திங்கள், 13 ஜூன், 2016

பனியும் பனி சார்ந்த இடமும் !

வணக்கம்,

கடந்த ஓரிரு மாதங்களாய் சென்னையில் வெயில் வாட்டி எடுக்க, ஏதாவது குளிர் பிரதேசம் போகலாமென எண்ணினேன். சமயம் கை கொடுக்கத்ததால், வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க விஜிபி ஸ்நோ கிங்டம் (VGP Snow Kingdom) மற்றும் புதியாய் திறந்துள்ள 3D ஆர்ட் மியுசியமும் போகலாம் என முடிவு செய்து கடந்த சனியன்று சென்றிருந்தேன். நான் பார்த்து, பிரம்மித்து, பூரித்து, விறைத்து போனதை பற்றி கொஞ்சம் விவரிக்கிறேன். படியுங்கள்!

விஜிபி ஸ்நோ கிங்டம்:
சென்னை ஈஞ்சம்பாக்கதில் உள்ள விஜிபி ஸ்நோ கிங்டம் மே 2015 ல் தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.விஜிபி யூனிவெர்சல் கிங்டம் (VGP Universal Kingdom) அருகே தான் இதுவும் இருக்கிறது. சில நாட்களுக்கு முன் தான் இது போல ஒரு பனிக்கூடம் இருக்கிறது என்பதை அறிந்தேன். சரி எப்படி தான் இருக்கிறது என்பதை பார்க்க நேரில் சென்றிருந்தோம். நபர் ஒன்றுக்கு 345 ரூபாயும், சிறியவர்களுக்கு 295 ரூபாயும் வசூலிக்கின்றனர். எங்களுக்கு மாலை 0415 க்கு டைம் ஸ்லாட். 04 மணிக்கே உள்ளே அனுப்ப ஆரம்பித்துவிட்டனர். உள்ளே செல்லும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே சாக்ஸ், பூட்ஸ், கிலோவ்ஸ், ஜெர்கின் என சைஸுக்கு ஏற்றவாறு கொடுக்கிறார்கள். நம் உடமைமைகளான செருப்பு, தண்ணி பாட்டில் ஏனைய பொருட்களை மூட்டைக்கட்டி டோக்கன் போட்டு கொடுத்து விடுகிறார்கள்.

vgp-snow-kingdom

ஜெர்கின், குல்லா என எல்லாம் போட்டுக்கொண்டு சுவிஸ் சிட்டிசன் கெட்டப்பில் உள்ளே சென்றோம். வாசலருகே போகும் போதே குளிரில் உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது. அப்பப்பா !!!  -6 டிகிரி C -ல் குளிர். அதுவும் சென்னையில்... அறை முழுவதும் ஐஸ்! வெண்ணிற மணலை அள்ளி கொட்டி பரப்பியது போல, எங்கு காணினும் வெண்பனி ஐஸ் குவியல்! பிரமாண்ட ஐஸ் மாளிகை போல ஒன்றை செட் போட்டு வைத்துள்ளனர். உள்ளே நுழைந்து அதை பார்க்கும் போதே நம் மனம் குதூகளிக்கிறது. மேலும் பனிக்கரடி, நீர்நாய், மான், பென்குயின், பனி மனிதன் போன்றவற்றின் பொம்மைகளையும், ஒரு சிறு ஈக்லூவும் (igloo) வைத்துள்ளனர். இதுபோக ஸ்லெட்ஜ் வண்டியும் வைத்துள்ளனர். 30 அடி உயர பனி சறுக்கு விளையாட்டு, (சுவர்) பனிமலை ஏறும் விளையாட்டு என பனியில் விளையாட சில சமாச்சாரங்களும் உள்ளது.


உள்ளே பலரும் செல்ஃபி எடுத்து கொண்டும், வீடியோ எடுத்து கொண்டும் பிசியாக இருந்தனர். சிறுவர், சிறுமியர், சிறு பிள்ளைகள் என அனைவரும் ஓடி ஆடி விளையாடி கொண்டும், ஐஸை அள்ளி வீசியும் விளையாடி கொண்டிருந்தனர். சிறு பிள்ளைகள் மட்டுமல்ல பெரியவர்களும் தான். ஒரு பதினைந்து நிமிடத்தில் பனி மழையை செயற்கையாக பொழிய வைத்தனர். ஏற்கனவே நடுங்கி கொண்டிருந்த வேளையில் இன்னும் குளிர் அதிகமாகி போனது. போட்டோ எடுக்க கிலோவ்ஸ் கழட்டி மாட்டும் சில மணி துளிகளில் கை விறைத்து கொள்கிறது. பலரும் அந்த ஐஸ் மணலில் தத்தக்கா பித்தக்கா என நடந்து கொண்டும், வழுக்கி விழுந்து கொண்டும் இருந்தனர் (நானும் தான்!). 40 நிமிடத்திற்கு பின் டைம் முடியும் போது விசிலடித்து அனைவரையும் வெளியே அனுப்பி விடுகின்றனர். வெளியே வந்தவுடன் நாம் போட்டு கொண்ட உடுப்புகளையெல்லாம் சலவைக்கு போட்டு விட்டு மீண்டும் அடுத்த ஷோவுக்கு ஆயுத்தம் செய்கின்றனர்.

அவசரத்திற்கு கழிப்பறையும், இளைப்பாற ஒரு சிறு கான்டீனும் உள்ளது. இங்கு காபியை குடித்துவிட்டு வெயிலில் சற்று நேரம் நின்ற பின்தான் நார்மலுக்கு நம்மால் வரமுடிகிறது.

சிறியவர்கள், பெரியவர்கள் என் யார் வந்தாலும் ஒரு மணி நேரத்திற்கு தங்களை மறந்து ஆச்சிரியத்துடனும், மகிழ்ச்சியுடனும் தான் வெளியே போவார்கள். ஆக மொத்தத்தில் கோடையில் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் இனிதே பொழுதை கழிக்க நல்ல இடம் இது.

மேலும் தகவல்களுக்கு vgpsnowkingdom.com

3-டி ஆர்ட் மியுசியம் : 
ஸ்நோ கிங்டத்திலேயே முதல் மாடியில் Click Art Museum என்ற 3D ஆர்ட் கேலரி ஒன்றை கடந்த மே 2106-ல் தான் ஆரம்பித்து உள்ளனர். இந்தியாவிலேயே முதல் முதலில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தந்திரகலை காட்சிக்கூடம் இது. நபர் ஒன்றுக்கு 150 ரூபாய் வசூலிக்கின்றனர்.

clickartmuseum

புகைப்படங்களில் என்ன இருக்க போகிறது என்று நினைத்து கொண்டு போனாலும், அங்கே போனதும் அந்த எண்ணம் தந்திரமாக மறைந்து போனது. ஒவ்வொரு 3டி போட்டோவிலும்,  ஃபிரேமைவிட்டு படங்களும், உருவங்களும் வெளியே வருவது போல தீட்டியுள்ளனர். போட்டோகளுக்கு அருகே நின்று போஸ் கொடுக்கும் போது, போட்டோவில் உள்ள உருவமும்/ படமும் நேரில் இருப்பவரும் சேர்ந்து இருப்பது போல தெரிவது இதன் சிறப்பம்சம்.

click to enlarge
மேலும் ஒவ்வொரு படங்களிலும், எப்படி போஸ் கொடுக்க வேண்டும், எங்கே நின்று போட்டோ எடுக்க வேண்டும் என்று எழுதி வைத்துள்ளனர். அதை பார்த்து நம் மக்களும் விதம்விதமாக போட்டாவுக்கு போஸ் கொடுத்து தள்ளுகின்றனர். அடிக்கடி செல்ஃபி எடுத்து கொள்ளும் பழக்கம் உடைய பலருக்கும், கலை விரும்பிகளுக்கும் இந்த இடம் மிகவும் பிடிக்கும். ஒரே குறை. உள்ளே சென்று சுற்றி வருவதற்குள் வியர்வையில் குளித்து விடுவீர்கள்.

சென்னையில் எக்ஸ்பிரஸ் அவன்யூ மற்றும் புத்தக கண்காட்சியிலும் இந்த 3டி கலைக்கூடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாம். நீங்களும் சென்று பார்த்து வியந்து வாருங்கள்.

மேலும் தகவல்களுக்கு http://www.clickartmuseum.com/


நன்றி !!!

-பி .விமல் ராஜ்

ஞாயிறு, 5 ஜூன், 2016

யாருக்காக ? இந்த ப்ராஜெக்ட் யாருக்காக ?

வணக்கம்,

விடுமுறை முடிஞ்சாச்சு. பள்ளிகள் மீண்டும் ஆரம்பிக்கபட உள்ளன. இப்போதுள்ள மாணவ மாணவிகளை பரீட்சைக்கு பிறகு பெரிதும் கிலியூட்டும் ஒரு வார்த்தை ப்ராஜெக்ட் (Project). முன்பெல்லாம் கல்லூரியின் இறுதி ஆண்டில் படிப்பவர்களை மட்டுமே ப்ராஜெக்ட் என்ற ஒன்றை கட்டாயம் செய்து காட்ட வேண்டும் என்று சொல்லி வந்தனர். ஆனால் இன்றோ, பள்ளிகளிலும் அந்த நடைமுறை கொஞ்சம் கொஞ்சமாக பழக்கதிற்கு வந்து கொண்டிருகிறது.

நான் பள்ளிகளில் படித்த காலத்தில் காலாண்டு, அரையாண்டு விடுமுறைகளில் Holiday Homework க்காக பரீட்சையின் வினாத்தாள்களை எழுதி வர சொல்லுவார்கள். நாங்களும் விழுந்து விழுந்து கடைசி நாள் வரை எழுதிவிட்டு, பள்ளி ஆரம்பித்ததும் போய்க் கொடுப்போம். ஆனால் இன்றோ ப்ராஜெக்ட் என்று ஒன்றை செய்து கொண்டு வர வேண்டும் என்று சொல்லுகின்றனர். அதற்கும் மதிப்பெண் வேறு உண்டு என்று சொல்லிவிடுகின்றனர்.

school projects

ப்ராஜெக்ட் என்பது நல்ல விஷயம் தானே.. பிள்ளைகளின் அறிவு கூடும் என்று யோசிக்க வேண்டாம். அது நல்லது தான் என்றாலும், ப்ராஜெக்ட்  செய்ய ஒரு வயது வரம்பு வேண்டாமா ?? மூன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை
பிள்ளைகளுக்கு வெவ்வேறு தலைப்புகளில் ப்ராஜெக்ட்  வொர்க்கை கொடுத்து விடுகின்றனர் பள்ளி ஆசிரியர்கள்.

ப்ராஜெக்ட் வொர்க் என்றால் படங்கள் வாங்கி சார்ட்டில் ஒட்டுவது, பொது அறிவு விஷயங்களை அட்டையில் எழுதி வருவது என்று கொடுத்தால் மாணாக்கருக்கு உதவியாக இருக்கும். விடுமுறையிலும் அவர்கள் எதோ ஒன்றை படித்து தெரிந்து கொள்வது போல இருக்கும். ஆனால் நடப்பது என்ன தெரியுமா??

சில பள்ளிகளுக்கு என்னன்ன தலைப்பை ப்ராஜெக்டாக பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று தெரிவதில்லை. தேசிய நினைவுச்சின்னங்களை மாதிரி வடிவமைப்பாக தெர்மகொலில்/அட்டையில் செய்து கொண்டு வாருங்கள், உலக உருண்டையின் மாதிரியை சுற்றுவது போல செய்யுங்கள் என்று ஆறாம், எட்டாம் வகுப்பு மாணவரிடம் சொன்னால் அவர்கள் என்ன செய்வார்கள் ? சூரிய குடும்பத்தின் மாதிரியை கிரகங்கள் சுழல்வது போல செய்ய வேண்டும் என்று சொல்கின்றனர். பெரும்பாலும் இந்த ப்ராஜெக்ட்டை ஸ்டெப்பர் மோட்டார் (stepper motor ), பாட்டரி (battery) உதவியுடன் செய்து அசைய/ சுழல வைக்க வைக்க வேண்டும். பிள்ளைகள் பெற்றோர்களின் உதவியுடன் தான் செய்ய வேண்டும் என்று உத்தரவு வேறு.  இக்கால பிள்ளைகள் நம்மை விட 10 மடங்கு புத்திசாலிகளாகவும், நல்ல திறமைமிக்கவர்களாகவும் இருகின்றனர் என்பதில் ஐயமில்லை. ஆனாலும் இது போன்ற பாட திட்டங்களெல்லாம் மிகவும் அதிகம். எல்லா பெற்றோரும் இதெல்லாம் தெரிந்தவராக இருக்க முடியுமா?? இல்லை எல்லாராலும் இதை செய்ய தான் முடியுமா?? என்ன அடிப்படையில் இது போல செய்ய சொல்கிறார்கள் என்ன தெரியவில்லை. இதையும் சில அம்மா அப்பாக்கள் தங்கள் பிள்ளைகளுக்காக செய்து கொடுக்கின்றனர் என்பதை ஒப்பு கொள்ளாமல் இருக்க முடிவதில்லை.

பள்ளி பிள்ளைகளின் விடுமுறை நேரத்தை சரியான முறையில் செலவழிக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு, இது போன்று பள்ளி பிள்ளைகளுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத, தகுதி மீறிய விடுமுறை வீட்டுப்பாடத்தை ப்ராஜெக்ட் என்ற பெயரில் செய்ய சொல்லலாமா? இது எந்த வகையில் நியாயம் என எனக்கு தெரியவில்லை. இந்த கேள்விகளுக்கு பள்ளி ஆசிரியர்கள், கல்வி நிர்வாகிகள் யாரேனும் தயவு செய்து பதில் சொல்லுங்களேன் !


நன்றி !!!

-பி .விமல் ராஜ்