வியாழன், 19 மார்ச், 2015

அர்த்தமில்லாத வார்த்தைகள் !

வணக்கம்,

இப்பதிவில் புதிதாய் ஒன்றும் சொல்ல போவதில்லை. திடீரென எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் விளைவு தான் இக்கட்டுரை. தமிழில் சில வார்த்தைகளுக்கு நேரடி அர்த்தம் கிடையாது. ஆனாலும் அவை நம் பேச்சு வழக்கில் இருக்கிறது. அந்த அர்த்தமில்லா வார்த்தைகள் எப்போதிலிருந்து வழக்கத்திற்கு வந்தது? யார் அதை முதலில் பேச ஆரம்பித்தது? என்றெல்லாம் எனக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அர்த்தமில்லாத வார்த்தைகள் பல இருக்கிறது. அவற்றுள் சில:

'கடகட' வென தேர்வு எழுதினான்.
'பளார்' என்று அரை விட்டான்.
'வீல்' என்று அலறினாள்.
'கமகம' வென வாசம் வந்தது.
'கொல்' என்று சிரித்தனர்.
'டர்' என்று துணி கிழிந்தது.
'டமால்' என்று போட்டு உடைத்தான்.
'டுமீல்' என்று சுட்டான்.
'டக்' என்று காணாமல் போனான்.
'கலகல' என்று சிரித்தான்.
'தொம்' என்று விழுந்தான்.
'பளீச்' என்று தரை இருந்தது.
'பளீர்' என்று வெளிச்சம் அடித்தது.
'துருதுரு' வென இருந்தான் பையன்.
'கும்' இருட்டாக இருந்தது அந்த அறை.
'விறுவிறு' என்று மலை மேல் நடந்தான்.
'படபட' வென இதயம் துடித்தது.
'ஓ' வென அழுதது குழந்தை.
'குறுகுறு' வென்று அவளையே பார்த்து கொண்டிருந்தான்.
'ஜம்' மென்று இருந்தார் மாப்பிள்ளை.


இந்த ஒலி சார்ந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்? எனக்கு யாரவது புரிய வையுங்கள்.

உங்களுக்கு தெரிந்த வேறு சில 'ஒலி' மயமான வார்த்தைகள் இருந்தால், அதையும் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.



நன்றி !!!

-பி .விமல் ராஜ்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

9 Comments:

Unknown சொன்னது…

mada mada vena kudithaan

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

மேலே நீங்கள் குறிப்பிட்டவை தமிழில் கிளவி எனப்படும். இவை பொருள் இல்லாத சொற்களாகும். பளார், வீல் போன்றவை ஒற்றைக் கிளவிகள்.கடகட, கமகம, கலகல போன்றவை இரட்டைக் கிளவிகள் எனப்படும். செய்யும் வினைக்கு (செயலுக்கு) அடைமொழியாய் இவை வரும். இந்த கிளவிகள் ஒற்றைக் கிளவி, இரட்டைக் கிளவி, அடுக்குக் கிளவி, எதுகைக் கிளவி, மோனைக் கிளவி என்று பல வகைப்படும்.

ஜீன்ஸ் படத்தில் வரும் கண்ணோடு காண்பதெல்லாம் என்று தொடங்கும் (வைரமுத்து) பாடலிலிருந்து சில வரிகள் –

கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்ணோடு மணியானாய் அதனால் கண்ணைவிட்டுப் பிரிவதில்லை நீ
என்னைவிட்டு பிரிவதில்லை
தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம் (2)
சலசல சலசல இரட்டைக் கிளவி தகதக தகதக இரட்டைக் கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ

ப.கந்தசாமி சொன்னது…

அந்த செயல்கள் நடக்கும்போது ஏற்படும் சப்தங்களுக்கும் அந்த வார்த்தைகளுக்கும் உள்ள சம்பந்தம் புரிகிறதல்லவா? சுடும்போது ஏற்படும் சப்தம் "டுமீல்". இப்படிச் சில வார்த்தைகளை வினைச் சொற்களுடன் சேர்க்கும்போது அவைகளின் பொருள் துல்லியமாக அல்லது மேலும் அழுத்தத்துடன் விளங்குகிறதல்லவா? தவிர மொழியின் அழகும் கூடுகின்றது என்று நான் கருதுகிறேன்.

ஆனால் நிறைய நபர்கள் பேசும்போது "வந்து" என்ற சொல்லைப் பயன்படுத்துவதைக் கவனித்திருக்கிறீர்களா? ஹூம், இதப் பாருங்க, இப்படி சில அசைச் சொற்கள் பேச்சின் நடுவே வருவதைத் தவிர்க்கலாம்.

விமல் ராஜ் சொன்னது…

//mada mada vena kudithaan ..
வருகைக்கு நன்றி மதன் !

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கும், தங்கள் விளக்கத்திற்கும் மிக்க நன்றி!!!

நீங்கள் சொல்லும் போதுதான் நான் பள்ளியில் படித்தது லேசாக நியாபகம் வருகிறது. 'ஜீன்ஸ்' பாட்டு உதாரணம் அருமை!!!

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கும், விளக்கத்திற்கும் மிக்க நன்ற பழனி. கந்தசாமி ஐயா!

'பரிவை' சே.குமார் சொன்னது…

பொருள் இல்லாத சொற்களை வைத்து அழகாய் ஒரு பகிர்வு...
வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இளங்கோ ஐயா பாடலை சொல்லி விட்டாரே...!

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பரிவை.சே.குமார் & திண்டுக்கல் தனபாலன் அவர்களே!!!!!