வியாழன், 29 பிப்ரவரி, 2024

பௌத்தமும் சமணமும் !

வணக்கம், 

பண்டைய காலத்தில் சைவமும் வைணவமும் தமிழ்நாட்டில் முழுமையாய் செழுமை பெறும் முன்பே, பௌத்தமும் சமணமும் தழைத்தோங்கி இருந்துள்ளது. சங்ககாலத்தில் சைவத்துக்கும் வைணவத்துக்கும் இணையாய் பௌத்தமும் சமணமும் நடைமுறையில் இருந்துள்ளது என்பதற்கு பல சான்றுகள் இருப்பதாக சொல்கின்றனர்.


பௌத்தமும் சமணமும் நம் நாட்டின் மிக பழமையான சமயங்களில் ஒன்று. பௌத்தம் கி.மு 400-500-ல் கவுதம புத்தரால் தோற்றுவிக்கப்பட்டது. சமணம் அதற்கும் முன்னரே 24-ஆம் தீர்த்தங்கரர் மகாவீரரால் கி.மு.900-600-ல் தோற்றுவிக்கப்பட்டது. 


நம் நாட்டின் கலாச்சாரம், பழக்கவழக்கத்தில் உள்ள பல விஷயங்கள் புத்த, சமண மதத்தையொட்டி தழுவி பின்பற்றப்பட்டுள்ளது என பல மானுடவியல் ஆர்வலர்கள் சொல்கின்றனர். அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.


Buddhism-Jainism-tamilnadu


பள்ளிக்கூடம் - பள்ளியறை என்பது 'படுக்கையறையை' குறிக்கும். 'பள்ளி கொள்ளுதல்' என்னும் சொல்லுக்கு 'உறங்குதல்' என்று அர்த்தம். ஆனால் அது ஏன் கல்வி கற்கும் இடத்திற்கு சொல்கிறார்கள் என தெரியுமா? சங்க காலத்தில் (கிமு 2ஆம் நூற்றாண்டு முதல்) சமணர்கள் ஊருக்கு வெளியே மலைகளை குடைந்து படுக்கைகள் அமைத்து வாழ்ந்து வந்துள்ளனர். அங்கு சென்று தான் ஊரில் உள்ள சிறுவர்/சிறுமியர் கற்படுகையில் அமர்ந்து கல்விப்பாடம் கற்று கொண்டிருந்தனர். சமணர்கள் பள்ளி கொள்ளும் இடத்தில் சென்று கல்வி கற்று கொண்டதால் அது பள்ளிக்கூடம் என இன்றளவும் அழைக்கப்படுகிறது.


தமிழ்நாட்டில் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் விரதமிருந்து காவியுடை தரித்த துறவிகளுக்கு உணவிடுவதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். அமாவாசை, பௌர்ணமி எனப்படும் காருவா, வெள்ளுவா நாளில், பௌத்த துறவிகள் கூடி சங்க கூட்டம் நடத்துவார்கள். இதனை இலங்கையில் 'போயா தினம்' என இன்றும் கொண்டாடுகின்றனர். 


சைவ வைணவ வைதீக சமயத்தில், துறவு கொள்பவர்கள் காவியுடை உடுத்துவது வழக்கம். முதன் முதலில் செந்துவராடையை அணிந்து துறவு கொண்டது பௌத்த துறவிகளே ஆகும். அதை பின்பற்றி தான் மற்ற சமயங்கள் துறவர்கள் செவ்வாடையை உடுத்தும் வழக்கம் பின்பற்றப்பட்டது.


முருகனுக்கும், பெருமாளுக்கும் வேண்டிக்கொண்டு தலைமுடியை மொட்டையடிக்கும் பழக்கம் நம்மிடையே பலகாலமாக இருந்து வருகிறது. மொட்டையடிப்பது என்பது புத்த மத துறவறத்தில் உள்ள ஓர் முக்கிய விடயமாகவும். பௌத்த துறவிகள் வைத்திருக்க கூடிய 8 பொருட்களில் மழிக்கும் கத்தியும் ஓர் முக்கியமானதாகும். அதுவே பின்னாளில் இந்து சமயங்களில் பின்பற்றப்பட்டு வேண்டுதலுக்காக மொட்டையடிக்கப்படுகிறது.


தமிழர்கள் பரவலாக ஏற்று கொண்டிருக்கும் பட்டிமன்றம் என்ற கலை வடிவம் பௌத்த மதத்திலிருந்து வந்தது. பௌத்த துறவிகள் பிற மதவாதிகளுடன் வாதம் செய்து புத்த மதத்தை பரப்புவது வழக்கமாக்கி கொண்டிருத்தனர். அவர்கள் எந்த ஊருக்கு சென்றாலும் அவ்வூரில் அரச மரத்தின் ஒரு கிளையை நட்டு வைத்துவிட்டு பிற சமயவாதிகளை வாதிட அழைப்பார்கள். அக்காலத்தில் பட்டிமண்டபம் என்பது சமய கருத்துக்களை வாதிடும் இடம் என்று சங்க கால நூல்களில் காட்டப்படுகின்றன. புத்தர் ஞானம் பெற்ற இடம் போதி மரம் என அறியப்படுகிறது. போதிமரம் என்பது அரசமரமே ஆகும். அது புத்த மதத்தினரின் புனித சின்னமாகவும். ஞானத்தின் குறியீடாகவும் கருதப்படுகிறது. இன்றளவும் மக்கள் அரச மரத்தை சுற்றும் வழக்கம் கொண்டுள்ளதையும் பார்க்களாம்.


சமண மதத்தின் 24ஆவது தீர்த்தங்கரரான வர்த்தமனா மகாவீரரின் முக்தியடைந்த நாளை சமணர்கள் விளக்கேற்றி விழாவாக கொண்டாடியுள்ளனர். அதுவே சமய மாற்றத்தின் போது தீபாவளியாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.


இந்த மதங்கள் வளராமல் போக போல காரணங்கள் உண்டு. கி.மு 3 நூற்றாண்டு முதல் கி.பி. 6 நூற்றாண்டு வரை தமிழ் நாட்டில் பலரால் போற்றி வளர்க்கபட்ட புத்த, சமண மதங்கள் பின்னர் 7 நூற்றாண்டுக்கு பின்னர் சரிவடைய தொடங்கியது. அக்காலத்தில் சைவமும் வைணவமும் பல தமிழ் துறவிகளாலும், மன்னர்களாலும் வளர்க்கப்பட்டது. சில நேரத்தில் சமய பற்று, சமய வெறியாகி போய் மாற்று சமயத்தின் மீது பலமான விவாதமும், வன்முறையும் கையாளப்பட்டுளது. சைவர்கள் சமணர்களை கழுவேற்றி கொன்றதாக வரலாறுகள் உண்டு. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பௌத்தமும் சமணமும் மறைய தொடங்கியது.


சமண மதம் மறைய தொடங்கியதில் மற்றொரு காரணம், அதில் கடைப்பிடிக்கபடும் கடுமையான நெறிமுறைகள் தான். துறவு மேற்கொள்பவர்கள் ஆடைகளின்றி நிர்வாணமாக இருக்க வேண்டும்; தலையை மழித்து மொட்டையடித்து கொள்ள வேண்டும்; எட்டு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே உணவு உண்ண வேண்டும்; அதுவும் பிச்சையெடுத்து உண்ண வேண்டும் என்ற கடுமையான நெறிமுறைகள் மதத்தின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைத்தன. இவ்விரண்டு மதங்களும் ஏழாம் நாற்றாண்டு வரை செழித்து வளர்ந்துள்ளதை பல புத்த மடாலயங்கள், புத்த விகாரங்கள், சமணர் படுக்கைகள் ஆகியவற்றின் மூலம் அறியலாம். இதிலிருந்து தமிழ் மக்களிடையே இவ்விரு மதங்களும் ஒன்றோடு ஒன்றாக பின்னி இணைந்திருந்தன என்பதையும் அறியமுடிகிறது.


தகவல்கள்: சமண பௌத்த கட்டுரைகள் - தொ.பரமசிவம் 


நன்றி!!!

பி. விமல் ராஜ்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!