ஞாயிறு, 25 மே, 2014

மக்களின் மனம் கவர்ந்த கோச்சடையான் !

வணக்கம்,

There are Heroes, There are Superheroes, But There is Only One Rajnikanth.

இங்கு ஹீரோக்கள் இருக்கிறார்கள்; சூப்பர் ஹீரோக்களும் இருக்கிறார்கள்; ஆனால் ரஜினிகாந்த், ஒரே ஒருவர் மட்டுமே.

இது தலைவருக்காக சொல்லபட்டதானாலும், அது தான் உண்மை. கிட்டதட்ட 35 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் ஒரே உச்சபட்ச நடிகர். இவரை பல்வேறு பாத்திரங்களில், பல்வேறு நடிப்பில், பல்வேறு கோணங்களில் பார்த்துள்ளோம். கருப்பு-வெள்ளை, ஈஸ்ட் மென் கலர், 3D என திரையில் பல வடிவங்களில் ரசித்துள்ளோம். இப்போது மோஷன் கேப்சர் (motion capture) என்னும் புதிய தொழில் நுட்பத்தில், புதிய பரிமாணத்தில் தமிழ் சினிமாவை அடுத்த படிக்கு கொண்டு போக, முதல் அடி எடுத்து  வைத்து நம்மை ஆள வருகிறார் கோச்சடையான்.     

படத்தின் ட்ரெயிலர் வந்த நாள் முதல், படத்தில் அனிமேஷன் சரியில்லை; கார்ட்டூன் படம் போல இருக்கிறது ; கம்ப்யூட்டர் வீடியோ கேம் போல ஆட்கள் இருக்கிறார்கள் என்று குறை கூறப்பட்டது . சொல்லப்போனால் உண்மையும் அது தான். டிரைலரில் ரஜினியின் தாண்டவம், நடந்து வருவது, எல்லாம் பார்த்து ஒரு கார்ட்டூன் படம் என்றே கேலி பேச ஆரம்பித்து விட்டார்கள்.  சூப்பர் ஸ்டார் ஒரு சீனில் நடித்தாலும் படம் ஓடிவிடும் என்று நம்பி கொண்டிருந்தவர்கள், இந்த படம் ஓடாது என்று பகிரங்கமாகவே சொன்னார்கள்; "கோச்சடையான்  பிளாப் ஆக 10 காரணங்கள் " என்று சில இணைய தள ஊடகங்கள் செய்திகளை பரப்பவும் ஆரம்பித்தன.

இதையேல்லாம் பார்த்து கொஞ்சம் யோசித்த தலைவர், கோச்சடையான் படம் வருவதற்கு முன் "லிங்கா"-வை ஆரம்பித்து விட்டார். பொதுவாக ரஜினியின் படம் வந்து சில நாட்களுக்கு பிறகு தான் அடுத்த படத்தின் பேச்சு அடிப்படும். லிங்காவின் இந்த அவசர ஆரம்பத்திற்கு காரணம் இதுவாக கூட இருக்கலாம்.

ஆனால், இந்த கேலிகூத்தை அடித்து, துவைத்து தன் வழக்கமான பாணியில் ரசிகர்களையும் , மக்களையும் கவர்ந்திழுத்து விட்டார் ரஜினி.
இப்படம் ஆஹா !! ஓஹோ!!!,  இந்தியா சினிமாவில் இது போன்ற கதையே வரவில்லை என்றெல்லாம் நான் சொல்லவில்லை. நாம் ஏற்கனவே கருப்பு வெள்ளை படங்களில் பார்த்த  ஒரு சாதாரண கதை தான். அதைதான்  தொழில் நுட்பத்துடன் சேர்த்து, இரண்டு மணி நேரம் நம்மை உட்காரவைத்து, போரடிக்காமல் காட்டுகின்றனர். இரண்டு மணி நேர படத்தில், 6 பாடல்கள்  தான் கொஞ்சம் எரிச்சலாக இருக்கிறது. ஆக மொத்தத்தில்,  குடும்பத்துடன் பார்க்கும் ஓர் நல்ல பொழுது போக்கிற்கான படம் என்று சொல்லலாம்.


படத்தின் background animation நன்றாக உள்ளது. 3டி -யில் பார்பதற்கும், 2டி யில் பார்பதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால், படத்தில் வரும் கதாபாத்திரங்களின் முக அமைப்புதான் சற்று தடுமாற வைக்கிறது... "இவரா அவர் ???? "; "அந்த பெண்ணா அது??? " என்று நம்மையே குழப்பம் அடைய செய்கிறார்கள். அது மட்டும் தான் எனக்கு குறையாக தெரிகிறது. சற்றே பழைய ராஜா காலத்து பழி வாங்கும் கதை என்றாலும், அனிமேஷனுக்காக குழந்தைகளும், ரஜினிக்காக ரசிகர்களும் , பொழுது போக்கிற்காக மற்றவரும் இந்த படத்தை ஒரு முறை தாராளம் பார்க்கலாம்.! 

அவதார், டின்-டின் போன்ற ஆங்கில படங்களோடு ஒப்பிடுபவர்களுக்கு ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன். ஹாலிவுட் திரைப்படங்களெல்லாம் 2000 கோடி/ 4000 கோடியில், 5 அல்லது 6 ஆண்டுகளில் தயாரகிறது. இந்தியாவில் 200 கோடியில் அதே அளவில் ரிசல்ட்டை எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. நம் மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக அவதார், டின்-டின் போன்ற படங்களை எடுத்த அதே தொழில்நுட்பம் உபயோகிக்கப்படுக்கிறது என்று பட இயக்குனர் சொல்லியிருக்கலாம்.

இந்த 100 வருட இந்திய திரைப்பட வரலாற்றில்,


ராஜா ஹரிசந்திரா (1913) -இந்திய சினிமாவின் முதல் ஊமை படம்.

கீசக வதம் (1918) - தென் இந்திய சினிமாவின் முதல் ஊமை படம்.

ஆலம் ஆரா (1931)  - இந்திய சினிமாவின் முதல் பேசும் படம்.
 
கிசான் கன்யா (1937) - இந்திய சினிமாவின் முதல் கலர் படம்.

அலிபாபாவும் 40 திருடர்களும் (1956) - இந்திய சினிமாவின் முதல் கேவா கலர் படம்.

பானியன் டீர்  (1957) - இந்திய சினிமாவின் முதல் அனிமேஷன் படம்.

ராஜாராஜ சோழன் (1973) - தென் இந்திய சினிமாவின் முதல் சினிமா ஸ்கோப் படம்.

மை டியர் குட்டி சாத்தான் (1984) - இந்திய சினிமாவின் முதல் 3டி படம்.

ராஜா சின்ன ரோஜா (1989) - இந்திய சினிமாவில் முதல் முதலில் அனிமேஷன் கதாபாத்திரங்கள், நடிகர்களுடன் நடித்த படம்.

கோச்சடையான் (2014) - இந்திய சினிமாவின் முதல் மோஷன் கேப்சர் படம்.

அந்த வரிசையில் இந்திய சினிமாவின் முதல் மோஷன் கேப்சர் திரைப்படம் கோச்சடையான் என்று  பெருமையாக சொல்லி கொள்ளாமல் இருக்க முடியாது.

இது ஒரு டை-ஹர்ட் ரஜினி ரசிகனின் விமர்சனம் என்று ஏளனம் செய்தாலும் சரி , அல்லது பொதுவாக ஓர் சினிமா ரசிகனின் பார்வை என்று நினைத்தாலும் சரி. என்னை பொருத்தவரை, கோச்சடையான் - இந்திய சினிமாவின் ஓர் மைல்கல் என்பதை யாராலும் மறுக்க முடியாது. 


நன்றி !!!

-பி .விமல் ராஜ்
  

வெள்ளி, 23 மே, 2014

எவன் அப்பன் வீட்டு சொத்து ?

வணக்கம் ,

நாம் அனைவரும் வருடம் முழுக்க உழைத்து சேர்க்கும் பணத்தில், மூன்றில் ஒரு பகுதியை அரசுக்கு வரிப்பணமாகக் கட்டுகிறோம். அந்த வரியெல்லாம் சரியான வழியில் செலவு செய்யப்படுகிறதா என்று நாம் எண்ணி பார்ப்பதில்லை. நாம் கட்டும் வரிப்பணம் அரசாங்க ஊழியருக்குச் சம்பளமாக, நாட்டு முன்னேற்றதிற்காக, நல திட்டங்களுக்காக, கல்வி/தொழில் வளர்சிக்காகச் செலவு செய்யபட வேண்டும். பெரும்பாலான மக்களின் வரிப்பணம் எங்கெங்கோ, எப்படியெல்லாமோ வீணாகி கொண்டிருக்கறது.

அரசியல் கடலில் போட்ட பெருங்காயம்-

அரசியல்வாதிகள் சிலர் அவர்களின் சொந்த உபயோகத்திற்காகவும், கட்சி பணிக்காகவும் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கின்றனர். முதல்வர் வேட்பாளரும், பிரதமர் வேட்பாளரும் பிரசாரம் செய்யத் தனி விமானம் தேவையா ? இவை கட்சி பணத்திலிருந்து கொடுக்கபடுகிறதா அல்லது அவர்களின் சொந்த பணமா? அல்லது மக்களின் வரிப்பணமா என்று புரியாத புதிராக உள்ளது. அது மட்டுமல்லாமல் ஆட்சியாளர்கள் சிலர், அரசியல் லாபத்திற்காகப் பத்திரிக்கையிலும், ஊடகங்களில் பக்கம் பக்கமாக விளம்பரம் தருகின்றனர். மேலும் பாராட்டு விழாக்கள், கட்சி பெருவிழாக்கள் மற்றும் அனாவசிய ஆடம்பரங்கள் எல்லாமே நம்முடைய வரிப்பணத்தில் தான் செலவு செய்யபடுகிறது. நமக்குத் தரவேண்டிய இலவச/மானிய மின்சாரத்தையும் வெளிநாட்டுக் கார்ப்பரேட் கம்பனிகளுக்குத் தாரை வார்த்துத் தரப்படுகிறது.

இவை மட்டுமா??

 நாம் ஏதாவது ஒரு பொதுத் துறை வங்கியில் கடன் வாங்கிவிட்டுக் கொடுக்காமல் விட்டால், நம்மைச் சும்மா விட மாட்டார்கள். கடனாளியிடம் பணம் இல்லை என்று தெரிந்தாலும், ஃபைன் , ஜப்தி, சிறை என அலைகழிப்பார்கள். வங்கியிலிருந்து (அடி)ஆள் அனுப்பி வைத்து கடனாளியை அசிங்க படுத்துவார்கள். இந்த மாதிரி சட்டமெல்லாம் எல்லோருக்கும் பொது என்று நாம் நம்பி கொண்டிருக்கிறோம், ஆனால் அது அப்படியல்ல. நாடு முழுக்கப் பொதுத் துறை வங்கிகளிடம் கோடான கோடி பணத்தைக் கடனாக வாங்கிவிட்டு, ஏமாற்றும் பெரும் செல்வந்தர்களும், அரசியல் புள்ளிகளும் இருக்கதான் செய்கின்றனர்.


நாடு முழுக்க 24 பொதுத் துறை வங்கிகளில் 3 லட்சம் கோடிகளுக்கு மேல் கடன் வாங்கித் திருப்பித் தராமல் பட்டை நாமம் போட்ட பெரிய நிறுவனங்கள் , தொழிலதிபர்கள் பலர் உள்ளனர். கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையாவின் பெயர் மட்டும் வெளியே வந்திருகிறது. இது போன்ற இந்தியாவிலுள்ள பல பெரிய நிறுவனங்கள், வங்கிகளில் பல லட்சம் கோடி கடன் பாக்கி வைத்துள்ளது. அவ்வளவு ஏன் ? பெயரே பிரபலமாகத் தெரியாத 10 நிறுவனங்கள் மட்டுமே 16 ஆயிரத்து 200 கோடி கடன் வாங்கிவிட்டு, திருப்பிக் கட்டாமல் ஏமாற்றுகின்றனர். கடந்த ஆறு மாதங்களில் மற்று 400 பெயர்களில் 70 ஆயிரத்து 600 கோடி கடன் வழங்க பட்டு, இதுவரை ஒரு தவணை கூடத் திருப்பிக் கட்ட வில்லையாம். இது கிட்டத்தட்ட வங்கி புகுந்து கொள்ளை அடிப்பது போலதான் இருக்கறது.

'வராக்கடன்' என்று வங்கி குறிப்பிடும் இந்தக் கடன்கள் எல்லாம் திரும்பி வராது என்று தெரிந்தே வங்கிகளால் கொடுக்கப்பட்டுள்ளன. வங்கியின் உயர் அதிகாரிகளின் சுய லாபத்திற்காகவும், அரசியல் நிர்பந்ததிற்காகவும் போதுமான ஜாமீன் இல்லாமல் பணத்தை அள்ளி கொடுகின்றனர். கடந்த 14 ஆண்டுகளில் அவ்வாறு வராக்கடன்கள் தள்ளுபடி செய்தது மட்டும் 2 லட்சத்து 4,000 கோடி!

சில ஆட்சியாளர்கள், அரசியல் ஆதாயத்திற்காக விவசாயக் கடனை, கூட்டுறவு கடனை வட்டியின்றி அறவே தள்ளுபடி செய்துவிடுகின்றனர். இதில் 60% ஏழை விவசாயிகள் பலன் பெறுகிறார்கள் என்று வைத்து கொண்டாலும் , மீதம் 40%, விவசாயக் கடன் என்ற பெயரில் மற்ற தொழிலில் பணம் போட்ட பண்ணையார்களும், வசதி படைத்தவர்களும் அதிகம் பலன் பெறுகிறார்கள்.

இதெல்லாம் எவன் அப்பன் வீட்டுப் பணம் ? எல்லாமே நம்முடைய வரிப்பணம் தான். வங்கிகள் நாட்டுடைமையாக்கியது மக்களின் நலனுக்காக என்று சொல்லப்பட்டது. ஆனால் அந்த வங்கிகளால் பெரும் பணக்காரர்களும், தொழிலதிபர்களும் தான் நலனை சொகுசாய் அனுபவித்துக் கொண்டிருகின்றனர். வராக்கடன்களைத் திருப்பி வாங்குவதைப் பற்றி அரசு ஓர் நல்ல முடிவு எடுக்காத பட்சத்தில், நம் பொதுத் துறை வங்கிகள் திவாலாகி போக வாய்ப்புகள் உண்டு. வங்கியில் நாம் சேர்த்து வைத்த பணமும் சேர்ந்து திவாலாகி போகவும் வாய்ப்பு உண்டு என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.

வெளிநாட்டு வங்கிகளில் தான் நம்மூர் பணக்காரர்களின் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்தியாவில் சில பொதுத் துறை வங்கிகளே இப்படிச் சுவிஸ் வங்கி போலச் செயல்படுவது எங்குப் போய் முடியும் என்று தான் புரியவில்லை. மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், பொதுத் துறை வங்கி நிறுவனமும் தான் இந்த வராக்கடன்கள் பற்றியும், உத்திரவாதம் இல்லாமல் கடன் கொடுப்பது பற்றியும் நல்ல முடிவெடுக்க வேண்டும். நம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும் !

வங்கிகள் பற்றிய தகவல் - குமுதம் ரிப்போர்ட்டர் -18.5.2014


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 4 மே, 2014

அழகற்ற குரூபி ஆகிறாள் !

வணக்கம்,

பிள்ளைகளுக்கு பரீட்சை முடிஞ்சாச்சு. வெயிலுக்கும், கோடை விடுமுறைக்கும் சேர்த்து நம்மவர்கள் எதாவது மலை பிரதேசமாக போகலாம் என்று எண்ணினால், நமக்கு முதலில் நினைவுக்கு வருவது ஊட்டியும், கொடைக்கானலும் தான். இப்பதிவில் பார்க்க இருப்பதும் மலைகளின் இளவரசி என்று வர்ணிக்கப்படும் கொடைக்கானலை பற்றிதான்.

இயற்கை அன்னை நமக்கு பல செல்வங்களை அள்ளிதந்து கொண்டிருக்கிறாள். கனிம வளங்களாக, நீராக, வன உயிரினங்களாக, மரம், செடி கொடிகள் என பல விலைமதிப்பில்லா செல்வங்களை அளித்து கொண்டிருகிறாள். நம் மக்களோ அறிவியலின் முன்னேற்றம் காரணமாக அந்த செல்வங்களை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து கொண்டிருக்கிறார்கள்.

கோடை காலத்தில் மக்கள் விரும்பி போகும் சுற்றுலா தளங்களில் ஒன்று கொடைக்கானல். கோடை வெயிலுக்கு இதமாக கானல் (குளிர்ந்த வனமும், வனம் சார்ந்த இடமும்) இருப்பதால், மக்கள் கோடை விடுமுறைக்கு இங்கு வந்து விடுகின்றனர்.

பெயருக்கு ஏற்றார் போல பார்க்கும் இடமெல்லாம் மலைகளும், பச்சை பசெலன மரங்களும், காடுகளும், நீருற்றுகளும் இருக்கின்றது. மலைக்கு இடையில் போகும் போது, ஆங்கிலேயர் காலத்தில் விதைத்து வைக்கபட்டு, 100 அடிக்கு மேல் வளர்ந்து நிற்கும் யூகலிப்டஸ் மரங்களும், சவுக்கு மரங்களும் நம்மை வரவேற்று நிற்கின்றது.

சில இடங்களில் மக்களின் சுவடே தெரியாத வண்ணம் இருந்த கொடைக்கானல் மலை காடுகள், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாசு படிய ஆரம்பித்திருகிறது. மக்களின் அன்றாட வாழ்வில் உபயோகப்படும் பிளாஸ்டிக்  பொருட்கள், குப்பைகள், பிளாஸ்டிக் பேப்பர்கள்/ பைகள் சுற்று சூழலை மாசுபடுத்தி வருகிறது. இந்த குப்பைகள் மக்கி மண்ணில் புதையும் போது, நிலத்தடி நீர் வளம் குறைகிறது. நீர்நிலை வறண்டு போகிறது. மழையும் பொய்க்கிறது. விவசாயம் பாதிப்படைகின்றது. மரங்களுக்கு தண்ணீர் இல்லாததால் காட்டில் சில நூற்றாண்டை கடந்த மரங்கள், கோடையில் சில மாதங்களை  கூட கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


மேலும், காட்டில் மலையேற்ற நடைபயணம் செய்பவர்களும், சுற்றுலா வருபவர்களும், குப்பைகளையும், பிளாஸ்டிக் குடுவைகளையும் வனத்தில் வீசி விடுகின்றனர். ஒவ்வொரு தெருமுனையிலும் "பிளாஸ்டிக் குப்பைகளை போடாதீர் ! வனத்தின் தூய்மை காப்பீர் !" என்ற அறிவிப்பு பலகைகள் இருந்தாலும், மக்கள் பெரும்பாலும் கண்டு கொள்வதில்லை. குப்பைகளை  உட்கொள்ளும் வன விலங்குகள் உயிரிழக்க நேரிடுகிறது. மேலும் அடர்ந்த வனத்தில் கட்டப்படும் தங்கும் மாற்றும் உணவு விடுதிகளாலும், வன மிருகங்கள் சுதந்திரமாய் வாழ இடையூறாக இருக்கிறது.  கொடை நகராட்சியும் இந்த பிளாஸ்டிக் குப்பைகளை அழிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதைவிட என்னொமொரு கண்ணனுக்கு தெரியாத பேராபத்தையும் கொடைக்கானல் நகரமும்,காடுகளும் எதிர் நோக்கி கொண்டிருக்கிறது. கொடைக்கானல் காடுகள், பாதரச நச்சு பொருட்களால் மாசுபட்டு கொண்டு இருக்கிறது. இங்குள்ள ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனத்தில் நம்முடைய உடம்பின் வெப்பத்தை கூறும் தெர்மோமீட்டரை உற்பத்தி செய்கின்றனர். இதிலிருந்து வெளியேறும் நச்சு மிகுந்த பாதரசத்தால் சுற்றுசூழலும், வனமும் அழியும் நிலை ஆரம்பித்திருக்கிறது. இந்த தொழிற்சாலையில், உடைந்து போன அல்லது உபயோகமில்லாத தெர்மாமீட்டரை சரியான சுத்திகரிப்பு முறையில் இவர்கள் அகற்றுவதில்லை. பாதரசமிகுந்த தெர்மா மீட்டர் கண்ணாடிகளை குப்பை கூளத்திலோ, அல்லது காட்டிலுள்ள கிடங்கிளோ போட்டுவிடுகின்றனர். இதன் மூலம் பாதரசம் காற்றில் பரவி, காடுகளை மாசிபடுத்தி விடுகிறது. இதில் வேலை செய்பவர்களும், நோய் வாய்ப்பட்டு போவதாகவும், இறப்பதாகவும் சொல்கின்றனர். சமூக ஆர்வலர்கள் போராட்டத்தின் பெயரில் 2001-ஆண்டு அரசு இந்நிறுவனத்தை மூட உத்திரவிட்டுள்ளது.


அதுமட்டுமல்ல, மலைகளின் இராணி என்று சொல்லப்படும் ஊட்டியும் இது போன்ற சுற்றுசூழல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. சொல்ல போனால், கொடைக்கானலை விட  ஊட்டி மிகவும் மாசுபட்டுள்ளது என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர். வண்டியிலிருந்து வெளிப்படும் CO2 வாயு, தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றபடும் நச்சு காற்று ,கழிவு நீர் போன்றவை ஊட்டியை மேலும் மாசுபடுத்துகிறது. இங்கும், பிளாஸ்டிக்கும், குடுவைகளும் இயற்கை மாசடைய பெரும்பங்கு வகிக்கிறது. இதன் மூலம், ஊட்டி ஏரி மாசடைந்து காணப்படுகிறது. மீன்களும், பிற உயிரினங்களும் அழியும் நிலையில் உள்ளது. உலக புகழ் ரோஜா தோட்டமும் ஊட்டியில் தான் இருக்கிறது. நிலம்,காற்று மாசடைவதால் தாவரங்களும் அழியும் நிலையில் இருக்கிறது.

இது ஊட்டி ,கொடைக்கானலில் மட்டுமல்ல.. நம் நாடெங்கும் இது போன்ற சுற்றுசூழல் கேடுகள் இருக்கிறது. அவைகளை வளரவிட்டால், நம் நாடு பல செல்வங்களை இழக்க வேண்டி வரும்.
 
வருடந்தோறும் சுற்றுலாவிற்காக கொடைக்கானலுக்கும், ஊட்டிக்கும் பலர் வருகின்றனர். அரசுக்கு வருமானமும் பெருகுகிறது. அதை வைத்தது கொண்டு நம் சுற்று சூழலையும், இயற்கையின் பேரழகையும் காப்பது நம் அரசின் கடமையாகும். அரசின் கடமை மட்டுமல்ல;  ஒவ்வொரு மக்களின் கடமையும் தான். இதை இப்படியே விட்டுவிட்டால், வரும் காலங்களில் நம் இயற்கை அன்னை அழகற்ற குரூபி ஆனாலும் ஆச்சிரியபடுவதற்கில்லை.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

திங்கள், 28 ஏப்ரல், 2014

சிறுகதை - தண்ணீர் சிறுவன்

வணக்கம்,

ஒரு சாதாரண மாணவனின், கண்ணில் பட்ட நிகழ்வையே இங்கு சிறுகதையாக எழுதியுள்ளேன். படித்து விட்டு விமர்சனங்களை பகிரலாம்.

சிறுகதை - தண்ணீர் சிறுவன்
****************************************
அந்தி சாயும் வேளையில், அந்த இடமே விழாக்கோலம் பூண்டிருந்தது.  வெள்ளை அரண்மனை போல தோற்றமுள்ள அந்த கட்டிடத்தின் பின்புறத்தில், பெரிய மைதானத்தில் அலங்கார மேடை போடப்பட்டிருந்தது. வளாக நுழைவு வாயில் முதல் மேடை வரை மிகவும் பிரம்மாண்டமாக இருக்க வளைவுகள், தோரணங்கள், வசதியான நாற்காலிகள், வி.ஐ.பி. சீட்கள் என ஆடம்பரமாக இருந்தது. மேடையின் மீது நான்கைந்து குஷன் நாற்காலிகள் வரிசையாக போடப்பட்டு, அதற்கு முன் ஒரு மினரல் வாட்டர் பாட்டிலும், சில காகிதங்களும், டீப்பாயின் மீது வைக்கபட்டிருந்தது. மேடையின் வலது ஒரத்தில் ஒரு மைக் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இரு பக்கமும் வோல்டாஸ் ஏசி ஆள் இல்லாமல் வெறுமனே ஓடி கொண்டிருந்தது.  மேடையில் நாற்காலிகளின் பின்புறம் "WELCOME TO JSD ENGINEERING COLLEGE - NATIONAL LEVEL SYMPOSIUM - DEPARTMENT OF INFORMATION TECHNOLOGY " என சிகப்பு துணியில், தங்க நிறத் தெர்மகோலில் எழுதி தொங்க விடப்பட்டிருந்தது.

மேடைக்கு கீழே மாணவர்களும், ஆசிரியர்களும் வரிசையாக நாற்காலியில் அமர்ந்திருந்தனர். அந்த செம்மண் பூமியில், லேசாக வந்த உப்பு காத்து எல்லோரையும் சுகமாக குளிரூட்டியது. லேசான சுரத்தில் ரேடியோவில் மேற்கத்திய இசை பாடிக்கொண்டிருந்தது. ராஜும், அருணும் கடைசி வரிசைக்கு முன் வரிசையில் உட்கார்ந்திருந்தார்கள். இருவரும் அன்று தான் அந்த கல்லூரிக்கு முதன் முறையாக வருகிறார்கள். காலையில் நடந்த போட்டிகளில், "பிக் டேட்டா அனாலிசிஸ் " தலைப்பில் பேப்பர் பிரசென்டேஷனில் கலந்து கொண்டு மூன்றாம் பரிசையும், மதியம் நடந்த பொது அறிவு போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசையும் பிடித்திருந்தனர். மாலையில் கல்லூரி தலைவர் கையால் பரிசளிக்கும் விழா நடைபெறும் என்று சொல்லப்பட்டதால், இருவரும் காத்திருந்தார்கள்.

"என்னடா இது!!! நாலரை மணிக்கு மேல ஆயிடிச்சு.. சேர்மன் இன்னும் வரவேயில்லை.. நாம கிளம்பலாம் வா...  "

"கொஞ்சம் வெயிட் பண்ணு அருண்..சர்ட்டிபிகேட் வாங்கினதும் நாம போய்டலாம்... சரியா !!! ", என்றான் ராஜ்.

"ஹ்ம்ம்..இங்கே வந்திருக்கவே கூடாது.... பேசாம வண்டலூர்ல மகரிஷி காலேஜுக்கு போயிருக்கனும்... வட பாயசத்தோட சப்பாடாம்.. சதீஷ் சொன்னான்."

"டேய்.. இங்கயும் வந்து மதியம் மீனு, கருவாடு, கறிக்குழம்புனு  நல்லா கொட்டிகிட்ட தானே ???" 

"பின்ன..அதுக்கு தானே வந்தேன்.."

"சாப்டாச்சுல.. எல்லாம் முடிஞ்சிடிச்சுல... கொஞ்சம் பொறு..."

"....ஹ்ம்ம் ................"

கூட்டத்தில் மாணவர்களும், மற்றவர்களும் அவர்களுக்கிடையே சலசலவென பேசி கொண்டே இருந்தனர். "Our Chairman is about to reach our campus. Students are requested to maintain silence and discipline" என்று ஒரு பீட்டர் விடும் பெண் குரல் அவ்வபோது மைக்கில் அறிவித்து கொண்டிருந்தது.

நன்றியுராற்றிவிட்டு பரிசளிக்க வேண்டிய ஜே.எஸ்.டி கல்லூரியின் தலைவர் இன்னும் வரவில்லை. அவருக்காகதான் அனைவரும் காத்து கொண்டிருந்தனர். சற்று நேரத்தில், தீடீரென எல்லோரும் எழுந்து நின்று நுழைவு வாயிலைப் பார்க்க ஆரம்பித்தார்கள். தூரத்தில் ஹாரன் சத்தத்தில் நான்கு இன்னோவா கார்கள் புடைசூழ வந்து கொண்டிருந்தது. இன்னோவா கார்களின் இடையில் ஒரு உயர் ரக, வெண் நிற, ஃபான்சி நம்பருடன் கூடிய ஆடி கார் ஒன்று, மைதானத்தின் வலப்பக்கத்திலிருந்து, இடப்பக்கத்தில் மேடையருகே வந்து நின்றது. இன்னோவா காரிலிருந்து சில டிப்டொப் ஆசாமிகள் வேகமாக இறங்கி வந்து, ஆடி காரின் கதவுகளை திறந்தனர். உள்ளிருந்து  எழுபது வயதுமிக்க ஒரு பெரியவர் வெள்ளை வேட்டி சட்டையுடன் புன்முறுவலோடு இறங்கி அனைவருக்கும் வணக்கம் வைத்தார். காரின் மறுபுறம், அவரது மனைவியும் இறங்கினார். பின் வந்த கருப்பு டொயோடா காரில் இரண்டு கல்லூரி நிர்வாகிகளும் வந்திருந்தனர்.

நிர்வாகிகளும், கல்லூரி தலைவர், மற்றும் அவரது மனைவியும் மேடையில் உள்ள நாற்காலிகளில் போய் அமர்ந்தனர். சிறிது நேரத்தில் கல்லூரி நிர்வாகிகள்,  கல்லூரியின் பெருமைகளையும், கல்லூரி தலைவரின் கல்வித்தொண்டு பற்றியும் புகழ்ந்து பேசினார்கள். "நமது கல்லூரி சேர்மன் திரு.ஜே.சிவதாஸ் அவர்கள் மிகவும் நல்லவர், பொது நலவாதியும் கூட.  ஏழை குடும்பத்தில் பிறந்து, உழைத்து முன்னேறி வாழ்வில் வெற்றி பெற்றுள்ளார். தான் படிக்காவிட்டாலும் ஊரில் உள்ள எல்லா ஏழை பிள்ளைகளும் படிக்க வேண்டுமென எண்ணி பள்ளிகூடங்கள், பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி என பல கல்வி நிறுவனங்களை ஆரம்பித்து, இன்று பல பிள்ளைகளை இலவசமாக படிக்க வைத்து கொண்டிருகிறார். இவர் சேவையை பாராட்டி, ஒரு தனியார் தொண்டு நிறுவனம் தலைவருக்கு 'கல்வி தந்தை ' என்ற பட்டதை கொடுத்துள்ளது. மற்ற கல்வி நிறுவனங்களை போல கல்வியை விற்காமல், ஓர் சமுதாய பணியாகவே செய்து வருகிறார். ஆயிரம் கோவில்களை கட்டுவதும், ஒரு ஏழைக்கு கல்வி கொடுப்பதும் ஒன்று என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்ந்து கொண்டிருக்கும் உன்னத மனிதர் நம் கல்லூரி தலைவர்."

மேலும் தலைவரை பற்றி பேசி கொண்டே இருந்தனர். அதன் பின் பேசிய கல்லூரி முதல்வர் நேஷனல் லெவல் சிம்போசியம் பற்றி விரிவாக பேசினார். கடைசியாக கல்லூரி தலைவர் சிவதாஸ் மாணவர்களின் ஒழுக்கம் பற்றியும், கல்லூரியின் தேர்ச்சி விகிதம் பற்றியும் பேசிவிட்டு, நேஷனல் லெவல் சிம்போசியம்  பற்றி சிறிது நேரம் உரையாற்றினார்; பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

பாராட்டுரையும், நன்றியுரையும் முடியவே ஆறரை மணிக்கு மேல் ஆகிவிட்டது. ராஜும் , அருணும் அக்கல்லூரி பேருந்திலேயே ஏறி வீட்டுக்கு புறப்பட்டனர். போகும் வழியில் ராஜ், கல்லூரி சேர்மன் பற்றி நிர்வாகிகள் பேசியதை நினைத்து கொண்டிருந்தான். எல்லா கல்லூரியிலும் இப்படி தான் போல என்று எண்ணி கொண்டான். ஒவ்வொரு முறையும் கல்லூரி தலைவரை 'கல்வி தந்தை' என்று குறிப்பிடும் போது, அன்று மதியம் கேன்டீனில் நடந்த சம்பவம் நிழலாய் நினைவில் வந்து போனது.

  ----

 மதியம் கேன்டீனில் சாப்பிடும் போது -

"அருண் ! கருவாடு  நல்லா இருக்குல.!!! "

"ஆமா ..நல்லாயிருக்கு... ராஜ்.. அந்த வறுவலை  கொஞ்சம் கொ... "

"கிளிங் ! கிளாங் ! கிளிங் !.."

திடீரெனெ பாத்திரம் உருளும் சத்தத்துடன்,  பளார்!!!  பளார்!!! என அரை விழும் சத்தமும் கேட்டது. சத்தம் வரும் திசையில் பார்த்த போது....

" அறிவுகெட்ட எரும மாடு.. வேலை செய்யும் போது, புத்தி எங்கடா போவுது.. "

"இல்லண்ணே ..  தெரியாம தண்ணி ஜக்கை ரொம்ப சாய்ச்சிடென்.. அதன் கீழே கொட்டிடுச்... "

பளார்!!!  .... மீண்டும் ஒரு அரை.

"ஒழுங்கா வேலை செய்யலேனா , ஊர பாக்க போக வேண்டியதுதான்... தெரியும்ல என் சேதி... தோலை ஊறிச்சுருவேன். ஜாக்கிரதை.. !"

 "மம்ம்....சரிண்ணே..."

ஒற்றை கையால் கன்னத்தை பிடித்த படியே மீண்டும் கூலரிலிருந்து தண்ணீர் பிடித்து, பந்தியில் காலியான டம்ளர்களை நிரப்ப ஆரம்பித்தான் அந்த பன்னிரெண்டு வயது சிறுவன்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

திங்கள், 21 ஏப்ரல், 2014

வாங்க ஓட்டு போடுவோம் !

வணக்கம்,

தேர்தல் வந்தாச்சு. ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு, வீதிக்கு வீதி எல்லோரும் பேசி கொண்டிருப்பது இந்த வாரம் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை பற்றி தான். புதிதாய் ஓட்டு போட தயாராகும் கல்லூரி இளைஞன் /இளைஞிகள், அரசு அலுவலகங்கள், கார்ப்பரேட்  நிறுவனங்கள், தெருவோர பெட்டிக்கடைகள் என எல்லா இடங்களிலும் அரசியல் பேசும் நேரம் இது.

மத்தியில் இருபெரும் கட்சிகள் மோதுகின்றன. மாநிலத்தில் கூட்டணி கட்சியினரோடு சேர்ந்து கொண்டு கடந்த இரண்டு மாதங்களாக பிரச்சாரத்திலும், போட்டியிலும் அனல் பறக்கிறது. இரண்டு பெரும் கட்சிகள் இத்தேர்தலில் மோதும் போது, உடைபடுவது எதோ மக்களின்  மண்டையாக தான் இருக்கிறது. ஆளாளுக்கு பிரச்சார விளம்பரங்களையும், வாக்குறுதிகளையும் அள்ளி வீசி கொண்டு இருக்கின்றனர். நமக்கு தான் எதை கேட்பது என்று தெரியவில்லை.

இப்போது நடப்பது நாடாளுமன்ற தேர்தலா? அல்லது மாநிலங்களவை தேர்தலா? என்றே புரியவில்லை. நடக்கிற கூத்தை பார்த்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது. மாநிலத்தில் உள்ள எல்லா கட்சிகளுமே ஒரே மாதிரி நம்மை குழப்புகிறார்கள்.

vote for better India

"ஏமாந்தது போதும்! இம்முறை எங்களுக்கே வாக்களியுங்கள்  எங்ககளை ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தால், தடையில்லா மின்சாரம் தருவோம், விலைவாசியை குறைப்போம்; வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் ! .....செய்வீர்களா???? நீங்கள் செய்வீர்களா???? " என்று நம்மையே கேள்வி கேட்கிறார்கள். நாம் தானே சொன்னதை செய்வீர்களா? என்று கேட்க வேண்டும். எனக்கு புரியவில்லை.

மற்றொருவரோ, "அவர்கள் சொன்னதை இதுவரை செய்யவில்லை; நாங்கள் மறக்கவில்லை... அதை நீங்கள் மறப்பீர்களா??? மறப்பீர்களா??? " என்று அவர்களை நல்லவர்கள் போல காட்டி கொள்கிறார்கள். அவர்கள் குடும்ப பிரச்சனைகளை மக்கள் மறக்க மாட்டார்கள் என்பதை அறியாதவர் போலும்!

இன்னொருவர், "தெரிஞ்சிகோங்க மக்களே!!! இரண்டு கட்சிகளும் சரியில்லை; ஒரே ஊழல்; அராஜகம்; நம்மால நிம்மதியா இருக்க முடியல...ஏய் ! கொடியை கீழே இறக்குடா...  மறைக்குதுல்ல....எங்க விட்டேன்?... ஆங்...இந்த ஒரு முறை வாய்ப்பு கொடுங்க.. புரிஞ்கோங்க மக்களே!!!" என்று அவருக்கும் புரியாமல், நமக்கும் புரியாமல் பேசுகிறார் உளறுகிறார்.

தேர்தல் விளம்பரத்தில் இவர்களின் சொத்து பட்டியலை மாறி மாறி காட்டி, போட்டு கொடுத்து கொள்கிறார்கள். இதையெல்லாம் ஏன் சி.பி.ஐக்கும், வருமான வரி துறையினருக்கும், முன்னமே தெரியவில்லை என்றுதான் நம் மக்களின் பெரிய சந்தேகமாக இருக்கிறது.

நடக்கவிருப்பது நாடாளுமன்ற தேர்தல். எங்களை வெற்றி பெற செய்தால், எங்கள் வேட்பாளர் உங்களுடைய தொகுதிக்காக பாராளுமன்றத்தில் போய் பேசுவார் என்று சொல்லி ஓட்டு கேட்டால் சரி.  அதை விட்டுவிட்டு, மீண்டும் வாய்ப்பு கொடுங்கள் ! விலைவாசியை குறைப்போம்; மின்சாரம் தருவோம் என மாநிலங்களவை தேர்தல் போல பிரச்சாரம் செய்கிறார்கள். விதம் விதமாக நம் காதில் பூ சுற்றுகிறார்கள்.

தேசிய கட்சிகளும் சாதாரணமாக விடவில்லை. நாங்கள் செய்த பத்தாண்டு சாதனைகளை தொடர வழி செய்யுங்கள் என்று வாய் கூசாமல் புளுகுகிறார்கள். மற்றொருவரோ, அவரின் சாதனையை பட்டியல் போடவே நேரம் இல்லாமல் இருக்கிறார். அந்த சாதனை பட்டியலில் சில வேதனை பட்டியல்கள் மறைந்து விடுகிறது. ஆனால், இவரை தான் இந்தியாவின் எதிர்கால ஒளி விளக்கு, வழிகாட்டி என்று எல்லோரும் நம்புகிறார்கள். ஹ்ம்ம்....நம்பி தானே ஆகணும்... வேற வழி ?

அற வழியில் ஊழலை எதிர்கிறேன் என்று கட்சி ஆரம்பித்தவர்; முதல் அடியை சரியாக எடுத்து வைத்து விட்டார். ஆனால், அதன் பின் சரியாக அடியேடுத்து வைப்பாரா என குழப்புகிறார். இரும்பெரும் கட்சிகளை தாக்கு பிடிப்பாரா என்றும் தெரியவில்லை.

மக்கள் யாரும் யோசிக்கவே மாட்டார்கள் என்று நினைத்து விட்டார்கள். யாரும் செய்திதாள்கள் படிப்பதில்லை; செய்திகள் கேட்பதில்லை என்று அரசியல்வாதிகளின் நினைப்பு. ஆனால் அதுவும் கிட்டதிட்ட உண்மைதான். ஆம். நம் பாரத தேசத்திற்கென்றே பொதுவான வியாதி ஒன்றுள்ளது.

மறதி- நம் நாட்டின் தேசிய வியாதி. இந்த வியாதி இருக்கும் வரை நம்மால் எந்த ஒரு நல்ல தெளிவான முடிவையும் (ஆட்சியையும்) எடுக்க முடியாது. நம் மக்கள், போன ஆட்சியில் நடந்ததை இந்த ஆட்சியில் மறந்து விடுவார்கள்; இந்த ஆட்சியில் நடப்பதை அடுத்த ஆட்சியில் மறந்து விடுவார்கள். யார் அப்போதைக்கு நல்லது செய்கின்றார்கள் என்று மட்டுமே சிலர் பார்கின்றனர்.

எந்த தேர்தலானாலும், சாதியையும் , மதத்தையும் மட்டுமே வைத்து ஓட்டு போடுபவர்களும், பணம் வாங்கி கொண்டு ஓட்டை விற்பவர்களும் இருக்கும் வரை நாம் தகுதியான அரசை எதிர்பார்க்க முடியாது. இதெல்லாம் ஒரு புறம் இருக்க, நொண்டி சாக்கு சொல்லிக் கொண்டு வீட்டில் இருந்தபடியே ஓட்டு போடாமல் இருக்கும் சில சோம்பேறிகளும் திருந்த வேண்டும். கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில், வெறும் 58% வாக்குகள் தான் பதிவாகி இருந்தது என புள்ளிவிவரம் கூறுகிறது (தவறாக இருப்பின் திருத்தலாம்). பாரதத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்க, ஆள் காட்டி விரலை கூட தூக்க முடியாத ஜென்மங்கள் அரசியலை பற்றியோ, நாட்டை பற்றியோ குறை கூற தகுதியிள்ளாதவர்கள்.

யாருக்கும் ஓட்டு போட விரும்பாதவர்கள், ஓட்டு எந்திரத்தில் கடைசி பொத்தானை அழுத்தி யாருக்கும் என் வாக்கு இல்லை (NOTA - None Of The Above) என்று பதியலாம்.    

ஒவ்வொரு ஓட்டும், ஒவ்வொரு குடிமகனின் கடமை, தன்மானம், பொறுப்பு, எல்லாமே. இதை அனைவரும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். நம்முடைய இந்த நிலையெல்லாம் மாறி, எப்போது தகுதியான வேட்பாளரை ஒவ்வொரு தொகுதியிலும் தேர்ந்தேடுகின்றோமோ, அன்று தான் ஓரு சிறந்த தலைமை மத்தியிலும், மாநிலத்திலும் அமையும்; புதிய பாரதமும் உருவாகும்.

வாருங்கள் ! தகுதியான வாக்காளர்களை தேர்ந்தெடுப்போம்; நம் கடமையை செவ்வனே செய்வோம் ! வாழ்க பாரதம் !


நன்றி !!!

-பி .விமல் ராஜ்


புதன், 16 ஏப்ரல், 2014

ஜாக்கிரதை ! திருடர்கள் v2.014

வணக்கம், 

அறிவியல் வளர்ச்சி பெருகி வரும் இந்நவீன உலகில் இ-மெயில், இன்டர்நெட் மூலம் ஏமாற்றுவது /திருடுவது தான் இப்போதைய லேடஸ்ட் பேஷன். முன்பெல்லாம் வீடு/கடைகளில் புகுந்து கொள்ளை அடிப்பது, பாங்க் கொள்ளை, வழிப்பறி என்று நடந்து கொண்டிருந்தது. இப்போதும் இந்த குற்றங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியின் காரணமாக மென்பொருள், இணையம் மூலம் கொள்ளையடிப்பது பெருகி வருகிறது.

தொழில்நுட்பம் மேலோங்கி நிற்கும் மேல் நாடுகளில் மட்டும் தான் இவை நடக்கிறது என்று எண்ணி கொண்டிருக்கின்றனர். அது தவறு. நம் நாட்டிலும் இது போன்ற குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.  ஆன்லைன் திருட்டு, இணையம் மூலம் வங்கி கணக்கு கொள்ளை போன்ற 'டெக்னிகல் திருட்டுகளை' பற்றி விரிவாக இப்பதிவில் பார்க்கலாம்.

இந்நூற்றாண்டின் ஆரம்பம் முதல், உலக மக்களின் கணினி மற்றும் இணைய பயன்பாடு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது. தொழில்நுட்பம் வளர்வதால், உலகம் சுருங்கி கொண்டே வருகிறது. இதன் பின்னணியில் பல குற்றங்களும், தவறுகளும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. கணினி, இணையம், மென்பொருட்கள், வன்பொருட்கள், கைபேசி,வலைத்தளம் மூலம் நடப்பவையே இணைய குற்றங்கள் (Cyber Crime) என்று சொல்லபடுகிறது. இக்குற்றங்களில் பலவகை உள்ளது.

1.) ஹாக்கிங்  (Hacking)
2.) பதிப்புரிமை மீறுதல்  (Copyrights Infringement)
3.) சைபர் ஸ்டாகிங் (Cyber Stalking)
4.) ஐ.டி. திருட்டு (ID Theft)
5.) தீங்கிழைக்கும் மென்பொருள் பரப்புதல் (Malicious Software)

ஹாக்கிங் (Hacking): ஒரு தனிப்பட்ட நபர்/ தனியார் அமைப்பு/ அரசு அமைப்பு, அவரது தனிப்பட்ட அல்லது முக்கிய தகவல்களை அவர் அனுமதியின்றி அணுகி, இணையம் வழியாக திருட முயல்வது ஹாக்கிங் எனப்படும். இதில் குற்றவாளி அவன் இருந்த இடத்திலிருந்தே, வேறு ஒருவரின் கணினிக்குள் அனுமதில்லாமல் நுழைந்து, தகவல்களை திருடுவது வழக்கம். ஒரு இணைய தளத்தின் சர்வரை (Server) தாக்கி, ஹேக் (hack) செய்து அவற்றில் உள்ள தகவல்களை அழித்து / திருடுவது வெப்சைட் ஹாக்கிங் எனப்படும்.சமீபத்தில், ஜெயா டி.வியின் இணையதளம் ஹாக் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

அரசு/ தனியார் அமைப்பே தங்கள் தகவல்களின் பாதுகாப்பிற்காக செயல்படுத்தி கொள்வது எத்திகல் ஹாக்கிங் (Ethical Hacking). இது கிட்டத்தட்ட  நம் பாதுகாப்பிற்காக நாமே போட்டுக்கொள்ளும் ஒரு பாதுகாப்பு வளையம் போல தான்.

பதிப்புரிமை மீறுதல்  (Copyrights Infringement): ஒரு தனி நபர்/நிறுவனத்திற்கு சொந்தமானவற்றை அவர் அனுமதியின்றி உபயோகிப்பது, விற்பது, போன்றவையே பதிப்புரிமை மீறுதல் ஆகும். காப்புரிமையும் மீறுவதும் இதே போலதான். தகவல்கள், கோப்புகள், புகைப்படம், காணொளி, மென்பொருட்கள், புதிய கண்டுபிடிப்புகள் என உரிமையாளரிடம் தக்க அனுமதியின்றி பயன்படுத்துவது /விற்பது/ மாற்றுவது சட்டப்படி தண்டனைக்குரியதாகும். பொதுவாக நாம் கேள்விப்படும் திருட்டு பட டி.வி.டி, திருட்டு (activation key இல்லாத) மென்பொருட்கள், போன்றவை இவ்வகை குற்றத்தையே சாரும்.

சைபர் ஸ்டாகிங் (Cyber Stalking): இணையம் மூலம் மின்னஞ்சல்கள், படங்கள்/ காணொளிகள், தவறான தகவல்களை உருவாக்கி மற்றவர்களை துன்புறுத்துவது சைபர் ஸ்டாகிங் என்று சொல்வார்கள். வலைதளங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் ஆபாச படம் வெளியிடுவது, ஆபாசமாய் விமர்சிப்பது, தவறான/பொய்யான  செய்திகளை பரப்புவது, சமூக தளங்களில் போலி ஐ.டி வைத்து மோசடி செய்வது போன்றவை இதன் கீழ் வரும். பெரும்பாலும் பதின்பருவ பெண்களும், ஆண்களும் தான் இதில் பலியாகிறார்கள். இது போன்ற குற்றங்களை செய்யும் வக்கிர குணம் படைத்தவர்களுக்கு அரசு கடும் தண்டனைகளை வழங்கி வருகிறது.

ஒருவருடைய அனுமதி இல்லாமல் அவரை புகைப்படமோ/காணொளியோ  எடுத்து, அவருக்கு விருப்பமில்லாமல் எஸ்.எம்.எஸ் அல்லது கால் செய்து தொந்தரவு செய்வதும் இவ்வகை சைபர் குற்றங்களின் கீழ் பதிவாகும்.

ஐ.டி. திருட்டு (ID Theft):  இணையம் மூலமாக பணம்/பங்குகளை மோசடி செய்வது அல்லது திருடுவது ஐ.டி திருட்டு ஆகும். தனி நபர் /  நிறுவனத்தின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அவர் அனுமதி இன்றி இன்னொரு கணக்கிற்கு மாற்றுவது / திருடுவது; போலியான கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் தயார் செய்து கொள்ளையடிப்பது; போலியான இ-மெயில் அனுப்பி உங்களுக்கு $500,000,000,000 பரிசாக விழுந்துள்ளது என்று கூறி பணம் பெற முயற்சிப்பது போன்றவை ஐ.டி. திருட்டு என்று கூறுவார்கள். இது போன்று இ-மெயில்/எஸ்.எம்.எஸ் மூலம் திருடுவது  பிஷிங் (phishing)  என்றும்  சொல்வார்கள்.

பெரும்பாலும் வங்கி கணக்குகளை ஹாக் செய்து , அவருடைய வங்கி , கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு நம்பர்கள் போன்றவற்றை  பாஸ்வோர்ட், பின் நம்பருடன் திருடி தவறாக பயன்படுத்துவது வழக்கமாகி வருகிறது. ஏ.டி எம் மற்றும் கிரெடிட் கார்டுகளை வணிக இடங்களில் (swipe) தேய்க்கும் போது கவனமாக செயல்பட வேண்டும். ஸ்கிம்மர் (Skimmer ) என்று சொல்லப்படும் ஓர் இயந்திரத்தின் உதவியுடன் நம் கார்டுகளின் தகவல்களை பிரதி எடுத்து கொண்டு, பின்னர் உபயோகிக்க முடியும். நாம் செய்யாத செலவுக்கு பின்னால் பணம் கட்ட வேண்டி வரும்.  இதுவும் ஓர் வகை நூதன சைபர் வகை திருட்டு தான்.

வைரஸ் பரப்புதல் (Malicious Software): இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். ஒரு கணினிக்கோ / கணினி குழுமதிற்கோ தீங்கு செய்யும் வைரஸ்களை/ மென்பொருளை அனுப்பி அவர்களின் மொத்த தகவல்களையும் அழிப்பதே இதன் வேலை. வைரஸ்களை ட்ரோஜன், வோர்ம் என்று பலவாறு பிரித்து சொல்வார்கள்.   

இது போன்ற குற்றங்களை தடுக்க நாம் சற்று விழிப்புடன் செயல்பட வேண்டும். இதோ எனக்கு தெரிந்த சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பகிர்ந்துள்ளேன்.

1.) சமூக வலைதளங்களிலும், சாட் (Chat room ) ரூம்களிலும் முன்பின் தெரியாதவரிடம் நட்பு பரிமாறி கொள்வதோ அல்லது சொந்த விஷயங்களை பரிமாறி கொள்வதோ கூடாது.

2.) வங்கி கணக்கின் தகவல்களை (பாஸ்வோர்ட், பின் நம்பர் ) கண்டிப்பாக வெளி நபருடன் பகிர கூடாது.

3.) கிரெடிட்/ டெபிட் கார்டுகளின் பின் நம்பர்களை அந்த அட்டையிலேயே எழுத கூடாது.

4.) இ-மெயிலில் வங்கி கணக்கின் முக்கிய தகவகல்ளை (பாஸ்வோர்ட், பின் நம்பர், செக்குரிட்டி கேள்வி ) தர கூடாது.

5.) உங்களுக்கு 50 ஆயிரம் கோடி பரிசு என்று மெயில் வந்தால் உடனே பல்லிலித்து கொண்டு, வங்கி கணக்குகளை தகவல்களை தர கூடாது.

6.) ஆன்லைன் பாங்கிங் போது , பண பரிவர்த்தனை முடிந்தவுடன் உடனே லாக் அவுட் செய்து விட வேண்டும்.

7.) பாங்கிங் பாஸ்வோர்ட்/ பின் நம்பர் முதலியவற்றை எல்லோரும் ஊகிக்கும் படியாக வைத்தல் கூடாது (0000,1111,1234, password123, asdf123...) .

இவ்வகை குற்றங்களை எளிதில் அழிக்க முடியாது. பெருகி வரும் தொழில்நுட்பம், விஞ்ஞானம், மக்களின் தேவை போன்றவற்றின் காரணமாக சைபர் குற்றங்கள் நடந்து வருகின்றன. மேற்கண்டவை எல்லாம் வெறும் முன்னெச்சரிக்கை மட்டுமே. எப்போதும் கவனமாக இருத்தல் நமக்கு பலமே.

மேலும் தகவலுக்கு http://cybercrimeindia.org


சைபர் கிரைம் தொலைப்பேசி எண்கள் :

Address: (Chennai )
Asst. Commissioner of Police,
Cyber Crime Cell,
Vepery,
Chennai-600 007.
Phone: 04423452348 / 04423452350
E-mail id: cybercrimechn@yahoo.com

Address: (For Rest of Tamil Nadu)
A-Wing, III rd Floor,
Rajaji Bhawan, Besant Nagar,
Chennai-600090
Phone: 044-24461959/ 24468889 /24463888
E-mail id: hobeochn@cbi.gov.in



நன்றி !!!

-பி .விமல் ராஜ்


சனி, 29 மார்ச், 2014

மிருகமாய் மாறுகிறேன்...

வணக்கம்,

"சிரிக்க தெரிந்த மிருகத்திற்கு மனிதன் என்று பெயர் !
 சிரிக்க மறந்த மனிதனுக்கு மிருகம் என்று பெயர்! "

இதை போல மற்றவர்களை பார்த்து சிரிக்க மட்டுமே தெரிந்த சில மிருகங்களை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். ஒரு பள்ளியிலோ, கல்லூரியிலோ அல்லது அலுவலகத்திலோ நண்பர்கள் கூட்டமாக நின்று பேசி கொண்டிருந்தால், அதில் கண்டிப்பாக ஒருவனை எல்லோரும் கட்டம்கட்டி, கிண்டல் செய்து, கலாய்த்து கொண்டிருப்பார்கள்.

பள்ளி, கல்லூரிகளில் நண்பர்களிடையே இது போன்ற கேலிப் பேச்சுகளும், கிண்டல்களும் சர்வசாதாரணம் தான். சில சமயம் இதன் மூலம் நல்ல நட்பும் வளர்வது உண்மைதான். ஆனால் அந்த கேலி பேச்சுக்கள் அடுத்தவர் மனதை புண்படுத்தும் என்பதை சற்று எண்ணி பார்க்க வேண்டும். போகிற போக்கில் கலாய்த்து விட்டு போவோர்களை பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. ஏதோ அவர்களுக்கு தான் பேச தெரியும் என்பது போல, ஒவ்வொரு முறை பேசும் போதும், ஒருவரை மட்டும் கட்டம் கட்டுவது என்னை பொறுத்தவரை ஒழுக்கமான செயல் இல்லை. சிலர் பேசும் போது,பேச்சில் நக்கலும், நையாண்டியும், எகத்தாளமும் துள்ளி  விளையாடும்.

நண்பன் தானே என்று விட்டுவிட தோன்றினாலும், சில சமயங்களில் அவர்கள் மீது வெறுப்பும், காழ்ப்புணர்ச்சியும் தான் மேலோங்கி நிற்கும். கேலிக்கு ஆளாகுபவர் படும் வேதனையை வெளியில் சொல்ல மாட்டார்கள்; சொல்லவும் முடியாது. கும்பலோடு கும்பலாக  நின்று சிரித்து விட்டு போக வேண்டியது தான். கூட்டத்தில் ஒருவரை கேலி செய்யும் போது, கேலி பேச்சுக்கு உட்படுபவர், எதுவும் செய்ய முடியாது. கோபப்பட்டு ஏதாவது பேசினாலோ அல்லது எதையாவது செய்தாலோ, அதை வைத்தே மீண்டும் கிண்டல் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் யாரும் விட மாட்டார்கள். இது பல இடங்களில் நடந்து ஓசைபடாமல் கொண்டு தான் இருக்கிறது.


இந்த பதிவு என்னுடைய கோபத்தையும், எரிச்சலையும் பதியும் பதிவு என்றே வைத்து கொள்ளலாம். என் கோபத்திலே கொஞ்சம் சுயநலமும் கலந்திருக்கிறது... ஆம். இதில் நானே நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளேன்; இன்னும் பட்டு கொண்டிருக்கிறேன். ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி வரையிலும், பின்னர் அலுவலகம் வந்தும் என்னை சுற்றி வளைய வரும் இந்த கேலி பேச்சுக்கள் குறைந்த பாடில்லை. இவர்கள் என் போன்றோரை இப்படி தான் கண்டுபிடிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. "இவன் ரொம்ப நல்லவன்; கலாய்த்தால் ஒன்றும் செய்ய மாட்டான்..." என்று முகத்தில் எழுதி ஒட்டியிருக்கும் போல.

பள்ளி, படிக்கும் போது ரொம்ப கலாய்த்தால், என்ன சொல்வது எனத் தெரியாமல் பேந்த பேந்த முழித்துவிட்டு ஓடிவிடுவேன். பிறகு கல்லூரியிலும், இந்த கருமத்தை எல்லாம் கேட்டுக் கேட்டு மனம் பழகி விட்டது. நண்பர்களிடையே கூட்டம் ஆரம்பிக்கும் போது ஜாலியாக தான் இருக்கும். பிறகு தான் அவர்கள் ஜோலியை காட்டி நம்மை காலி செய்துவிடுவார்கள். இப்போதெல்லாம் லேசான கோபத்தை மட்டும் காட்டி விட்டு அவ்விடத்திலிருந்து நகர்ந்து விடுவேன்.

பெரும்பாலும்  மற்றவரின் மனதை துன்புறுத்தும், கலாய்க்கும் செயல்கள், உளவியல் பிரச்சனையின் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் சொல்கின்றனர். இது போன்ற செயல்களால் பாதிக்கப்படுபவர், மன உளைச்சலால் பெரிதும் பாதிக்கபடுகிறார்கள். சில சமயங்களில் உயிர் சேதமும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒருவரின் மனதை புண்படுத்தி, அதில் சிரித்து இன்பம் கொள்ளும் இது போன்ற மனித மிருகங்களுக்கு என்றுதான் மற்றவரின் மனம் புரியுமோ எனத் தெரியவில்லை.

இதில் எனக்குள்ள வேதனை என்னவென்றால், இதுவரை கேலி பேச்சுக்களையும், மற்றவர்கள் என்னை பற்றி கலாய்ப்பதையும் மட்டுமே கேட்டு வந்த நான், இப்போது சில நாட்களாக நானும் ஒரு மனித மிருகமாக மாறி வருகிறேன் என்பதை மறுக்காமல் இருக்க முடியவில்லை. என்னை விட அப்பாவி நல்லவன் ஒருவன் என்னருகில் அலுவலகத்தில் இருக்கிறான். மற்றவர்கள்  அவனை கிண்டல் செய்வதை பார்த்ததிலிருந்து, நானும் கொஞ்சம் கொஞ்சமாக மிருகமாக மாறி வருகிறேன். கிண்டலின் வேதனையும், கேலி பேச்சின் வருத்ததையும் அறிந்த நான், ஏன் இப்படி செய்கிறேன் என எனக்கு புரியவில்லை. முன்னாட்களில் எனக்கு நேர்ந்ததை இப்போது நான் பதிலுக்கு பதில் செய்கிறேனா ? தெரியவில்லை... ஒரு வேளை இதுவும் நிபுணர்கள் சொன்ன உளவியல் காரணமாக இருக்குமோ என்ற எண்ணம் தான் எனக்கு தோன்றுகிறது.

பெரும்பாலும் அடுத்தவன் செய்த தவறை சொல்லும் போதும், நம் தவறுகளை மறந்து விடுகிறோம். இதை படிக்கும் போது, "இவன், எவனிடமோ வசமா வாங்கி கட்டியிருக்கான். அதான் இப்படி எழுதுகிறான்..." என்று நீங்கள் மனதிற்குள் சொல்வது எனக்கு கேட்கிறது. உண்மை தான். நான் மட்டுமல்ல; என்னை போன்றோர் பலரும் இது போன்ற இன்னல்களில் சிக்கி தவிப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காகவும் சேர்த்து தான் எழுதுகிறேன்.

மற்றவரை சிரிக்க வைக்க நீ கோமாளி ஆகலாம்.. ஆனால் எல்லோரும் உன்னுடன் சேர்ந்து சிரிக்க , மற்றொருவனை கோமாளியாக்காதே ! என்பதே என் தாழ்மையான கருத்து.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

சனி, 22 மார்ச், 2014

சிறுகதை - நட்சத்திரம்

வணக்கம்,

இது எனது இரண்டாம் சிறுகதை. ஒரு நடுத்திர குடும்பத்தில் நடக்கும் சில அசாதாரண நிகழ்வுகளை பற்றியே இக்கதை எழுதப்பட்டுள்ளது. விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...

சிறுகதை - நட்சத்திரம்
*******************************

"ரொம்ப சந்தோஷம், ஆண்ட்டி... உங்க பொண்ணு வள்ளி-க்கு முதல் பிரசவத்திலேயே பையன் பொறந்துட்டான். புள்ள நல்லா கொழு கொழுன்னு இருக்கான். முதல்ல போய் சுத்தி போடுங்க..."

"நிஜம் தான் சாந்தி.. பேரன் பிறந்தது சந்தோசம் தான் .. " என்றாள் பார்வதி.

"ஆங்..உங்க பேரனுக்கு பேரு வைச்சாச்சா ? என்ன நட்சத்திரம்? "

"ரோகிணி நட்சத்திரம்... பேரு விஜய் ஆனந்த் -னு வைச்சிருக்கோம்.."

"... ரோகிணியா ??? பகவான் கண்ணன் நட்சத்திரம்.. இவனுக்கு தான் இரண்டு மாமன்களாச்சே !..  "

"ஆம்மா...அந்த கூத்த ஏன் கேக்குற?  பிள்ளை பொறந்தவுடன், துணி சுத்தி, அப்புறம் எண்ணெயிலே என் இரண்டு புள்ளைங்க  ராமனையும், கிருஷ்ணனையும் முழிக்க வச்சு.. "

"சரி தான்.... "

"வேற வழி இல்ல.."

"உங்க கடைசி பொண்ணு லட்சுமி எப்படி படிக்கிறா?? "

"ம்ம்..நல்ல படிக்கிறா.. இந்த வருஷம் பிளஸ் 2.."

அப்ப சரி, நான் போய்ட்டு வரேன்... மறக்காம புள்ளைக்கு சுத்தி போடுங்க.. "

"சரி சாந்தி ... "

வள்ளிக்கு குழந்தை பிறந்து இரண்டு வாரங்கள் ஆகிறது. அந்த ரயில்வே காலனியில், சாந்தி உட்பட பலரும் வந்து வள்ளியையும் அவள் குழந்தையையும் பார்த்து சென்று விட்டனர்.

மறுநாள் காலையில் லட்சுமி வாசல் தெளிக்க வரும் போது, வீட்டு வாசலில் கற்கள் சிதறியிருப்பதை கண்டாள். "இதை யாரு இங்க வந்து போட்டது?" என யோசித்து கொண்டே கோலம் போட்டு விட்டு, வீட்டுக்குள் சென்று அம்மாவிடம் கேட்டாள்.

"ஆமாண்டி, நானும் நேத்து காலையில கோலம் போடும் போது பார்த்தேன். சுத்தம் செஞ்சிட்டு போனேன். ஆனா, சாயங்காலம் மறுபடியும் ஒரே கல்லா கிடக்கு....அதுவும் நம்ம வீட்டுலையும், பக்கத்தில கோமதி வீட்டிலும் மட்டுந்தான்..."  என்றாள் பார்வதி.

பார்வதியும், லட்சுமியும் வீட்டில் உள்ளவர்களிடம் சொன்னார்கள். அவர்களுக்கும் ஒன்றும் தெரியவில்லை. கற்கள் யார் மீதும் விழுவதில்லை.  'தொம்' -ன்று கீழே விழுந்து சிதறுகிறது. இது இப்படியே கொஞ்ச நாட்களாய் நடந்து கொண்டிருந்தது.

இரண்டு நாள் கழித்து, கொல்லையில் குழந்தையை குளிப்பாட்டி கொண்டு இருந்தாள் வள்ளி. திடீரென எங்கிருந்தோ வேகமாக ஒரு கல் பறந்து வந்து வள்ளியின் பக்கத்தில் விழுந்து சிதறியது. 'வீல்' என அலறியபடி குழந்தையை தூக்கி கொண்டு ஓடினாள் வள்ளி.

சத்தம் கேட்டு ஓடி வந்த பார்வதி, "என்னம்மா ? என்னாச்சு ?? எங்கிருந்தும்மா கல்லு வந்துச்சு ?? "என்றாள் பதறியபடி.

"தெரியலம்மா..திடீருன்னு பக்கத்துல வந்து விழுந்துடுச்சி .."

"நல்லவேளை! புள்ள மேல விழல.. நெல்லுகடை மாரியம்மா! காப்பாத்திட்ட..  பூவாடைக்காரி ஆத்தா ! ஏன் இப்படி நடக்குதுன்னு தெரியலையே... எம் புள்ளைங்களை நீதான்ப்பா காப்பாத்தணும் பெருமாளே!!

"இனிமே குழந்தைய கொல்லையிலே வச்சி குளிப்பாட்டாத வள்ளி .."

"ம்ம்..சரிம்மா..."

இருவருக்கும் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. அடுத்தஅடுத்த நாட்களிலும் இப்படியே நடந்தது. எங்கிருந்தோ கற்கள் பறந்து வந்து அவர்கள் வீட்டிலும், பக்கத்து வீட்டிலும் விழுவதும், அவர்கள் பயத்துடன் இருப்பதுமாகவே இருந்தது.

வள்ளியின் அண்ணன்-தம்பிகள் கிருஷ்ணனும், ராமனும் அவர்களுடைய இளவட்ட நண்பன் முருகனுடன் சேர்ந்து  அவர்கள் வீட்டை சுற்றியுள்ள மாமரங்களிலும், அக்கம்பக்கத்து  கூரையிலும் ஏறி யார் கல்லெறிவது என்று உளவு வேலை பார்க்க ஆரம்பித்தனர். அவர்கள் பார்த்ததை அவர்களாலையே நம்ப முடியவில்லை. தெரு முனையிலிருக்கும் குப்பைத்தொட்டி பக்கத்தில் குவிந்து கிடந்த ரப்பீஸ் கற்கள் சடாரென்று தானே எழும்பி, கன நேரத்தில் அவர்கள் வீட்டு வாசலில் விழுந்து சிதறியது. ஒன்றல்ல..இரண்டல்ல.. குறிப்பிட்ட நிமிடத்திற்கு ஒருமுறை இப்படி தாமாகவே பறந்து வந்து விழுவதை கண்டார்கள். இதை பற்றி சொன்னவுடன் வீட்டில் எல்லோர்க்கும் பயம் அதிகமானது.

இரவு பொழுதெல்லாம் கூரையின் மீது கற்கள் விழும் சத்தம் கேட்டு கொண்டே இருந்தது. அது மட்டுமல்லாமல் தெருநாய்கள் அவர்கள் வீட்டையே நோக்கி குரைப்பது போல எண்ணினார்கள்.

குழந்தை விஜய் இராகு காலத்தில் பிறந்துள்ளதால், அது வேறு எல்லோருக்கும் சிறு நடுக்கத்தை ஏற்படுத்தியது . இது எதாவது பேய் பிசாசு வேலையா, அல்லது பிள்ளை பிறந்த நேரம் சரியில்லையா, என்னவென்று யாருக்கும் சொல்லத் தெரியவில்லை. வீட்டின் பின்புறத்தில் ஆந்தை அலறும் சத்தம் கொஞ்சம் அதிகமாக கேட்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.

அவர்கள் வீட்டருகே உள்ள பள்ளிகூட திடலில் நடக்கும் சுவிசேஷ கூட்டத்தில் பார்வதி கலந்து கொண்டு, பாதிரியார் ஆசிர்வதித்த நீரை கொண்டு வந்து வீட்டில் தெளித்தாள். ரெங்கநாதருக்கு துளசிமாலை சாத்துவதாக வேண்டிக்கொண்டாள். 
 
அந்த பொன்மலைபட்டி ரயில்வே குவாட்டர்ஸ் முழுவதும், கல் விழும் சேதி காட்டுத் தீயன பரவியது. அந்த ஏரியா போஸ்ட் மேன் வந்து, "என்னக்கா, உங்க வீட்ல கல்லு விழுதாமே, அப்படியா????" என்று கேட்கும் அளவுக்கு பிரபலம் ஆகிவிட்டது.

நாளுக்கு நாள் எல்லோருக்கும் பயம் அதிகமாகி கொண்டிருந்தது. பார்வதிக்கு இருப்பு கொள்ளவில்லை. இது இப்படியே போனால் சரிவராது என முடிவு செய்து, வள்ளிக்கும், குழந்தைக்கும் பக்கத்தில் இருக்கும் நதிர்-ஷா தர்காவில் மந்திரித்து பாத்தியா ஓதிவிட்டு, அப்படியே வீட்டில் எல்லோருக்கும் மந்திரித்த தாயத்து வாங்கி வந்து கட்டிக்க சொன்னாள். எந்த சாமியானாலும் பரவாயில்லை, பிரச்னை சரியானால் தேவலை என்ற எண்ணமே அவள் மனதில் மேலோங்கி இருந்தது.

கல் விழுந்த கோமதி வீட்டிலும் தர்காவில் மந்திரித்த தாயத்து வாங்கி கட்டி கொண்டதாக கேள்விப்பட்டனர். 

இரண்டு மூன்று வாரங்கள் சென்றது. நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக சரியானது. கற்கள் விழுவது படிப்படியாக குறைவது போல தெரிந்தது. பார்வதி வீட்டில் பயம் லேசாக நீங்க தொடங்கியது.

ஓரிரு நாட்கள் கழித்து, கடைத்தெருவுக்கு போய் வரும் போது, பக்கத்துக்கு வீடு காலியாக இருப்பதை கண்டாள். கோமதி வீட்டில் இரவோடு இரவாக காலி செய்து விட்டு போய் விட்டனர்.

வரும் வழியில் சாந்தியை பார்த்தாள் பார்வதி . சாந்திக்கு கோமதியின் வீட்டில் நல்ல பழக்கம். சாந்தியிடம் விசாரித்ததில், "கோமதியின் கணவருக்கு, அவர் தம்பியே சூன்யம் வச்சிட்டார் போல....அதான் கல் விழுந்திருக்கிறது. கோமதியின் கணவர் கிருத்திகை நட்சத்திரமாம். அந்த நட்சத்திரத்திற்கு பக்கத்து  நட்சத்திரத்தில் உள்ளவர்களையும் அது பாதிக்குமாம்..  உங்க பேரன் தான் ரோகிணி நட்சத்திரமாச்சே....  அதான்  உங்க வீட்லயும் கல் விழுந்திருக்கு... அவங்க கோவில்ல, தர்காவில போய் ஏதோ பூஜை, மந்திரம்மெல்லாம் பண்ணிட்டு இப்போ ஊரை விட்டே போய்ட்டாங்க..."  என்று கூறி முடித்தாள்.

மனதிலே பாரம் சற்று இறங்கியவளாய் நெல்லுகடையாளையும், மற்ற தெய்வங்களையும் வேண்டிவிட்டு,  நிம்மதியுடன் வீட்டுக்கு சென்றாள் பார்வதி.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்


சனி, 15 மார்ச், 2014

கொஞ்சம் சிரிங்க பாஸ்....

வணக்கம்,

இப்பதிவு முழுக்க முழுக்க உங்களை சிரிக்க வைக்க மட்டுமே. இணையத்திலும், முகநூலிலும் அலசி உங்களிடம் பகிர்ந்துள்ளேன். இந்த துணுக்குகளை ஏற்கனவே எங்கோ படித்த மாதிரி தெரிந்தாலும், மீண்டும் ஒரு முறை படித்து, கொஞ்ச நேரம் சிரித்து மனதை லேசாக்குங்கள்....


சிரிப்பு 1:

அமெரிக்காவில் திருடர்களை கண்டுபிடிக்க ஒரு மெஷின் கண்டு பிடிச்சிருக்காங்க...

அந்த மெஷின் இங்கிலாந்து ல 30 நிமிஷத்துல 70 திருடர்களை  கண்டுபிடிச்சிருக்கு!

ஸ்பெயின் நாட்டுல 30 நிமிஷத்துல 150 திருடர்களை கண்டுபிடிச்சிருக்கு !

இந்தியாவில 15 நிமிஷத்துல
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
அந்த மெஷினையே காணோம் !

:-) :-)
----------------------------------------------------------------------------------------------------------

சிரிப்பு 2:

மனநல மருத்துவமனையிலிருந்து 3 நோயாளிகள் பேசிக் கொண்டனர்:

பாலு : டேய் ! இன்னிக்கு ராத்திரி எல்லாரும் தூங்குனதும் நாம 3 பேரும் தப்பிச்சு வெளிய ஓடிடலாம்.

வேலு : ஆமா ஒரு ஏணி எடுத்து ரெடியா வை; வெளியே சுவர் உயரமா இருந்தா ஏறி குதிக்க உதவியா இருக்கும்.

பாலு : அப்படியே ஒரு இரும்பு கம்பியும் எடுத்துவை; ஏற முடியலைனா சுவர ஓட்டபோட்டு தப்பிச்சுரலாம்..

*
*
*

சோமு: போச்சு! போச்சு !! நாம தப்பிக்கவே முடியாது

பாலு & வேலு:
ஏன்!!!!!!

சோமு: நான் இப்ப தான் பாத்துட்டு வரேன்...வெளிய சுவரே இல்ல.. நாம ஏறி குதிக்கவும் முடியாது.... சுவர ஓட்ட போட்டும் தப்பிக்க முடியாது....

பாலு: சரி விடுடா .....முதல்ல அவங்க சுவர கட்டட்டும்... நாம அப்புறமா தப்பிச்சு போலாம்.!!!??...

----------------------------------------------------------------------------------------------------------

சிரிப்பு 3:

கிளைடர் ப்ளைட் கிளப் பக்கத்தில் வியாபாரி ஒருவன் கடை போட்டு, பாராசூட்டுகளை விற்றுக் கொண்டிருந்தான்.

"வாங்க சார்..! வாங்க !! பாராசூட்டுகளை வாங்கிட்டுப் போங்க!  விமானம்
திடீர்னு விபத்துல சிக்கும்போது கீழே குதிச்சு உயிர் பிழைக்கலாம் சார்….!"

ஒரு பயணி நின்றார்.

"பாராசூட் என்ன விலை?"

"இரண்டாயிரம் ரூபாய் சார்.."

"சரி…வாங்கிக்கிறேன். விமானம் விபத்துக்குள்ளாகி நான் பாராசூட்டிலிருந்து
குதிக்கும்போது அது ஒரு வேளை விரியலைன்னா ….?"

”பணம் வாபஸ் ஸார்...”

"............?!?!?!........"

----------------------------------------------------------------------------------------------------------

சிரிப்பு 4:

குட்டி பையன் தீபக் : என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா?

ஆசிரியை : ஆமாம்...

குட்டி பையன் தீபக் : அப்படின்னா, என் அம்மா அப்பாவை வரச்சொல்லி உங்கள் வீட்டில் பேசச் சொல்லட்டுமா?

ஆசிரியை : டேய் முட்டாள்... அஞ்சாம் கிளாஸ் படிக்கும் போதே இப்படியா?? உன் மனசுல என்ன நினைச்சிகிட்டிருக்க?

குட்டி பையன் தீபக் : ஹேய்யா.... நான் டியூசனுக்கு வர்றதைப் பற்றி சொன்னேன்.

கிறுக்கு பயபுள்ள எப்ப பார்த்தாலும் நம்மளயே நினைச்சிகிட்டு இருக்கா!

----------------------------------------------------------------------------------------------------------

சிரிப்பு 5:

இரவு தூங்கும் முன் ஒரு தந்தை - மகள் உரையாடல் ...

"ஏன் அப்பா கொசு ராத்திரில மட்டும் நிறைய கடிக்கவருது.... அது எப்ப அப்பா தூங்கும்?"

"அது தூக்கம் வரும்போது தூங்கும்..."

"கொசுக்கு வீடு எங்கேப்பா?"

"அதுக்கு வீடே இல்லை..."

"ஏம்பா வீடே இல்லை?"

"அது ரொம்பச் சின்னதா இருக்கே... அதான் வீடு இல்ல..."

நான் ரொம்ப சின்னப் பிள்ளைதானே... எனக்கு வீடு இருக்கே."

"இது அப்பா உனக்கு கட்டித் தந்தது."

"அப்போ கொசுவுக்கு அப்பா, அம்மா இல்லையா அப்பா?"

"அந்த அப்பா, அம்மா கொசுவும் ரொம்பச் சின்னதா இருக்கும்ல. அதான் அதுக்கு வீடு இல்ல.."

"கொசுவுக்கு கொசுன்னு யாருப்பா பேர் வெச்சது?"

"கடவுள்."

"கடவுளைக் கொசு கடிக்குமா அப்பா?"

"கடிக்காது."

"ஏம்பா கடிக்காது?"

"கடிச்சா கடவுள் தண்டிச்சிடுவார்."

"கடவுள் நல்லவராப்பா?"

"ரொம்ப நல்லவர்."

"அப்புறம் ஏம்பா கொசுவை அடிக்கிறாரு?"

"அது அப்படித்தான். நீ தூங்கு."

"கொசு ஏம்பா நம்மளைக் கடிக்குது?"

"அதுக்குப் பசிக்குது. வாயை மூடிட்டுத் தூங்குடா செல்லம்."

"ஒரே ஒரு கேள்விப்பா? "

"கேட்டுத் தொலை..."

"கொசுவுக்கு எத்தனை பல் இருக்கும்?"

"அதுக்குப் பல்லே இல்லை..."

"பிறகு எப்படிக் கடிக்கும்?"

"அய்யோ ஏண்டா உசுர வாங்குற? இப்ப நீ வாயை மூடாட்டி பேய்கிட்ட புடிச்சுக் கொடுத்திடுவேன்."

"பேயைக் கொசு கடிக்குமாப்பா?"

'இப்ப நீ வாயை மூடிட்டுத் தூங்கப்போறியா இல்லையா?"

"நாம தூங்கும்போது வாயும் தூங்குமாப்பா..?"

"..............?!?!?!?!?!?!............."


----------------------------------------------------------------------------------------------------------

சிரிப்பு 6:

இப்படிதான் விவாகரத்து நடக்குதோ ????

கோர்ட்டில் அந்த விவாகரத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. பிரதிவாதியான மனைவி தன் கணவர் தன் மேல் அபாண்டமாகப் பழி போட்டு இந்த விவாகரத்தைக் கேட்டிருப்பதாக

வாதாடியதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமாயிற்று.

அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார்.

“அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சனை?”

“அடுப்படியில பிரச்சனை எதுவும் இல்லைங்க”

“ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு?”

“எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?”

“அடாடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது”

“தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம்...”

“கருத்து வேறுபாடு ஏதாவது உண்டா?”

“அவரு கருப்புதாங்க. நானும் கறுப்புதான… அதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க”

“வீட்டுக்காரரோட என்ன சண்டை?”

“வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை, மாசம் ஒண்ணாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கப் போயிடறாரு”

இதற்கு மேல் அவரால் தாங்க முடியவில்லை.

“வேற எதுக்காக அவர் விவாகரத்து கேட்கிறார் ???” என்று அலறி விட்டு இருமினார்.

“ஓ..அதுவா… என்னோட பேசறப்ப எல்லாம் ரத்தக் கொதிப்பு வந்துடுதாம். நீங்க நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்க… உங்களுக்கென்ன ரத்தக் கொதிப்பா வந்திரிச்சு? இது அபாண்டம்தானே?”

----------------------------------------------------------------------------------------------------------

சிரிப்பு 7:

"ஹலோ, இந்த நம்பர்ல இருந்து ஒரு மிஸ்ட் கால் வந்திருந்தது. யாரு கூப்பிட்டது?"

"எப்போ?"

"ஒரு அஞ்சு நிமிஷம் முன்னாடி..."

"ஓ, அதுவா சார் என் வீட்டுகாரர் தான் கூப்பிட்டார், இப்போ உங்களைப் பார்க்க தான் வந்திட்டு இருக்கார்?"

"யாரு பேசுறதுன்னு தெரியலயே?"

"நான் அவரோட மனைவி.. என்னை உங்களுக்குத் தெரியாது. ஆனா என் ஹஸ்பன்ட்டுக்கு தான் சார் உங்களைத் தெரியும்."

"இல்லம்மா, ஃபோன் பண்ணவங்க பேர் என்ன?"

"ஃபோன் என் மாமனார் பேர்ல தான் இருக்கு. ஆனா ஃபோன் பண்ணினது என் ஹஸ்பன்ட்"
"சரி என்ன விஷயமா ஃபோன் பண்ணினார்"

"அதை சொல்லத்தான் உங்கள பார்க்க வந்துட்டு இருக்கார்.."

"சரி எங்கே வர்றாரு?"

"ஆமா எங்க வீட்லேர்ந்து தான் வர்றாரு"

"ரொம்ப சந்தோஷம் இதுக்கு மேல என்னால முடியாது ..ஃபோனை வெச்சிடறேன் ..அவர் வரட்டும் பார்த்துக்கறேன்..."

ரூம்லேர்ந்து அவர் "ஏண்டி, யார் கிட்ட இவ்ளோ நேரம் பேசிட்டு இருந்தே?"

"தெரியாம ஒரு ராங்க் கால் பண்ணிட்டேன்...அந்த நம்பர்லேர்ந்து தான்
ஒருத்தர் கூப்பிட்டாரு..  ச்சும்ம்மா பேசிட்டு இருந்தேன் மாமா ......"

----------------------------------------------------------------------------------------------------------

சிரிப்பு 8:

"என்ன பாலாஜி ? தலையில இவ்வளவு பெரிய கட்டு ?? என்னாச்சு ??"

"அது ஒண்ணும் இல்ல பாஸு....என் பொண்டாட்டி நேத்து வாழைபழ தோல் வழுக்கி கீழே விழுந்துட்டா... "

"உங்க பொண்டாட்டி விழுந்தா அவங்க தானே கட்டு போடணும்... நீங்க எதுக்கு கட்டு போட்டுருக்கீங்க ??? "

"கீழே விழும் போதும் கொஞ்சம் சத்தமா சிரிச்சுட்டேன்... அதான் இப்படி...  "

----------------------------------------------------------------------------------------------------------

சிரிப்பு 9:

ரொம்ப நாள் கழிச்சி உங்க வீட்டுக்கு வந்திருக்கேன்... வெறும் டீ மட்டும் தானா மச்சி ??

வேற என்ன வேணும் ???

கடிச்சிக்க ஏதாவது ??

நாய் இருக்கு..அவுத்து விடவா??

??????
 
----------------------------------------------------------------------------------------------------------

சிரிப்பு 10:

தீபக் ஒரு நேர்முக தேர்வுக்காக அலுவலகம் செல்கிறான். எப்படியாவது இந்த வேலை கிடைத்து விட வேண்டும் என்பது அவன் எண்ணம். அலுவலக தேர்வு அறையில்...

மேலாளர்: நான் கேக்குற கேள்விக்கெல்லாம் எதிர்மறையான பதிலை சொல்லணும்..

தீபக்: சரி சார்.. முயற்சி பண்றேன்..

மேலாளர்:  இரவு?

தீபக்:பகல்...

மேலாளர்: புதுமை?

தீபக்:
பழமை..

மேலாளர்:
வறுமை?

தீபக்:
செழுமை..

மேலாளர்:  
வெரி குட்... கரெக்டா சொல்றியே !

தீபக்:
வெரி பேட்...தப்பா சொல்றியே...
 
மேலாளர்:  
ஆங்... ம்ம்ம்...  ஆக்கல்?

தீபக்: 
அழித்தல்...

மேலாளர்:
அழகு?

தீபக்:
ஆபத்து..

மேலாளர்:
தப்பு..

தீபக்:
சரி....

மேலாளர்:
இல்ல தம்பி..நீங்க சொல்றது தப்பு..

தீபக்:
ஆமா அண்ணே ! நான் சொல்றது சரி..
 
மேலாளர்:
ப்ச்.... நீங்க கிளம்பலாம்..

தீபக்:
நீங்க இருக்கலாம்...

மேலாளர்:
போதும்..வெளியே போப்பா !!! 

தீபக்: 
வேணும்..உள்ளே வாப்பா !!!

மேலாளர்:
நிறுத்துடா ...

தீபக்: 
ஆரம்பிடா..

மேலாளர்:
ஐயோ கடவுளே !!! என்ன காப்பாத்து !!

தீபக்:
ஆஹா பிசாசே!! இவனை கொல்லு ...

மேலாளர்:
யு ஆர் ரிஜக்டட் ...

தீபக்:
ஐ ஆம்  செலக்டட் !

மேலாளர்:
?!?!?!..போதும் நீ செலக்டட் தான்.. ஆர்டர் வீடு தேடி வரும்..இப்போ நீ போப்பா..

தீபக்:
ரொம்ப தேங்க்ஸ் சார்.. :-)

----------------------------------------------------------------------------------------------------------

சிரிப்பு 11:

ஒரு சர்தாஜி ஜோக்...

நியூயார்க்கில் மாநகரில், ஒரு சர்தார்ஜியும் , அமெரிக்கரும் சாக்லெட் கடைக்குள் நுழைந்தனர்.

அனைவரும் பிஸியாக இருந்த நேரம் அமெரிக்கர் 3 சாக்லெட் பார்களை யாருக்கும் தெரியாமல் எடுத்து தனது பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டார்.
சிறிது நேரம் கழித்து இருவரும் கடைக்கு வெளியே வந்தனர்.

அமெரிக்கர் தான் யாருக்கும் தெரியாமல் எடுத்த 3 சாக்லெட் பார்களையும் தனது பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்து சர்தார்ஜியிடம் காட்டி,
"நாங்கெல்லாம் யாரு! அப்பவே நாங்க அப்படி..! யாருக்கும் தெரியாம 3 சாக்லெட் பார்களை எடுத்து கொண்டு வந்துட்டேன் பார்த்தியா?" என்று பெருமை அடித்ததோடு மட்டுமில்லாமல், "உன்னால இதைவிட பெரிசா ஏதாவது செய்ய முடியுமா?" என்று சவால் வேறு விட்டார் சர்தார்ஜியிடம்.

விடுவாரா நம்ம சர்தார்ஜி... "உள்ள வா... உனக்கு உண்மையான திருட்டுன்னா என்னன்னு காட்டுறேன்னு",  சொல்லி அமெரிக்கரை சாக்லெட் கடையின் உள்ளே அழைத்துச் சென்றார்.

விற்பனை கவுன்டரில் இருந்தவரிடம் சென்ற சர்தார்ஜி, அவனிடம் கேட்டார், ஒரு மேகிக் காட்டுறேன் பார்க்கிறியா?..

கடைக்காரரும் சரியென்று தலையாட்ட, கவுண்டரில் இருந்து 1 சாக்லெட் பார் எடுத்து, அதனை தின்று முடித்தார். அடுத்து இன்னொரு சாக்லெட் பார் எடுத்து அதனையும் தின்று தீர்த்தார். பிறகு 3 வதாக ஒரு சாக்லெட் பார் எடுத்து அதனையும் தின்று முடித்துவிட்டு கவுன்டரில் இருந்த கடைக்காரரை  ஏறிட்டுப் பார்த்தார்.

கவுன்டரில் இருந்தவர், " எல்லாம் சரி. இதில் மேஜிக் எங்கே இருக்கிறது?."
சர்தார்ஜி அமைதியாக பதில் அளித்தார், " என் ஃப்ரெண்டோட பாக்கெட்ல செக் பண்ணிப்பாரு... நான் சாப்பிட்ட 3 சாக்லெட் பாரும் இருக்கும்...'

#சப்பாத்தி சாப்பிட்டாலும் நம்ம ஆளு மூளைக்காரந்தாண்டா...

----------------------------------------------------------------------------------------------------------

 சிரிப்பு 12:

"இருட்டு நகரம்" என்று அழைக்கப்பட்ட நகரத்தில் அந்த லைப்ரரி இருக்கிறது.

அந்த லைப்ரரியில் இரண்டு புத்தகங்கள் மட்டுமே இருக்கின்றன.

அதில், இரண்டாவது புத்தகத்தில் ஒரே ஒரு பக்கம் மட்டுமே உண்டு.

அந்தப் பக்கம் இரண்டு Column களாக பிரிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு Columnல் ஆப்பிரிக்க யானையின் படம் அச்சிடப்பட்டிருக்கிறது.

இன்னொரு Columnல் Fluffy வகை பூனைகளின் படம் அச்சிடப் பட்டிருக்கிறது.

இதிலிருந்து என்னத் தெரிகிறது?

.
.
.
.
..
.
.
.
யானைக்கு ஒரு COLUMN வந்தால், பூனைக்கு ஒரு COLUMN வரும்.

 ----------------------------------------------------------------------------------------------------------
 
 கொஞ்சம் இன்டர்நெட் ஜோக்ஸ் ....








நன்றி !!!

-பி .விமல் ராஜ்

சனி, 8 மார்ச், 2014

உங்க வீட்ல பெண்களே இல்லையா ???

வணக்கம்,

இன்று பெண்கள் தினமாம். எல்லோரையும் போல நானும் பேருக்கு ஃபேஸ்புக்கில் "மகளிர் தின வாழ்த்துக்கள்" என  ஸ்டேடஸ் போட்டுவிட்டேன். என்னதான் பெண்களைப் படிக்க வைத்தாலும், "இதுங்க எல்லாம் வேலைக்குப் போய் என்ன பண்ண போகுதுங்க?" என்று பெற்றோர் சிலரும் , "மாலை ஆறு மணிக்கு மேல் பெண்கள் ஏன் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள் ? " என்று ஒரு மாநில முதல்வரே கேட்கும் சமூக லட்சணத்தில் தான் இப்போது நாம் வாழ்கின்றோம்.

இன்று காலை என் வீட்டில்,

"அம்மா! இன்னக்கி மகளிர் தினமாம். உனக்காக நான் என்ன செய்யணும் ? " - என்று கேட்டேன்.

"நீ ஒண்ணும் செய்ய வேண்டாம்பா... கடைக்குப் போய் அரை லிட்டர் பாலும், ரெண்டு சிப்ஸ் பாக்கேட்டும் வாங்கி வா.. அது போதும்.. "

"ம்ம்ம் ..போம்மா..அப்புறம் போறேன்... "

எனக் கூறிவிட்டு மீண்டும் என் வேலையைத் தொடந்தேன். மேற்கூறிய உரையாடல் போல உங்கள் வீட்டிலும், கணவன்-மனைவி ,
சகோதரி-சகோதரன், தாய்-மகன்களுக்கிடையே கண்டிப்பாக இது போன்று நடந்திருக்கக் கூடும் என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. பெரும்பாலும் இவர்களைப் போலவர்கள் தான் (என்னையும் சேர்த்து) வீட்டில் இருக்கும் பெண்களைச் சட்டை கூடச் செய்யாமல், மகளிர் தின வாழ்த்து ஸ்டேடஸ் போடுகின்றனர்.

இன்று பலரும் பெண்கள் தின வாழ்த்து செய்தியுடன், சாதனை பெண்மணிகளின் புகைப்படத்தையும், அவர்களின் சாதனைகளையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். ஏன், இவர்கள் வீட்டிலெல்லாம்  பெண்களே இல்லையா??? இவர்கள் வீட்டில் அம்மா, மனைவி , சகோதரிகளேல்லாம் பொது வாழ்வில் சாதனை புரிந்தவர்கள் இல்லையென்றாலும், நம் கண் முன் கஷ்டப்பட்டு, படிக்க வைத்து, அரவணைத்து, அன்பு காட்டியவர்கள் அனைவரும் சாதனை பெண்கள் தானே ! பொது வாழ்வில் சாதனை செய்தவர்களைப் பார்த்து பெருமைப்பட வேண்டாம் எனச் சொல்லவில்லை. முதலில் நம் வீட்டுப் பெண்களுக்கு மரியாதை தருவோம் ; ஆதரிப்போம். பிறகு மற்றவரை பாராட்டல்லாம்...
 
womens_day_celebration_rangoli
பெண்கள் தினம் - மகிழ்ச்சியான பெண்கள் (அம்மா போட்ட கோலம்)
என்னைப் பொறுத்தவரை கல்பனா சாவ்லா, கிரண் பேடி, பெப்சி இந்திரா நூயி, பி.டி.உஷா, சாய்னா நேஹ்வால்,  நாட்டின் இன்ன பிற அரசியல் தலைவிகள் யாவரும் சாதனை பெண்மணிகள் தான் !!! வாழ்வில் பல போராட்டங்களைச் சந்தித்து வென்றவர்கள் தான். ஆனால் இவர்களை எல்லாம் விட, என் கண்ணுக்குச் சாதனை பெண்களாகத் தெரிவது எங்கள் வீட்டுப் பெண்மணிகள் தான்! எனது அன்னையும், பாட்டியும், அக்கா, தங்கையரும் மற்றும் பெண் நண்பர்களும் தான் எனக்குச் சாதனை பெண்டீராகத் தெரிகின்றனர்.

இது போன்ற தினங்களெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன் நாம் கொண்டாடுவதில்லை. இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில், சன் தொலைக்காட்சிகளில், தீபாவளி, பொங்கலன்று போடுவது போல "அன்னையர் தின சிறப்புத் திரைப்படம்", "மகளிர் தின சிறப்புத் திரைப்படம் " என்று ஆரம்பித்தலால், அதிலிருந்து இத்தினங்கள் மறுக்க முடியாத விழாவாகி விட்டது.

நம் நாட்டைத் தாய் நாடு என்று சொல்லுகிறோம்; பேசும் மொழியைத் தாய் மொழி என்று கூறுகிறோம் ; நதிகளைப் பெண்களின் பெயரால் அழைக்கிறோம்; இயற்கையை அன்னை என்று சொல்கிறோம்; தமக்கைகளுக்காக ரக்ஷா பந்தன் கொண்டாடுகிறோம்;ஆவதும் பெண்ணாலே ! அழிவதும் பெண்ணாலே என்று பாடுகிறோம்; பெண் பாதுகாப்புக்கு பல சட்ட திருத்தங்களைக் கொண்டு வருகிறோம்;இவை அனைத்தும் இருந்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும், கொடுமைகளும் இன்னும் நம் நாட்டில் நடந்தேறிகொண்டு தான் இருக்கிறது. அக்கொடுமைகளை முழுமையாகச் சரி செய்ய முடியவில்லை என்றாலும், நிலைமையை ஓரளவு சீர் செய்துவிட்டு நாம் மகளிர் தினத்தை கொண்டாடுவோம்.

அனைவரும் பெண்மையைப் போற்றுவோம் ! பெண்ணித்தை காப்போம் !!


நன்றி !!!

-பி .விமல் ராஜ்