north indian லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
north indian லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 11 பிப்ரவரி, 2023

தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்கும் வடக்கர்கள்!

வணக்கம், 

சமூக வலைத்தளங்களில் வடக்கன்ஸ் பற்றிய மீம்ஸ் என்றால் மிகவும் பிரபலம். அவர்களை கேலி, கிண்டல் செய்வதற்கும் இன்டர்நெட்டில் பல வீடியோக்கள் உலவி கொண்டிருக்கின்றன. அவர்களும் அதற்கு ஏற்றார் போல தான் நடந்து கொள்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. பான்பராக் போட்டு கண்ட இடங்களில் துப்புவது, ரயிலில் தகுந்த டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது, ஒரு சிலர் திருட்டு/கொள்ளை என ஈடுபடுவது என வடக்கர்களுக்கும் அவர்கள் செய்யும் அட்ராசிட்டிகளும் நம்மில் பலருக்கு எரிச்சலை தான் தருகிறது. 

கடந்த சில வருடங்களாக வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலைக்காக கூட்டம் கூட்டமாக தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றனர். பெரும்பாலும் கட்டிட வேலை, சாலை செப்பனிடும் வேலை, தச்சு வேலை, பிளம்பர், லோடு மென் என தினக்கூலிகளாகவே பலர் வருகின்றனர். அவர்களுடைய மாநிலங்களில் சரியான வேலைவாய்ப்பும், தொழில் செய்வதற்கான கட்டமைப்பும் இல்லாததே இதற்கு பெரும் காரணமாகும். மேலும் வேலைக்கு ஏற்ற சரியான சம்பளமும் கிடைப்பதில்லை. ஆனால் நம் மாநிலத்தில் வேலைக்கு தகுந்த கூலியும், தங்குவதற்கு, சாப்பாட்டிற்கு என அதற்கான வசதிவாய்ப்புகள் சுலபமாகவே கிடைப்பதால் பலர் இங்கு வேலைக்கு வந்து விடுகின்றனர்.

இங்குள்ள தமிழர்களுக்கு (வேலையாட்களுக்கு) கொடுக்கப்படும் சம்பளத்தை/கூலியை விட குறைவாக வடக்கர்கள் பெறுவதால் பெரும்பாலும் முதலாளிகள் கூட வடமாநிலத்தவரையே வேலைக்கு வைக்கிறார்கள். இதனால் பல தமிழர்கள் தங்கள் வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனர் என பலரும் குறை சொல்லி வருகின்றனர். 

north-indian-labourers-tamilnadu

என்னை பொறுத்தவரை இது பெரிய தவறு போல தெரியவில்லை. எல்லா இடங்களிலும் வழக்கமாக நடப்பது தான். (மா) நிலம் என்பது நாட்டில் உள்ள எல்லோருக்கும் பொதுவானது. அது இவர்கள் மட்டுமே தான் வேலை செய்ய வேண்டும்; இவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை தரவேண்டும் என்ற சட்டமெல்லாம் இதுவரை மாநிலங்களுக்கிடையே கிடையாது. 1950, 60களில் நம் தமிழ் நாட்டிலிருந்து பலர் கூலி வேலைக்காகவும், பிழைப்பை தேடியும் வெளிமாநிலங்களுக்கு சென்றனர். தில்லி, மும்பை, பெங்களூர், ஐதராபாத் போன்ற பெருநகரங்களுக்கு வேலைக்கு சென்று குடியமர்ந்தனர். அப்போதும் அங்குள்ள மாநிலத்தவர் சிலருக்கு வேலைவாய்ப்பு பறிபோனது. சில இடங்களில் கலவரம், தமிழர்கள் மீது தாக்குதல் போன்றவை இதே வாழ்வாதாரம் காரணத்திற்காக நடத்ததேறியுள்ளதை யாராலும் மறக்க முடியாது. அப்போது நாம் கொதித்து எழுந்தோம்; இந்தியா முழுக்க யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யலாம். அதற்கு உரிமை உண்டு என முழங்கியுள்ளோம். இப்போது அதே தவறை நாமும் செய்ய ஆயுத்தமாய் இருக்கிறோம். இன்னும் அவர்களை போல அடித்து விரட்டவில்லை; ஆனால் இது போன்ற வெறுப்பு பதிவுகள்/செய்திகள் தொடருமாயின் விரைவில் நடக்க வாய்ப்புண்டு என்பதில் வியப்பில்லை. அஃது நடக்காமல் இருப்பதே நலம். அதுவே என் எண்ணமும் கூட!

தத்தம் மாநிலங்களில்/மண்ணில் அவரர் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்று கோருவது நியாயமான ஒன்று தான். அதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. ஆனால் வேற்று மாநிலத்தவரை யாரையும் பணிசெய்ய அனுமதிக்க மாட்டோம் என்பது எவ்வகையான மனநிலை எனபது தெரியவில்லை. குறைந்த வருமானத்தில் வேலை செய்பவர்கள், தங்கள் வருமானத்திற்காக எந்த மாநிலமாயினும் (தமிழ்நாடாயினும்), அவர்கள் விருப்பத்திற்கேற்ப எங்கு சென்றும் சட்டத்துக்கு உட்பட்டு, அந்தந்த மாநில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பணிசெய்ய முடியும். யாராலும் தடுத்து விட முடியாது. இதை ஒரேடியாக நிறுத்தவும் முடியாது. வேண்டுமானால் மாநில அரசு சில விதிமுறைகளை போட்டு கட்டுப்படுத்த முயற்சிக்கலாம். 

ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள். உங்கள் வீட்டு கட்டிட வேலைக்கு ஆள் தேவை. நன்கு தெரிந்த நபர் மூலம் தமிழர் ஒருவரும் மற்றும் வடமாநில நபர் ஒருவரும் வேலைக்கு வருகிறார்கள். இருவருமே நல்ல திறமையான, நம்பிக்கையான ஆட்கள். தமிழருக்கு 5000 ரூபாய் சம்பளம் தரவேண்டும்; வடமாநிலத்தவருக்கு 3000 ரூபாய் தந்தால் போதும். நீங்கள் யாருக்கு வேலை போட்டு கொடுப்பீர்கள்? 2000 ரூபாய் அதிகமானாலும் பரவாயில்லை என தமிழருக்கு கொடுப்பீர்களா? அல்லது வடமாநிலத்தவருக்கா? இதைத்தான் ஓட்டல் முதலாளிகளும், பட்டறை முதலாளிகளும், கட்டிட மேஸ்திரிகளும் செய்து கொண்டிருக்கின்றனர். இன்னும் கூட ஒரு குற்றசாட்டு உண்டு. தமிழ் வேலையாட்கள் திறமைனவர்கள் தான்; நல்ல உழைப்பாளிகள் தான். ஆனால் சில சமயத்தில் வேலைக்கு சரியாக வருவதில்லை; வந்தாலும் அதிக நேர இடைவேளை விடுதல், திருவிழா, குடும்ப விசேஷம், பண்டிகை என 10 நாட்களாவது விடுப்பு எடுத்து விடுகின்றனர். வடமாநிலத்தவரோ விடுப்பு இல்லாமல் குறைந்த சம்பளத்தில் வேலையை முடித்து தந்து விடுகிறார்கள். விடுப்பு இல்லாமல், எந்த விசேஷத்துக்கும் போகாமல், குறைந்த சம்பளத்துக்கே எல்லோரும் (நானும், நீங்களும் உட்பட) வேலை செய்ய முடியாது என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் முதலாளிகளின் (லாப) பார்வையில் வடமாநிலத்தவரையே தேர்ந்தேடுக்க வேண்டிய கட்டாயம் வருகிறது.

இன்னும் ஒரு எடுத்துக்காட்டு. ஏன் எல்லா அமெரிக்க அதிபர்களும் தேர்தல் பிரசாரத்தின் போது Say No to India / Say No to Banglore என்று சொல்கின்றனர்? நாளுக்கு நாள் ஆன்சைட் போகும் இந்தியர்களின் எண்ணிக்கை ஏன் அதிகமாகிறது? அங்குள்ள ஜார்ஜ், பெஞ்சமின், ஆபிரகாம், மேரி போன்றோருக்கு கிடைக்க வேண்டிய வேலை நம்மவூர் ரமேஷ், சுரேஷ், அஜய், விஜய், படேல், சிங் போன்றோருக்கு ஏன் கிடைக்கிறது? இந்தியர்களால் பல அமெரிக்க குடிமக்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகிறது. அமெரிக்கர்களுக்கு சம்பளம், விடுப்பு, மற்ற சலுகைகள் என எல்லாம் முழுமையாக தர வேண்டும்; ஆனால் நம்மாட்களுக்கோ கொடுத்ததை வாங்கி கொண்டு திவ்யமாக வேலைசெய்து வெள்ளை முதலாளிகளிடம் நல்ல பெயர் வாங்கி கொள்வார்கள்! கிட்டத்தட்ட இது தான் இங்கும் நடந்து வருகிறது. நம் மக்கள் வெளி மாநிலத்திலோ/வெளி நாட்டிற்கோ சென்று வேலை செய்து சம்பாரிப்பது போல, அவர்கள் இங்கு வந்து வேலை செய்கிறார்கள். அவ்வப்போது இதுபோல வரும் சில புகைச்சலைகளை உடனே மண்ணை போட்டு மூடி விட வேண்டும். இல்லாவிடில் அது அரசியல் மற்றும் ஊடக வியாதிகளால் ஊதி ஊதி நெருப்பாக மாறி, பெரும் இழப்பை தரும்.      


நன்றி!!!
பி. விமல் ராஜ் 

ஞாயிறு, 21 மே, 2017

இந்திக்காரனும் மதராசியும்!

வணக்கம்,

பொதுவாக நம்மை (தமிழ்நாட்டினரை) பற்றி இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரியுமா?

பணி நிமித்தமாக அல்லது படிப்பிற்காக தமிழ் நாட்டிற்கு பலதரப்பட்ட வயதினரும் வருகிறார்கள். இதில் பலர் இங்கயே தங்கி விடுகிறார்கள். அப்படி புதிதாய் சென்னை அல்லது தமிழகம் வருவோரிடம், தமிழ்நாடும் தமிழர்களையும் பற்றி கேட்டதற்கு என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

வட இந்தியர்களிடம் தமிழை பற்றியும், தமிழ்நாடு பற்றியும் கேட்டதற்கு:
  1. தமிழ் நாட்டில் வெயில் அதிகம். அதுவும் சென்னையில் ரொம்ப அதிகம்.
  2. உணவு பதார்த்தங்கள் காரமாக இருக்கும். உடம்புக்கு ஒத்துக்கொள்ளாது. எல்லா ஓட்டல்களிலும் இட்லி, சாம்பார் வடை மட்டுமே பிரதானமாய் கிடைக்கும். வட இந்திய உணவு வகைகள் கிடைப்பது அரிது.
  3. தமிழர்கள் கருப்பாக, அழுக்காக தான் இருப்பார்கள்.   
  4. தமிழர்கள் எல்லோரும் மூன்று வேளையும் வாழையிலை போட்டு தான் சாப்பிடுவார்கள். 
  5. பெரும்பாலும் லுங்கி அல்லது வேஷ்டி தான் கட்டுவார்கள். 
  6. தமிழ் மக்கள் பெரும்பாலானோர் பிராமணர்கள். பலரும் நெற்றியில் (சிவலிங்கம் நெற்றியில் இருப்பது போல) திருநீறு வைத்திருப்பார்கள். 
  7. தமிழ்நாட்டில் யாருக்கும் இந்தி பேச தெரியாது. இந்தியை மொழியை எதிர்த்தவர்கள்; இன்றும் எதிர்ப்பவர்கள். எல்லோருமே தமிழ் மட்டும்தான் பேசுவார்கள்.
  8. தமிழ் மொழி பேச/கற்க மிகவும் கஷ்டமானது.
  9. அனைவரும் ரஜினிகாந்த், கமலஹாசன் ரசிகர்களாகவே இருப்பார்கள்.  
  10. தென் மாநிலங்களில் உள்ளவர்கள் எல்லோருமே மதராசிகள் தான்.
  11. மலையாளமும், தமிழும் கிட்டத்தட்ட ஒன்று.
  12. பிறமொழி பேசும் மக்களுக்கு தமிழர்கள் உதவ மாட்டார்கள். 
  13. ஆட்டோக்காரர்கள் வழிப்பறியாக பணம் வசூலிப்பார்கள்.
  14. தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் நீண்டகாலமாக  பிரச்சனை நடக்கிறது. அனைவரும் பிரபாகரன் ஆதரவாளர்கள்.
  15. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட இடம்.
அதே போல நாமும் வடநாட்டினரை பற்றி என்னன்ன நினைத்துள்ளோம் என்பதை ஒரு சிலரிடம் கேட்ட போது, இந்த பதில்களெல்லாம் வந்து விழுந்தது.
  1. வடஇந்தியாவில் எல்லா மாநிலத்தவரும் இந்தி மட்டுமே  பேசுவார்கள். இந்திக்காரர்கள் எல்லோருமே வட்டிக்கடை 'சேட்'.
  2. எல்லோருமே வெள்ளைவெள்ளேறென்று மைதாமாவு போல இருப்பார்கள். 
  3. இளைஞர்கள் பலர் மேற்கத்திய கலாச்சராத்தைதான் பின்பற்றுவார்கள். 
  4. மூன்று வேலையும் சப்பாத்தியையம், ரொட்டியையும்  மட்டுமே சாப்பிடுவார்கள். 
  5. அவர்கள் ஆங்கிலத்தையும், தாய்மொழியையும் கலப்படம் செய்து பேசுவார்கள். 
  6. திருமணத்திகாக பெரும் தொகையை செலவு செய்வார்கள்.
  7. எல்லோருமே பான் பீடா/ குட்கா போடுவார்கள்; பீடாவை வாயில் போட்டு குதப்பி, கண்ட இடங்களில் துப்பி கொள்வார்கள். 
  8. பெரும்பாலானோர் குடிப்பழக்கம் உடையவர்கள்.
  9. பீஹார், ஒரிசா ஆகிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர்   படிப்பில் பின்தங்கியவர்கள். 
south-indian-vs-north-indian

இது போல இன்னும் நிறைய இருக்கிறது. இதில் நாம் நினைப்பதும் சரி, மற்றவர்கள் நம்மைப்பற்றி நினைப்பதும் சரி, அனைத்துமே உண்மை கிடையாது. ஆனால் ஒரு சில விஷயங்கள் ஒத்து போகலாம்.

இது பொதுவாக எல்லா வடமாநிலத்தவரும் தமிழ்நாட்டை பற்றியும், தமிழ் மக்களை பற்றி நினைக்கும் விஷயங்கள்தான். இவை எல்லாமே நம் சினிமாக்களில் மிகைப்படுத்தப்பட்டு காட்டப்படுபவை. இன்னும் சில, மக்களின் மேம்போக்கான எண்ணங்களின் பிரதிபலிப்பு தான் இவை.

தமிழ் படங்களில் மலையாளிகளை டீக்கடை சேட்டன்களாகவும், அவர்கள் வீட்டு பெண்களை இன்றும் முண்டு கட்டி, துண்டு போர்த்திய பெண்களாய் காட்டுவதும், தெலுங்கர்களை பின் குடுமி வைத்து நெற்றியில் பெரிய நாமம் போட்டவர்களாகவும், பெண் துப்புரவு தொழிலாளர்களளை தெலுங்கு பேசுபவர்களாகவே காட்டுவதும், படித்த இந்தி பேசுபவர்களை உயர் தட்டு மக்களாகவும், படிக்காத இந்தி மக்களை அடியாட்கள் போல காட்டுவதும் உண்டு. இன்னும் ஒரே மாதிரியாக (stereotypical) மற்ற மாநில மக்களை காட்டுவது மக்களின் ஒருவித தவறான கண்ணோட்டதையே குறிக்கிறது.

புரியும்படி சொல்ல வேண்டுமானால், இப்போதுள்ள தலைமுறைக்கு தொலைக்காட்சிகளும் திரைப்படங்களும், இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகவே காட்டி மிகைப்படுத்தி வைத்துள்ளது போல, இவர்கள் (வேற்று மாநிலத்தவர்கள்) இப்படித்தான் என்று நம் மனதில் பதிய வைத்துவிடுகிறார்கள்.

இந்தியில் பாலிவுட் பாதுஷாவின் படத்தில், தமிழ் மக்கள் எப்படியெல்லாம் இருக்கமாட்டார்களோ அப்படி தான் காட்டுவார். நூடுல்ஸில் தயிர் ஊற்றி சாப்பிடுவது, இளநீரில் லசி கலந்து சாப்பிடுவது, தமிழ்நாடு ஆண்கள் பட்டையான தங்க பர்டாரில் வெள்ளை வேட்டியணிந்து (கேரளா ஸ்டைலில்) அங்கவஸ்த்திரம் போட்டிருப்பார்கள், சிலோனுக்கு பெட்ரோல் கடத்துவதால் கடலில் சுட்டு கொள்ளப்படுகிறார்கள் என காட்டியுள்ளார். இன்னும் சில படங்களில் ஆங்கிலத்தை தப்பாகதான் பேசுவார்கள், யாருக்குமே இந்தியில் பேச/பதில் சொல்ல தெரியாது என பல செயற்கையான விஷயங்களை நம் செய்வது போல சொல்லியிருப்பார்கள். 

சினிமாக்கள் மூலமாகத்தான் நாம் பல விஷயங்களையும், மற்ற கலாச்சாரங்களையும் பற்றி தெரிந்து கொள்கிறோம். அதை சொல்லும் போதும், காட்சிப்படுத்தும் போதும் எதார்த்தத்தை காட்டினாலே போதும். அதை தமிழ் சமூகமும், மற்ற சமூகமும் திரையில் சரியாக செய்தாலே, நமக்குள் வடக்கு தெற்கு என்ற கலாச்சார இடைவெளி இல்லமல் போகும். இதை தவிர உங்களுக்கு வேறு ஏதாவது கருத்துக்கள் தோன்றினால் பின்னூட்டத்தில் பதியலாம்.

நன்றி !!!

-பி .விமல் ராஜ்