சனி, 29 மார்ச், 2014

மிருகமாய் மாறுகிறேன்...

வணக்கம்,

"சிரிக்க தெரிந்த மிருகத்திற்கு மனிதன் என்று பெயர் !
 சிரிக்க மறந்த மனிதனுக்கு மிருகம் என்று பெயர்! "

இதை போல மற்றவர்களை பார்த்து சிரிக்க மட்டுமே தெரிந்த சில மிருகங்களை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். ஒரு பள்ளியிலோ, கல்லூரியிலோ அல்லது அலுவலகத்திலோ நண்பர்கள் கூட்டமாக நின்று பேசி கொண்டிருந்தால், அதில் கண்டிப்பாக ஒருவனை எல்லோரும் கட்டம்கட்டி, கிண்டல் செய்து, கலாய்த்து கொண்டிருப்பார்கள்.

பள்ளி, கல்லூரிகளில் நண்பர்களிடையே இது போன்ற கேலிப் பேச்சுகளும், கிண்டல்களும் சர்வசாதாரணம் தான். சில சமயம் இதன் மூலம் நல்ல நட்பும் வளர்வது உண்மைதான். ஆனால் அந்த கேலி பேச்சுக்கள் அடுத்தவர் மனதை புண்படுத்தும் என்பதை சற்று எண்ணி பார்க்க வேண்டும். போகிற போக்கில் கலாய்த்து விட்டு போவோர்களை பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. ஏதோ அவர்களுக்கு தான் பேச தெரியும் என்பது போல, ஒவ்வொரு முறை பேசும் போதும், ஒருவரை மட்டும் கட்டம் கட்டுவது என்னை பொறுத்தவரை ஒழுக்கமான செயல் இல்லை. சிலர் பேசும் போது,பேச்சில் நக்கலும், நையாண்டியும், எகத்தாளமும் துள்ளி  விளையாடும்.

நண்பன் தானே என்று விட்டுவிட தோன்றினாலும், சில சமயங்களில் அவர்கள் மீது வெறுப்பும், காழ்ப்புணர்ச்சியும் தான் மேலோங்கி நிற்கும். கேலிக்கு ஆளாகுபவர் படும் வேதனையை வெளியில் சொல்ல மாட்டார்கள்; சொல்லவும் முடியாது. கும்பலோடு கும்பலாக  நின்று சிரித்து விட்டு போக வேண்டியது தான். கூட்டத்தில் ஒருவரை கேலி செய்யும் போது, கேலி பேச்சுக்கு உட்படுபவர், எதுவும் செய்ய முடியாது. கோபப்பட்டு ஏதாவது பேசினாலோ அல்லது எதையாவது செய்தாலோ, அதை வைத்தே மீண்டும் கிண்டல் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் யாரும் விட மாட்டார்கள். இது பல இடங்களில் நடந்து ஓசைபடாமல் கொண்டு தான் இருக்கிறது.


இந்த பதிவு என்னுடைய கோபத்தையும், எரிச்சலையும் பதியும் பதிவு என்றே வைத்து கொள்ளலாம். என் கோபத்திலே கொஞ்சம் சுயநலமும் கலந்திருக்கிறது... ஆம். இதில் நானே நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளேன்; இன்னும் பட்டு கொண்டிருக்கிறேன். ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி வரையிலும், பின்னர் அலுவலகம் வந்தும் என்னை சுற்றி வளைய வரும் இந்த கேலி பேச்சுக்கள் குறைந்த பாடில்லை. இவர்கள் என் போன்றோரை இப்படி தான் கண்டுபிடிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. "இவன் ரொம்ப நல்லவன்; கலாய்த்தால் ஒன்றும் செய்ய மாட்டான்..." என்று முகத்தில் எழுதி ஒட்டியிருக்கும் போல.

பள்ளி, படிக்கும் போது ரொம்ப கலாய்த்தால், என்ன சொல்வது எனத் தெரியாமல் பேந்த பேந்த முழித்துவிட்டு ஓடிவிடுவேன். பிறகு கல்லூரியிலும், இந்த கருமத்தை எல்லாம் கேட்டுக் கேட்டு மனம் பழகி விட்டது. நண்பர்களிடையே கூட்டம் ஆரம்பிக்கும் போது ஜாலியாக தான் இருக்கும். பிறகு தான் அவர்கள் ஜோலியை காட்டி நம்மை காலி செய்துவிடுவார்கள். இப்போதெல்லாம் லேசான கோபத்தை மட்டும் காட்டி விட்டு அவ்விடத்திலிருந்து நகர்ந்து விடுவேன்.

பெரும்பாலும்  மற்றவரின் மனதை துன்புறுத்தும், கலாய்க்கும் செயல்கள், உளவியல் பிரச்சனையின் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் சொல்கின்றனர். இது போன்ற செயல்களால் பாதிக்கப்படுபவர், மன உளைச்சலால் பெரிதும் பாதிக்கபடுகிறார்கள். சில சமயங்களில் உயிர் சேதமும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒருவரின் மனதை புண்படுத்தி, அதில் சிரித்து இன்பம் கொள்ளும் இது போன்ற மனித மிருகங்களுக்கு என்றுதான் மற்றவரின் மனம் புரியுமோ எனத் தெரியவில்லை.

இதில் எனக்குள்ள வேதனை என்னவென்றால், இதுவரை கேலி பேச்சுக்களையும், மற்றவர்கள் என்னை பற்றி கலாய்ப்பதையும் மட்டுமே கேட்டு வந்த நான், இப்போது சில நாட்களாக நானும் ஒரு மனித மிருகமாக மாறி வருகிறேன் என்பதை மறுக்காமல் இருக்க முடியவில்லை. என்னை விட அப்பாவி நல்லவன் ஒருவன் என்னருகில் அலுவலகத்தில் இருக்கிறான். மற்றவர்கள்  அவனை கிண்டல் செய்வதை பார்த்ததிலிருந்து, நானும் கொஞ்சம் கொஞ்சமாக மிருகமாக மாறி வருகிறேன். கிண்டலின் வேதனையும், கேலி பேச்சின் வருத்ததையும் அறிந்த நான், ஏன் இப்படி செய்கிறேன் என எனக்கு புரியவில்லை. முன்னாட்களில் எனக்கு நேர்ந்ததை இப்போது நான் பதிலுக்கு பதில் செய்கிறேனா ? தெரியவில்லை... ஒரு வேளை இதுவும் நிபுணர்கள் சொன்ன உளவியல் காரணமாக இருக்குமோ என்ற எண்ணம் தான் எனக்கு தோன்றுகிறது.

பெரும்பாலும் அடுத்தவன் செய்த தவறை சொல்லும் போதும், நம் தவறுகளை மறந்து விடுகிறோம். இதை படிக்கும் போது, "இவன், எவனிடமோ வசமா வாங்கி கட்டியிருக்கான். அதான் இப்படி எழுதுகிறான்..." என்று நீங்கள் மனதிற்குள் சொல்வது எனக்கு கேட்கிறது. உண்மை தான். நான் மட்டுமல்ல; என்னை போன்றோர் பலரும் இது போன்ற இன்னல்களில் சிக்கி தவிப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காகவும் சேர்த்து தான் எழுதுகிறேன்.

மற்றவரை சிரிக்க வைக்க நீ கோமாளி ஆகலாம்.. ஆனால் எல்லோரும் உன்னுடன் சேர்ந்து சிரிக்க , மற்றொருவனை கோமாளியாக்காதே ! என்பதே என் தாழ்மையான கருத்து.


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

6 Comments:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நீங்கள் சொல்வது மறுப்பதற்கில்லை... அனைவருக்கும் இந்த நிலை வரும்... கோபமும் வரும்... முன்பின் தெரியாதவர்களை விடுங்க... தெரிந்தவர்கள் என்றால் இன்னும் மனம் சஞ்சலப்படுவது உண்மை... மனித மிருகங்கள் என்று தெரிந்தவுடன் அந்த நினைப்பு ஏன்...? தொடர்ந்தால் நீங்கள் நினைப்பது நடக்கும்... ஆனால் அதுவே ஒரு பாடம் என்பதையும் உணர்வீர்கள்...

மனதை வேறு விசயத்தில் (பிடித்த பாடல், ஓவியம் வரைவது) கவனம் செலுத்த ஆரம்பித்தால் இவைகள் எல்லாம் மறந்து விடும் என்பது எனது அனுபவம்...

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி தனபாலன் அவர்களே...

நீங்கள் சொல்வது உண்மை தான்.. தவறு என்று தெரிந்தும் கூட சில நேரத்தில் மனம் நாம் சொல்வதை மறுக்கிறது..

முத்துகிருஷ்ணன் சொன்னது…

நல்ல நடை. சொந்த அனுபவம் மிகுந்துள்ளது. உலகிற்கு பொதுவான விஷயங்களை உன் தமிழில் எழுதலாமே., முத்து மாமா

Unknown சொன்னது…

True fact. vimal... ! Great work .keep going ..congrats !!

விமல் ராஜ் சொன்னது…

கருத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி முத்து மாமா..

விமல் ராஜ் சொன்னது…

வருகைக்கு நன்றி பீட்டர் ! தொடர்ந்து வருகை தரவும்..