சனி, 3 அக்டோபர், 2015

புலி - விமர்சனம்

வணக்கம்,

இது ஒரு ராஜா கால பாண்டஸி படம் என்பதாலும், இயக்குனர் சிம்பு தேவன் படம் என்பதாலும் பார்க்க வேண்டும் ஆவல் இருந்து வந்தது. ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே, இது ஒரு பாண்டஸி கலந்த சயின்ஸ் பிக்ஷன் படம்; விஜய் டைம் ட்ராவல் செய்து அதிசிய உலகத்துக்கு போகிறார் என்று கூறினார்கள். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் இது ஆங்கில படமான "ஜான் கார்டர்" -ன் ரீமேக் என்று சொன்னார்கள். இது எப்படியோ படத்தின் பப்ளிசிட்டிக்கு இந்த பில்டப்கள் போதும் என முடிவு செய்து, மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு பிறகு படம் வெளிவந்துள்ளது.


வியாழக்கிழமை மதியமே படத்தை பற்றி இணையத்தில் கிழி..கிழி..கிழியென கிழிக்க ஆரம்பித்துவிட்டனர். இருந்தாலும் புக் பண்ண டிக்கெட்டை விற்க முடியாமல் போனதால், மனதைரியத்தை வரவைத்து கொண்டு படம் பார்க்க தயாரானேன்.

கதையென்று பெரிதாக ஒன்றும் இல்லை. பழைய அம்புலிமாமா கதை தான். வேதாள கோட்டைக்கு  உட்பட்ட ஊர்களை வேதாளங்களின் மகாராணி ஆள்கிறார். சூழ்ச்சிக்கார தளபதியின் கட்டுபாட்டில் இருக்கிறது அந்த கோட்டை. அதை மீட்டு ராணியிடம் கொடுக்கிறார் நம்ம இளைய தளபதி. படம் பார்க்கும் போதே இதுதான் நடக்குமென நமக்கே தெரிந்துவிடும். அந்த அளவுக்கு வீக்கான ஸ்கிர்ப்ட்.

படத்துக்கு சுவாரசியம் சேர்க்க, பேசும் பறவை, ஒற்றைக்கண் ராக்ஷச மனிதன், பெரிய சைஸ் கரும்புலி, பேசும் ஆமை என குழந்தைகளுக்கு பிடிப்பது போல கதை நகர்கிறது. கிராபிக்ஸ் நன்றாக இருக்கிறது. ஆனால் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.

இளைய தளபதி விஜய் ஏன் எவ்வளவு ரிஸ்க் எடுத்து இது மாதிரியான கதையில் நடித்தார் என்பது புரியாத புதிராக இருக்கிறது. சுத்தமாக விஜய்க்கு இந்த கதைக்களம் செட் ஆகவில்லை. இதில் இரண்டு விஜய் வேறு. பிளாஷ் பேக்கில் வரும் விஜய் , அப்பப்பா.. செம மோசம். நீளமான முடியும், ஆக்ரோஷமான பேச்சும் (?!?!)  அவருக்கு கொஞ்சம் கூட செட் ஆகவே இல்லை.

கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன், துணை நாயகியாக ஹன்சிகா. இருவரும் வந்து கவர்ச்சி காட்டி ஆடிவிட்டு சென்றிருகின்றனர். சுதிப் வில்லனாக, நாட்டின் தளபதியாக கோபம் காட்டி சென்றுள்ளார். நீண்ட இடைவேளைக்கு பின் ஸ்ரீதேவி நடித்துள்ளார். ஒரு பாண்டஸி கதைக்கு தேவையான கதாபாத்திரமாக, வேதாள ராணியாக நடித்திருக்கிறார். மற்றவர்கள் கதையில் வந்து செல்கின்றனர்.

முன்பே சொன்ன மாதிரி ஒரு பாண்டஸி படம் என்பதால், லாஜிகெல்லாம் பார்க்க முடியாது. பார்க்கவும் கூடாது. ஒரு மாயாஜால படத்துக்கு தேவையான எல்லாமே இருக்கு.  பாடல்கள் எதுவுமே ராஜ காலத்து பட பாடல் போல இல்லை. எந்த பாடல் வரியும் மனதில் கூட நிற்கவில்லை.

விஜய் நடித்திருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகமாகி போகவே, படம் ஃபிளாப் என்று எல்லா ஊடகங்களும் சொல்லிவிட்டது. படமும் ஹ்ம்ம்... நன்றாக இல்லை தான். கொஞ்சம் திரைக்கதையில் மட்டும் கவனம் வைத்திருந்தால் படம் சூப்பரோ சூப்பராகி இருக்கும். இதுவே விஜய்க்கு பதில் வேறு யாராவது சாதாரண  நடிகர் நடித்திருந்தால் கூட படம் கொஞ்சம் ஓடியிருக்கும்.

கிராபிக்ஸ் மற்றும் ஃபாண்டஸி கதைக்காக சிறுவர்,சிறுமியர் ஒரு முறை பார்ப்பார்கள். மத்தபடி இது பாயாத புலி, சீறாத புலி. இது வெறும் புலி. சாதாரண புலி, வரி கட்டாத புலி. மொத்தத்தில் இது டம்மி புலி.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!