வெள்ளி, 13 ஜனவரி, 2017

வாடிவாசல் திறக்கட்டும்!

வணக்கம்,

ஜல்லிக்கட்டு - கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் அனைவராலும் பேசப்படும் ஒரு ஹாட் டாபிக். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாமல் போனது, ஜெயலலிதா மரணம் பற்றிய மர்மம், ச்ச்சீ...ன்னம்மாவின் அரசியல் பிரவேசம் என எல்லாவற்றையும் மறக்கடிக்கும் ஒரு செய்தியாக இருக்கிறது ஜல்லிக்கட்டு. உச்சநீதிமன்ற தடையால் கடந்த மூன்று ஆண்டுகளாகவே இப்போட்டி நடைபெறவில்லை. ஓவ்வொரு முறையும் மாநில அரசும், மத்திய அரசும் தடையை அகற்றுவோம் என சொல்லி சொல்லி ஓட்டு வாங்கி செல்கின்றனர். ஆனால் ஒன்றும் நடந்த பாடில்லை. இந்த தடைக்கு பெரும் பங்கு பீட்டா (peTA), விலங்குகள் நல வாரியம் (Animal Welfare Board of India - AWBI) போன்ற அமைப்புகள் தான் காரணம். இவை தான் மிருக வதை, காட்டுமிராண்டித்தனம் எனக்கூறி ஜல்லிக்கட்டை தடை செய்ய கோரி வழக்கு தொடுத்துள்ளனர்.

jallikattu

இதற்கு தமிழக மக்களிடமிருந்து பெரும் எதிர்ப்பு இருந்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளை விட இந்த வருடம் எதிர்ப்பு அதிகமாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் மக்களிடம் விழிப்புணர்பு ஏற்பட்டதே காரணம். அதில் பெரும்பங்கு சமூக வலைத்தளங்களையே சேரும். கடந்த வருடத்தில் இசையமைப்பாளரான 'ஹிப்-ஆப்' ஆதி  எழுதி, பாடி, நடித்த ஒரு 'டக்கரு டக்கரு' பாடல் யூ-ட்யூபில் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று ஒரு வித விழிப்புணர்ச்சியும் ஏற்படுத்தியது. அந்த தீப்பொறியிலிருந்து கிளம்பிய புகை தான் இன்று போகி வரை கொழுந்து விட்டு எரிகிறது.

பின்னர் பலரும் சமூக வலைத்தளங்களிமும், ஊடகங்களிலும் ஜல்லிக்கட்டின் பெருமை, நமது கலாச்சாரம் பற்றியும், பாரம்பரியம் பற்றியும் எழுதி ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று போராடி வந்தனர். கடந்த வாரம் ஜனவரி 8-ஆம் தேதியன்று சமூக வலைத்தளங்களில் மீம் கிரியேட்டர்கள் பகிர்ந்தை கொண்டு சென்னை மெரினாவில் 20,000 பேருக்கு மேல் (பெரும்பாலும் இளைஞர்கள்) ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு தடை நீங்க வேண்டும், ஜல்லிக்கட்டு நடந்த வேண்டும் என்ற போராட்டம் மாறி ஜல்லிக்கட்டு நடத்தியே தீருவோம் என்று கர்ஜித்து வருகின்றனர். #WeDoJallikattu

WeDoJallikattu

ஜல்லிக்கட்டை தடை செய்து நமது தமிழ் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை அழிக்க நினைக்கிறார்கள் என சொல்கிறார்கள். தொன்மையான நமது கலாச்சாரத்தை அவர்கள் அழித்து ஒன்றும் செய்ய போவதில்லை; அவ்வளவு சுலபத்தில் செய்யவும் முடியாது. இதன் பின்னால் பெரிய அரசியலே இருக்கிறது என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சொல்கின்றனர்.

ஜல்லிக்கட்டை தடை செய்தால், காளைகள் உழவுக்கும், அடிமாட்டுக்கும் போகும். பின்னர், நாட்டு மாடுகள் பற்றாக்குறையால், இனப்பெருக்கத்திற்கு காளைகளே இல்லாமல் போகும். வெளிநாட்டிலிலிருந்து காளைகளை இறக்க நினைப்பார்கள் (நாட்டு கோழியை விடுத்து பிராய்லர் கோழியை இறக்கியது போல). இல்லாவிடில் காளைகள் இல்லாமல் இனப்பெருக்கம் பெரிதும் குறையும்; பால் தட்டுப்பாடு வரும். செயற்கை முறையில் கருவூட்டல் (Artificial Insemination - AI ) மூலம் தான் கன்று ஈன முடியும் என்ற நிலை வரும். இந்த AI -ன் காப்புரிமைகள் பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு தான் இருக்கிறது. இது கிட்டத்தட்ட நம் இன மாடுகளை அழித்து, வியாபாரிகளின் சந்தையாக்க முடிவு செய்யப்பட்டு, பல வெளிநாட்டு  நிறுவனங்கள் இந்தியாவில் பீட்டா போன்ற அமைப்புகளை தூண்டிவிட்டு, நம்மையும் நம் கலாச்சாரத்தையும் நசுக்கப் பார்கின்றனர்.

இதெல்லாம் உண்மை என்று சொல்லும் விதமாக ஜல்லிக்கட்டு ஆர்வலரும், காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிறுவனருமான சிவசேனாபதியும், அவரது வழக்கறிஞரும் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறிய விஷயங்கள் அதிர்ச்சி தருவதாக இருக்கிறது. "ஜல்லிக்கட்டு தடைக்கு காரணம் இந்தியாவில் ஒரே குடும்பம் தான்... சின்னி கிருஷ்ணா மற்றும் நந்தினி கிருஷ்ணா ஆகியோர் தான். இவர்கள் தான் இந்தியாவின் மொத்த விலங்குகள் நல அமைப்பையும் கையில் வைத்து கொண்டு, வெளிநாட்டு NGO களுக்கு கைக்கூலியாக உச்சநீதி மன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளனர். இந்திய விலங்குகள் நல வாரியதில் (AWBI) துணை தலைவராக (Vice Chairman) சின்னி கிருஷ்ணா பதவி வகிக்கிறார். மேலும் ப்ளூ கிராஸ் அமைப்பின் தலைவரும் (Chairman) இவர்தான். அது மட்டுமல்லாமல் இந்திய விலங்குகள் நல வாரியதில் ஒரு வெளிநாட்டு பெண் முக்கிய உறுப்பினராக இருக்கிறார். ஒரு வெளிநாட்டு பெண் எப்படி இந்தியாவிலுள்ள சட்டரீதியான ஆலோசனை வழங்கும் அமைப்பில் உறுப்பினராக முடியும் ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்."



மேலும் சின்னி கிருஷ்ணா அளித்துள்ள ஒரு பேட்டியில், மத்திய அரசின் முடிவை கேட்க மாட்டோம் என்றும், இம்முறையும் ஜல்லிக்கட்டு நடக்காது என்று திட்டவட்டமாக சொல்லியுள்ளார்ன்.


இந்த வீடியோக்கள் கடந்த வருடம் ஜூலை மாதம் பதிவேற்றப்பட்டுள்ளது. ஆனால் எந்த ஒரு ஊடகமும் பெரும்செய்திகளாய் ஒளிபரப்பவில்லை. இப்போது தான் பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். ஜல்லிக்கட்டு தடைக்கு மத்திய அரசு கார்ப்பரேட் சாதகமாக செயல்படுகிறது. மாநில அரசு தடையை மீறி நடத்தவும் முடியாமல், அவர்களை எதிர்க்கவும் முடியாமல், தமிழக மக்களுக்கு அறிக்கையை மட்டும் அளித்துவிட்டு வாயடைத்து நிற்கிறது. மாநில மற்றும் தேசிய ஊடகங்களும், இதை பெரிதாக்க விரும்பவில்லை. இதனை வெறும் பரபரப்பான செய்திகளாகதான் பார்க்கின்றனர்.

யார் தடுத்தாலும் சரி, தடை நீக்காவிட்டாலும், ஜல்லிக்கட்டு நடத்தியே தீருவோம் என ஜல்லிக்கட்டு வீரர்கள் கூறி வருகின்றனர். இம்முறையாவது வாடிவாசல் திறக்கப்பட்டு, காளைகள் திமிறி எழுகிறதா என பார்க்கலாம்! நம் தமிழ் மண்ணின் பாரம்பரியமும், கலாச்சாரமும், வீரமும் காப்பாற்றப்படட்டும்!

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்! 


நன்றி !!!

-பி .விமல் ராஜ்