புதன், 9 நவம்பர், 2016

செல்லாத ரூபாய்கள்!

வணக்கம்,

நேற்று (08-11-2016) இரவு எட்டு மணி வாக்கில் பிரதமர் மோடி அவர்கள் நாட்டுக்கு மக்களுக்கு அளித்து கொண்டிருந்த உரையில், "இன்று நள்ளிரவு முதல் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது..", என்றுஅறிவித்து கொண்டிருந்தார். மேலும் 31 டிசம்பருக்குள் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கி மற்றும் தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் என்றும், கள்ள நோட்டு மற்றும் கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த திடீர் அறிவிப்பு என்று கூறியுள்ளார். இன்று ஒரு நாள் வங்கிகளும், இன்றும் நாளையும் (09/11 & 10/11) ATM மெஷின்கள் இயங்காது. இதனால் பொது மக்களின் சிரமத்திற்கு வருத்தம் என்றும் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல், புதிதாக 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகபடுத்தப்பட்டு, வங்கிகள் மூலம் புழக்கத்தில் விட போவதாகவும் கூறினார்.

ban-1000rs-500rs-currency

மத்திய அரசின் இந்த திடீர் முடிவை கண்டு அனைவரும் சற்று அதிர்ச்சிக்கு உள்ளானாலும், இது கருப்பு பணத்தை ஒழிக்கவும், நாட்டின் முன்னேற்றதிற்காக என்று வரும் போது பலரும் வரவேற்று மோடியை பாராட்டி வருகின்றனர்.

அரசின் இந்த அறிவிப்பை கேட்டவுடன் பொதுமக்கள் பலரும் தங்களிடம் உள்ள 500, 1000 நோட்டுகளை எடுத்து கொண்டு வங்கிகளில் தானியங்கி மெஷின் மூலம் டெபாசிட் செய்ய ஆரம்பித்தனர். மேலும் இரு நாட்களுக்கு ATM  மற்றும் வங்கிகள் செயல்படாததால் , எல்லோரும் பணத்தை ATM-லிருந்து 400 ரூபாய்களாக பல முறை போட்டு எடுத்தனர். எல்லா வங்கி வாசலிலும் கூட்டம்... ஒவ்வொன்றிலும் குறைந்தது 20 பேராவது நின்றனர். பல ATM-கள் செயலிழந்து போயின. மெஷினில் பணம் தீர்ந்து போனது... மக்கள் யாரை பார்த்தாலும் இதையே பேசி கொண்டிருந்தனர். ஊரே நேற்றிரவு பரபரப்புடன் காணப்பட்டது. முக்கியமாக இந்த மூன்று நாட்களில் திருமணம் அல்லது சுபகாரியம் வைத்தவர்கள், வெளியூர் சென்றவர்களின்  நிலை படு திண்டாட்டம் தான்.

இது பெரும் பணக்காரர்களையோ, அரசியல் புள்ளிகளையோ ஒன்றும் பாதிக்காது. நடுத்தர வர்க்கமும், மேல்தட்டு நடுத்தர வர்க்கமும் credit அல்லது debit கார்டு வைத்து சமாளித்து கொள்வார்கள். அன்றாட தேவைகளுக்கு கடைக்கும், கூலிக்கும் அல்லல்படுகிறவர்கள் தான் பெரிதும் கஷ்டபடுவார்கள். இன்று வேலை செய்தால்தான் காசு, சாப்பாடு என்று பிழைப்பு நடத்துவோர்க்கு, மிகவும் கஷ்டம். ஆட்டோ/டாக்சி ஓட்டுபவர், சிறு வியாபாரம் செய்யும் முதலாளி, தினசரி கூலி தொழிலாளி என பாடுபடுவது இவர்கள் தான்.

new-currency-notes-details

எல்லா டி.வி சானல்களிலும் இரவு விவாத மேடை நிகழ்ச்சிக்காக "ஹிலாரி - டிரம்ப் "-ன் தலைப்பே இருந்திருக்கும். ஆனால் பிரதமரின் இந்த உத்தரவால், எல்லோரும் போட்டி போட்டு கொண்டு இதை பற்றியே பேசி பேசி மக்களை பெரிதும் பாடுபடுத்தினர். பொது ஆர்வலர்கள் மற்றும் மக்கள் பலரின் கேள்வி இதுதான். இந்த திடீர் உத்தரவால் பொது மக்களின் பாதிப்பு தவிர என்னென நன்மைகள் ??? இதன் மூலம் எப்படி கருப்பு பணம் வெளியே வரும் ?, என்று கேள்வி எழுப்பிய வண்ணம் இருக்கின்றனர்.

தீவிரவாதிகளும், சில சமூக விரோதிகளும் கள்ள நோட்டுக்களை நாட்டில் அவ்வப்போது பரப்பி விடுகின்றனர். பழைய 500/1000 ரூபாய் செல்லாது என அறிவித்தால், ஏற்கனவே புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுக்கள் எல்லாம் செல்லாமல் போய்விடும். மேலும் இந்த புது நோட்டுக்கள் கள்ளதனமாக அச்சடிக்க முடியாதவாறு தயாரிக்க பட்டுள்ளதாக சொல்கின்றனர். இதன் மூலம் அடுத்த வாரம்... ஏன்?? இன்று முதலே யாரிடமும்  500/1000 ரூபாய் கள்ள நோட்டுகள் இருக்காது. மத்திய அரசின் நிர்வாகத்திற்கு முதல் மகுடம் இது.

சாதாரணமாக மாத சம்பளம் வாங்கும் நடுத்திர மக்கள் பலரும் வருமான வரி கட்டி விடுகின்றனர். அவரவர் அலுவலகங்களில் வருமான வரி பிடித்து செய்யபடுகிறது.  சிறு /பெரு கடை முதலாளிகள், சின்ன சின்ன தொழிலதிபர்கள், வட்டிக்குவிட்டு வாங்குபவர்கள், சினிமாகாரர்கள், அதிக லஞ்சம் வாங்கி பணம் சேர்ந்தவர்கள், ஊர் பணத்தில் காசு பார்த்தவர்கள் என கணக்கில் காட்டாமல்,  பணத்தை  மூட்டை மூட்டையாய் வைத்துள்ளவர்களுகெல்லாம் இந்த சேதி பெரிய இடியாக விழுந்து இருக்கும். இந்த பணத்தை இவர்கள் இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது. ஒன்று அரசிடம் கணக்கு காட்டி, பாதி போக மீதியை  வெள்ளையாக்கி எடுத்து செல்லலாம்; இல்லையெனில் ஒட்டு மொத்தமாக குப்பையிலோ, நெருப்பிலோ போட்டு விடலாம். இதன் மூலம் நாட்டில் கருப்பு பணத்தின் புழக்கம் கொஞ்சம் குறைய வாய்ப்புள்ளது.

பெரும் பணம் படைத்த செல்வந்தர்கள், சீமான்கள், கோடிகளில் புரள்பவர்கள் எல்லாம் தங்கள் கணக்கில் வரா பணத்தை நகை, ஆபரணம், விலை மதிப்பில்லா கற்கள், பச்சை பாண்டு பேப்பர்கள், 5 ஸ்டார் ஹோட்டல்கள், பெரிய மால்கள், பினாமி, விவசாய நிலம், ரியல் எஸ்டேட், கம்பெனி ஷேர்கள், வெளிநாட்டு பணம், வெளிநாட்டு வங்கியில் பணம், என சேர்த்து வைத்துள்ளார்கள். இவர்களை என்ன செய்ய போகிறது் என அரசும், அரசாங்கமும் தான் முடிவு செய்ய வேண்டும்.

இவர்களிடமிருந்து கருப்பு பணத்தை வெளியே கொண்டு வர வேறு ஏதாவது புது தடாலடி சட்டம் போடுவார்கள் என நம்புவோமாக!!!! இந்த ஒரு உத்தரவில், இந்தியாவை வல்லரசாக மாற்றிவிட முடியாது. ஆனால், நாட்டின் வளர்ச்சிக்கு இதை முதல் அடியாக, தைரியமான முடிவாக எடுத்து கொள்ளலாம். எப்படியோ! நாடு வளமாக இருப்பின் மகிழ்ச்சி! 


நன்றி !!!

-பி .விமல் ராஜ்