ஞாயிறு, 8 ஜூன், 2014

சிறுகதை - கடற்கரை கோவில்

வணக்கம்,

நாளை இப்படியும் நடக்கலாம் என்பதை வைத்து தான் இந்த சிறுகதை
எழுதப்பட்டுள்ளது. விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன.

சிறுகதை - கடற்கரை கோவில்
*******************************************
"பசங்களா! ரெண்டு பெரும் ரெடியா? கிளம்பலாமா?" என்று கேட்டார் தாத்தா.

"நாங்க ரெடி ! அப்பவே கிளம்பிட்டோம்.. "

"வாங்க போகலாம்.. "

"ரவி, ராஜு... ரெண்டு பேரும் இங்க பாருங்க.. தாத்தா கிட்ட சாப்பிட அது வேணும் , இது வேணும்னு அடம் பிடிக்கக் கூடாது.. இங்கே வீட்ல நிறைய ஸ்நாக்ஸ் இருக்கு... சமத்தா போயிட்டு, சமத்தா வரணும்.. சரியா ??"- அம்மா.

"ஒ.கே. மம்மி !! ...."

"சரிப்பா..போயிட்டு இருட்டுறதுகுள்ள சீக்கிரம் வந்துடுங்க "

"சரிம்மா.. நான் பத்திரமா பாத்துகிறேன்..." என்று கூறிவிட்டுக் கைகடிகாரத்தைப் பார்த்தார். அதுவரை கரும் திரையாக இருந்த கடிகாரம், அவர் பார்த்தவுடன், "TIME : 04:35 PM ; DATE: 14TH MAY ; WEATHER: 49 °C;...." என்று ரேடியத்தில் மாறி மாறி காட்டியது. மூவரும் பொடி நடையாக மெயின் ரோட்டுக்கு நடந்தனர்.

கோடை விடுமுறையோட்டி, அன்று காலைதான் ரவியும், ராஜுயும் அவர்கள் தாத்தா வீட்டிற்கு வந்திருந்தனர் . தாத்தாவுடன் வெளியில் செல்வது என்றால் அவர்களுக்கு அலாதி பிரியம்.

"தாத்தா! இப்போ நம்ம எங்க போறோம்? " என்று ஆவலுடன் வினவினான் ராஜூ.

"கடற்கரை கோவிலுக்கு.. "

"கடற்கரை கோவிலா?? அது எங்க இருக்கு? " - ரவி.

"இங்க தான்..கொஞ்ச தூரத்திலே.... ஆட்டோல போகணும் . "

மெயின் ரோடு வந்ததும், ஆட்டோவில் ஏறி கடற்கரைக்குச் சென்றனர். ஒரு பத்து நிமிடம் இருக்கும்; கடற்கரை வந்தாயிற்று. வரும் வழியில், ஒரு கீ.மீ தொலைவிலிருந்தே அலை ஆர்ப்பரிக்கும் சத்தம் கேட்டது. பிள்ளைகளுக்குக் கடலை பார்த்ததும் ஆனந்தம் தாங்க வில்லை. ரவியும், ராஜுவும் கடல் நீரை நோக்கி ஓடினர்.

"பாத்து..பாத்து.. ஓடாதீங்க.. " எனப் பதறினார் தாத்தா.

கடற்கரைக்கு மிக அருகில் இருந்தது ஒரு பெரிய பழமையான பெருமாள் கோவில். கடல் காற்றால் சுவரெல்லாம் உப்பு படிந்து கிடந்தது. மேலும் கடல் நீர் அரிக்காமல் இருக்கப் பெரிய கற்கள் கடற்கரையில் போடப்படிருந்தது.

அன்று மக்கள் கூட்டம் சற்று அதிகமாக இருக்கவே, இருவர் கையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தாத்தா கோவிலுக்குள் சென்றார்.

"இது தான் இங்க இருக்கிற கடற்கரை கோவில் .. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி கட்டினது.. "

"எந்த வருஷம் ??"

"ம்ம்ம்... 8-ஆம் நூற்றாண்டில்.. "

"ஏன் இப்படிப் பாதிக்கு மேல இடிஞ்சி போயிருக்கு ?"

"கடல் தண்ணி வந்து அடிச்சி இப்படி ஆயிடிச்சு.."

"............"

எல்லோரும் உள்ளே சென்று பெருமாளை சேவித்தனர். பிரகாரம் சுற்றி வந்தனர்.

"இந்தப் பெரிய மண்டபம் எதுக்குத் தாத்தா ? " என்று ராஜு கேட்டான்.

"வெள்ளைக்காரன் காலத்தில இங்க தான் அரிசி மூட்டையெல்லாம் சேமிச்சு வெச்சாங்களாம்.. அப்புறம் இங்கே தான் சாமிக்கு அலங்காரம், திருகல்யாணமெல்லாம் நடக்கும்... "

"ஓஹோ!! அப்படியா!! "

மேலும் அந்தக் கோவிலின் சிறப்பை பற்றிச் சொல்லி கொண்டிருந்தார் தாத்தா.

சிறிது நேரம் கலை நயம் மிக்க அந்தக் கோவிலை சுற்றி பார்த்துவிட்டு வெளியே கடலுக்கு வந்தனர். நடுகடலில் ஆறடி அலையாக ஆரம்பித்த அலைகள், கரையைத் தொடும் போது ரவி, ராஜுவின் காலடிகளை மட்டும் கழுவி விட்டுச் சென்றது.

"என்ன தாத்தா, கடலையே பாத்துகிட்டு இருக்கீங்க? "

"ஹ்ம்ம்.. ஒண்ணும் இல்ல..ரவி, அங்க பாரு.. "

"எங்க ???"

"இரண்டு பறவை நடுக் கடல்ல பறக்குறது தெரியுதா ?? "

"ஆமா.. தெரியுது.."- ரவி

"ஆமா ..எனக்கும் தெரியுது.."என்றான் ராஜு

"அங்க தான் நன் சின்ன வயசில விளையாடிகிட்டு இருந்தேன். "

"கடல்லையா ??? பொய் !!! பொய் !!! பொய் சொல்றீங்க!" என்று கூறி சிரித்தான் ரவி.

"உண்மைதான் ரவி... அப்போ அதுதான் கடற்கரையா இருந்துச்சு.. "

"நிஜமா தாத்தா??? " என்று புருவம் விரிய ஆர்வத்துடன் கேட்டான் ராஜு.

"ம்ம்.. அது தான் மெரினா கடற்கரை... நான், என் பிரண்ட்ஸ் எல்லாம் அங்க தான் விளையாடுவோம்... இந்தப் பக்கம் பாரு.. தூரத்துல ஒரு போட் தெரியுதா??"

"ஆங்.. தெரியுது .."

"அதையும் தாண்டி, அங்க ஒரு கிரிக்கெட் ஸ்டேடியம் இருந்துச்சு.. "

"இப்போ பல்லாவரம் மாமா வீட்டுகிட்ட இருக்குல்ல ..அதை விடவா..."

"இல்ல..இல்லை..அது 10 வருஷம் முன்னாடி தான் கட்டினது.. இது அதை விடப் பெரிசு.. "

"வேற என்னலெல்லாம் இருந்துச்சு தாத்தா?? "

"பீச்சோரமா தலைவர்கள் சிலை , சமாதிகள் , ஒரு நீச்சல் குளம், இரண்டு பெரிய காலேஜ், ஒரு யுனிவர்சிடி, மீன் பிடிக்கிற ஜனங்க வாழ்ற கிராமம் .... இன்னும் நிறைய.."

"இப்போ அதெல்லாம் எங்க தாத்தா??? "

"கடல் ஆக்கிரமிச்சிடிச்சி..."

"எப்போ ..??"

"ஹ்ம்ம்...எல்லாம் 40 வருஷதுக்கு முன்னால சுனாமி வந்து அடிச்சிகிட்டு போச்சு.. கடல் ஆக்கிரமிச்ச இடமெல்லாம், எல்லாக் கட்டிடங்களும் இடிஞ்சி தரமட்டமாச்சி.. நிறையப் பேர் செத்து போய்டாங்க.."

"ஏன் கடல் ஊருக்குள்ள வந்துச்சு தாத்தா ??? "

" இந்தப் பூமி சூடாகும் போது கடல் தண்ணி இப்படி ஊருக்குள்ள வருமுன்னு சொல்வாங்க "..

"அப்போ  மறுபடியும் கடல் ஊருக்குள்ள வருமா தாத்தா?? " என்று பயத்துடன் கேட்டான் ரவி.

"வரலாம்... ஆனா அதுக்கு இன்னும் கொஞ்சம் வருஷம் ஆகும்.." என்று சமாதனப்படுத்தினார் தாத்தா.

தாத்தா சொன்னது முழுவதும் புரியவில்லை என்றாலும், புரிந்தது போல ரவியும், ராஜுவும் தலையாட்டினர்கள் .

வானம் இருட்ட ஆரம்பித்தது. மூவரும் கடற்கரையை விட்டு, வீட்டுக்கு செல்ல ஆயத்தம் ஆனார்கள். தூரத்தில் சீறி வரும் ஆட்டோவை கைகாட்டி மறித்தார் தாத்தா.

"எங்க சார் போகணும்.?"

" அப்துல்லா தெரு, கான்வென்ட் ஸ்கூல் .. "

"போலாம் சார்.. "

"கேஷ் தான்... TRANSCARD-ல பணம் இல்ல. டாப் அப் பண்ணனும்... "

"அப்ப ஐநூறு ரூபா ஆகும்..."

"ஐநூறு ரூபாயா??? TRANSCARD யூஸ் பண்ணாலே 300 ரூபா தான் வரும்.. நீ 500 ரூபா கேக்குறியே???? திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலிருந்து எக்மோர் கான்வென்ட் போக ஐநூறு ரூபாயா ?? நல்ல கதையா இருக்கே... "

"என்ன சார் பண்றது... பெட்ரோலே ஒரு லிட்டர் எண்ணூற்றி அம்பது ரூபாய்க்கு விக்குது, குவாட்டரே  தொள்ளாயிரத்தி  ... "

"சரி ..சரி.. விடு ...போலாம்.... ரவி, ராஜூ ரெண்டு பெரும் ஏறுங்க.."

ஆட்டோ எக்மோர் அப்துல்லா தெருவை நோக்கி சென்றது.


-----

குறிப்பு :

தற்போது, சென்னை மெரினா கடற்கரையிலிருந்து, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் 1 கி.மீ தொலைவில் உள்ளது. கதையின் படி, கடல் ஒரு கி.மீ தூரம் கரையை ஆக்கிரமித்துள்ளது.

TRANSCARD என்பது மல்டி யுசபில் (multi usable) ஸ்மார்ட் கார்டு தான். பணம் டாப் அப் செய்து கொண்டு, ஆட்டோ, டாக்ஸி, புறநகர் ரயில்/பேருந்துகளில் பயணப் படும்போது கிரெடிட் கார்டு போல swipe செய்து உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.



நன்றி !!!

-பி .விமல் ராஜ்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

3 Comments:

பெயரில்லா சொன்னது…

நல்ல தான் இருந்துச்சு. ஆனா, ஒரு சுவாரசியமான விஷயமோ உவமையோ இல்லை. அது தான் குறை. மேலும், அது எப்படி பெட்ரோல் 850. அப்ப இது 100 அல்லது 1000 வருஷத்துக்கு அப்புறம் நடக்குறதா

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி அசோக் அவர்களே !!!

கருத்துக்கு நன்றி... ஆம் ! இக்கதை 50/ 60 ஆண்டுகள் கழித்து நடக்கும்(நடக்கலாம்) என்று எண்ணி தான் எழுதியுள்ளேன்...

Unknown சொன்னது…

கற்பனையைப் பொறுத்தவரை ஓ.கே.
இன்னும் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும் என்பதையும்
சுவையாகச் சொல்லியிருக்கலாம்.ஆமாம்...அறுபது வருஷத்துக்குப் பிறகும் ஆட்டோவா?!
-அனிச்சம்,புதுச்சேரி.