ஞாயிறு, 28 அக்டோபர், 2018

Metoo பரிதாபங்கள்!

வணக்கம்,

#Metoo - கடந்த சில நாட்களாக அனைவரும் பரபரப்புடன் பேசுவது இதை பற்றிதான். போன வருடத்தின் நடுவில் இந்த இயக்கம் ஆரம்பித்து, மீண்டும் இந்த ஆண்டு சின்மயி மூலம் பிரபலம் அடைந்துள்ளது. சமூக வலைதளங்களில் சின்மையை தொடர்ந்து இன்னும் சில (சினிமா) பிரபலங்களும், பிற பெண்களும் #metoo என ஹாஷ்டாக் செய்து, தாங்களும் இம்மாதிரியான இக்கட்டான சூழலை கடந்துதான் வந்துள்ளோம் என சமூக வலை தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த பதிவுகளை படித்த பலரும் பெண்களுக்கு ஆதரவு தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். சிலர் இந்த பிரபலங்கள் மீது பலத்த கேள்வி கணைகளை தொடுத்த வண்ணம் இருக்கின்றனர்.

"பாலியல் தொல்லையோ, வற்புறுத்தலோ இவர்கள் அனுபவித்து இருக்கிறார்கள் எனில், ஏன் இத்தனை ஆண்டுகளாய் சொல்லவில்லை.? உடனே சொல்லவில்லை என்றாலும் சில நாட்களிலோ, சில மாதங்களிளோ, சில வருடத்திற்கு பிறகாவது சொல்லியிருக்கலாம். அப்போது வெளியிட்டால், வரும் வாய்ப்பு வராமல் போகும், வரப்போகும் ஆதாயம் கிட்டாமல் போகும் என்பதால் தாமதமாக இப்போது சொல்கின்றனர்.. எல்லாமே விளம்பரம் தான்! " மேலும், "ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையுமா? திரைத்துறையில் உள்ள பெண்கள் எல்லோரும் இப்படிதான்; யாரும் பத்தினிகள் இல்லை", என்றெல்லாம் சொல்கின்றனர்.

மேற்கண்ட கேள்விக்கெல்லாம் பதிலும் இல்லை; அதை நாம் ஆராய போவதும் இல்லை; அது நாட்டுக்கும் வீட்டுக்கும் தேவையும் இல்லை. யாரெல்லாம் metoo என பகிர்கிறார்கள்?  படித்த, நாகரீக உலகில் வாழும் பெண்கள், பிரபலங்கள் என வெகு சிலர் மட்டுமே சமூக வலைதளங்களில் பகிர்கின்றனர். மற்றவர்கள் ???

metoo india

நம் மக்களுக்கு பொதுவான ஒரு எண்ணம் உண்டு. இது போன்ற கொடுமைகளிலெல்லாம் நமக்கும், நம் வீட்டு பெண்களுக்கும் நடக்காது என்று எண்ணி, இதை பற்றி யோசிக்காமல் அல்லது விழிப்புணர்வு செய்யாமல் விட்டுவிடுவார்கள். நாட்டில் உள்ள எல்லா பெண்களும்  ஏதாவது ஒரு வகையில் இது போன்ற பிரச்சனையை தாண்டி தான் வந்திருக்க வேண்டும். அதுவும் வயது வரம்பின்றி பாதிக்கப்படுகின்றனர். வெறும் பாலியல் பலாத்காரமும், அதற்கு முற்படுவதும் மட்டுமே metoo-வில் சேராது.

சில நாட்களுக்கு முன் திவ்ய பாரதி என்ற சமூக செயல்பாட்டாளர் ஒருவர் பேஸ்புக்கில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் கோவை, ஈரோடு அருகே குக்கிராமத்தில் வசிக்கும் பெண்கள், பஞ்சாலையில் வேலை செய்து பிழைத்து வருகின்றனர். அதில் பெரும்பாலான பெண்கள் வீடு விட்டால் பஞ்சாலை, பஞ்சாலை விட்டால் வீடு என வெளியுலகம் தெரியாமல் வாழ்ந்து வருபவர்கள். அவர்களுடன் பேசும் போது அவர்களில் சிலர், ஓடும் ரயிலை கூட பார்த்ததில்லை; சிலர் யானையை கூட பார்த்ததில்லை; ஓட்டலுக்கு போய் சாப்பிட்டதில்லை என சொல்லினார்களாம். இதுபோல சின்ன சின்ன விஷயங்களை கூட தெரிந்து வைத்திருக்காத/பார்த்திராத பெண்கள் (எல்லோரும்) கூட ஏதோ ஒரு விதத்தில் வீட்டிலோ, உறவினர் மூலமாகவோ, வேலை செய்யும் இடத்திலோ, பயணத்தின் போதோ பாலியல் சீண்டல்கள் அல்லது தொந்தரவுகளுக்கு ஆளாகி உள்ளனர். வேலை, குடும்ப சூழ்நிலை, வருமானம் போன்ற காரணங்களால் எல்லாவற்றையும் அடக்கி கொண்டு இன்றும் பணிக்கு போய் வருகின்றனர்.

இது போல கிராமங்களிலும், மலை காடுகளில் வாழும் பெண்களிடம் நடக்கும் பாலியல் சீண்டல்களும், பள்ளிக்கு செல்லும் பெண் பிள்ளைகளிடம் நடக்கும் தொந்திரவுகளும், நகரத்தில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளும், ஜன நெருக்கடியான இடத்தில் இடிபடும் பெண்களும், அல்லது அவர்கள் அனுபவிக்கபடும் கொடுமைகலெல்லாம் எந்த சமூக வலைதளங்களிலும் பதியப்படுவதில்லை.

சிலர் பயந்து போய் வீட்டில் சொல்லி விடுகிறார்கள். சிலர் சொன்னால் மீண்டும் வேலைக்கு போகவோ/பள்ளி கல்லூரிக்கு போகவோ விடமாட்டார்கள் என பயந்து தங்களுக்குள்ளேயே மறைத்து மறந்து விடுகிறார்கள். எல்லாவற்றிற்கும் குடும்ப சூழலும், சமுதாயமும் மட்டுமே காரணமாக இருக்கிறது.

பல நாட்களுக்கு முன் நடந்ததை இப்போது சொல்வதால் இப்போது என்ன பிரயோஜனம் என கேட்கிறார்கள். பிரயோஜனம் உண்டு! இனிமேல் வரும் பெண் சமூகத்திற்கும், மற்றவர்க்கும் இவர்களை பற்றி தெரிந்திருக்கும்.  பெண்களுக்கு தேவை தைரியமும், தன்நம்பிக்கையும் தான். உங்களுக்கு இது போன்ற அசாதாரண சூழ்நிலைகள் ஏற்பட்டால், உடனே தைரியமாக எதிராளியை கண்டிக்க அல்லது தண்டிக்க வேண்டும். குறைந்தபட்சம் உங்கள் எதிர்ப்பை அழுத்தமாக காட்ட வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு ஒரு பயம் ஏற்படும். பஸ்சில்/ரயிலில் இடிக்கும், கைவைக்கும் இடிமன்னர்களை, பள்ளி பெண்களிடம் சில்மிஷம் செய்யும் ஆட்டோ டிரைவர்கள், மாணவிகள் தங்களிடம் படிப்பதால், அதிக இடம் எடுத்து கொள்ளும் பள்ளி/ டியூஷன் ஆசிரியர்கள், அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்களை வற்புறுத்தும், சீண்டும் கண்காணிப்பார்கள்/மேலாளர்கள், தனியே வரும் பெண்ணிடம் தவறாக நடக்க முயல்பவர்கள், என யாராக இருப்பினும் நீங்கள் ஒரு முறை எதிர்ப்பை காட்டிவிடுங்கள். சத்தம் போட்டு கண்டியுங்கள், முடிந்தால் தண்டியுங்கள். இப்படி நடந்தால் பெண்கள் எதிர்ப்பார்கள் என தெரியும் பொது இதுபோன்ற தவறை மீண்டும் செய்ய பயப்படுவார்கள் அல்லது யோசிப்பார்கள். மற்ற பெண்களுக்கு நடக்காமல் இருக்க வாய்ப்புண்டு.

சமூகத்தில் இவையெல்லாம் நடக்காமலிருக்க, பெண்களை மதியுங்கள். முதலில் உங்கள் வீட்டு பெண்பிள்ளைகள் சொல்வதை முழுவதையும் கேளுங்கள்; பிறகு அவர்கள் சொல்வது தவறா? சரியா? என யோசியுங்கள். பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எடுத்து சொல்லுங்கள். 'குட் டச்', 'பேட் டச்' போன்றவற்றைச் பற்றி சொல்லி கொடுங்கள். நல்ல ஆரோக்கியமாக, வளமான பெண் சமுதாயத்தை உருவாக்குங்கள்!


நன்றி!!!
பி.விமல் ராஜ்

சனி, 20 அக்டோபர், 2018

ரயில் பயணங்களில்!

வணக்கம்,

எலெக்ட்ரிக் டிரெயின் பயணம் என்பது  இன்பமான, சுகமான ஒன்று தான். ஜன்னல் சீட், ரயில் போகும் வேகம், அதில் போகும் மக்கள், தின்பண்டம் விற்பவர்கள் என வேடிக்கை பார்த்து கொண்டே போகலாம். பெரும்பாலும் அந்த இன்பமும், சுகமும் ரயிலின் கூட்டத்தை பொறுத்து தான் இருக்கும். பீக் ஹவரில் பயணம் செய்பவர்களுக்கு அந்த பயணமொரு நரகமாக தான் அமையும்.

எல்லோரையும் போல ஒரு சாதாரண மனிதனின் ரயில் அனுபவங்களை தான் இங்கு படிக்க போகிறீர்கள். விஜய்க்கு எலெக்ட்ரிக் டிரெயின் பயணம் ஒன்றும் புதிதல்ல. தான் சேர்ந்திருந்த புது கம்பெனி சிட்டியை விட்டு கொஞ்சம் த...ள்ளி இருப்பதால், மீண்டும் சில நாட்களாக ரயிலில் போய் வரலானான்.

காலை டிபனை அவசரம் அவசரமாக முழுங்கி விட்டு, பைக்கை ரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள டூ-வீலர் ஸ்டாண்டில் போட்டுவிட்டு வேகமாக  நடந்தான். ஸ்டேஷனை நெருங்க நெருங்க அந்த ரயில்வே பெண்ணின் குரல் கேட்டதும் அவன் முகம் புன்னகை பூத்தது. 

'டிங்.. டாங்..டிங்... யாத்திரிய ருப்பியா ஜாந்தே..' என்ற கணீர் ஸ்பீக்கர் பெண்குரல், கல்லூரி காலங்களில் அவனுடன் ரயிலில் வந்த அருண், வம்சி, ஹுசேன், கார்த்திக், தியாகு  ஆகியோரின் பெயர்களையும், ஒரு ரூபாய் வாட்டர் பாக்கெட், மூன்று ரூபாய் காபி, ஏழு ரூபாய் போண்டா வடை,
புட்-போர்டு அடித்து கிழித்த ஷு என 11 ஆண்டுகள் முன் நடந்ததையெல்லாம்  நியாபகப்படுத்தியது.


electric-train-travel-tambaram-chengalpat

நடுவில் பல தடவை ரயிலில் பயணபட்டிருந்தாலும் என்னவோ தெரியவில்லை, இந்த நியாபகம் வந்து போனது. இதெல்லாம் இப்போ தேவையில்லை என நினைத்து கொண்டு வேகமாக படி ஏறினான். அங்கே புட்-ஒவர் ப்ரிட்ஜில் டிஜிட்டல் கடிகாரம் 0830 என காட்டிக்கொண்டிருந்தது. ரயில் பயணர்கள் பலரரும் எதிரெதிரே வந்து கொண்டும், போய் கொண்டும் இருந்தார்கள். சிலர் ப்ரிட்ஜில் ஓரமாக நின்று போன் பேசி கொண்டும், செல்போனை நோண்டி கொண்டும் இருந்தனர். செங்கல்பட்டு வண்டிக்காக எல்லோரும் காத்து கொண்டிருந்தனர். அவர்களுடன் இவனும் ஒரு ஓரமாக நின்று ரயில் வருகிறதா என தண்டவாளத்தை பார்த்து கொண்டே இருந்தான். அந்த காலை நேரத்தில் கதிரவன் மேகங்களுடன் கண்ணாமூச்சி ஆடி கொண்டிருந்தான். காற்று நன்றாக அடித்து அவன் தலை முடியை கலைத்து கொண்டிருந்தது.

சற்று நேரத்தில் செங்கல்பட்டு வண்டி 4ஆம் பிளாட்பாரத்திற்கு வந்து சேரும் என்ற ரயில் ஸ்பீக்கர் பெண்மணி சொன்னது தான் தாமதம். ரயிலுக்காக நின்ற அனைவரும் தடதடவென பிளாட்பாரத்தை நோக்கி ஓடினார்கள்.  வழக்கம் போல ரயில் கூட்டமாக தான் பிளாட்பாரமுக்கு வந்து சேர்ந்தது. ஓடிச்சென்று ஏறி ஓரமாக நின்று கொண்டான். ரயில் கிளம்ப சில நிமிடங்கள் ஆயின. அதுவரை மொபைலில் பேஸ்புக், வாட்ஸ்அப் போஸ்ட்களை பார்த்து ஸ்கிரால் செய்து கொண்டு இருந்தான்.

ஒரு முறை ரயிலில் பயணம் செய்பவர் கூட எண்ணற்ற மக்களையும், அவர்களின் பலவித செய்கைகளை பார்க்க முடியும். ரயில் கிளம்பியது. ஓடும் ரயிலில் பலதரப்பட்ட மக்களை பார்த்தான். உட்கார இடம் இல்லாததால் நின்றபடி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். ரயிலில் முக்கால்வாசி பேர் கல்லூரி மாணவ மாணவியர்களும், மகேந்திரா சிட்டியில் வேலை செய்பவர்களும் தான் என்று சொல்லியபடி அவர்களுடைய ஐடி கார்டு கழுத்தில் தொங்கி கொண்டிருந்தது. ஆண், பெண் என பாராமல் கூட்டம் அலைமோதியது. ஒரு சிலர் சாதாரண சட்டை/ புடவையுடன் கட்டை பை, பேக்குடன் இருந்தனர். அவர்களெல்லாம் பரனூர் தாண்டி செங்கல்பட்டு வரை போவார்கள் என எண்ணி கொண்டான். ரயிலில் உட்கார இடமில்லததால் ஓரமாக நின்று கொண்டான். முதல் வகுப்பிலும் கூட்டமாக தான் இருந்தது. பர்ஸ்ட் கிளாஸ் போகில கூட்டம் அவ்வளவாக இருக்காது என சொன்னவரை மனதுக்குள் திட்டி கொண்டான். ஒரு சில நேரத்தில் பர்ஸ்ட் கிளாஸ் காலியாக இருக்கும், சில நேரத்தில் புல் பாட்டில் பீரின் நுரை போல ததும்பி நிற்கும். 

பயணத்தின் போது பலரும், அவர்களது செல்போனை நொண்டியபடி இருந்தனர். சிலர் பாட்டு கேட்டு கொண்டும், படம் பார்த்துக் கொண்டும் வந்தனர்.  லேடிஸ் சீட்டில் உட்கா்ந்து இருந்த ஓர் நடுத்திர வயது பெண்மணி இட்டிலியும் பூண்டு தொகையலும் வைத்து தின்று கொண்டிருந்தாள். இன்னொரு மூலையில் சுடிதார் போட்ட கல்லூரி பெண் பருப்பு சாதமோ, சாம்பார் சாதமோ ஸ்பூனில் ஸ்டைலாக சாப்பிட்டு கொண்டிருந்தாள். விஜய்க்கு பின்னால் நின்று கொண்டிருந்த இரு ஆண்கள் (அநேகமாக ஒரே கம்பெனியில் வேலை செய்பவர்கள்) நாட்டு நடப்பு பற்றி சுவாரசியமாக பேசி கொண்டிருந்தனர். அவர்கள் சத்தமாக பேசிய போதிலும், என்ன பேசுகிறார்கள் என கவனித்தான். பெட்ரோல் விலை ஏற்றம், மோடி பாரினுக்கு போனது,  அமைச்சர்களின் அறிவாளிதனமான பேச்சு, குளோபல் வார்மிங், குளிர்கால மழை, 40 செ.மீ. மழை பற்றிய புரளி, பேங்க் லோன், ஆபிஸ் அக்கபோர், மேனேஜர் காண்டு, அப்ரைசல் என சகலமும் பற்றி பேசினார்கள். இது போன்ற மக்களின் பேச்சை கேட்டாலே கண்டிப்பாக ஏதாவது  தெரியாத ஒரு விஷயத்தை பேசி,  நமக்கு சொல்லாமல் சொல்லி விடுவார்கள்.  

அங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் மொபைல் போனில் முழுகி கிடந்ததை பார்த்தான். பலர் கழுத்தில் ஹெட்போன் தொங்கி கொண்டிருந்தது. வாட்ஸ்அப்பில் அரட்டை, பாட்டு, பேஸ்புக் மீமிஸ் என குனிந்த தலை நிமிராமல் பார்த்து கொண்டிருந்தார்கள். சிலர் படம் பார்த்து கொண்டும் இருந்தார்கள். ரயிலில் படம் பார்ப்பவர்கள், ஒரு படத்தை பிட்டு பிட்டாக ரெண்டு, மூன்று நாட்களில் பார்த்து விடுவார்களோ என நினைத்து கொண்டான்.

சீட்டில் உட்கார்ந்திருந்த ஓர் பெண், போனில் பலமாக பேசி சண்டை போட்டு கொண்டிருந்தாள். கண்டிப்பாக கணவனுடன் தான் பேசி கொண்டிருப்பாள் என நினைத்து கொண்டான். இன்னொரு பக்கம் சிலர் ஹெட் போனில் பேசி என கொண்டிருந்தார்கள்.  

கல்லூரி காளையார்கள் சிலர் (பெரும்பாலும் முதலாம் அல்லது இரண்டாம் ஆண்டு) புட்-போர்டில் தொங்கியபடி பயணம் செய்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு  ஸ்டேஷனைலும் இறங்கி இறங்கி ஏறி கொண்டிருந்தார்கள். அருகில் நின்று கொண்டிருந்த 60வயது மிக்க பெரியவர் ஒருவர், "ஏம்பா.. உள்ளே வந்து நில்லுங்களேன்.. கிழே விழுந்து அடி பட போகுது.. "என்று அதட்டும் தோரணையில் கூற, அதை ஒருவரும் பொருட்படுத்தியது போலவே தெரியவில்லை.  "போன வாரம் ஒரு ஆள் தவறி விழுந்து ஸ்பாட்லேயே காலி. அதனால அன்னைக்கு டிரெயின் 1 மணி நேரம் லேட் வெற.. இவனுங்களுக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாது." என அருகில் நிற்பவரிடம் பொருமி கொண்டார். அவர் ஏதாவது ரிட்டயர்டு ரயில்வே காரராக இருப்பார் போல என்று நினைத்து கொண்டான் விஜய்.

டிப்-டாப் ஆசாமி ஒருவர் சீட்டில் கால் மேல் கால் போட்டபடி உட்கார்ந்து, ஏதோ ஆங்கில நாவல் ஒன்றை படித்து கொண்டிருந்தனர். பொண்ணொறுதி சீட்டில் சப்பறை தட்டையாக சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவளருகில் உட்கார்ந்து இருப்பவர்கள், கொஞ்சம் கஷ்டப்பட்டு நுனி சீட்டில் ஒண்டி கொண்டிருந்தார்கள்.

புளி முட்டை மாதிரி இருந்த அந்த கம்பார்ட்மெண்டில் அடுத்த அடுத்த ஸ்டேஷனில் இன்னும் புளிகள் எறின. ஒவ்வொரு ஸ்டேஷனலிலும் மக்கள் ஏறும் போது, "அதான் இடமிருக்குல.. உள்ளே போங்களேன்.."என கூற, போக போக மேலும் கூட்டம் நசநசத்தது.

விஜய்க்கு இடம் இல்லாததால் மேலே இருந்த கம்பியை பிடித்து தொங்கியபடி நின்று கொண்டிருந்தான். அவன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒரு (கொஞ்சம் கலையான) பச்சை சுடிதார் பெண், அவனை திரும்பி திரும்பி பார்த்து கொண்டு வந்தாள். முதலில் இவனுக்கு காரணம் புரியவில்லை. பிறகு தான் புரிந்தது, ரயில் ஓட்ட அசைவில் அந்த பெண் மீது இடித்து விட்டான் போலும். சூதானமாக தள்ளி நின்று கொண்டான்.. தள்ளி நின்றவன் சும்மா இல்லாமல், அந்த பெண் பார்க்க கொஞ்சம் நன்றாக  இருக்கிறாள் என்பதற்காக அவள் எந்த கம்பெனி என தெரிந்து கொள்ள மெல்ல முன்பக்கம் ஐடி கார்டை எட்டி பார்க்க, அதையும் அந்த பெண் பார்த்து விட்டாள். சடாரென அருந்ததி அனுஷ்கா போல அவள் கண்களை உருட்டி முறைக்க, விஜய் "ஆகா, இது என்னடா புது சோதனை என நினைத்து கொண்டு தள்ளி வந்து விட்டான்.. அப்போதும் அப்பெண்ணின் ஐடி கார்டு டாகில் காட்டான்குளத்தூர் என போட்டிருப்பதை பார்க்காமல் இல்லை.

பொத்தேரி வந்தவுடன் கல்லூரி மக்கள் அனைவரும் இறங்கி விட்டனர்.பச்சை சுடிதாரும் தான். கிட்டத்தட்ட கம்பார்ட்மெண்ட்டே காலியானது. ஜன்னலோரத்தில் போய் உட்கார்ந்து கொண்டான். சிறிது நேரம் போனை நோண்டிவிட்டு அமைதியாக உட்கார்ந்திருந்தான். பரனூர் வந்தவுடன் முக்கால்வாசி டிரெயின்னும் காலியானது. வேகமாக இறங்கி ஆபிஸ் பஸ்சை நோக்கி போனான் விஜய்.
*****
மாலை நேரம்- அலுவலக வேலை முடிந்ததும் பரனூரில் ரயிலுக்காக நின்று கொண்டிருந்தான். பலர் ஸ்டேஷனில் விற்று கொண்டிருந்த சிப்ஸ், கடலை, முறுக்கு ஆகிய வற்றை வாங்கி கொண்டு இருந்தனர். விஜய்யும் அவ்வபோது வாங்கி சாப்பிடுவான். ரயில் வருகிறதா என பார்த்து கொண்டே இருக்கும் போது ரயில் வந்து விட்டது. பிளாட்பாரத்தில் கூட்டம் இருந்த போதிலும், வண்டி காலியாய் வரவே, இவனுக்கு உட்கார இடம் கிடைத்தது.  இரண்டு ஸ்டேஷன் போயிருக்கும், விஜய் அருகே ஒரு பெண் வந்து "எக்ஸ்கியூஸ் மீ, இது லேடிஸ் சீட்" என்றாள். நிமிர்ந்து பார்த்தான். ஒரு நவ நாகரீக பெண் ஒருத்தி, முகம் முழுவதும் மூடி, முதுகில் பேக்பெக்கும், கையில் லஞ்ச்பெக்கும் வைத்திருந்தாள். வேறு சீட் இல்லாததால் விஜய்யை எழுந்திரிக்க சொன்னாள். இதை சற்றும் எதிர்பாராத விஜய், "partition க்கு அந்த பக்கம் தானே லேடிஸ் கம்பார்ட்மெண்ட். இது ஃபர்ஸ்ட் கிளாஸ் தானே!" என கேட்டான். "இது ஃபர்ஸ்ட் கிளாஸ் தான். நீங்க உட்கார்ந்து இருப்பது ஃபர்ஸ்ட் கிளாஸ்ல லேடிஸ் சீட்" என்றாள். அப்புறம் தான் தான் உட்கார்ந்து இருப்பது லேடிஸ் சீட் என அறிந்து எழுந்து கொண்டான். பக்கத்தில் நின்று கொண்டிருந்த யாரோ ஒரு சக பயணி, " நீங்க ஏன் அவ சொன்னதும் எந்திருசீங்க? என கேட்க " அட விடுங்க ஜி.. இப்போ சண்டை போட மூட் இல்லை.. அப்படியே சண்டை போட்டாலும் நமக்கு ஒருத்தரும் சப்போர்ட் பண்ண மாட்டங்க.. அதான்.." என்றான். "இதுல தான் சமஉரிமை பாப்பாங்க... இது மாறி ஒண்ணு ரெண்டு பொண்ணுங்களாள  எல்லோருக்கும் கெட்ட பேரு.." என்று அந்த பயணியும் கடிந்து கொண்டார்.

சிறிது நேரம் போனது. வாசலருகே நின்று கொண்டு போனை பார்த்துகொண்டு வந்திருந்தான் விஜய். திடீரென "ஏய்!!ஏய்!! என பலத்த குரல் ஒன்று கேட்க,  யாரோ என்னவோ தவறி விழுந்து விட்டார்கள் என பயந்து பலரும் வெளியே பார்த்தனர். யாரோ ஒரு திருடன் ஓரமாய் நின்று கொண்டிருந்த நபரிடம் செல்போனை பிடுங்கி கொண்டு ரயிலை விட்டு இறங்கி ஓடியுள்ளான்.. போனை பறி கொடுத்தவர், சிறிதும் எதிர்பாராததால் அவரும் அலறி கொண்டே ஓடும் வண்டியிலிருந்து இறங்கி அவனை விரட்டினார்.  விரட்டி சென்றவர் திருடனிடமிருந்து போனை புடிங்கி கொண்டு மீண்டும் ரயிலேர முயற்சிக்க, ரயில்வே கார்டு வேண்டாம் அடுத்த ரயிலில் வாருங்கள் என கைகாட்டினார். ஸ்டேஷனிலிருந்து ரயில் நின்று கிளம்பிய நேரம் என்பதால் சற்று மெதுவாக போனது. இருவருக்கும் அடிபடவில்லை.

இதை பார்த்த விஜய் தன் போனை எடுத்து மீண்டும் பாக்கெட்டில் வைத்து கொண்டு வேறு இடத்தில் உட்கார்ந்து கொண்டான். பின்னர் தாம்பரம் ரயில் நிலையம் வந்தவுடன் இறங்கி வேகமாக வண்டியை எடுக்க போகலானான்.


நன்றி!!!
பி.விமல் ராஜ்

புதன், 29 ஆகஸ்ட், 2018

டெல்லிக்கு போன கதை !

வணக்கம்,

பணிச்சுமை காரணமாக பழைய பேப்பருக்கு சற்றே நீண்ட லீவு விட்டிருந்தேன். மீண்டும் எழுத ஆரம்பிக்கலாம் என எண்ணி, எழுத ஆரம்பிக்கும் போதெல்லாம் பல தடங்கல்கள், வேலைகள் என தள்ளிக்கொண்டே போனது. இன்று தான் மீண்டும் நேரம் கிடைத்துள்ளது. நேரம் கிடைத்துள்ளது என்பதை விட நேரம் ஒதுக்கியுள்ளேன் என்பதே சரி!

கடந்த ஜனவரியில் வேலை காரணமாக ஆன்சைட் (டெல்லி தாங்க) வரை போக வேண்டியிருந்தது. புது தில்லி போவது புதுசாக இருந்தாலும், ஏற்கானவே இருமுறை பிளைட்டில் போயிருப்பதால், பெரிதாய் ஒன்றும் எதிர்பார்ப்பு இருக்கவில்லை. என் பயணத்தில் பார்த்த, பார்க்கும் போது தோன்றிய சில விஷயங்களை உங்களிடம் இங்கு பகிர்கிறேன்.

ஏர்போர்ட் பரிதாபங்கள்- ஏர்போர்ட்டில் காத்திருக்கும் நேரத்தில், ஏரோபிளான் பயணத்தையும், நாம் வழக்கமாய் போகும் பயணத்தை பற்றியும் ஒப்பிட்டு யோசித்து கொண்டிருந்தேன்.

பஸ்ஸில் போகும் போது பெரிய லக்கேஜ்/ பெட்டிகளை பஸ் டாப்பில் வைத்து பயணம் செய்வது போல, ஏர்போர்ட்டில் கன்வேயர் பெல்ட்டில் லக்கேஜை போட்டுவிட்டு, ஃபிளையிட்டில் பயணம் செய்கிறோம்.

போர்டிங் நேரத்தில், புனே 630 ஃபிளையிட் போர்டிங் பாசஞ்ஜர்ஸ்.. டெல்லி 7ஓ கிளாக் ஃபிளையிட் போர்டிங் பாசஞ்ஜர்ஸ்... என கூவி கூவி அந்தந்த அலுவலர்கள் அழைப்பது, கோயம்பேடு/தாம்பரம் பஸ் ஸ்டாண்டில் திருச்சி... திருச்சி.. திருச்சி.. மதுரை .. மதுரை...1030 மணி வண்டி எல்லாம் ஏறு..ஏறு.. உடனே ஏறு.. என கூவுவது போல தெரிவது எனக்கு மட்டும்தானா !?!?!?!?

"இஸ் திஸ் டில்லி 7 'ஓ' கிளாக் ஃபிளையிட் ??", என கேட்பது, "அண்ணே இது பத்தரை மணி பஸ்ஸாண்ணே??", என கேட்பது போல தான் எனக்கு தெரிகிறது.

அதே போல டே எக்ஸ்ப்ரஸில் ட்ரைனில் போதும் போது சூடாக இட்லி வடை, பிரியாணி, பிரட் ஆம்லெட் போன்றவற்றை விற்பது போல, இங்கும் பிளைட் எரியவுடன் டீ, காபி, டிபன், லஞ்ச், கூல் டிரிங்க்ஸ் எல்லாம் விற்கிறார்கள்... விலை தான் கொஞ்சம் ஜாஸ்தி!

அதே போல நாம் டவுன் பஸ்ஸில் பெண் கண்டக்டரை பார்த்தவுடன், 'அட லேடி கண்டக்டரா?" என ஒரு செகண்ட் பார்த்துவிட்டு, டிக்கெட் கேட்டு பின் நார்மலாவதை போல, ப்ளைட்டில் நம்முடன் பறந்து வரும் பேரழகிகளை பார்த்துவிட்டு (யாராயினும்) ஓரிரு நிமிடம் லயித்துவிட்டு பின் முகம் திருப்பி கொள்வது சாதாரணமாக நடப்பதே! என்னடா இது.. இந்த சிவப்பு சொக்கா பொண்ணு நம்மள பார்த்து சிரித்து "ஹாய் ! குட் மார்னிங்.. வெல்கம்..."ன்னு சொல்லுதேன்னு நானே சிலாகிச்சிட்டேன்னா பார்த்துகோங்களேன்!
என்னுடன் வந்தது இந்த அழகி இல்லை! ;-)
டெல்லி போக 3 மணி நேரம் ஆகும் சொன்னங்க.. சரி கொடுத்த டிபனை சாப்பிட்டுவிட்டு , கொஞ்சம் நேரம் மேகங்களை வேடிக்கை பார்த்துவிட்டு தூங்கலாம்ன்னு நினைச்சா, அப்பப்போ டொய்ங்.. டொய்ங்..ன்னு மியூசிக் போட்டு பறக்கும் போதே ஷாப்பிங் பண்ணுங்க.. ஏதாவது ஸ்னாக்ஸ் ஐட்டம் சாப்பிடுங்க.. வேதர் ரிப்போர்ட்.. அது..இதுன்னு ஏதாவது சொல்லி எழுப்பி விட்டுடுரங்க...

நம்மவூரு மார்கழி மாச குளிருக்கே மூச்சுக்கு முன்னூறு வாட்டி மூச்சா வரும்.. டெல்லில இப்போ 8 டிகிரியாம்!! அம்மடியோவ்.. சரி விடுறா...எல்லாமே வெரச்சிக்கும்ன்னு நினைச்சிகிட்டேன் !!!

கடைசியா டெல்லி வந்ததும், ஸ்வெட்டர், ஜெர்கின், குரங்கு குல்லா சகிதமாக கீழே இறங்கினேன். ஆரம்பத்தில் குளிர்வதை போல தெரிந்தாலும்,போக போக அந்த குளிர் எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. உடம்புக்கு இதமாகவே இருந்தது.

புது தில்லி வந்தாயிற்று. இங்கும் பீக் அவர் கடும் டிராபிக்காக தான் இருக்கிறது. ஆட்டோ ரிக்க்ஷாக்கள் மஞ்சள்-பச்சை கலர்களில் சீறி பாய்கிறது. சென்னையில் எப்படி TN registration போர்டு வண்டிகளையும் ஆங்காங்கே PY போர்டுகளையும் பார்க்க முடிகிறதோ, அது போல டெல்லியில் DL மட்டுமல்லாமல் RJ, HR, PB ஆகிய registration போர்டு வண்டிகளை எளிதில் பார்க்க முடிகிறது. ஒன்றிரண்டு UP registration வண்டிகளையும் பார்த்தேன். எங்கு காணினும் கார்கள் சாரை சாரையாய் விரைந்து கொண்டிருந்தது. வெகு சில டூ-வீலர்களை மட்டுமே பார்க்க முடிந்ததது. தில்லியில் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிப்பது மெட்ரோ ட்ரெயின் தான். நகரின் எல்லா மூலையிலும் மெட்ரோ பாய்கிறது. மேலும் புதுதில்லியில் பெரும்பாலான சாலைகளெல்லாம் அகலமாகவும், சுத்தமாகவும் இருப்பதை காண முடிந்தது. அங்கங்கே முக்கிய சாலைகளில் கட்டண கழிப்பிடமும் இருந்தது. சாலையெங்கிலும் மரங்களும், பல ரௌண்ட்டானாக்களும் (roundtana) , மேம்பாலங்களையும் பார்த்து, திட்டமிட்டு கட்டப்பட்டது புது தில்லி என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. சாலையெங்கிலும் ஆரஞ்சு கட்சியின் போஸ்டர்களும், அந்த ஊர் 'சந்தான பாரதியின்' படங்களும் பெரிதும் காணப்பட்டன.

நாங்கள் தங்கும் இடத்திலிருந்து அலுவலகம் போகும் வழியில் தான் இந்தியா கேட்டும் (India Gate), ஜனாதிபதி மாளிகையும் (Rastrapathi Bhavan) இருந்தது. தினமும் வேடிக்கை பார்த்து கொண்டே போவோம். கிடைத்த கேப்பில் ஒரு நாள் காலைவேளையில் போய் ராஜ் காட்டில் (Raj Ghat) உள்ள இரண்டையும் பார்த்தாயிற்று. இந்தியா கேட் - முதலாம் உலக போரில் இறந்த ஆங்கிலேய-இந்திய போர் வீரர்களின் நினைவு சின்னம். மொத்தம் 70,000 வீரர்களின் பெயர்கள் அங்கு பொறிக்கபட்டுள்ளன. மேலும் அங்கு போர் வீரரின் தொப்பி மற்றும் துப்பாக்கியுடன், அமர் ஜவான் ஜோதி (AmarJawan Jothi ) ஒன்று ஓயாமல் எரிந்து கொண்டிருக்கிறது.



ஜனாதிபதி மாளிகையை உள்ளே சென்று சுற்றி பார்க்க முன்அனுமதி பெற வேண்டுமாம். நாங்கள் வெளியிருந்தபடியே கட்டடங்களை பார்த்துவிட்டு செல்பி எடுத்து கொண்டு திரும்பிவிட்டோம். ஜனாதிபதி மாளிகை அருகே தான் பார்லிமென்ட் வளாகமும் இருக்கிறது. நேரமின்மையால் அதை விட்டுவிட்டோம்.

வேறொரு நாள் செங்கோட்டைக்கு (Red fort ) சென்றோம். செங்கோட்டை இருப்பதோ பழைய தில்லியில். பாரீஸ் கார்னர், மண்ணடி போல குறுகிய சாலைகள், சிறு பெரு வண்டிகள் என கூட்ட/கட்டட நெரிசல். செங்கோட்டை 1639ஆம் ஆண்டு ஐந்தாம் முகலாய மன்னன் ஷா ஜஹான் கட்டியுள்ளான். அதன் பின் 200 ஆண்டுகள் வரை முகலாயர்களின் வாரிசுகள் வசிக்கும் வீடாகவே இருந்துள்ளது. செங்கோட்டை Indo-Islamic architecture -ல் கட்டப்பட்டுள்ளது. 2007-ல் UNESCO உலகின் பாரம்பரிய சின்னமாக இதை அறிவித்தது.

கோட்டைக்குள் போக நபருக்கு 35 ரூபாய் டிக்கெட் எடுக்க வேண்டும். கோட்டை வாசலை கடக்கும் போது உள்ளே பலவிதமான கடைகள், கைவினைப்பொருட்கள் என பல இருந்தது. கோட்டைக்குள் மிக பெரிய தர்பார் அறை, கலை நிகழ்ச்சிகள் நடக்கும் பெரிய மேடை, புகழ் பெற்ற ஷா ஜஹானின் மயில் சிம்மாசனம் என எல்லாமே சிறப்பாய், பிரம்மாண்டமாய் இருந்தது.



தில்லி முழுவதும் கோட்டைகளும், மசூதிகளும், நினைவு சின்னங்களும் தான் அதிகம் இருக்கிறது. பலவும் முகலாய சாம்ராஜ்யத்தின் போது கட்டப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நம்மவூர் பர்மா பஜார், திநகர் ரெங்கநாதன் தெரு போல, இங்கு பல இடங்கள் இருக்கிறது. சரோஜினி நகர் மார்க்கெட், அமர் காலனி மார்க்கெட், கரோல் பாக் மார்க்கெட், கான் மார்க்கெட், கன்னாட் சர்கிள், பாலிகா பஜார், சோர் மார்க்கெட், சாந்தினி சவுக் மார்க்கெட் என நிறைமாதமான நம் பர்சின் டெலிவரிக்காக பல மார்க்கெட்க்கள் இருக்கிறது. அமர் காலனி, சாந்தினி சவுக், சரோஜினி நகர் போன்ற மார்க்கெட்களில் பெண்களுக்கான துணிமணிகள், அவர்களுடைய அணிகலன்கள் என பல பொருட்கள் மலிவாக கிடைக்கின்றன. கரோல் பாக் மார்க்கெட், கான் மார்க்கெட் ஆகிய இடங்களில் லெதர் பொருட்கள், ஆண்/பெண்களுக்கான உடைகள் என மலிந்து கிடைக்கிறது. ஆனால் பேரம் பேசி மலிவாக வாங்குவது அவரர் திறமை. பஜாரில் உஷாராக ஹிந்தியில் பேசாவிட்டால், நிஜாரை உருவி விட்டுவிடுவார்கள் என்பதை மட்டும் கவனத்தில் கொள்க!



ஜன்பத் ரோடு (Janpath Road) மற்றும் கன்னாட் சர்கிள் (Connaught Circle) ஆகிய இடங்களில் நாம் எல்லா வித பிராண்டட் கடைகளும்/ பொருட்களையும், எல்லா விலையிலும் வாங்க முடியும். உணவகங்களை பொறுத்தவரை சற்று காஸ்டலி போலதான் எனக்கு தெரிந்தது. ரொட்டி வகைகள் பல வெரைட்டியில் கிடைக்கிறது. இரு மாதங்களாக ரொட்டியும் சப்பாத்தியும், ராஜ்மா ரைஸ்சும் சாப்பிட்டு நாக்கு செத்தது தான் எங்களுக்கு மிச்சம். ஆயினும் அவ்வப்போது ஆந்திரா பவன், கேரளா ஹவுஸ் போன்ற இடங்களில் தென்னக சாப்பாட்டை ருசிபார்த்து பசியாறி கொண்டோம். ஜன்பத் ரோட்டிலும், கன்னாட் சர்கிளிலும் நம்ம ஓட்டல் சரவண பவன் இருக்கிறது. இங்கு போல அங்கும் பீக் ஹவரில் கூட்டம் அலை மோதுகிறது. ஒரு நாள் மதிய உணவிற்கு அங்கு சென்று ஒரு ஃபுல் கட்டு கட்டிவிட்டு வந்தோம்.

வேலைப்பளு காரணமாக வேறு எங்கும் பெரிதாய் சுற்றி பார்க்க முடியவில்லை. புது தில்லி சுற்றி பார்க்க வேண்டுமாயின் நவம்பர்-பிப்ரவரியில் போகலாம். பிப்ரவரி-ஜூன் -ல் உச்சி வெயில் மண்டையை பிளக்கும். மற்ற நாட்களில் மழையும் வெயிலும் மாறி மாறி வரும். மூன்று நாட்கள் வைத்தால் தில்லி பூராவும் பொறுமையாய் சுற்றி பார்த்து விடலாம். நான்காம் நாள் ஆக்ராவுக்கு பயணப்படுங்கள். அங்கு தாஜ் மகாலையும், ஆக்ரா கோட்டையையும் பார்த்துவிட்டு திருப்தியாக ஊர் திரும்பலாம்.


நன்றி!!!
-பி.விமல் ராஜ்

ஞாயிறு, 31 டிசம்பர், 2017

2017-ல் நடந்தவை !

வணக்கம்,

இந்த வருடம் அப்படி இப்படின்னு எப்படியோ பரபரப்பா போயிடிச்சு. எது நடக்கணுமோ அது நடக்கவே இல்லை. எது நடக்கவே கூடாது நினைச்சோமோ அது தான் நடக்குது. எப்பவுமே இப்படி தான் நடக்குது .. எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் தான். கடந்த வருடத்தில் நம்ம நாட்டில என்னன்னே முக்கிய சம்பவங்கள் நடந்ததுன்னு ஒரு வாட்டி திரும்ப போய் பார்ப்போமா? சில முக்கிய நிகழ்வுகளையம், சமூக வலைத்தளங்களில் பெரிதும் அலசப்பட்ட விஷயங்களையும், அங்கும் இங்குமாய் தேடி பதிவு போட்டிருக்கிறேன். அப்படியே கொஞ்சம் பின் நோக்கி போங்க...

  1. பீட்டா அமைப்பு ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை வாங்கியது. 
  2. சின்னம்மா சசிகலாவின் அரசியல் ஆசை. முதல்வராக முழு முயற்சி.
  3. அலங்காநல்லூரில் பொங்கலன்று ஜல்லிக்கட்டு வீரர்கள் கைது. 
  4. சென்னை மெரினாவில் மாணவர்கள் தன்னிச்சையாக கூடி போராட்டம்.
  5.  தமிழகம்மெங்கும் ஜல்லிக்கட்டு போராட்டம் பெரும் புரட்சியாய் மாறியது. மாபெரும் அறப்போராட்டமாக உருவெடுத்த மெரினா போராட்டம்; 8 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
  6. போராட்டத்தில் கலந்து கொண்ட பேர் தெரியாத பெண்ணின்  வீர முழக்க பாட்டு. பலர் கோஷ்டியாக பாட்டு பாடி/ ஆடி அமைதியான வழியில்  போராட்டம். 
  7. தமிழக முதல்வர்  ஓ.பன்னிர் செல்வத்தையும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் போராட்ட களத்தில் மக்கள் திட்டி தீர்ப்பு. OPS மிக்ஸர் சாப்பிடுகிறார் என கூறி கிண்டல்.
  8. ஜல்லிக்கட்டு தடை நீக்கம் என செய்தி. போராட்டக் களத்தில்  மாணவர்கள் களைந்து செல்ல வேண்டி போலீஸ் எச்சரிக்கை.  ஆட்டோவுக்கு தீவைப்பு, தடியடி என கலவரத்தை  உண்டாக்கிய காவல்துறை.
  9. ஜல்லிக்கட்டு தடை நீக்கம். ஜல்லிக்கட்டு சட்டம் தமிழக மற்றும் மத்திய அரசு சட்டசபையில் மாற்றப்பட்டு அமலுக்கு கொண்டு வந்தது.
  10. 45ஆவது அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு.
  11. H1B விசா முறைகளில் பல கட்டுபாடுகள் விதிவப்பு.
  12. இரான். இராக், லிபியா,சோமாலியா, சூடான், சிரியா, ஏமன் ஆகிய நாடுகளுக்கு 90 நாட்களுக்கு விசா மறுப்பு.
  13.  வெளிநாட்டில் உள்ள பல இந்தியர்கள் வேலை இழக்க வாய்ப்பு என செய்தி பரவியது.
  14. ஜல்லிக்கட்டு வெற்றிகரமாக பல ஊர்களில் பிரம்மாண்டமாய் நடந்தது.
  15. சென்னை எண்ணுர்  துறைமுகத்தில், இரு வெளிநாட்டு கப்பல்கள் மோதி கச்சா எண்ணெய் கொட்டியது. கடல் நீரும், கடல் வாழ் உயிரினமும் சேதம்.
  16. கொட்டிய எண்ணெயை வாளி வைத்து எடுக்க வைத்தது மத்திய/மாநில அரசு. 
  17. OPS முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா. சின்னம்மாவை முதல்வராக பதவியேற்க அழைப்பு. கவர்னர் ராம் மோகன் ராவ் மற்ற வேலை காரணமாக மறுப்பு.
  18. OPS ஜெயலலிதா சமாதியில் தீடிரென 40 நிமிடம் தியானம். தியானத்திற்கு பின் ஜெ சாவில் மர்மம், மதுசூதன் பொது செயலாளராக ஏற்க சொல்லி ஜெ சொன்னார், சசிகலா தன்னை ராஜினாமா செய்ய சொல்லி கட்டாய படுத்தினார் என பத்திரிக்கை கூட்டத்தில் கூறல். OPS மக்களிடையே திடீர் ஹீரோ ஆனார்.
  19. சட்டப்பேரவையில் ஸ்டாலினை பார்த்து சிரித்ததாக சொல்லி சசிகலா OPS -ஐ பொருளாளர் பதவியிலிருந்து நீக்கம். சின்னம்மா இரவு ஒரு மணிக்கு பத்திரிக்கைக்கு பேட்டி.
  20. இந்தியா 104 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை.
  21. அடுத்த ஓரிரு நாட்களில் பல எம்.எல்.ஏக்கள் OPS பக்கம் ஆதரவு.
  22. சசிகலா 129 எம்.எல்.ஏக்களுடன் கூவத்தூர் 'கோல்டன் பே' ரிஸார்டுக்கு அழைத்து சென்று அடைப்பு. 
  23. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயா, சசிகலா ஆகியோர் குற்றவாளி என தீர்ப்பு. சசிகலாவிற்கு நான்கு ஆண்டு சிறை. பெங்களூர் பரப்பானா சிறையில் அடைப்பு.
  24. சிறை செல்வதற்கு முன் ஜெயா சமாதியில் வணங்கி, ஓங்கி அடித்து சபதம். 
  25. சின்னம்மாவின் ஆணைக்கிணங்க, அதிமுக பிரதிநிதிகள் ஒப்பு க்கொள்ள எடப்பாடி பழனிசாமி புதிய முதலமைச்சாராக தேர்வு. 
  26. செயல் தலைவர் ஸ்டாலின் சட்டை சட்டசபையில் கிழிந்தது.
  27. ஜெயா இறப்புக்கு பின் தமிழ் நாட்டில் நடக்கும் எல்லா அரசியல் நகர்வுக்கு ஆளும் பா.ஜ.கவும்,மோடியும் தான் காரணம் என பலரும் திட்டவட்டமாக எண்ணினார்கள்.
  28. அதிமுக - OPS -ன் அதிமுக (அம்மா) எனவும், EPS -ன் அதிமுக (சசிகலா அணி) எனவும் பிரிந்தது.
  29. ஜெயலலிதா பிறந்த நாளன்று ஜெயாவின் அண்ணன் மகள் தீபா மாதவன் "எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை " என்ற கட்சியை தொடங்கினார்.
  30. கட்சி ஆரம்பித்த சில நாட்களில் தீபா கணவர் மாதவன் தனி கட்சி கட்சி ஆரம்பித்தார். அதிமுக அவரையும் அவர் மனைவியையும் பிரிக்க நினைப்பதாக குற்றம் சாட்டினார்.
  31. கீழடியில் பல பண்டைய தமிழர்கள் உபயோகித்த புராதன பொருட்கள் கண்டுபிடிப்பு. தொல்பொருள் ஆராய்ச்சியை நிறுத்த மத்திய அரசு முடிவு. பலர் அதிருப்தி.
  32. ஜெயலலிதாவின் தொகுதி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிப்பு. இரு அணிகளும் இரட்டை இலைக்கு அடித்து கொண்டன.
  33. ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி  தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைத்தது.
  34. விஜய் மல்லையா லண்டனில் கைதாகி இரண்டு மணிநேரத்தில் விடுதலை.
  35. ஹச்.ராஜா பத்திரிக்கையாளர் சந்திப்பில் மோடியையும் பா.ஜ.காவை யம் எதிர்ப்பவர்கள் Anti Indian என கூறி காழ்ப்பு. 
  36. 'பாகுபலி 2' படம் ரிலீசாகி 1000 கோடியை (உலக அளவில்) எட்டியது. அதே போல ஹிந்தியில் 'டங்கல்' படம் (உலக அளவில் ) 2000 கோடியை எட்டி சாதனை படைத்தது. 
  37. ஆர்.கே.நகரில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதால் தேர்தல் ஓத்திவைப்பு. 
  38. இரட்டை இலை சசிகலாவுக்கு கிடைக்க, தேர்தல் ஆணையத்துக்கு இரண்டு கோடி லஞ்சம் கொடுத்ததாக கூறி புது தில்லி போலீஸ் தினகரனை கைது செய்தனர். இரு மாதங்களுக்கு பின்னர் விடுவிப்பு.
  39. ஆளும் பா.ஜ .க உத்தரகாண்ட், உத்தர பிரதேசம்,மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடத்த தேர்தல்களில் வெற்றி. பஞ்சாபில் காங்கரஸ் வெற்றி.
  40. சுச்சி லீக்ஸ் வீடியோ வெளியானது.
  41. பல அரசியல்வாதிகள் வீட்டிலும், நடிகர்கள் வீட்டிலும் வருமான வரி சோதனை.
  42. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என சொல்லியது வீண்; நாட்டிலுள்ள கருப்பு பணம் வெளிவரவே இல்லை என பல பொருளாதார நிபுணர்கள் கருத்து.
  43. விஜய் டி.வியின்  'நீயா நானா'-வில் ஒரு பெண் ஹெலிகாப்டரில் மாப்பிள்ளை வந்திறங்க வேண்டும் என ஆசை கேட்பு.
  44. வைகை அணையின் நீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மாகோல் போட்டு மூட அமைச்சர் செல்லூர் ராஜு முயற்சி. 
  45. ஜி.எஸ்.டி (GST) சட்டம் அமலுக்கு வந்தது. விலைவாசி கடும் ஏற்றம். நுகர்வோர் பலர் அதிருப்தி.
  46. கடனை தள்ளுபடி செய்ய கோரி விவசாயிகள் தில்லியில் போராட்டம். 
  47. 100 நாட்களுக்கு மேல் போராட்டம் நடத்தியும் மத்திய அரசு செவிசாய்க்க வில்லை.
  48. ராம்நாத் கோவிந்த் புதிய குடியரசு தலைவராக தேர்வு. வெங்கையா நாயுடு துணை குடியரசு தலைவராக தேர்வு.
  49. தமிழ் நாட்டின் கவர்னராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்.
  50. OPS -EPS மனம்/பணம் ஓத்து போக, இரண்டு அணிகளுக்கு ஒன்றாகின. OPS துணை முதல்வரானார். 
  51. .ப்ளூ வேல்' (BLUE WHALE) என்ற இணைய விளையாட்டு காரணமாக உலகில் பல டீன் ஏஜ் மற்றும் சிறுவர்கள் பலி. இந்தியாவிலும் ஊடுருவியது இந்த விளையாட்டு.
  52. மத்திய அரசு ப்ளூ வேல் கேம்மிற்கு தடை விதித்தது. 
  53. ஆதார் எண்ணை பாண் கார்ட், EPF, பாங்க் கணக்கு என எல்லாவற்றிலும் இணைக்க சொல்லி மத்திய அரசு உத்தரவு.
  54. லண்டனில் நடந்த ஐ.சி.சி.போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தி 180 ரன்னில் வெற்றி.
  55. ரஞ்சித் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் புதிய படம் 'காலா'; போஸ்டர் வெளியீடு.  
  56. கமலஹாசன் சில காலமாக டிவிட்டரில் அரசியல் பதிவுகளை போட்டு புரட்சி. ஏற்கனவே அரசியலில் தாம் இருப்பதாக சொல்லி, புதிய கட்சி ஆரம்பிக்க போவதாக நேரடி பதில்.   
  57. "மையம் விசில்" என்ற புது செயலி ஒன்றை சமூக விழிப்புணர்வுக்காக  ஆரம்பித்தார் கமலஹாசன். 
  58. ஜப்பான் கடல் பகுதியில், வட கொரியா அணு ஆயுத சோதனை நடத்தியது. அமெரிக்காவிற்கும், உலக நாடுகளுக்கும் பேப்பரும் சவாலாக வட கொரியா மாறியது.
  59.  ரஜினிகாந்த ரசிகர்களை சந்திப்பு. கட்சி பற்றி விரைவில் சொல்ல போவதாக கூறினார். சிஸ்டம் சரியில்லை; போருக்கு தாயாராகுங்கள் என ரசிகர்களிடம் கூறினார். பலர் இது படம் ஓட, அவர் செய்யும் வழக்கமான அரசியல் பூச்சாண்டி என்றும், அவர் வரவே மாட்டார் என்றும் கூறினார்.
  60. விஜய் டி.வியில் பிக் பாஸ் நிகழ்ச்சி 15 பிரபலங்களுடன் ஆரம்பித்தது. ஜல்லிக்கட்டு ஜூலி, ஓவியா, ஆரவ், கணேஷ் வெங்கட்ராம் ஆகியோருக்கு பலர் ஓட்டு போட்டனர். 4 கோடி பேருக்கு மேல் பார்க்கப்பட்ட ஜூலியையும் பலர் திட்டி தீர்த்தனர். ஓவியாவுக்கு தானாய் சேர்ந்த ரசிகர் கூட்டம். பெரும்படையான ஓவியா ஆர்மி மாறியது. கடைசியில் ஆரவ் பிக் பாஸாக தேர்வு. 
  61. நெடுவாசல், கதிராமங்கலம் ஆகிய கிராமங்களில் விளைநிலங்களில்  ஹைட்ரொ கார்பன், மீத்தேன் எடுக்க   மத்திய அரசு முடிவு. பல இடங்களில் மக்கள் போராட்டம்.
  62. சினிமா தியேட்டர் டிக்கெட் விலை ஏற்றம். மக்கள் பலரும் அதிருப்தி. தமிழ் ராக்கர்ஸ் காட்டில் அடைமழை. 
  63. மாட்டுக்கறிக்கு மத்திய அரசு தடை. பசுக்களை காக்க வேண்டி சட்டம் கொண்டு வர முடிவு. பலர் எதிர்ப்பு. 
  64. விவேகம் படம் ரிலீசானது. யூ டியுப் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் படத்தையும் அஜித்தையும் கழுவி கழுவி ஊற்ற, பலர் அதற்கு எதிர்ப்பும் இணைய சண்டைகளும் நடந்தது.
  65. வண்டி ஓட்டும் போது கண்டிப்பாக ஒரிஜினல்டி ரைவிங் லைசன்ஸ் கொண்டு செல்ல வேண்டும் என தமிழக அரசு சட்டம். 
  66. மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் புத்த பிட்சுக்களால் கொன்று குவிப்பு.
  67. தமிழ் நாட்டில் நீட் தேர்வு எதிர்ப்பு. பல இடங்களில் மாணவர்கள் போராட்டம்.
  68. நீட் தேர்வை தடை செய்ய கோரி மேல்முறையீடு செய்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை. 
  69. 'ஜிம்மிக்கி கம்மல்' மலையாள பாட்டு பிரபலமானது. 
  70. டெங்கு காய்ச்சலால் தமிழ் நாட்டில் பலர் பலி.
  71. கோரக்பூரில் ஆக்சிஜன் சப்ளை இல்லாததால் 325 குழந்தைகள் இறப்பு.
  72. மெர்சல் படம் ரிலீசானது. படத்தில் GST பற்றிய தவறான கருது இருப்பதாக சொல்லி பா.ஜ .க எதிர்ப்பு. விஜய்யை மத ரீதியாய் விமர்சித்த பா.ஜ.காவின்  ஹச்.ராஜா. மக்கள் பலரும் கோபம்.
  73. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த இயக்குனர் ஷங்கரின் '2.0 ' பட ஷூட்டிங் முடிவடைந்து, ஆடியோ ரிலீஸ் துபாயில் பிரம்மாண்டமாய் நடந்தது. 
  74. 'லட்சுமி' குறும்படம் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கூட்டியது.
  75. நிர்மலா சீதாராமன் புதிய ராணுவ அமைச்சராக பதவியேற்பு.
  76. ஆளும் பா.ஜ .க குஜராத், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடத்த தேர்தலில் வெற்றி.
  77. பிட்காயின் (BITCOIN) என்ற டிஜிட்டல் கரன்சி பற்றிய செய்திகள் பெரிதும் மக்களுக்கு தெரிய ஆரம்பித்தன. பிட்காயினின் மதிப்பு திடீரென ஏறி இறங்கியது. 
  78. பல மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டு கொன்றுள்ளனர்.  ஒரு முறை இந்திய கடற்படையினரே மீனவர்களை சுட்டு கொன்றுள்ளனர். 
  79. புது தில்லியில் காற்றின் மாசு அதிகமாகி ஊரே புகைமண்டலமாய் மாறியது.
  80. சென்னையில் ஒரிரு நாள் பெய்த மழைக்கே சாலைகளும், வீடுகளும் வெள்ளத்தில் மிதந்தன.
  81. பஞ்சாபை சேர்ந்த மனுஷி சில்லர் உலக அழகியாய் தேர்வு.
  82. மீண்டும் ஆர்.கே.நகரில் இடைதேர்தல். தினகரன் சுயேட்சையாக நிற்க முடிவு; குக்கர் சின்னம் கொடுக்கப்பட்டது. நடிகர் விஷால் தேர்தலில் போட்டியிட முடிவு. ஆனால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. தீபா மாதவனும் போட்டியிட விண்ணப்பித்தும், மனு நிராகரிக்கப்பட்டது
  83. ஓகி புயல் கன்னியாகுமரியை தாக்கியது. தமிழக அரசு சரியான எச்சரிக்கை தராததால் பல மீனவர்கள் கடலுக்கு சென்று இறந்தனர். 300க்கும் மேற்பட்ட மீனவர்களை காணவில்லை. சில மீனவர்கள் இரண்டு மூன்று வாரங்கள் கழித்து கரை திரும்பினர்கள். சிலர் கடலில் இறந்து மிதந்தனர்.
  84. இம்முறையும் ஆர்.கே நகர் தொகுதி முழுவதும் ஓட்டுக்கு பணம்   தரப்பட்டது.
  85. இடைத்தேர்தலுக்கு முந்திய நாள், தினகரன் அணி ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்த போது எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அது போலி/அனிமேஷன் மார்பிங் என பல சந்தேகங்கள் மக்களுக்கு வந்தது.
  86. ஆர்.கே.நகரில் இடைதேர்தலில் டி .டி .வி . தினகரன் மாபெரும் வெற்றி.
  87. பா.ஜ .க பெரும் தோல்வி. நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்று தோல்வி.
  88. மீண்டும் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திப்பு. 31 டிசம்பரில் புதிய கட்சி பற்றி சொல்ல உள்ளதாக கூறினார்.
  89. உச்சநீதிமன்றம் இஸ்லாமியர்களுக்கான முத்தலாக் சட்டத்தை தடை செய்தது.
  90. சூப்பர் ஸ்டார் ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருவதாக பேட்டி. விரைவில் தனிக்கட்சி ஆரம்பித்து, தமிழக சட்டசபை தேர்தலில் தனித்து நிற்க முடிவு. ரசிகர்கள் கொண்டாட்டம்.

இதுக்கு அப்புறம் அடுத்த வருடம் இன்னும் என்னென்னெ நடக்குமோ என தெரியவில்லை. வரும் 2018 ஆம் வருடமாவது எல்லோருக்கும்  நல்ல முன்னேற்றத்தையும், வளத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கட்டும்!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 24 டிசம்பர், 2017

ஜனநாயகமும் பணநாயகமும் !

வணக்கம்,

எப்போ வரும்? எப்போ வரும்? என மக்கள் எதிர்பார்த்த ஆர்.கே நகர் இடை தேர்தல் கடந்த வாரம் நடந்து முடிந்து, இன்று முடிவுகள் வெளிவந்துள்ளது. எதிர்பாரா விதமாக சுயேச்சை வேட்பாளர் நாகராஜ சோழன் டி.டி.வி. தினகரன் முன்னணியில் வந்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி  பெற்றுள்ளார். குக்கர் விசில் சத்தம் காதை  பிளக்கிறது என தொலைக்காட்சியில் மணிக்கு ஒருமுறை சொல்லி கொண்டே இருக்கின்றார்கள்.

எல்லா தேர்தலையும் போல இந்த தேர்தலிலும் பணம் கொடுக்கப்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது. ஓட்டுக்கு பணம் வாங்குவது சரியா? தவறா? என்ற விவாதம் போய் கொண்டிருக்கையில், பலர் ஓட்டுக்கு காசுவாங்கி கொண்டும்,  ஓட்டுக்கு காசு கொடுத்து கொண்டும் தான் இருக்கின்றனர்.

cash-for-vote

ஓட்டுக்கு காசு கொடுப்பதை நமது அரசியல்வாதிகள் மக்களுக்கு நன்கு பழக்கி விட்டு விட்டனர். 2009-ல் நடந்த திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க ஓட்டுக்கு பணம் கொடுத்து "திருமங்கலம் பார்முலாவை" ஆரம்பித்து  வைத்தனர் என சொல்லுகின்றனர். ஆனால் ஓட்டுக்கு பணம் கொடுப்பது என்பது காலம் காலமாக நமது நாட்டில் நடந்து கொண்டு தான் வருகிறது. சில எம்.ஜி.ஆர்  படங்களில் ஓட்டுக்கு பணம்/பொருள் கொடுப்பது பற்றி சோ அவர்களின் வசனம் இருக்கும். அதுபோல "வீட்டுக்கு ஒரு எவர்சில்வர் குடமும், பணமும் கொடுத்து ஓட்டு கேட்டிருக்கிறோம்", என்ற வசனம் அமைதிப்படை படத்தில் வரும். இதிலிருந்தே ஓட்டுக்கு பணம் தரும் பழக்கம் ஆண்டாண்டு காலமாக இருப்பது நமக்கு தெளிவாக தெரிகிறது. முன்பெல்லாம்  ஒரு ஓட்டுக்கு பாட்டில் சாராயம் மற்றும் ஐம்பது, நூறு என தந்து கொண்டிருந்தனர். திருமங்கலம் இடைத்தேர்தலுக்கு பிறகு ஐம்பது, நூறுக்கு பதிலாக ஐந்தாயிரம், பத்தாயிரம் என கொடுக்கின்றனர். தேர்தல் மார்க்கெட்டிலும் விலைவாசி சரமாரியாக ஏறிப்போனது தான் இங்கு பிரச்சனை.  
                   
மக்கள் ஏன் வாங்குகின்றனர்? அவர்கள் கொடுக்கின்றனர்; அதனால்  வாங்குகிறார்கள். தேர்தலுக்கு பின் எப்படியிருந்தாலும் யாரும் ஒன்றும் செய்யப்போவதில்லை. அதனால் முன்னாலேயே காசை வாங்கி விடுவோம் என்று எண்ணி தான் காசாகவோ, பொருளாகவோ வாங்குகின்றனர். காசை வாங்கி கொண்டு தமக்கு விருப்பமான கட்சிக்கு தான் ஓட்டு போடுகின்றனர். ஓட்டு போடுவது  நமது உரிமை; சரியான தலைவரை தேர்ந்தெடுப்பது நம் கடமை; ஓட்டுக்கு பணம் வாங்குவது சட்டப்படி தவறு தான். இவையனைத்தும் இருந்தும் மக்கள் ஏன் பணம் வாங்குகிறார்கள்?

சில மேல் தட்டு வர்க்க மக்களும் , நடுத்தர வர்க்க மக்களும், நமக்கு வரும் பணத்தை ஏன் விடவேண்டும் என்று எண்ணுகின்றனர். நாம் பணம் வேண்டாம் என சொன்னால் அதை நம் பெயரில் வேறு ஒருவன் வாங்கிக்கொள்வான்; அல்லது கட்சிக்காரனே 'லபக்' கிவிடுவான். வலிய வருவதை ஏன் விடவேண்டும் என்று எண்ணி எல்லா கட்சிகளிடமும் கேட்டு வாங்கி கொள்கின்றனர்.  அதே போல கடைநிலை வர்க்க மக்களுக்கு வருமானமோ மிக குறைவு. ஒரு ஓட்டுக்கு ஐந்தாயிரம், பத்தாயிரம் கிடைக்கும் போது, நான்கு/ஐந்து பேர் கொண்ட குடிசை /கூரை /ஓட்டு வீட்டில்/  வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இருப்போர்களுக்கு ஐம்பதாயிரம் வரை கிடைக்க வாய்ப்புண்டு. இது அவர்களுக்கு மிக பெரிய தொகை. இதை விட்டு உரிமையை காப்பாற்றுங்கள் என யார் கூறினாலும் கேட்கமாட்டார்கள்.  எல்லா வித மக்களுக்கும் பணம் முக்கிய தேவை.  அது கிடைக்கும் போது, அதுவும் பொறுப்பில்லாத, ஊழல் மலிந்து கிடக்கும் நம் நாட்டில் யாரும்  பணத்தை விட்டுவிட்டு ஜனநாயகம், கடமை, உரிமை, பொறுப்பு என யாரும் யோசிக்க மாட்டார்கள். இது தான் இன்றைய ஜனநாயக அரசியலின்  உண்மை  நிலை.

இந்த நிலை எப்பொழுது மாறும் என அவ்வளவு எளிதில் சொல்லிவிட  முடியாது. பொதுமக்கள் மீது தான் தவறு; அவர்கள் தான்  திருந்த வேண்டும் என பழியை முழுவதும் அவர்கள் மேல் போட்டு விட முடியாது. அவர்கள் தேவையை முதலில் முழுவதும் பூர்த்தி செய்ய வேண்டும். காசு வேண்டாம் என மக்கள் சொல்வது போல ஆட்சியையும் அரசும் நடக்க வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே பணநாயகம் இல்லாமல் ஜனநாயக முறைப்படி தேர்தல்கள் நடைபெறும். "திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது." பொதுமக்கள், அரசியல்வாதிகள் என எல்லோருக்கும் இந்த பாடல் வரி பொருந்தும்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்
  

திங்கள், 23 அக்டோபர், 2017

பண்டிகைகளில் ஏன் இந்த வேறுபாடு?

வணக்கம்,

தீபாவளி முடிந்து ஒரு வாரம் ஆகி விட்டது. தீபாவளியும், அதன் கொண்டாட்டங்களும் பற்றிய பதிவு இது. போன வாரமே பதிவிட்டிருக்க வேண்டும். பணி காரணமாக மறந்துவிட்டேன். ஆதலால் இன்று பதிவிடுகிறேன்.

இந்தியா முழுவதும் மக்கள் பல்வேறு வகையான பண்டிகைகளை கொண்டாடுகின்றனர். அதில்  தீபாவளியும் ஒன்று. ஒவ்வொருவரும் அவரவர் சம்பிரதாய நம்பிக்கைக்கு தகுந்தவாறு வேறு வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர்.

சீக்கிய மதத்தில் பந்தி சோர் திவாஸ் (Bandi Chhor Divas) என்ற பெயரில், சீக்கியரின் குருவான குரு ஹர்கோபிந்த் சிங்கும், அவருடன் 52 இந்து அரசர்களும்  சிறையிலிருந்து முகலாய மன்னரால் விடுவிக்கப்பட்ட நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. சமண மதத்தில் வர்த்தமனா மஹாவீரர் முக்தியடைந்த நாளாக தீபாவாளி கொண்டாப்படுகிறது. புத்தமதத்தில் சில பிரிவினர், லட்சுமி மற்றும் விஷ்ணு கடவுள்களை வணங்குவதன் மூலம் தீபாவாளி கொண்டாடுகின்றனர்.

இதெல்லாம் கூட பரவாயில்லை, மற்ற மதங்கள் என கொள்ளலாம். இந்து மதத்தில், ஒவ்வொரு பிரிவினரும், ஒவ்வொரு மாநில மக்களும், அவர்தம் நம்பிக்கைக்கேற்ப கொண்டாடி வருகின்றனர்.

வடஇந்தியாவில் ராமர் ராவணனை வதம் செய்து சீதையுடன் அயோத்தி திரும்பும் நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. அவர்களின் வருகையை கொண்டாடும் வகையில் ஊரெங்கும் தீபமெற்றி, பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார்கள். சிலர் பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் கழித்து வருகின்ற நாளை தீபாவளி என சொல்கின்றனர்.

சிலர் இந்து கடவுளின் செல்வத்தின் அதிபதியான திருமகளை (லட்சுமி தேவியை) வணங்குகின்றனர். பாற்கடலை கடைந்தன் மூலம் லட்சுமி பிறந்து, தீபாவளி நாளன்று விஷ்ணுவை மணக்கிறார் என்று சொல்கின்றனர்.

deepavali-festival-india

தீபாவளியன்று அசாம், ஒரிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் லட்சமிக்கு பதிலாய் காளியை (காளி பூஜை) வழிபடுவார்கள். உத்தர பிரதேசத்தில் பிரிஜ் பகுதியில் தீபாவளியை கிருஷ்ணனுக்கு கோவர்த்தன பூஜை என்ற பெயரில் கொண்டாடுவார்கள்.

மார்வாரிகளின் புத்தாண்டாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.  தீபாவளிக்கு அடுத்த நாள் குஜராத்திகளின் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அன்று தான் அவர்கள் புது கணக்கு ஆரம்பிப்பார்கள்.

ஆந்திராவில் தீபாவளி இரு நாட்களாக கொண்டாடப்படுகிறது. முதல் நாள் நரக சதுர்த்தசி என்றும், மறுநாள் தீபாவளி அமாவாசை எனவும் கொண்டாடப்படுகிறது. அதே போல கர்நாடகாவிலும் ஐந்து நாட்களுக்கு தீபாவளி கொண்டாடப்படுகிறது. கேரளாவிலும் இருநாட்கள் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் நரகாசுரனை வதைத்த திருநாளாக தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு அடுத்த நாள் சிலர் காரடையார் நோன்பு எடுப்பார்கள். தென்னிந்தியா முழுவதும் நரகாசுரனை வதைத்த திருநாளாக தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது. நாட்டின் சில பகுதிகளில் தீபாவளி இரு நாட்களாகவும், சில இடங்களில் 5 நாட்களுக்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

பண்டிகையின் பெயர் ஒன்றுதான். வழிபடும்/கொண்டாடும் முறை வேறுபட்டிருக்கலாம். ஆனால் கொண்டாடப்படும் காரணங்களே எப்படி வேறுபடும் என புரியவில்லை. அதுவும் ஒரே தேசத்தில், ஒரே மதத்தில் ?!?!

அடுத்து தமிழர் பண்டிகைக்கு வருவோம். கார்த்திகை தீபம். தமிழ் நாட்டில் மட்டும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நாளில் (பெரிய கார்த்திகை என சொல்வார்கள்) கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றும் நாளில் தமிழகமெங்கும் மக்கள் வீடுகளில் தீபமேற்றி கொண்டாடுவர்.  அன்று முதல் மூன்று நாட்களுக்கு தீபம் ஏற்றி வழிபடுவார்கள். ஆனால் வைணவ பிராமண பிரிவினர், அதற்கு அடுத்த நாள் தான் தீபம் ஏற்றுவார்கள். அது எப்படி பொதுவான பண்டிகை கூட ஓவ்வொரு சமூகத்திற்கும், அதன் உட்பிரிவுக்கும் மாறுகிறது என தெரியவில்லை.

அதே போல விநாயகர் சதுர்த்தி நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. ஆனால் வைணவ பிரிவினரில் சிலர் விநாயகர் சதுர்த்தியை பெரிதாக கொண்டாட/வழிபடுவதில்லை. சைவ பிரிவினர் சிவராத்திரி கொண்டாடுவது போல வைணவர்கள் கொண்டாடுவதில்லை. அதற்கு பதில் வைகுண்ட ஏகாதேசி கொண்டாடுகின்றனர்.

பிராமணர் (சைவம்/வைணவம்) அல்லாதோர் பெரும்பாலும் நவராத்திரி (கொலு வைத்தல்) கொண்டாடுவதில்லை. கிருஷ்ண ஜெயந்தியும் எல்லா இந்து சமூக மக்களும் கொண்டாடுவதில்லை. ஏன் இந்த பாகுபாடு? எல்லா இந்துக்களும், எல்லா கடவுள்களையும் வணங்குகின்றனர். யார் இந்த கோட்பாடுகளை இயற்றியது? ராமானுஜர் காலம் தொட்டே வைணவ-சைவ கலாச்சார வேற்றுமை இருந்து வருவதை நாம் அறிவோம். ஆனால் பண்டிகைகளுக்குள் ஏன் இந்த சம்பிரதாய வேறுபாடு? எந்த காலத்தில் இது ஆரம்பிக்கப்பட்டது? இல்லையெனில் என் புரிதல் தவறானதா? யாராவது புரிய வையுங்களேன்!

தகவல்: கோரா, விக்கிபீடியா 


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

வியாழன், 28 செப்டம்பர், 2017

ஸ்பைடர் - விமர்சனம்

வணக்கம்,

தெலுங்கு படவுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தமிழில் முதன்முறையாக நடித்து, ஏ. ஆர். முருகதாஸ் இயக்கியிருக்கும் படம் SPYDER. டீசரில் சும்மா ஹைப்புக்காக ஒரு எலக்ட்ரானிக் சிலந்தியை காட்டியுள்ளார்கள்; டிரைலரில் சாதாரண தெலுங்கு ஆக்ஷன் படம் போல காட்டினார்கள். மேலும் இப்படம்  ஒரு ஸ்பை திரில்லர் (SPY THRILLER) என சொல்லப்பட்டதால், இப்படத்தின் எதிப்பார்ப்பு கூடியது. அது மட்டுமல்லாமல், டெக்னாலஜி, ஆக்ஷன், ஸ்பை திரில்லர், மாஸ் ஹீரோ என இவற்றோடு ஏ. ஆர். முருகதாஸ் இயக்கம் என்பதால் படம் பார்க்க ஆவலுடன் கிளம்பினேன்.

spyder-movie-review

உளவுத்துறையில் பொது மக்களின் போன் கால்களை ஒட்டு கேட்கும் பணியில் இருக்கிறார் மகேஷ் பாபு. ஒட்டு கேட்டு, அவர்களுக்கு வரும் பிரச்சனைகளிலிருந்து மக்களை காப்பாற்றுகிறார். அப்படி ஒரு நாள் ஒட்டு கேட்கும் போன் காலில், ஒரு முகம் தெரியாத பெண்ணுக்கு உதவ போய், அந்த பெண்ணும், மகேஷ் பாபுவின் தோழியும் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளி இந்த கொலை மட்டுமில்லாமல், பல தொடர் கொலைகளை செய்து வருகிறான் என விசாரணையில் தெரிகிறது.  நாயகன் அந்த சைக்கோ கொலையாளியை தேடி கண்டுபிடித்தாரா, அவன் ஏன் கொலை செய்கிறான், டெக்னாலஜி கொண்டு எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது தான் படத்தின் கதை.

டோலிவுட்  பிரின்சுக்கு இது முதல் நேரடி தமிழ் படம். மகேஷ் பாபு தெலுங்கில் பேசி நடித்தாலே அவர் முகத்தில் பெரியதாய் ரியாக்ஷன் எதுவும் இருக்காது. தமிழில் கேட்கவே வேண்டாம்... திரைக்கு வந்து வசனம் பேசி சென்றிருக்கிறார். ஆக்ஷன், டான்ஸ், ரொமான்ஸ் எல்லாம் செய்கிறார். பெரிதாய் நடிப்பு இல்லையென்றாலும் படம் முழுவதும் தெரிகிறார். நாயகி ரகுல் பிரீத் சிங், மற்ற கமர்ஷியல் படங்களில் ஹீரோயினி வருவது போல இரண்டு பாட்டு, நாலு சீனுக்கு வந்து சென்றுள்ளார். அவர் கதாபாத்திரம் பெரிதாய் சொல்லி கொள்ளும் அளவு இல்லை.

ஹீரோவின் அப்பா, அம்மா, நண்பனாக RJ  பாலாஜி, போலீஸ் மேலதிகாரி என பலர் படத்தில் பேருக்கு வந்து சென்றுள்ளனர். இன்னும் எத்தனை படத்தில் தான் போலீஸ் மேலதிகாரிகளை காமெடியாக காட்டுவார்களோ தெரியவில்லை. பிளாஷ்பாக்கில் வரும் சிறுவயது எஸ்.ஜே.சூர்யாவாக நடித்த சிறுவன்,  நடிப்பில் மிரட்டி இருக்கிறான். அவன் ஏன் அப்படி சைக்கோ கொலையாளியானான் என்று சொல்லப்படும் கதையையும் ஓரளவு ஒத்து கொள்வதாய் இருக்கிறது. பரத் சிறு வில்லன் பாத்திரதில் நடித்து சென்றிருக்கிறார்.

இந்த படத்துக்கு பாடல்களே தேவையில்லை. வரிகளில் தெலுங்கு வாடை வருவதால், பாடல்களை பெரிதாக ரசிக்க முடியவில்லை. ஸ்பைடர் தீம் மீசிக் மட்டும் த்ரில்லர் படத்திற்கு ஏற்றது போல நன்றாக இருக்கிறது.

படத்தில் கொடூர சைக்கோ வில்லனாக எஸ்.ஜே.சூர்யா மிரட்டியுள்ளார். இறைவியில் நடித்ததை விட நன்றாகவே  நடித்துள்ளார். மகேஷ் பாபு இண்ட்ரோக்கு கிடைத்த கைத்தட்டலைகளை விட இவருக்கு கிடைத்தது அதிகம். ஒருவேளை நான் தமிழில் பார்த்ததானால் என்னவோ, எனக்கு அப்படி தோன்றியுள்ளது. அவ்வப்போது எஸ்.ஜே. சூரியாவின் நக்கல் பேச்சும், குரூர முகபாவனையும் நம்மை அசத்துகிறது. படத்தின் முழு பலமே இவர் நடிப்பு தான்.

முதல் பாதி படு வேகமாய் முடிகிறது. இரண்டாம் பாதி இன்னும் மாஸாக இருக்கும் என நினைத்து கொண்டிருந்தால் ஓவர் மசாலா, லேடிஸ் சென்டிமன்ட் என  தலையை சொரிய வைக்கிறார்கள். வில்லனை சாதாரண வீட்டு பெண்களை கொண்டு பிடிப்பது என்பது அவ்வளவு ஈஸியாக எடுத்து கொள்ள முடியவில்லை. இந்த சீன் மட்டும் தான் கொஞ்சம் இடிக்கிறது. பார்க்கும் போது "அட அக்கருமமே!" என சிரிக்க தான் தோன்றுகிறது. அதே போல டெக்னாலஜி கொண்டு வில்லனை கண்டுபிடிப்பது  எல்லாம் நன்றாக தான் இருக்கிறது... ஆனால் கொஞ்சமாவது லாஜிக் பார்த்திருக்கலாம். ஹ்ம்ம்.. சரி விடுங்க.. எதோ ஒண்ணு .. படத்தின் ஓட்டத்தில் டெக்னாலஜி ஓட்டைகளை மறந்திடலாம். கிளைமாக்சில் பேருக்கு ஒரு சமூக கருத்தை வலுக்கட்டாயமாய் திணித்துத்துள்ளார்கள். முருகதாஸ் தமிழ் படங்களுக்கு ஒரு மாறியும், தெலுங்கு படத்துக்கு ஒரு மாறியும் கதை பண்ணுவார் என நினைக்கிறேன். இயக்குனர் திரைக்கதையை என்னும் வலையை மட்டும் இன்னும் கொஞ்சம் சீராக பின்னியிருந்தால் SPYDER உண்மையிலேயே செம மாஸ் கமர்ஷியல் த்ரில்லராக இருந்திருக்கும். இருந்தாலும் பரவாயில்லை... ஒரு முறை பார்க்கலாம்!


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

∴பேஸ்புக்கில் ஏன் பகிர்கிறார்கள்?

வணக்கம்,

நம் பெற்றோர்கள் நமது சுக-துக்கங்களை நமக்கு நெருக்கமானவர்களிடம் பகிர சொல்லிக் கொடுத்திருப்பார்கள். ஆனால் நாம் நெருக்கமான நபர்களிடம் பகிர்கிறோமோ இல்லையோ, எல்லாவற்றையும் ∴பேஸ்புக்கில் கட்டாயம் பகிர்ந்து விடுகிறோம் .

இந்த பழக்கம் பேஸ்புக் உபயோகிக்கும் பலருக்கும் உண்டு,  என்னையும் சேர்த்து தான்... பொதுவாக எந்த மாதிரியான ஆட்களெல்லாம் ∴பேஸ்புக்கில் இருக்கிறார்கள் ? அவர்கள் எதையெல்லாம் பகிர்கிறார்கள் ? ∴பேஸ்புக்கில் ஷேர் செய்வோரில் பல டைப் மக்கள் உண்டு.

facebook-likes-and-shares

Type1: தொடர்ந்து ஸ்டேட்டஸ் போட்டுக்கொண்டே இருப்பார்கள். நாட்டுநடப்பு, உலக நடப்பு, அரசியல் நடப்பு, வீட்டு நடப்பு, அவர் சொந்த கடுப்பு, வெறுப்பு, மலரும் நினைவுகள் என போட்டு கொண்டே இருப்பார்கள். சிலர் ஓரிரு வரிகளில் போடுவார்கள்; சிலர் பத்தி பத்தியாய் போடுவார்கள். இவர்கள் போஸ்ட் போட்டவுடன் லைக்ஸ் போட நண்பர்கள் கியூவில் நிற்பார்கள்.

Type2: ஒரு சிலர் நாட்டின்/மக்களின் பிரச்னைகளை புரட்சிகரமான கருத்துக்களை கொண்டு பகிர்ந்து கொள்வார்கள்.  இவர்கள் ஏன் இப்படி செய்யவில்லை.? ஏன் அப்படி செய்தார்கள்? ஒருவேளை இப்படி இருந்தால்... என போஸ்ட் போட்டு பகிர்ந்துக்கொண்டே இருப்பார்கள்.

Type3: அடுத்தது பொதுவான மக்கள். ஜோக்ஸ், விடியோக்கள், மீம்ஸ், சினிமா செய்திகள், பொன்மொழிகள், கிச்சன் டிப்ஸ், விழிப்புணர்வு, ஓட்டலில் சாப்பிட போனது, ஊருக்கு போனது, ஊர் சுற்றியது என பகிர்ந்து கொண்டே இருப்பார்கள். இருநாட்களுக்கு ஒருமுறை பேஸ்புக் வந்து லைக்களையும், ஷேர்களையும் போட்டு தள்ளி விடுவார்கள். நம் ∴பேஸ்புக் பேஜை திறந்தால், அதில் இருக்கும் 25 notification-ல் 23 அவர்களுடையதாய் இருக்கும்.

Type4: சிலர் தங்களுக்கு பிடித்தமான போட்டோ, விடீயோக்கள் என சிலவற்றை மட்டும் ஷேர் செய்வார்கள்.

Type5: இவர்களில் சிலர் எப்போது எங்கு சென்றாலும் உடனே ∴பேஸ்புக்கில் location checkin பண்ணிவிடுவார்கள். Feeling happy, Feeling sad, Feeling exited, Feeling கடுப்பு என அவர்களின் மூட்-ஐ ஸ்டேட்டஸ் அப்டேட் செய்வார்கள்.


Type6: இன்னும் சிலர் வெறும் போட்டோக்களையும், விடீயோக்களையும் பார்த்து ஸ்ரோல் செய்து கொண்டே செல்வார்கள். மற்றபடி, லைக், ஷேர் எதுவும் செய்யமாட்டார்கள்.

Type7: இன்னொரு சாரார் எப்போதாவது ஏதாவது பொன்மொழியோ, போட்டோவோ, சாமி படமோ ஷேர் பண்ணுவார்கள்.

Type8: வெறும் க்யூட்டான குழந்தைகள் போட்டோ, பூக்களின் போட்டோ மட்டும் இருந்தால் அது பெண்களின் ப்ரோஃபைலாக தான் இருக்கும். பல சமயங்களில் அது ∴பேக் ஐ.டி யாகவும் இருக்க வாய்ப்புள்ளது.

Type9: சிலர் தொழிலுக்காகவும், அரசியல் பரப்புரைக்காகவும் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். இவர்களது வெற்றியே எத்தனை லைக்ஸ் மற்றும் கமெண்ட் வருகிறது என்பதை கொண்டே தெரியும். ஆனால் இவையெல்லாம் வெறும் வியாபார மார்க்கெட்டிங் நோக்கிற்காக செய்யப்படுபவை.

இவர்களெல்லாம் ஷேர் பண்ணுவது ஏதற்கு? எல்லாம் ஒரு லைக்குக்கு தான். Like, Love, Ha Ha, Wow, Sad, Angry என அதாவது ஒன்றை யாரவது அவர்கள் போட்டோவுக்கோ, போஸ்டுக்கோ ரியாக்ட் செய்திருக்க வேண்டும்; கமெண்ட் செய்திருக்க வேண்டும். இதற்காகவே பலர் தவம் இருக்கிறார்கள். அனைவரும் ஒரு சின்ன லைக் மற்றும் கமெண்ட்டுக்காக தான் இப்படி அலைகிறார்கள்.

ஒரு போட்டோவோ, போஸ்ட்டோ ∴பேஸ்புக்கில் போட்டுவிட்டு எத்தனையோ பேர் லைக்ஸ், கமண்ட் வருகிறது என ∴போனையே பார்த்து கொண்டிருக்கிறார்கள். 100 லைக்ஸ்க்கு மேல் வந்து விட்டால் மகிழ்கிறார்கள். சில நாட்களுக்கு முன் நண்பர் ஒருவர் ∴போனில் "மச்சி என் போட்டோவுக்கு லைக் போடுடா... இன்னும் 3 லைக்ஸ் இருந்தா செஞ்சூரி போட்டுருவேன்" என சொல்லி பெருமைப்பட்டு கொண்டிருந்தார். 100 லைக்ஸ் வாங்கிய பின் என்ன செய்வார் என யாருக்கும் தெரியாது. லைக்குகள் வாங்கி குவிப்பது ஏன்? ஒரு சிறு உதாரணம்: ஒரு நாய் தெருவில் போகும் வண்டிகளையெல்லாம் பார்த்து குரைத்து கொண்டே பின்னால் ஓடும். விரட்டி பிடித்து வண்டி நின்ற பின் என்ன செய்ய வேண்டும் என அதுக்கு தெரியாது. வண்டி நின்றபின் மீண்டும் இருமுறை குரைத்து விட்டு போய்விடும். அது போல தான் லைக்ஸ் வாங்கி குவிப்பவரின் நிலையும். 100, 500 அல்லது 1000 லைக்ஸ்க்கு பின் என்ன செய்வார்கள் என அவர்களுக்கும் தெரியாது. இதேல்லாம் ஒரு சின்ன அல்ப சந்தோஷதிற்கு தான்.

பலரும் அவர்களது சொந்த விஷயங்களை கூட ∴பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கிறார்கள். எங்கு போகிறோம்? எப்போது வருவோம்?.. உடம்பு சரியில்லை.. நாய் செத்து போச்சு.. பாட்டி மண்டைய போட்டுட்டாங்க.. என எல்லா கருமத்தையும் பகிர்ந்து விடுகிறார்கள். ஏதற்காக இப்படி எல்லாவற்றையும் பகிர்கிறார்கள்? எதற்கு இப்படி லைக் வாங்க துடிக்கிறார்கள் என யோசிக்கும் போது, இதற்கெல்லாம் ஒரு வித மனவியாதியே காரணம் என்கின்றனர் மனநல ஆர்வலர்கள். அவர்களுடைய மூளையில் ஒரு விதமான செரோடினின் (Serotinin) என்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன. அதை Happy Serotinin என்றே மருத்துவ உலகில் சொல்லுகின்றனர். அது சுரக்க சுரக்க மகிழ்ச்சி பெருகும். சாப்பாடு, தூக்கம், சினிமா, பணம், சரக்கு, விளையாட்டு, உடலுறவு, ஊர் சுற்றுதல், சமூக தொண்டு, பாராட்டு என எதை செய்தால் அவர்கள் மனம் மகிழ்ந்து இருக்குமோ, அதுபோல சிலருக்கு இது போன்ற ∴பேஸ்புக் லைக் மற்றும் பகிர்தல் மூலம் அவ்வகை ஹார்மோன்கள் சுரக்கிறது. அவை ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சியையும், ஒரு வித போதை உணர்வையும் தரக்கூடியவை என உளவியல் ஆர்வலர்கள் சிலர் சொல்கின்றனர்.

அதனால் தான் சிலர் எல்லாவற்றையும் பேஸ்புக்கில் பகிர்ந்து மகிழ்ந்து கொள்கிறார்கள். அடிக்கடி செல்பி எடுப்பதும், இந்த வியாதியினால் தான். இதற்கு தீர்வு என்பது பெரிதாக ஒன்றும் கிடையாது. எல்லாம் மனக்கட்டுப்பாட்டோடு இருக்க பழகி கொள்ள வேண்டும். அது தான் முடியலையே என்கிறீர்களா?  முயற்சி செய்து பாருங்களேன்! நானும் முயற்சி செய்கிறேன்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

திங்கள், 28 ஆகஸ்ட், 2017

விவேகம் - தோசை சுடும் கதை!

வணக்கம்,

கடந்த இரு நாட்களாக இணையத்தில் நடக்கும் காரசாரமான விமர்சன கச்சேரியின் புனைவு பதிவு இது.

-- AK தோசை கடை --

என்ன சார் ... தோசை எப்படி இருக்கு ? செமையா இருக்குல்ல..

ஹ்ம்க்கும்... நல்லாவேயில்லை .. எனக்கு சுத்தமா புடிக்கல..

என்ன சார்..இப்படி சொல்றீங்க ??

ஆமா! புடிக்கலைனா.. புடிக்கலைன்னு தான் சொல்வாங்க...

மாவாட்டுன மாஸ்டர் ரொம்ப கஷ்டப்பட்டு மெனக்கெட்டிருக்கார் சார்..

தோசை நல்லா இல்லலைன்னா, நல்லா இல்லைன்னு தான் சொல்லுவாங்க.. அதுக்காக மாவாட்டுனவர் பாவம்.... ரொம்ப ஹார்ட் ஒர்க் பண்ணி செஞ்சார்..  தோசை சுட்டவர் தங்கமான மனுசன்.. பொசுக்குன்னு நல்லாயில்லைன் னு சொல்ல கூடாதுன்னா எப்படி???... வாட் இஸ் திஸ் ???

ஆமான்டா ! நீ அவுங்க சுட்ட தோசையை மட்டும் நல்லா இருக்குனு சொல்லுவடா ... ..

நல்லா இருந்தா சூப்பர்ன்னு சொல்ல போறேன்... இல்லன்னா இதே பதில் தான்... இதுக்கு முன்னாடி சுட்ட தோசையெல்லாம் மட்டும் என்ன அமிர்தம் மாறியா இருந்துச்சு.. எதோ கொடுத்த காசுக்கு மசால் தோசை, ரவா தோசை, ஸ்பெஷல் தோசை அப்படீன்னு சாப்பிட்டு வரோம்...  அரைச்ச மாவிலேயே அரைச்சு தோசை சுட்டாலோ, தோசை மாவு புளிக்கவில்லை என்றாலோ, கல்லில் ரொம்ப  கருக விட்டாலோ, பிச்சி பிச்சு தோசை இருந்தாலோ, வேகாம இருந்தாலோ, தொட்டுக்க சப்புன்னு இருந்தாலோ யாருக்கும் சாப்பிடவே புடிக்காது...

போடங்கு இவனே... பெருசா சொல்ல வந்துட்ட நீ ... தோசை சுடுவது எப்படின்னு உனக்கு தெரியுமா? நீ முதல்ல ஒழுங்கா சுட்டு காட்டு பாப்போம்.. 

அட லூசு பயலே.... எனக்கு தோசையெல்லாம் சுட தெரியாது...கொடுத்த காசுக்கு தோசை சாப்பிட்டுவிட்டு  நல்லா இருக்குதான்னு  இல்லையான்னு  சொல்வேன்... நல்லா இல்லைனா அடுத்த வாட்டி நல்லா சுடு...சுட்டு காட்டு.. அப்புறம் பேசு...

இது மாணிக்க விநாயகம் சுட்ட தோசைக்கு மட்டுமல்ல..  கில்லி வேலுக்கும், விருமாண்டிக்கும்.. அவ்வளவு ஏன் ??? ஆளானப்பட்ட ராஜா லிங்கேஸ்வரனுக்கும் கூட பொருந்தும்.. தோசை மோசமா இருந்தா மோசம்ன்னு தான் சொல்லுவாங்க...

சரி தான்டா.. அதுக்குன்னு கொஞ்சம் கூடவா பிடிக்கலை.. வெள்ளைக்காரன் ஸ்டைல தோசை சுட்டிருக்கோம் தெரியுமா? 

டேய்...  ஸ்டைல் ஓகேடா.. டேஸ்ட் ???? தட்டுல காட்டும் போது பீட்ஸா மாறிதான் இருத்துச்சு... சாப்பிட்டா தானே தெரியுது, அது வெறும் டெக்கரேட் பண்ண கலர்புல் பெசரட்டு-ன்னு..

கடைசியா என்ன தான் சொல்லுற நீ???

தோசை நல்லாவே இல்லைன்னு சொல்லல... கொஞ்சம் நல்லா வந்திருக்க வேண்டிய தோசை தான்.... ஓகே!  ஒரே ஒரு முறை மட்டும் சாப்பிட்டு பார்க்கலாம் ! போதுமா???

அதுதுதுதுதுதுது !!!!!!!

( பதிவின் கரு மட்டும், ஏதோ ஒரு பேஸ்புக் போராளியின் பதிவிலிருந்து சுட்டது.. )

vivegam-review

எனது பார்வையில் -

மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து படம் சொதப்பியதால், படத்தை பலரும் வசை மொழிகின்றனர். விவேகம் என பெயர் வைத்து விட்டு படுவேகமாய் ஓடுகிறது. அதன் வேகத்தில் நாமும் ஓடாவிட்டால் காட்சிகள் புரிய வாய்ப்பில்லை. ஹேக்கிங் , ஹாலோகிராம், ட்ராக்கிங் என டெக்னாலஜிகள் கதையில் புகுத்தியிருப்பது பலம். இருந்தாலும் அதை பற்றி விரிவாக சொல்லியிருக்க வேண்டியது இயக்குனரின் கடமை. உதாரணத்திற்கு இதே தல படமான ஆரம்பம் படத்தில் uplink, downlink, server hacking, thumb impression (கை நாட்டு) போன்ற டெக்னாலஜி சார்ந்த விஷயங்களை ஆடியன்ஸுக்கு புரிய வைக்க சில காட்சிகளையும், வசனங்களையும் வைத்திருப்பார்கள். அது போல விவேகத்திலும் வைத்திருந்தால் நலமாக இருந்திருக்கும்.

கமெர்ஷியல் படத்தில் லாஜிக் பார்க்க தேவையில்லை என்ற எழுதப்படாத விதியிருந்தாலும், அதை ஓரளவு தான் ஒத்து கொள்ள முடியும். இன்ட்ரோ சீனில் டேமிலிருந்து குதிப்பது, கிளைமாக்ஸில் (காஜல்) பாடலுடன் வில்லனிடம் சண்டை போன்ற விஷயங்கள் கொஞ்சம் கடுப்படிக்கிறது. 'யார்?'  படத்தில் சோமயாஜீலு பாட, நளினி  சாமி வந்தது போல ஆடுவார். சேம் பிளட் இங்கேயும் வருது.

தல அஜித் மெனக்கெட்டு உழைத்திருக்கிறார். உண்மை தான்... ஆனால் அதை சிறுத்தை சிவா அதை வீணடித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். தல -க்காக ஒருமுறை பார்க்க.......லாம்.

நன்றி !!!

-பி .விமல் ராஜ்

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

இன்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்குமா??

வணக்கம்,

" இன்ஜினியரிங் படித்தால் எளிதில் வேலை கிடைக்கும்.  வாழ்க்கையில் சீக்கிரம் செட்டில் ஆகிவிடலாம். " இது கடந்த பதினைந்து அல்லது இருபது வருடங்களாக, பரவலாக இந்திய பெற்றோர்களால் நம்ப படும் ஒரு அசாத்திய (மூட) நம்பிக்கை. பெண்ணோ/பையனோ பத்தாவது முடித்தது முதல், பிளஸ் 1 -ல் பஃர்ஸ்ட் அல்லது செகண்ட் குரூப் எடுத்து, பின்னர் பிளஸ் 2 பொது தேர்வில் நல்ல மார்க் வாங்கி ஜெயித்து, Maths Physics Chemistry -ல் குறைந்தபட்சம் கட்டாப்ஃ 150 மேல் எடுத்து, முட்டி மோதி கவுன்சிலிங் மூலமாகவோ, கோட்டா மூலமாகவோ எப்படியாவது இன்ஜினியரிங் கல்லூரியில் இடம் பிடித்து தம் பிள்ளைகளை வாழ்க்கையில் உயர்த்திவிட வேண்டும் என்பது பல பெற்றோர்களின் கனவு...ஆசை... எல்லாம்.

அவர்கள் காலத்தில் இன்ஜினியர்களுக்கு நல்ல மதிப்பும், சம்பளமும் இருந்தது. இப்போது தெருவுக்கு 100 இன்ஜினியர்கள் இருக்கின்றனர். மேலும் 2000-த்தின் ஆரம்பத்தில் உலக மயமாக்கல், கணினி மயமாக்கல் என மென்பொருள் கம்பெனிகள் அடியெடுத்து வைத்த போது பி.எஸ்.சி /பி.ஈ. படித்தவர்கள் மற்ற துறையில் இருந்தவர்களை விட 5 மடங்கு அதிகம் சம்பாதிக்க ஆரம்பித்தனர். இரண்டாண்டில் வெளிநாட்டு பயணம், கை  நிறைய சம்பளம் என எண்ணங்களும் ஆசைகளும் வானளவு உயர்ந்தன. இது போல கம்ப்யூட்டர் படித்து பொறியாளரான பெரியாளான பல ஜாவா சுந்தரேசன்களை பார்த்து, நம்ம புள்ளையும் இப்படி சம்பாதிக்கும் என எண்ணி எல்லா பெற்றோரும் தங்களது மனதிலும், தமது பிள்ளைகளின் மனதிலும் இன்ஜினியரிங் கனவை விதைத்தனர்.

engineering-graduates-unemployment

"நான் தான் சரியா படிக்கல.. குமாஸ்தாவாகவே இருந்திட்டேன்.. என் புள்ளையாவது நல்லா படிச்சு, இன்ஜினியரா வந்து, நல்ல சம்பாதிக்கட்டுமே",  என்ற எண்ணம் தான்.  மேலும் +2 படிக்கும் மாணவர்களும், இன்ஜினியரிங் படிப்புக்கு நல்ல ஸ்கோப்.. படித்தவுடன் நல்ல சம்பளத்தில் வேலை என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது. ஒருத்தருக்கும் இன்ஜினியரிங் படித்து அறிவை பெருகி கொள்ள வேண்டும்; நிறைய தெரிந்து கொள்ள வேண்டும்; புதிதாய் ஏதாவது ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாமில்லை. அறிவுக்காக பொறியியல் படிப்பை எடுக்கும் பஞ்சவன் பாரிவேந்தனை போல மக்கள் மிக மிக குறைவே!

திருமண பத்திரிக்கையில் மணமகன்(ள்) பெயருடன் பி.ஈ /பி.டெக் என்று போட்டு கொள்ளவும், வரதட்சணையாக 50 பவுன் நகைக்காகவும், மாமனார் வீட்டில் கார் வாங்கி தர சொல்லவும் தான் பொறியியல் படிப்பு உபயோகமாக இருக்கிறது. ஏற்கனவே இதை பற்றி பொறியியல் படித்து என்ன பிரயோஜனம் ???  என்ற பதிவில் எழுதியுள்ளேன்.     

இப்போது பலரின் கேள்வியும் இதுதான்.. ஏன் இந்தியாவில் வேலை செய்யும் இன்ஜினியர்களுக்கு குறைந்த அளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது? ஏன் இன்ஜினியரிங் படித்த பலருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை? இன்றைய உண்மை நிலை என்ன என்பதை பல பேருக்கு தெரிவதில்லை.

ஏன் இந்தியாவில் வேலை செய்யும் இன்ஜினியர்களுக்கு குறைந்த அளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது?  காரணம் வேறென்ன??? அவர்கள் தேவைக்கு அதிக அளவில் இருப்பதால் தான்.

இந்தியாவில் கிட்டத்தட்ட  10 லட்சம் டாக்டர்களும், 12 லட்சம் வக்கீல்களும், 2 லட்சம் ஆடிட்டர்களும்  இருக்கின்றனர். இன்ஜினியர்கள் எண்ணிக்கை மட்டும் கோடிக்கும் மேல்! 120 கோடி ஜனத்தொகைக்கு மேல் இருக்கும் பாரத தேசத்தில் வெறும் 8 லட்சம் மருத்துவர்களே இருக்கின்றனர். அதனால் டாக்டர்கள் சொற்பமாய் இருந்து, வியாதிகளும், நோய்களும் அதிகமாகி போனதால் மருத்துவர்களுக்கு சம்பளம் அதிகம் தரப்படுகிறது. இது போல பணம் உள்ளவர்கள், அதை என்ன செய்ய வேண்டும்? எதில் முதலீடு செய்யவேண்டும்? என சொல்ல சி.எ  (CA) படித்தவர்கள் தேவை. ஆகவே அவர்களுக்கும் அதிக சம்பளம்.

தமிழ்நாட்டில் மொத்தம் 552 பொறியியல் கல்லூரிகள் இருக்கிறது. அதில் ஒரு வருடத்திற்கு 5 லட்சம் மாணவர்கள் படித்து முடித்து வருகின்றனர். இந்தியாவில் மொத்தம் 3345 பொறியியல் கல்லூரிகள்  (2015-16) இருக்கிறது. அதில் ஒவ்வொரு வருடமும் 15 லட்சம் மாணவர்கள் படித்து முடித்து வருகின்றனர். இதன்படி கடந்த 15 ஆண்டில் எத்தனை பேர் படித்து முடித்திருப்பார்கள் என நீங்களே யோசித்து கொள்ளுங்கள்.

நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்களிக்கும் சுற்றுலாத்துறை, ஹோட்டல் நிர்வாகம், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த துறை, நிதி நிர்வாகம், வர்த்தகம் மற்றும் வணிகம், நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் கல்வித்துறை (மாணவர்களுக்கு பயிற்றுவிப்பவர்களை தவிர), நாட்டின் முதுகெலும்பான விவசாயம் என எதிலுமே இன்ஜினியரிங் படித்தவர்கள் தேவைபடுவதில்லை. இப்படி இருந்தால் எப்படி எல்லோருக்கும் வேலை கிடைக்கும் ??? வருடந்தோறும் பல வேலை இல்லா பட்டதாரிகளை உருவாக்கி கொண்டே தான் இருக்கிறார்கள். நாமும் பல ரகுவரன் பி.டெக்-களையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம்.

Core கம்பெனிகள் என்று சொல்லப்படும் தயாரிப்பு தொழில்துறை ( manufacturing companies ) நிறுவனங்கள் முன்னாளில் நிறைய இன்ஜினியர்களை வேலைக்கு எடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இந்தியாவில் இத்துறையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP ) 17%  மட்டுமே! அதனால் அவர்கள் ஆட்சேர்ப்பையும் குறைத்து விட்டனர்.

எல்லோரும் எல்லா விஷயத்திலும் அமெரிக்காவை உதாரணமாக சொல்வார்கள். நானும் அதையே எடுத்து கொள்கிறேன். அமெரிக்காவில் அவர்களுடைய பதினெட்டு டிரில்லியன் டாலர்கள் ($ 18 trillion ) பொருளாதாரத்திற்கு ஒரு வருடத்தில் 1 லட்சம் இன்ஜினியர்கள் தான் உருவாக்கப்படுகிறார்கள். நம் நாட்டின் பொருளாதாரம் வெறும் இரண்டு டிரில்லியன் டாலர்கள் ($ 2 trillion ) மட்டுமே! 15 லட்சம் இன்ஜினியர்களை உருவாக்கி கொண்டிருக்கிறோம். விளக்கை சுற்றும் புற்றீசல்களாக, மக்கள் இன்ஜினியரிங் சேர முக்கிய காரணம்: வாய்ப்பையும் பணத்தையும் அள்ளி கொட்டும் ஐ.டி கம்பெனிகள். நாட்டின் பொருளாதாரத்தில் ஐ.டி மற்றும் பி.பி.ஓ கம்பெனிகளின் பங்கு வெறும் 9% மட்டுமே! அதனால் தான் இங்கு இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுக்கப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் திரும்பும் பக்கமெல்லாம் கல்லூரிகளை திறந்து வைத்து, படித்தவுடன் வேலை, கை நிறைய சம்பளம் என கூவி கூவி அழைக்கின்றனர். பல கல்லூரிகளில் போதிய வசதிகளும், சரியான ஆசிரியர்களும் இல்லாததால் நல்லதொரு பொறியாளர்களை உருவாக்க முடியவில்லை.  அடுத்து பாடத்திட்டம். நம் பொறியியல் பாடத்திட்டங்கள் எல்லாம் மனப்பாடம் செய்து எழுதும் முறையிலேயே இருக்கிறது. செய்முறை மூலம் படிப்பது/சொல்ல தருவது மிக குறைவு. இப்படி இருந்தால் பெயரளவில் தான் நாம் பொறியாளர் என்று சொல்லி கொள்ள முடியும். நம் மீதும் தவறு இருக்கிறது. ஒரு காலத்தில் யாரை பார்த்தாலும் பி.எ. படிக்கிறேன் என்று சொன்னார்கள்; பின்னர் டிப்ளோமோ (பெரும்பாலும் டி.எம்.இ ) படிப்பை எல்லோரும் படித்தார்கள்; பின்னர் பி.காம் பிடித்தார்கள்; அதன் பின் தான் இன்ஜினியரிங் வலையில் விழுந்தார்கள். அடுத்தவர்கள் படிக்கிறார்கள், நாமும் படிப்போம்/பிடிக்க வைப்போம் என்று எண்ணாமல் மாணவரின் திறன் பார்த்து, ஈடுபாடு அறிந்து கல்லூரி படிப்பில் சேர்க்க வேண்டும்.

மேலும் மாணவர்களும், இன்றைய போட்டியான உலகில் முறையாக முயற்சி செய்து, உழைத்து, இன்ஜினியரிங் படிக்கும் போதே அவர்களுடைய  திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும். பலர் பொறியியல் பட்டதாரிகள் படித்து முடித்த பின்னரும், சமூக திறன்களையும், மென் திறன்களையும் வளர்த்து கொள்ளாமல் இருக்கின்றனர். படித்து முடித்த இன்ஜினியர்கள் பலருக்கு வேலை கிடைக்காமல் போக இதுவும் ஒரு மிக பெரிய காரணம் என்று பன்னாட்டு நிறுவனங்களின் மனிதவள மேலாளர்கள் சொல்கின்றனர். சரியாய் படிக்காமல், திறன்களை வளர்த்து கொள்ளாமல் இன்ஜினியரிங் படித்த பலரும் தங்கள் படிப்புக்கு கொஞ்சமும் சம்மதம் இல்லாத இடத்தில வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.

அப்போ இன்ஜினியரிங் படித்து ஒருவருக்கு கூட சரியான வேலை கிடைக்கவில்லையா ? யாரும் வீடு வாசல் கார், ஃபாரின் என செட்டில் ஆகவில்லையா?? என கேட்பது புரிகிறது. செட்டில் ஆகிறார்கள்.. நூற்றில் 40 பேர்தான். படித்து முடித்த உடனேவோ, சில காலம் கழித்தோ நல்ல வேளையில் செட்டில் ஆகி விடுகின்றனர். மீதம் உள்ள 60% சரியான வேலை இல்லாமல், சம்பந்தமில்லாத வேலை செய்து வாழ்க்கையை ஓட்டி கொண்டிருக்கின்றனர்.

தரமில்லாத பொறியியல் கல்லூரிகளை தடுத்தல்; பாடத்திட்டத்தை மாற்றியமைத்தல்; மாணவரின் ஈடுபாடு அறிந்து கல்லூரியில் சேர்த்தால் போன்ற பிரச்சனைகள் சரி செய்தாலே போதும், நம் நாட்டில் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை குறைந்து விடும். இதை தவிர வேறு ஏதாவது உங்களுக்கு கருத்துக்கள் தோன்றினால் பின்னூட்டத்தில் பதிலளிக்கலாம்.

தகவல் - Quora, Google 

நன்றி !!!

-பி .விமல் ராஜ்