்றால் இரண்டு,முன்று நாட்களுக்கு மேல் இருக்க நமக்கு தறி கொடுக்காது.     

மீண்டும் வரும் பொங்கலுக்கு ஊருக்கு போக வேண்டும் என அப்பா சொல்லி வருகிறார். கால நேரம் சரியாக இருந்து ஜனவரியில் ஊருக்கு போனால், பொங்கல் கொண்டாட்டத்தை பற்றி விவரமாக எழுதுகிறேன்.  

நன்றி !!!    

-பி .விமல் ராஜ் 

வியாழன், 14 மார்ச், 2013

சமமான கல்வியால் உயரும் சமுதாயம்


வணக்கம் !!!

ஓர் நல்ல சமுதாயம் வளர நல்ல சிந்தனையும், கல்வியறிவும் தேவை. அந்த கல்வி மக்கள் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டியது மிகமிக அவசியம். அப்படி கிடைத்தால் தான் நாட்டிற்கு நல்ல வருங்காலத்தை உருவாக்க முடியும். இப்போதுள்ள கல்விமுறைப்படி அனைவருக்கும் சமமான கல்வியறிவு கிடைக்கிறதா ??????? அதை பற்றி இந்த பதிவில் பார்க்காலம்.

பண்டைய காலம் முதல் 200 ஆண்டுகள் முன்னால் வரை நம் முன்னோர்கள், கல்வி பயில குருகுலத்திற்கு சென்றார்கள். குருகுலம் என்பது ஆசிரியர் வீடாகவோ, கோவிலாகவோ, பொது மண்டபமாகவோ, குளக்கரையிலோ இருந்தது. குருகுலத்திலும் செல்வந்தர் வீட்டு பிள்ளைகளும், ஏழை பிள்ளைகளும் தனித்தனியே கல்வி பயின்றனர். குருகுலத்தில் பாடம் மட்டும் இல்லாமல் வீரம், சரித்திரம்,கலாச்சாரம் ஆகிய அனைத்தும் போதிக்கப்பட்டது. பெரும்பாலும் ஆண்பிள்ளைக்களுக்கே குருகுலத்தில் பாடம் கற்றுக்கொடுக்கப்பட்டது.


பிறகு, ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் தாமஸ் பாபிங்டன் மெக்காலே என்பவரால் 1830-ல் நவீன கல்வி முறையில் தான் ஆங்கில வழி கல்வி அமலுக்கு கொண்டுவரப்பட்டது. கணிதம், அறிவியல் போன்ற பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தபட்டன.  இதில் தான் பள்ளிக்கு சென்று கல்வி பயிலும் முறை வந்தது. முதலில் இந்த முறை நன்றாக இருந்த போதிலும், காலப்போக்கில் கல்வி பணம் கொழிக்கும் தொழிலாக மாறியது தான் வருத்தமான விஷயம்.

இன்றைய சூழலில் தமிழகத்தில் கல்வியறிவு 80.33 சதவிகிதத்ததில் உள்ளது. எல்லா ஆட்சியிலும் உள்ள நலத்திட்டங்களில் இலவச கல்வியும், அனைவருக்கும் கல்வியும் கண்டிப்பாக இருக்கும். அப்படி இருக்கும் போதே
மாநிலம் முழுவதும் சமமான கல்வி கிடைப்பதில்லை.

இப்போதுள்ள கல்விமுறைப்படி, அதாவது மும்முறை தேர்வு முறையின் படியோ  அல்லது சமச்சீர் கல்வியின்படியோ (கடந்த ஆட்சியில்) அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கும் என்றால் அது சரியல்ல. தமிழகத்தில் மட்டும் மத்திய மேல்நிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ), தமிழ்நாடு மாநில கல்வி வாரியம் (ஸ்டேட் போர்டு), தமிழ்நாடு மேல் நிலை கல்வி வாரியம் (மெட்ரிக்குலேசன் ), ஆங்கிலோ இந்தியன்  கல்வி வாரியம்  என  வாரியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வி திட்டங்களின் முலம் கல்வி கற்கும் மாணாக்கருக்கு சமமான கல்வி கிடைப்பதி. எப்படி என கேட்டல், உதாரணத்திற்கு ஒரு அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவனின் பாடத்திட்டமும், தனியார் பள்ளியில் (மெட்ரிக்குலேசன் மாணவனின் பாடத்திட்டமும் ஒன்றாக இருப்பதில்லை. பெரும்பாலும் அரசு/ அரசு உதவி பெரும் பள்ளியில், மெட்ரிக்குலேசன்  பாடத்திட்டங்களை விட உள்ளடக்கம் குறைவாகவே இருக்கிறது. அதே போல் மெட்ரிக்குலேசன்  பாடத்திட்டத்தில் இருப்பதை விட சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் உள்ளடக்கம்அதிகமாக இருக்கிறது. இதுதான்  சமமான பாடத்திட்டமா ??? இதில் படித்த/ படிக்கும் மாணவருக்கு எப்படி  சமமான  கல்வியறிவு கிடைக்கும் ???

என் கருத்துப்படி இதற்கெல்லாம் ஒரு வழி என்ன என்று கேட்டால், அரசே எல்லா கல்வி நிறுவனங்ககளையும் எடுத்து நடத்த வேண்டும். ஒன்றாம் வகுப்பு முதல், பன்னிரெண்டாம் வகுப்பு வரை மாநிலத்தில் உள்ள எல்லா   பள்ளிகளிலும் சமமான பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
இவையெல்லாம் உடனடியாக நடைமுறைக்கு  வராது என்று அறிந்த போதும்,வந்தால் நன்றாக இருக்கும் என்பதே என் கருத்து. ஏனென்றால் முக்கால்வாசி கல்வி நிலையங்கள் சிலஅரசியல்வாதிகளிடமும், பண முதலைகளிடமும் தான் உள்ளது.  நடைமுறைக்கு வந்தால் பலருக்கு ஆசிரியர் பணி வாய்ப்புகள் கிடைக்கும். ஏற்கனவே பள்ளிநிறுவனங்களை நடத்துபவரும்,அதில் பணிபுரியும் ஆசிரியருக்கும் மாற்று வழியை அரசு  செய்ய வேண்டும். அவர்களுக்கு என்ன சொல்வது என எனக்கு தெரியவில்லை என்றாலும், சமமான கல்விக்கு இது ஓர் நல்ல ஆரம்பமாக அமையும்.



நன்றி !!!

-பி .விமல் ராஜ்


சனி, 9 மார்ச், 2013

மரண தண்டனை - ஏன் கூடாது ?

வணக்கம் !!!

என் சொந்த கருத்துகளையே இந்த கட்டூரையில் நான் பதிவு செய்கிறேன். தனி நபரையோ, ஒரு குறிப்பிட்ட பிரிவினரையோ, அல்லது அவர்களது கருத்துகளையோ புண்படுத்துமேயானால், என்னை மன்னிக்கவும்!

இக்காலகட்டத்தில் நம் நாட்டில் உள்ள சமூக பிரச்சனைகளில் மிக முக்கியமானது தூக்கு / மரண தண்டனையை ரத்து செய்வதுதான். அதை பற்றி தான் இங்கே பதியவிருக்கிறேன்.

மரணம் எல்லோருடைய வாழ்கையிலும் நிகழும் ஒர் சம்பவம். மரண தண்டனை கொலை/ கற்பழிப்பு போன்ற பாதக செயல்களை செய்யும் குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் கொடுக்கப்படும்  உச்சபட்ச தண்டனையாகும். இது அனைவருக்கும் தெரிந்ததே !!!

மரண தண்டனை கிட்டதட்ட 58  நாடுகளில் இன்னும் வழக்கில் உள்ளது. 97 நாடுகளில் மரண  தண்டனையை தடை செய்துவிட்டனர். மீதம் உள்ள நாடுகளில் முழுமையாக தடை செய்யாமல்,போர் குற்றவாளிகளுக்கும், வேறு சில குற்றங்களுக்காகவும் வழங்கபடுகிறது.( தகவல்: விக்கிபீடியா )


சமூக ஊடகங்களும் ,மற்ற ஊடகங்களும், மக்கள் நல சங்கங்களும் மரணதண்டனையை அறவே ரத்து செய்ய கோரி வருகின்றனர். அவர்கள் வைக்கும் முக்கியமான வாதம்,  மரண தண்டனை அறமற்றது, மனிதாபிமானமில்லாத  செயல் என்பதுதான் அது.

"  கொலைக்கு தண்டனை கொலையாகாது ! "
"  தண்டனை அடைந்தவர் குடும்பத்தினர் என்ன செய்வார்கள் ? "
"  மரணதண்டனை நிடுநிலைமையான தீர்பல்ல ! "

எல்லாரும் சொல்வது போல இந்த கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லை. இது போன்ற வாசகங்கள் கேட்க நன்றாக தான் இருக்கும். ஆனால் நடைமுறைக்கு ஒத்து வராது. இவையெல்லாம் ஒரு விதத்தில் ஏற்று கொள்ளும்படி இருந்தாலும், இந்த குற்றங்களுக்கு எல்லாம் என்ன தீர்வு?

கொலை பாதகம் செய்தால் உச்ச தண்டனை வழங்கப்படும் என்ற பயஉணர்வு இருந்தால் தான்  மக்களிடையே குற்றங்கள் குறையும். அதுவே இல்லை என்றால் குற்றங்கள் குறையாது. மரணதண்டனை அமலில் இருக்கும் போதே இத்தனை  கொலைகளும், கற்பழிப்புகளும் நடக்கும் போது, தண்டனையே ரத்தாகிவிட்டால் ?!?!

சிறைசாலை என்பது ஒருவன் தான் செய்த தவறை உணர வைக்கும் இடமாகவோ, திருந்த ஓர் வாய்ப்பாகவோ இருக்கலாம் என்றும் சொல்பவர்கள் உண்டு. ஆவேசபட்டோ, தெரியாமலோ, தவறு செய்பவர்களுக்கு மரண தண்டனைல்லாமல் வெறும் சிறை தண்டனை மட்டும் வழங்கபடலாம். அதுவும் சரியான தண்டனையாக இருக்குமா என எனக்கு தெரியவில்லை...

சர்வ சாதாரணமாக  கொலை செய்பவனிடம் திருந்த வாய்ப்பு கொடுப்பது
என்பது ஏற்க கூடியதாக இல்லை. உதாரணமாக, தர்மபுரியில் மூன்று மாணவிகளை உயிருடன் எரித்து வழக்கிலும், நொய்டாவில் நூற்றிருக்கும் மேற்பட்ட சிறு குழந்தைகளை கொன்று, அவர்களுடைய உறுப்புகளை விற்ற வழக்கிலும், சமீபமாக தில்லியில் மாணவியை அலங்கோல படுத்திய வழக்கிலும், குற்றம் சாட்டப்பட்ட / குற்றவாளிகளை மன்னிகவோ, திருந்த ஓர் வாய்போ, அல்லது 10/ 20 ஆண்டு கால சிறைதண்டனையோ ஒரு சரியான தீர்ப்பாக இருக்காது , இருக்கவும் முடியாது. அவர்களுக்கெல்லாம் அரபு நாடுகளை போல தண்டனைகளை வழங்கப்பட வேண்டும்.

என் கருத்தில் கொஞ்சம் வன்மம் இருப்பது போல தெரிந்தாலும், அதை என்னைபோல ஒரு சாதாரணனின் மனம் ஏற்க மறுக்கிறது. நாம் எவ்வளவு தான் பேசினாலும், சமூக ஊடகங்களில் பகிர்ந்தாலும், அரசாங்கமும் நீதிமன்றமும் இதை பற்றி முடிவு எடுக்காதவரையில் ஒரு பயனும் இல்லை. அவர்கள் போராடுகிறார்கள், இவர்கள் வாதடுகிறார்கள்  என குழப்பாமல் ஒரு நடுநிலைமையான தீர்பே இதற்கு சரியான முடிவு.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்


செவ்வாய், 5 மார்ச், 2013

எனது வலைப்பயணம்


வணக்கம் !!!


எனக்கு எப்படி வலைப்பதிவு (blog) ஆரம்பிக்கும் எண்ணம் வந்தது என்பதை உங்களிடம் பகிர்கிறேன்.  கல்லூரி பருவம் முதல் (Web Designing) வெப் டிசைனிங், (blog) பிளாக் ஆகிய விஷயங்களில்  மிகுந்த  ஈடுபாடு.பெரிதாக இல்லாவிட்டாலும் கூட ,சாதாரண HTML பைல் ஒன்றை எழுதி அதற்கு இணைப்பு (link) கொடுத்து மகிழ்வேன். என்ன பதிவை போடுவது , எதை பத்தி எழுதுவது  என தெரியாமல் பிளாக்/ வலைத்தளம் உருவாக்கும் ஆசையை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டேன்.

கல்லூரி படிப்புக்கு பிறகு, ஒரு தனியார் Call Center-ல் இரவு நேர வேலையில்  (நைட் ஷிப்ட் )  வேலை  செய்யும் பொது பிரபாகரன் என்பவர் தன்னுடைய தன் வலைப்பதிவு முலம் டீம் லீடர் முதல் மேனேஜர் வரை அனைவரையும் கவர்ந்துழுத்திருந்தார். அவருடைய பதிவுகளில் முக்கால்வாசி சினிமா விமர்சனங்களும், சில எதார்த்த சம்பவங்களும் ,ஒரு சில நல்ல கருத்துகளும்(!?!?!?) இருக்கும். நானும் அவருடைய  வலைப்பதிவின் ரசிகனானேன். அவரை பார்த்து எனக்கும் வலைப்பதிவு ஆரம்பிக்கும் ஆசை மீண்டும்  எட்டி பார்த்தது.

பிறகு அந்த கால் சென்டரை  விட்டு , வேறு சிறு கம்பெனியில்  வேலை 
செய்யும் போது , ஒரு வலைபதிவை  எப்படி நிரப்புவது என்பதை அறிந்து  கொண்டேன் . நாம் சொந்தமாக வலைப்பதிவு கட்டுரை (blog article) எழுத தெரியாவிட்டாலும் மற்ற வலைப்பதிவிலிருந்து காப்பி- பேஸ்ட் செய்யலாம் என அறிந்தேன். அட ! இது நல்ல யோசனையாக இருக்கவே முதலில் எனக்கு பரிச்சியமான Wordpress-ஐ தேர்ந்தெடுத்தேன். 


ஆரம்பத்தில் இணையதில் ஏதாவது ஒன்று எழுத வேண்டும் என ஆசை இருந்ததால் முதலில் சினிமாவை  பற்றி எழுதலாம் என்று நினைத்தேன் (நமக்கு தெரிந்தது அது தானே !! ஹ்ம்ம் ...கழுதை கெட்டால் குட்டி சுவர்!!! ).

அடுத்து தினசரி செய்தி வெளியிடும் வலை பதிவு எழுத  எண்ணினேன்.  நீண்ட யோசனைக்கு பிறகு எல்லாம் கலந்த ஒரு வலைபதிவை  ஆரம்பிக்க முடிவு செய்து "Vimal's Webworld" என்ற பெயரில் ஒன்றை கடந்த வருடம் ஜனவரி 6ஆம்  தேதி, ஆரம்பித்தேன்.  சமூக வலைத்தளமான பேஸ்புக் மற்றும் ட்விட்டர் மூலம் வலைபதிவுகளை பகிர்ந்தேன். பார்பவர்களை  எல்லாம் அதற்கு லைக் போட சொன்னேன்.( ஹி..ஹி !!!எல்லாம் ஒரு விளம்பரம் தான் !!!)

 ஆரம்பித்த ஓரிரு வாரங்களில் என் வலை பதிவை தொழில்நுட்ப  வலைபதிவு என ஒரு சக வலைபதிவர் அவருடைய வலைப்பதிவில் போட, என் மனமோ ஆனந்த கூத்தாடியது. (ஏய் !!ஏய்!! நான் தான் !!நான் தான் !!நான் தான் !!). அதன் பிறகு என் வலைபதிவை தொழில்நுட்ப  வலைபதிவாக மற்றினேன். ஆறு மாதத்தில் 100 வலைப்பதிவு கட்டுரைகளை எழுதினேன். என்னோடைய  நாளடைவில் நேரமின்மை காரணமாகவும், நல்ல கட்டுரைகள்  கிடைக்காததலும் சிறிது மாதங்களுக்கு பதிவு ஏதும் போடவில்லை. 

மீண்டும் சில வாரங்களுக்கு முன் தொழில்நுட்ப பதிவுகளை போட ஆரம்பிதேன். அப்போதுதான் எனக்கு என்னமொரு வலைப்பதிவை ஆரம்பிக்க எண்ணம் தோன்றியது. நல்ல கவர்ச்சியான தலைப்பு வேண்டுமென யோசித்து,  பழைய பேப்பர்  என்ற ஒன்றை தொடங்கினேன். இதிலாவது  சொந்த கருத்துகளையும் (??!?!!) , கட்டூரைகளையும் போட வேண்டுமென எண்ணம் உள்ளது. இதற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என முழுமனதுடன்  இந்த பழைய பேப்பர் -ஐ   ஆரம்பிக்கிறேன்...

நன்றி !!!

-பி .விமல் ராஜ்