வணக்கம்,
இது ஓர் பயண கட்டுரை. வாரக்கடைசியில் நான் எப்போதும் வீட்டிலுள்ளபடியே இணையம், முகநூல், பதிவு எழுதுவது அல்லது புது படத்தை தரைவிறக்கம் செய்து பார்ப்பது என்று தான் அட்டவணை போகும். எல்லா வாரம் போல இந்த சனியும் சாதாரணமாக தான் போகும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த வாரம் சற்று வித்தியாசமாக சென்றது.
போகவே வேண்டாம் என்று எண்ணியிருந்த 'அலுவலக தின' விழாவிற்கு போயே ஆக வேண்டும் என்ற நிலை. விழாவோ சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடக்கிறது. வர்த்தக மையம் போகும் வழியில் தான் போர் கல்லறைகளும், புகழ் பெற்ற புனித தோமையர் (பரங்கிமலை) தேவாலயமும் இருக்கிறது. விழாவை முடித்து விட்டு வரும் போது பார்க்கலாம் என்ற நினைத்து கொண்டேன். ஏற்கனவே இருமுறை கல்லூரி காலத்தில் போய் வந்த ஞாபகம். மீண்டும் ஒரு முறை போக எண்ணம். காலை பத்து மணிக்கு சென்று, விழாவின் பாதியிலிருந்து கலந்து கொண்டு வருகையை பதிவு செய்தேன். பதினொரு மணிக்குள் கிளம்பிவிடலாம் என்று எண்ணினேன். ஆனால் தப்பிக்க முடியவில்லை. வேறு வழி இல்லாமல், 2 மணி வரை இருந்து பார்த்துவிட்டு , ஓசியில் போடும் மதிய உணவை வயிறு முட்ட தின்றுவிட்டு வெளியில் நடையை கட்டினேன்.
உடன் வேலை செய்யும் நண்பர் மதன் யேசுராஜயையும் தேவாலயம் போக (துணைக்கு) அழைத்து கொண்டேன். 'மதன்ஜி 'யுடன் எனக்கு சில நாட்களாக தான் பழக்கம். இருப்பினும், நல்ல பண்பாளர். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர். மதியம் மூன்று மணி வாக்கில், நாங்கள் இருவரும் போர் கல்லறையை அடைந்தோம். உச்சி வேளையில் சுள்ளென வெயில் சுட்டு கொண்டிருந்தது. வெளியே ரோட்டிலிருந்து பார்த்தாலே கல்லறைகள் தெரியும். சுற்றியும் பச்சை பசேலென உள்ள புற்களுக்கு நடுவே கல்லறைகள் அமைக்கப்பட்டிருந்தன. இரண்டாம் உலக போரின் போது, இந்தியா முழுவதும் உள்நாட்டு கலவரங்களிலும், இராணுவ முகாம்களிலும் இறந்த வீரர்களுக்காக இந்த போர் கல்லறை சின்னம் 1952-ல் எழுப்பப்பட்டுள்ளது. கல்லறைகளுக்கு முன்னால் ஒரு பெரிய கல்வெட்டில் "THEIR NAME LIVETH FOR EVERMORE " என்று பொறிக்கப்பட்டிருந்தது. கல்லறை தோட்டத்தின் மூலையில், சில பூஞ்செடிகளும், மலர்கொடிகளும் கம்பதில் படர்ந்து ரம்மியமாக இருந்தது. அங்கு யாரோ இரண்டு ஜோடிகள் போட்டோ ஷூட்டில் இருந்ததால், அதனருகே செல்லாமல் விட்டுவிட்டோம்.
 |
சென்னை போர் கல்லறை |
அடுத்து வண்டியை புனித தோமையர் தேவாலயத்துக்கு விட்டோம். டூ-வீலரை ஓரமாக நிறுத்திவிட்டு, படிவழியாக மேலே ஏறினோம். 300 அடி உயரமுள்ள மலையில் 135 படிகள் இருக்கிறதாம். எண்ணிக்கை தெரிந்தவுடன் தான் கால் ரொம்ப வலிக்கிறது. வயிறு புடைக்க தின்றுவிட்டு, உச்சி வெயிலில் மலை படியேறி வருவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. காலையில் மேகத்தில் இருந்த கருமை, மதியம் மலையேறும் போது எங்கள் முகத்திலும் வந்துவிட்டது (மதன்'ஸ் பன்ச்!). படியேறும் வழியில் ஏசுநாதர் சிலுவை சுமந்து வருவது போலவும், காயங்களை குணமாக்குவது போலவும் சிலைகள் வடிக்க பட்டிருந்தன. பாதி மலையிலிருந்து பார்க்கும் போது, தென் சென்னையின் தோற்றத்தை கானல் நீரில் கண்டோம்.
மதன் ஏற்கனவே பல முறை இங்கு வந்துள்ளதால் தேவாலய வழிபாட்டை பற்றி சொல்லி கொண்டு வந்தார். ஏசுநாதரின் 12 சீடர்களின் ஒருவரான புனித தோமையர் (Saint Thomas), கி.பி.52 -ல் கேரளம் வழியாக இந்தியா வந்து மத போதகம் செய்துள்ளார். வங்க கரையோரம் மூன்று இடங்களில் (சின்ன மலை, புனித தோமையர் மலை மற்றும் & மைலாப்பூர் ) தங்கி மத போதகம் செய்துள்ளார். கடைசியாக கி.பி.72-ல் இங்கு (இன்றைய பரங்கிமலை) உயிர் நீத்தாக சொல்லபடுகிறது. அவர் இறந்தவுடன் பூதவுடல் மைலாப்பூருக்கு (சாந்தோம்) கொண்டு செல்லப்பட்டது. பின்னர், 1547-ல் காஸ்பர் கோல்ஹோ என்ற பாதிரியார் பரங்கிமலையில் இப்போதுள்ள தேவாலயத்தை கட்டியுள்ளார்.
 |
மலையில் உள்ள பெரிய சிலுவை |
 |
தென்-சென்னையின் தோற்றம்-சென்னை ஏர்போர்ட் |
 |
தோமையரின் ரத்த கரையுள்ள சிலுவை |
 |
தோமையரின் RELIC |
|
|
 |
கி.பி.50-ல் வரையபட்ட ஓவியம் |
இத்தேவாலயத்தின் சிறப்பம்சமாக மலை மீது பெரிய Calvary (ஆணி கொண்டு அறையப்பட்ட இயேசுவின் உருவம் நடுவிலும் திருடர்கள் உடல் பக்கவாட்டிலும் கொண்ட சிலுவை) அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மலையின் மேல் மேரி மாதாவின் தேவாலயம் உள்ளது. அதில் முக்கியமாக, புனிதர் தோமையரின் இரத்த கரையுள்ள சிலுவை இருக்கிறது. இச்சிலுவை இறக்கும் முன் அவரே செய்ததாம். ஒரு குறிப்பிட்ட நாளில் தானாகவே இரத்தம் கசியும் என்று சொல்கிறார்கள். சிலுவை அருகே கி.பி. 50-ல் புனிதர் லூக் -ஆல் (Saint Luke ) வரையப்பட்ட குழந்தை ஏசு மற்றும் மேரி மாதாவின் படமும் உள்ளது. ஏசு கிறுஸ்துவின் பழங்கால ஓவியங்கள் தேவாலய சுவர்களை அலங்கரிகின்றன. தேவாலயம் அருகே ஒரு சிறிய தியான மண்டபமும் இருக்கிறது. அதில் புனிதர் தோமையாரின்
RELIC-ல் (எலும்பு துண்டின் ஒரு சிறு பகுதி ) செய்யப்பட்ட சிலுவையும் உள்ளது.
இந்த திருகோவிலின் விசேஷங்களை எனக்கு விவரித்து கொண்டே இருந்தார் மதன். சில விஷயங்கள் எனக்கு புரியவில்லை என்றாலும், கூகிளாண்டவர் இருப்பதால் தலையை மட்டும் ஆட்டி கொண்டேன்.
எல்லாவற்றையும் சுற்றி பார்த்துவிட்டு கீழே இறங்கினோம். தேவாலயத்துக்கு சென்றதில் மன திருப்தி கிடைத்ததோ இல்லையோ, ஓரு நல்ல வரலாற்று பொக்கிஷமான இடத்தை பற்றி தெரிந்து கொண்ட சந்தோஷம் எனக்குள் இருந்தது.
நன்றி !!!
-பி .விமல் ராஜ்
2 Comments:
வணக்கம்
சிறந்த வரலாற்றுப்பதிவு படிப்பதற்கு உகந்தளித்தமைக்கு நன்றிகள் பல..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கு நன்றி ரூபன்..
கருத்துரையிடுக