வியாழன், 26 செப்டம்பர், 2013

ஏன் நரேந்திர மோடியை அடுத்த பிரதமராக்க வேண்டும் ???

வணக்கம்,

நீங்கள் சாலையில் போய் கொண்டிருக்கும் போது யாரவது டீக்கடையில் இரண்டு பேருக்கு மேல் கூட்டமாக நின்று பேசி கொண்டு இருந்தால், அது இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்பதை பற்றி தான் இருக்கும்.

ஒரு வார காலமாக தினசரி நாளிதழ் முதல், தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள், வலைத்தளங்கள் வரை, அனைவராலும் விவாதிக்கப்படுவது , "ஏன் மோடி இந்தியாவின் அடுத்த பிரதமர்  ஆகவேண்டும் ?". சாதாரண பாமரன் முதல் மெத்த படித்தவன் வரை, டீக்கடை முதல் பெருநிறுவனங்கள் வரை எல்லோராலும் பேசபடுவது இதைப் பற்றிதான். பத்திரிக்கைகளிலும், சமூக வலைமனைகளிலும் மோடியை பற்றி உயர்வாகவும், குஜராத்தில் அவர் நிகழ்த்திய 10 சாதனைகளும் பற்றி தான் விளம்பரம் செய்கின்றனர்.  

கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசின் மாபெரும் சாதனையை கண்டு இந்திய மக்கள் அனைவரும் புல்லரித்து, நொந்து நூலாய் போய் உள்ளனர். மேலும் நொந்து போக வேண்டாம் என்று தான், இப்போது மோடியை தலை மீது வைத்து கொண்டு ஆடுகின்றனர்.

முதலில் நரேந்திர மோடியை ஏன் பிரதமராக்க வேண்டும்? என்பதை பார்ப்போம்.  வரும் நாடாளுமன்ற தேர்தலில் பி.ஜே.பி.-யின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே மோடி குஜராத் மாநிலத்தின் முதல்வராக இரண்டு முறை ஆட்சி செய்து, மூன்றாம் முறை ஆண்டு மாநிலத்தை செம்மையாக ஆண்டு கொண்டிருக்கிறார்.


2001-ல் குஜராத் தொழில் முறையில் மிகவும் பின் தங்கிய மாநிலமாக இருந்தது. ஆனால் இன்று சிறந்த தொழில்முனை நகரமாக மாறியுள்ளது. பல வெளிநாட்டு பெருநிறுவனங்களை குஜராத்தில் ஆரம்பிக்க வைத்தவர் மோடி. அதன் மூலம் நாட்டின் வேலைவாய்ப்பு, மாநிலத்தின் வணிக லாபம், மொத்த உள்நாட்டு உற்பத்தி முதலியவற்றில் பெருமளவு முன்னேற்றம் காட்டினார். வறட்சியில் வாடி இருந்த குஜராத் மாநில விவசாயத்தையும் மக்களையும் முன்னேற்ற பாதையில் வழி நடக்க செய்தவர். நீர்/விவசாய மேலாண்மை, தோட்டக்கலை, மின்சார உற்பத்தி என அனைத்து துறையிலும் குஜராத்தை முன்னேற்றம் காண செய்தவர்.   

2011-ல் இந்தியாவின் முதன்மை வளர்ந்த மாநிலமாக குஜராத் மாறியுள்ளது. 1960 முதல் குஜராத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருந்து வருகிறது. மின்சார உற்பத்தியில் மிகை மாநிலம் என பெயர் பெற்றது.(கவனிக்க ! நாம் ஊரு தாத்தாவும், அம்மாவும் !!) இந்தியாவில் முதன்முறையாக சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கபடுகிறது.

2012-ல் 'குடியுரிமை பாதுகாப்புக்கான' சிறந்த மாநில விருது குஜராத்திற்கு ஐ.பி.என். 7 டைமெண்ட்ஸ்  வழங்கியது. மேலும் உலக வங்கியில் கடனாளியாக இருந்த அம்மாநிலம், இன்று 1 லட்சம் கோடி ரூபாய் வைப்பு தொகையாக உள்ளது என ஓர் அறிக்கை சொல்கிறது (எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை ; உபயம் - ஃபேஸ் புக்).

இவை அனைத்தும் நரேந்திர மோடியின் கடந்த 10/12 ஆண்டு சாதனைகள் தான். ஆனால் கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் எரிக்கப்பட்டது தான் அவருடைய அரசியல் சாசனத்தில் உள்ள பெரும் கரும்புள்ளி. குஜராத்தில் ஏற்பட்ட வகுப்புவாத வன்முறை காரணமாக 2002-ல் 2500 மேலானோர் இறந்தனர். இஸ்லாமியர்களை உயிருடன் எரித்தனர். அப்பாவி பொது மக்களை கொன்று குவித்தனர். அப்போது குஜராத்தின் முதல்வராக இருந்தவர், இதே சாதனை நாயகன் நரேந்திர மோடி தான். எல்லா தரப்பிலிருந்தும் மோடி தான் இந்த கலவரங்களை தூண்டி விட்டார் என குற்றம் சாட்டப்பட்டது.  மேலும், அதே ஆண்டில் 'பெஸ்ட் பேக்கரி' கலவரத்தில் 11 இஸ்லாமியர்கள் உட்பட, 14 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர். (இதே பெஸ்ட் பேக்கரி சம்பவம், உன்னை போல் ஒருவன் படத்தில் தீவிரவாதி சொல்வது போல உலக நாயகன் காட்டியிருப்பார்.)  இந்த கலவரங்களுகெல்லாம் காரணம், அப்போதைய பா.ஜா.க. வும், ராஷ்திரிய ஸ்வயம்சேவக் சங்கமும்- RSS (இந்துத்துவம் பற்றி வெறிகொண்டு பேசும் ஒரு கட்சி சங்கம்).

1992-ல் பாபர் மசூதி இடித்ததை யாராலும் மறக்க முடியாது. பாரதத்தின் வரலாற்று சின்னமான பாபர் மசூதியை (ராமஜென்மபூமி ) ராமர் பிறந்த இடம் என்று சொல்லி இடித்த பெருமை, பா.ஜ.க தலைவர் அத்வானியையே சாரும். அதனால் இந்து முஸ்லிம்களுக்கிடையே பெரும் கலவரம் நடந்து, அதில் கிட்டதட்ட 2000 -திற்கும் மேலானோர் இறந்தனர். டிசம்பர் 6 , பாபர் மசூதி இடித்த தினம் என்று முஸ்லிம்களுக்கு தெரிகிறதோ இல்லையோ, அந்நாளை இந்திய முழுவதும் தொடர் குண்டு வெடிப்புகளுடன் மக்களை பயத்தில் ஆழ்த்தி புகழை சேர்த்தது அன்றைய பா.ஜ.க. அரசு தான்.

லஞ்சம் வாங்குவது, ஊழல் செய்வது, நாட்டையே கூறு போட்டு விற்பது, கொள்ளையடிப்பது, கொலைகள் செய்வது இவையெல்லாம் சர்வசாதரணமாக இந்தியாவில் நடப்பது தான் என்று வைத்து கொண்டாலும், வகுப்பு வாத கலவரமும், மத கலவரங்களும் அடிக்கடி நடக்கும் மாநிலங்களில் மகாத்மா காந்தி பிறந்த புண்ணிய பூமியும் ஒன்று தான். இவைகள் எல்லாவற்றையும் பூசி முழுகதான் ,தேர்தல் விளம்பரங்களில்  "குஜராத்தின் முன்னேற்றம்" பற்றிய ஆவண படங்கள், காணொளி காட்சிகள், சுவரொட்டிகள் என எல்லாமும்.

இவராவது நல்லது செய்வார் என்று மக்கள் நம்பியுள்ளனர். ஆனால் மீண்டும் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, மோடிக்கு பதில் நேரு மாமாவின் பேரனே நாட்டை ஆளலாம் போல என்ற முடிவுக்கு வராமல் இருந்தால் போதும்!!! இப்போது சொல்லுங்கள், நாம் ஏன் மோடியை இந்தியாவின் பிரதமராக்க வேண்டும் ??? 


நன்றி !!!

-பி .விமல் ராஜ் 

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

இந்திய சினிமா 100 !

வணக்கம்,

1913 ஆம் ஆண்டு , தாதா சாகேப் பால்கே என்பவரால் "ராஜா ஹரிச்சந்திரா" என்ற முதல் முழு நீள திரைப்படம் எடுக்கப்பட்டது. அன்று முதல் பல முன்னேற்றங்களுக்கு பிறகு இந்திய சினிமா இப்போது நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. நமது அரசாங்கமும் பல கலை நிகழ்ச்சிகளையும், கொண்டாட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளது. சில திரையரங்குகளில் மக்களின் மனம் கவர்ந்த, நீண்ட நாட்களுக்கு ஓடிய திரைப்படங்கள் திரையிட பட உள்ளன.

இந்திய திரைப்படங்களின் நூறாவது ஆண்டை கொண்டாடும் இந்நேரத்தில், நாம்  எல்லா மொழிகளிலும் உள்ள படங்களின்  சிறப்பையும், கதையையும்  ரசிக்க/ அனுபவிக்க வேண்டும்.

ஆனால், நீங்கள் "கூகிள்" தளத்திற்கு சென்று "Indian Cinema 100" என்று தேடி பாருங்கள். உங்களுக்கே புரியும். அந்த பட்டியலில் உள்ள இணையதளங்களில் உலக தரம் வாய்ந்த இந்திய படங்கள்/ எல்லா தரப்பிலும் பிடித்தமான இந்திய படங்கள் 100 என பட்டியலிட்டு கொடுத்திருப்பார்கள். அந்த பட்டியலில் முக்கால்வாசி படங்கள், ஹிந்தி படங்களே. ஏதோ இந்தி தவிர வேறு எந்த மொழியிலும் நல்ல படங்களே வராத மாதிரி, சொல்லி வைத்தது போல எல்லா வட இந்திய தளத்திலும், இந்தி படங்களே முன் நிறுத்தபட்டு காட்டப்பட்டுள்ளன.

நான் பார்த்த பத்து இணையதளங்களிலும் ஹிந்தி படங்களே முன் நிறுத்தபட்டிருந்தன. சிறந்த 100 படங்களில் முக்காலாசி ஹிந்தி தான்,  மீதம் உள்ள மிச்ச சொச்சம் தான் மலையாளம், தமிழ், அசாம், பெங்காலி, மராத்தி, ஒரியா என மற்ற மொழி திரைப்படங்கள்.

ஹிந்தி இந்தியாவின் அதிகாரபூர்வமான மொழி தான். அதிகமாக பேசபடுவதும் ஹிந்தி தான். பாலிவூட்டில் பல உலக தரமான படங்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றது. இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் போது எல்லா மொழி படங்களையும் தான் ஒன்றாக தான் நாம் ரசிக்க / எடை போட வேண்டும்.


இன்னும் சில இணையதளங்களில் இந்திய நூற்றாண்டு சினிமாவின் சிறந்த கதாநாயகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் திலிப் குமார்,
ராஜ் கபூர், தர்மேந்திரா, தேவ் ஆனந்த், மிதுன் சக்ரவர்த்தி, அமிதாப் பச்சன் ஆகியோரும், கதாநாயகிகளில் நர்கிஸ் டட், மது பாலா, வைஜயந்தி மாலா, ஸ்ரீதேவி ஆகியோர் பெயரும் படமும் இருந்தது.

அந்த படங்களின் பட்டியலில் 'செவாலியே ' சிவாஜி கணேசன், கமலஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் பெயர்கள் இல்லை. இந்தியாவில் முதன் முதலில் சர்வதேச அளவில் சிறந்த கதாநாயகன் விருதை "ஆப்ரிக்க-ஆசிய திரைப்பட விழாவில் "  வீர பாண்டிய கட்டபொம்மன் படத்திற்காக வாங்கியவர். இந்திய சினிமாவின் பெருமையை பற்றி பேசும் போது எப்படி நடிகர் திலகத்தின் பெயரை சொல்லாமல்  இருக்க முடியும்? சினிமாவை  உலக தர வரசையில் கொண்டு சென்றவர் நமது உலக நாயகன். அவரது  படங்கள் சிறந்த வெளிநாட்டு படத்திற்காக ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்பட்டுள்ளது.  ரஜினிகாந்த் - சொல்லவே வேண்டாம். அவர் நடித்த "முத்து " படம் ஜப்பானில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியுள்ளது. ஆசியாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் இரண்டாம்  நடிகர் என்ற இடத்தை பிடித்துள்ளார். இவர்கள் பெயரை விட்டு விட்டு எப்படி இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட முடியும்?

மேலும் மலையாளத்தில் பிரேம் நசிர், செம்மீன் மது, முன்று முறை தேசிய விருது வாங்கிய மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டி, மோகன் லால்,  தெலுங்கில் என். டி. ராமாராவ், ரங்காராவ் , கன்னடத்தில் ராஜ்குமார் ஆகியோரை விட்டு எப்படி இவர்கள் பட்டியலிட்டார்கள் என தெரியவில்லை.

இந்தியாவின் முதல் 3D படம்மான "மை டியர் குட்டி சாத்தான் "" (மலையாளம்) படத்தை எப்படி மறந்தனர் என புரியவில்லை. எனக்கு தான் தமிழ் தவிர வேறு எந்த இந்திய மொழியும் தெரியாது என்றால், வலைமனைகளில் பட்டியலிட்டவர்களுக்கும் ஹிந்தி தவிர வேற எந்த மொழியும் தெரியாது போல!

நூறு வருடங்களில் வெளி வந்த சிறந்த படங்களை மொழி வாரியாக வரிசை படுத்த முடியாது என்பது எனக்கும் தெரியும். அது கடினமும் கூட. ஆனால் படங்களை வரிசைபடுத்தும் போது மொழி வாரியிலான பாகுபாடின்றி தரம் பிரிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். இது என் விருப்பம் மட்டுமல்ல, சினிமாவை நேசிக்கும் எல்லாருடைய விருப்பமும் இதுவாக தான் இருக்கும்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்
 

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

தமிழ்நாடு இரண்டாக பிரிந்தால் ?!?!

வணக்கம்,

கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களிலும், தொலைகாட்சிகளிலும் தொடர்ந்து பேசபடுவது தனி தெலுங்கானாவைப்பற்றி தான். 1968-ல் மாநில மறுசீரமைப்பு சட்டம் காரணமாக ஐதராபாத் மாநிலத்தில் தெலுங்கு பேசும் பகுதிகள் ஆந்திர மாநிலமாக சேர்க்கப்பட்டது. அப்போது முதலே தனி தெலுங்கானா  கோரிக்கை எழுப்பட்டுள்ளது. பல போராட்டங்களுக்கு பிறகு, இப்போது தான் தெலுங்கானாவை தனி மாநிலமாக பிரிக்க இந்திய பாராளுமன்றம் ஒப்புதல் (மட்டுமே !)அளித்துள்ளது. ஐதராபாத் நகரம் இரு மாநிலங்களுக்கும் பொது தலைநகராக 10 ஆண்டுகள் செயல்படும் என அறிவித்துள்ளனர்.

அதை தொடர்ந்து, கூர்காலாந்து (மேற்கு வங்காளம்), விதர்பா (மகாராஷ்டிரம்) பகுதிகளை பிரிக்க கோரி வருகின்றனர். இதை பார்த்து, படித்த பின், இதே போல் நமது தமிழ்நாடும் இரு மாநிலங்களாக பிரிந்தால் என்ன ஆகும் என எண்ணி பார்த்தேன். அதற்கு யாரும் ஒப்பு கொள்ள மாட்டார்கள் என எனக்கு தெரியும். அதனால் மக்கள் யாருக்கும் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. ஏற்கனவே, பல முறை தனி தமிழ்நாடு கோரிக்கைகள் எழுந்த போதிலும், அவ்வப்போதே அந்த சத்தம் அமுங்கி போய்விட்டது. அப்படி நடக்க வாய்ப்பில்லை என்றாலும் ஒருவேளை பிரிந்துவிட்டால் ?!?! 

தமிழ்நாடு இரண்டாக பிரிய வேண்டும் என்ற எண்ணம் நிச்சியமாக எனக்கு இல்லை. இருந்தாலும் இது முழுவதும் என்னுடைய சின்ன கற்பனைதான்.

கடந்த 50 ஆண்டுகளாக தெலுங்கானாவை தனி மாநிலமாக பிரிக்க கோரி பல போராட்டங்களை தொடர்ந்து, இப்போது தான் அதை தனி மாநிலமாக பிரிக்க முடிவு செய்துள்ளனர். ஆகையால் தமிழ்நாட்டை, இன்று குரலெழுப்பி நாளை இரண்டாக பிரித்திட முடியாது.

சரி, தமிழ் நாட்டை பிரிக்க வேண்டும். ஏன், எதற்கு ,எப்படி என்ற காரணமெல்லாம் எழும் அல்லவா?

தென் இந்தியா, வட  இந்தியா என இரண்டாக பிரித்து கூறுவது போல தமிழ் நாட்டில், வட தமிழகம், தென் தமிழகம் என பிரித்து சொல்வதுண்டு. வடக்கில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் , கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலைஆகிய மாவட்டங்களும், ஏனைய மாவட்டங்கள் தென்  தமிழகம் என்றும் அழைக்கபடுகின்றன.

இரண்டு தனி மாநிலமாக பிரிக்கும் போது சரிசமமாக பிரிக்க வேண்டும் என்பதால், கிழே உள்ள படத்தில் இருப்பது போல பிரிக்க வேண்டும் (இதுவும் என் கணிப்புதான் ). வடக்கு பகுதி,  'வட தமிழகம் '  என்று அழைக்கப்படலாம். எப்போதும் போல தலைநகரமாக சென்னை செயல்படும்.

தென்பகுதி 'பாண்டிய நாடு'  (மதுரை, திண்டுக்கல்,சிவகங்கை, இராமநாதபுரம்,  தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற பகுதிகளை  பாண்டியர்கள் ஆண்டுள்ளதால்!) என்று பெயரிடபடலாம்.

Tamil nadu-Seperation

ஆனால் அதிலும் ஒரு பிரச்சனை உள்ளது. தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், நாகை, ஆகிய பகுதிகள் சோழர்களால் ஆளப்பட்டது. அதனால் அந்த மாவட்டங்களுக்கு பாண்டிய நாடு என்று  பெயரிட ஒப்பு கொள்ள மாட்டார்கள். பல சண்டை சச்சரவுகளுக்கு பிறகு, தமிழகத்தின் தென் பகுதி 'தென்னகம்' என்று பெயரிடப்படலாம். தலைநகரம் திருச்சிராப்பள்ளியா அல்லது மதுரையா என கலந்துரையாடி, கடைசியில் மதுரை தென்னகத்தின்  தலைநகரமாக செயல்படும்.

பிறகு வட தமிழகத்தின் சின்னமாக சென்னை சென்ட்ரல்  நிலையமோ அல்லது செயின்ட் ஜார்ஜ் கோட்டையோ இருக்கும். தென்னகத்தில் தஞ்சை பெரிய கோவில் கோபுரம் அரசு சின்னமாக இருக்கும்.

மாநிலத்தை இரண்டாக பிரித்தாகிவிட்டது. தனி மாநில கோரிக்கை எழுமானால், அதற்கு என்னவெல்லாம் காரணம் இருக்கும் ?

ஏற்கனவே பல பிரச்சனைகள் தமிழ்நாட்டில் உள்ளது. வாரிசு அரசியல், நில ஆக்கிரமிப்பு, கட்ட பஞ்சாயத்து, ஊழல் குற்றசாட்டுகள், சாதி /சமய சண்டைகள், விலைவாசி ஏற்றம், குடிநீர் தட்டுப்பாடு, ஈழ பிரச்சனை, மீனவர்கள் பிரச்சனை, என பிரச்சனைகளின் பட்டியல்களுக்கு குறைவில்லை.

முதல் காரணம், நதிநீர் பிரச்சனைத்தான்.  ஒவ்வொரு முறையும், கோடைகாலத்திலும், பாசன காலத்திலும், காவிரியையும்,கிருஷ்ணா நதியும்  கர்நாடக மாநிலம் தர மறுப்பது, கோடையில் வெயில் அடித்து, ஐப்பசியில்  மழை பெய்வது போல வாடிக்கையான ஒன்று. பிரச்சனை பூதாகரமாக வெடிக்கும் போது, அரசு ஊழியர்கள்,  நடிக /நடிகைகள், அரசியல்வாதிகள் என எல்லோரும் தனித்தனியே போராட்டம்  என்ற பேரில் ஒன்றை நடத்தி அவர்களுடைய எதிர்ப்பை காட்டுவார்கள். பெரும்பாலும், இதனால் எந்த ஒரு பயனும் இருக்காது. இதனேயே சாக்காக வைத்து தமிழ்நாட்டை தனியாக பிரிக்க சொல்வார்கள். 

தமிழ்நாட்டில் ஆட்சி செய்ய வேண்டுமானால் மத்திய அரசின் ஆதரவு வேண்டும். அப்படி இருந்தால் தான் மாநிலத்தில் ஆட்சி செம்மையாக இருக்கும். நடுவண் அரசு அனுமதி தர வேண்டிய புதிய ரயில்கள், மின் பாதை அமைப்பு, சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்/டீசல் , தொலைத்தொடர்ப்பு, என பல உள்ளது. இவை அனைத்திலும் மாநிலமும் மத்திய அரசும் ஒன்று சேராவிட்டால், பொதுமக்களுக்கு தான் பிரச்சனை. ஒரு சிலர், மத்திய அரசின் ஆதரவை பெறுவதற்காக கூட தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க சொல்வார்கள்.

அடுத்த காரணம், இருக்கவே இருக்கிறது சாதியம். சாதி போர்வையில் இருக்கும் சில அரசியல் கட்சிகள், என் இன மக்களுக்கு ஒரு திட்டமும் பயனளிக்கவில்லை, என் சாதிக்காரன் தான் நாட்டை ஆள வேண்டும், தென்பகுதியில் உள்ள என் மக்களுக்கு நீதியும் நியாயமும் வேண்டும். தனியாக பிரித்து கொண்டு நாங்களே எங்கள் மக்களை பார்த்து கொள்கிறோம். அதனால் தமிழ் நாட்டை பிரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுப்பலாம்.

தமிழ்நாட்டில் இரு பெரும் அரசியல் கட்சிகளின், இரு பெரும் தலை(வி)களின் காலத்துக்கு பின்,  அரியணையில் யார் அமர்வது  என்ற போராட்டத்தில்  பல பிரச்சனைகள் வரும்.  அந்த சண்டையில் தமிழ்நாட்டின் தென் மண்டலம் எனக்கு, வடக்கு மண்டலம்  உனக்கு என அடித்து கொண்டு கட்சி இரண்டாக பிரிப்பார்கள். இதனால் சில வன்முறைகளுக்கு பிறகு அவர்களின் ஆதாயத்துக்காக கூட தமிழ் நாடு தனியாக பிரிக்கபடலாம்.

எல்லாவற்றையும் விட பெரியது, ஈழ பிரச்சனை. தமிழக மீனவர்கள் சுட்டு கொல்லபடுவதைவும், இலங்கையில் போரில் பாதிக்க பட்டவர்களுக்கு மறுவாழ்வு  தரவும் எந்த அரசும் முயற்சி எடுக்க..... (நீங்களே நிரப்பி கொள்ளுங்கள் ). நிற்க. அதனால் சில தமிழ் அமைப்புகளுக்கும், சில அரசியல் கட்சிகளும் நாங்களே மத்திய அரசுடனும், இலங்கை அரசுடனும் பேசி தீர்த்து கொள்கிறோம் எனக் கூறி தமிழ் நாட்டை பிரிக்க சொல்வார்கள்.

தமிழ்நாடு இரண்டாக பிரியும் போது , பிரிவினைவாதிகளால் சொல்லப்படும் சில நன்மைகள்...
  1. தமிழகத்தில் 32 மாவட்டங்களை இரு மாநிலமாக பிரித்தால், மாநில அரசு, நிர்வாகம் (ஆட்சி) செய்ய ஏதுவாக இருக்கும்.
  2. சட்டமன்ற வரவு செலவு திட்டத்தின் போது ( Legislative Budget) நலத்திட்ட உதவிகள்,  மாவட்டங்களுக்கு எளிதில் போய் சேர வாய்ப்புண்டு (திட்டம் போட்டால், போய் சேரலாம் !? ).
  3. ஒவ்வொரு வரவு செலவு திட்டத்தின் போது எல்லா மாவட்டங்களுக்கும் நலத்திட்டங்கள் பயன்பட வாய்ப்புள்ளது.
  4. நீதிமன்றங்கள், காவல்துறையின் அமைப்பும், செயல்பாடும் எளிதாக இருக்கும். 
  5. மாநிலம் பிரிவதால் மேலும் ஒரு புதிய தலைநகரம் உருவாகும். தொழிற்முறையிலும், கல்வியிலும் மற்ற எல்லாவற்றிலும் சென்னைக்கு இணையாக முன்னேறி விடும். (ஒரு 50 ஆண்டுகளில்! ).
  6. புதிய தலைநகரத்திற்கு அருகே உள்ள மாவட்டங்கள், சிறிய நகராட்சிகள் வெகுவாய் முன்னேறும். அங்குள்ள மனையின் மதிப்பு 20 முதல் 80 சதவிகிதம் வரை ஏறிவிடும்.    
  7. புதிய மாநிலத்தில், புது தொழிற்சாலைகள், பல்கலைகழகங்கள் மற்றும் பல நல்ல திட்டங்கள் ஆரம்பிக்கப்படலாம். 
  8. புதிய ரயில் முனையங்கள் தொடங்கப்படும்; மதுரை, தூத்துக்குடி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் சர்வதேச விமானநிலையங்கள் திறக்கப்படும்.
  9. அடுத்து மிக முக்கியமானது, சேது சமுத்தர திட்டம் மீண்டும் எழுச்சி பெற்று ஆரம்பிக்கப்படும். மாநிலத்தை இரண்டாக பிரிக்கும் போது, தென்னக அரசு, மத்திய அரசுடன் சேர்ந்து சேது சமுத்தர திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், இராமேஸ்வரம், நாகப்பட்டினம் ஆகிய சிறுசிறு துறைமுகங்கள் சர்வதேச துறைமுகங்களாக மாறும். இதனால் அந்த மாவட்டங்கள் பெரும் வளர்ச்சி அடையும்.
  10. தென்கோடியில் உள்ள மாவட்டங்கள், தலைநகரில் மனு கொடுக்கவோ அல்லது மாவட்ட பிரச்னையை பற்றி பேசவோ 600/ 700 கீ.மீ பயண பட வேண்டியதில்லை. 
பிரிவினை வேண்டாம் என்று சொல்லுபவர்களால் சொல்லப்படும் விஷயங்கள்...

தமிழ்நாட்டை இரண்டாக பிரிப்பதால், மேலும் பல பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. மாநிலங்களை பிரித்து தனி தலைநகரம், தனி அரசு அலுவலகங்கள் ஆரம்பிக்க வேண்டுமானால் முதலில் கஜானாவில் பணம் வேண்டும். அதற்காக அதிக வரிவசூலிக்க வேண்டும்; விலைவாசியை கொஞ்ச நாட்களுக்கு ஏற்றி தான் வைக்க வேண்டும். மாநில எல்லை வரையருப்பு ; நதி நீர் பகிரபடுவது; போக்குவரத்து  என எல்லாவற்றிலும் மக்களுக்குதான் பிரச்சனை. இப்போது ஆந்திராவில் நடப்பது போல தொடர் பொது வேலைநிறுத்தங்களும், பல வன்முறைகளும் நடைபெறும்; பலர் பாதிக்கபடுவார்கள்.

இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் போதும் தமிழ் நாட்டை பிரிக்க நினைத்தால், அது முழுக்க முழுக்க அரசியல் சுயநலம் மட்டுமே காரணமாக இருக்கும். முன்னரே சொன்னது போல சாமானியனுக்கு எந்த ஒரு பயனும் இல்லை. அதனால் தனி மாநிலம் /தனி  தமிழ்நாடு என்று கோஷம் போடும் அரசியல்/ அரசியல் சார்ந்த பிரிவினைவாதிகளுக்கு இது புரிய வேண்டும்.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்