சனி, 28 மார்ச், 2015

அறியப்படாத உரிமைகள் !

வணக்கம்,

நம் மக்களுக்கு நாட்டில் உள்ள சட்டதிட்டங்கள் ஓரளவுக்காவது தெரிந்திருக்க வேண்டும். மாநில/மத்திய அரசாவது அவர்களுக்கு அடிப்படை சட்டங்களை புகட்டியிருக்க வேண்டும். ஆனால் நடப்பதை பார்த்தால் அப்படி தெரியவில்லை. 

இரு நாட்களுக்கு சமூக வலைத்தளத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் போது ஒரு முக்கிய செய்தியை படிக்க நேரிட்டது. எல்.பி.ஜி (L.P.G) என்று சொல்லப்படும் சமையல் எரிவாயுவை உபயோகபடுத்தும் நுகர்வோர் அனைவருக்கும் 40 லட்சம் வரை காப்பீடு இருப்பதாக அந்த பதிவில் உள்ளது. இது சமூக தளங்களில் வருவது போல எதாவது ஒரு வதந்தியாக இருக்குமோ என்று முதலில் நினைத்து, கூகிளை துணைக்கு அழைத்தேன். அட! அந்த செய்தி உண்மைதான்!

தீர ஆராய்ந்ததில், நாம் எல்.பி.ஜி இணைப்பு வாங்கும் போதே அந்தந்த கேஸ் ஏஜன்சி நிறுவனங்கள், நுகர்வோர் கணக்கில் 40 லட்சம் வரை காப்பீடு செய்வதாக சொல்கின்றனர்.


சமையல் எரிவாயுவின் செயற்பிழையால் கேஸ் வெடிப்பது, உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டால், உடனடியாக கேஸ் ஏஜன்சியிடம் தெரிவிக்க வேண்டும். உடனே அவர்கள் ஒரு குழுவை அனுப்பி, சரிபார்த்து விட்டு அதற்கான காப்பீட்டு தொகையை நுகர்வோரிடம் கொடுபார்கள். அக்குழு நுகர்வோர் பயன்படுத்தும் எரிவாயு சாதனங்களான, கேஸ் ட்யூப், லைட்டர், கேஸ் கட் போன்றவை ஐ.எஸ்.ஐ. (ISI) சான்றிதழ் பெற்ற பொருள்களாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

lpg-gas-insurance

சில போலி விபத்து முறைகேட்டை தடுக்கவும் குழுக்கள் உள்ளதாம். கடந்த 25 ஆண்டுகளில் யாருமே இந்த காப்பீட்டு உரிமையை கோரவில்லை என்று தெரிவிக்கிறது ஒரு ஆய்வு.

எல்லோருமே கேஸ் வெடித்தவுடன், பதறி போய் மருத்துவமனைக்கு தான் செல்வார்கள். யார் ஏஜன்சியிடம் போவார்கள் ? என்ற கேள்விகளுக்கு பதில் கிடையாது. காப்பீடு தொகை வேண்டுமென்றால் அவர்கள் தொடர்பு கொண்டு தான் ஆக வேண்டும்.  

நம் நாட்டில் ஒவ்வொரு நகரத்திலும் வருடத்திற்கு நூற்றுகணக்கான கேஸ் வெடிப்புக்கள் நடந்தேறி வருகிறது. இந்த சட்டத்தை/உரிமையை  பற்றி மக்களுக்கு தெரியபடுத்தி அறிவுறுத்த வேண்டிய மத்திய/மாநிலஅரசுகளும், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களும் முன் வருவதில்லை.

சுதந்திர இந்தியாவில் இது போல ஒரு அடிப்படை காப்பீட்டு சட்டம் இருப்பது நம்மில் பலருக்கு தெரியாது. இன்னும் எத்தனை உரிமைகள், சட்டங்கள்  நமக்கு தெரியாமல் இருக்கிறதோ எனத் தெரியவில்லை.

தகவல்: businesstoday 


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

வியாழன், 19 மார்ச், 2015

அர்த்தமில்லாத வார்த்தைகள் !

வணக்கம்,

இப்பதிவில் புதிதாய் ஒன்றும் சொல்ல போவதில்லை. திடீரென எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் விளைவு தான் இக்கட்டுரை. தமிழில் சில வார்த்தைகளுக்கு நேரடி அர்த்தம் கிடையாது. ஆனாலும் அவை நம் பேச்சு வழக்கில் இருக்கிறது. அந்த அர்த்தமில்லா வார்த்தைகள் எப்போதிலிருந்து வழக்கத்திற்கு வந்தது? யார் அதை முதலில் பேச ஆரம்பித்தது? என்றெல்லாம் எனக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அர்த்தமில்லாத வார்த்தைகள் பல இருக்கிறது. அவற்றுள் சில:

'கடகட' வென தேர்வு எழுதினான்.
'பளார்' என்று அரை விட்டான்.
'வீல்' என்று அலறினாள்.
'கமகம' வென வாசம் வந்தது.
'கொல்' என்று சிரித்தனர்.
'டர்' என்று துணி கிழிந்தது.
'டமால்' என்று போட்டு உடைத்தான்.
'டுமீல்' என்று சுட்டான்.
'டக்' என்று காணாமல் போனான்.
'கலகல' என்று சிரித்தான்.
'தொம்' என்று விழுந்தான்.
'பளீச்' என்று தரை இருந்தது.
'பளீர்' என்று வெளிச்சம் அடித்தது.
'துருதுரு' வென இருந்தான் பையன்.
'கும்' இருட்டாக இருந்தது அந்த அறை.
'விறுவிறு' என்று மலை மேல் நடந்தான்.
'படபட' வென இதயம் துடித்தது.
'ஓ' வென அழுதது குழந்தை.
'குறுகுறு' வென்று அவளையே பார்த்து கொண்டிருந்தான்.
'ஜம்' மென்று இருந்தார் மாப்பிள்ளை.


இந்த ஒலி சார்ந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்? எனக்கு யாரவது புரிய வையுங்கள்.

உங்களுக்கு தெரிந்த வேறு சில 'ஒலி' மயமான வார்த்தைகள் இருந்தால், அதையும் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.



நன்றி !!!

-பி .விமல் ராஜ்