வியாழன், 27 ஜூலை, 2017

மூட நம்பிக்கைகள் சில!

வணக்கம்,

நம் மக்களிடையே ஆண்டாண்டு காலமாக பல மூட நம்பிக்கைககள் பரவலாக இருந்து வருகிறது. ஏன் செய்கிறீர்கள்?  எதற்கு ? என்னவென்று காரணம் கேட்டால், அதற்கு சாஸ்திரத்தையும், ஆன்மீகத்தையும் பதிலாய் சொல்கிறார்கள். அப்படி பின்பற்றி வரும் சில மூட நம்பிக்கைகளில் சிலவற்றை இணையத்தில் படித்து உண்மையான காரணங்களை எழுதியுள்ளேன்.


1.) பாம்பு புற்றுக்கு பால் ஊற்றுவது ஏன் ?
பாம்பு புற்றுகள் பெரும்பாலும் அம்மன் கோவில்களில் இருக்கும். மேலும் பாம்புக்கு பாலும் முட்டையும் பிடிக்கும்.  நாம் அதை வைத்து படைத்தால் , முட்டையையும்  பாலையும் குடித்து விட்டு, நாம் வேண்டிக்கொண்டதை நிறைவேற்றும். இதைதான்  நாம்  பல படங்களிலும் பார்த்துள்ளோம்.

உண்மை காரணம் - ஆதி காலத்தில் நாடெங்கும் புதர்களும், காடுமாய் இருந்தது. மனிதன் நடமாட்டத்தை விட பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. பெண் பாம்புகளின் மேல் ஒரு வித திரவ வாசம் வரும். அதை வைத்து கொண்டு ஆண் பாம்புகள் இனப்பெருக்கத்திற்காக வரும். பாம்பின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த எண்ணி, முட்டையும் பாலும் அதன் புற்றில் ஊற்றினார்கள். இவை இரண்டுக்கும் பாம்பின் மேல் வரும் அந்த வாசத்தை போக்கும் திறன் உண்டு. அதனால் தான் பாம்பு புற்றிற்கு பால் ஊற்றுகிறார்கள். உண்மையில் பாம்புகள் பாலை குடிக்காது.

2.) மாலை நேரத்தில் ஏன் வீடு பெருக்க கூடாது ?
மாலை நேரத்தில் வீட்டை பெருக்கினால், வீட்டுக்கு நல்லதல்ல. துர்தஷ்டம் வந்து சேரும் என நம்பிக்கை. அதேபோல் மாலை நேரத்தில் நகம் வெட்டினாலும், வீட்டுக்கு தரித்திரம் வந்து சேரும் என சொல்வதுண்டு.

உண்மை காரணம்- மின்சாரம் கண்டுபிடிக்காமல் இருந்த காலத்தில், மாலை நேரத்தில், இருட்டிய பின் வீட்டை பெருக்கினால் குப்பைகளோடு ஊசி, தோடு/திருகாணி போன்றவை ஏதாவது சேர்ந்து காணாமல் போக வாய்ப்புண்டு. அதுமட்டுமல்லாமல் நகம் வெட்டி கூட்டி பெருக்கும் போதும் முக்கிய பொருட்கள் குப்பைக்கு போகவும் வாய்ப்புண்டு.  அதனால் தான் மாலை நேரத்தில் வீடு பெருக்க கூடாது என சொல்வார்கள்.

3.) இருட்டிய பின் ஏன் பூப்பறிக்க கூடாது ? 
மாலை நிறத்தில் இருட்டிய பின் செடியிலிருந்து பூப்பறித்தால், வீட்டுக்கு கெட்டது  நடக்கும் என சொல்வார்கள்.

உண்மை காரணம்- மாலை நிறத்தில் இருட்டிய பின், செடி கொடிகளில் பூச்சி, பாம்பு, தேள் போன்றவை இருக்கலாம். அதனால் மக்களின் உயிருக்கு ஆபத்து வர கூடாது என்பதற்காக இருட்டில் பூப்பறிக்க கூடாது என சொல்லியிருப்பார்கள்.

4.) சாவு வீட்டுக்கு சென்று வந்த பின் ஏன் குளித்துவிட்டு பின்வாசல் வழியே வர வேண்டும் ?
சாவு வீட்டுக்கு சென்று வந்த பின் கண்டிப்பாக குளிக்க வேண்டும். இல்லாவிடில் அந்த தீட்டு நமக்கும் ஓட்டி கொள்ளும்.

உண்மை காரணம்- முன்பெல்லாம் ஒருவர் இயற்கையாகவோ/செயற்கையாகவோ இறந்திருந்ததால், உடலை வீட்டில் அப்படியே தரையில் துணி விரித்து போட்டு வைத்திருப்பார்கள். இறந்த உடலிலிருந்து நிறைய நுண்ணுயிர்கள்/கிருமிகள் வந்தவர்களையும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாய் உள்ளவரையும் பாதிக்கும். அதனால் தான் சாவு வீட்டுக்கு போய் வந்தால் குளித்துவிட்டு சுத்தமாக  இருக்க வேண்டும். அது சரி.. அது ஏன் கொல்லைப்புறமாக வரவேண்டும் ? முன்பு, குளியலறை வீட்டுக்கு வெளியே கொல்லைப்புறத்தில் தான் இருக்கும். அல்லது வெட்ட வெளியில் கொல்லையில் தான் குளிப்பார்கள். அதனால் பின் வாசல் வழியே குளித்துவிட்டு வீட்டுக்குள் போவார்கள்.

5.) பூனை குறுக்கே வந்தால் ஏன் கெட்ட சகுனம் ?
வெளியே போகும் போது பூனை குறுக்கே வந்தால் கெட்ட சகுனம். போகிற காரிய தடைப்படும். மீண்டும் உள்ளே சென்று சிறிது நேரம் கழித்து கிளம்ப வேண்டும்.

உண்மை காரணம்- அக்காலத்தில் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு போக காட்டு பாதை வழியேதான் போக வேண்டும். காட்டுப்பூனை, சிறுத்தை, புலி போன்ற மிருங்கங்கள் போகும் வழியில் குறுக்கே கடந்து போகும். இப்பூனை வகையறாவை சேர்ந்த மிருகங்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. பாதையின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் போகும் போது ஒருமுறை நின்று பார்த்து விட்டு தான் கடக்கும். இரையை தேடி கொண்டே போகுமாம். அதனால் தூரத்தில் இப்பூனைகளை கண்டாலோ/ வழியில் வந்தாலோ/கடந்தாலோ திரும்பி போய் விடுவார்கள். அந்த காரணம் தான் இக்காலத்தில் மருவி இப்படி ஆகிவிட்டது.

6.) தும்மினால் கெட்ட சகுனம்- 
நல்ல காரியம் செய்யும் போதோ/வெளியே செல்லும் போதோ தும்மல் வந்தால் அபசகுனம்.

உண்மை காரணம்- தும்மல் ஒரு சாதாரண இயற்கை செயல். ஒருவர் தும்மினால், அவருக்கு உடம்பு சுகமில்லை என கருதி கசாயமோ அல்லது சீரக வெந்நீரோ தருவது பண்டைய வழக்கம். வெளியே போகும் போது தும்மினால், உடம்பு சுகமில்லை போகவேண்டாம் என்றும் சொல்லியும், ஒரு சொம்பு வெந்நீர் கொடுத்து அனுப்புவதையம் வழக்கமாக்கி கொண்டுள்ளனர். அதைதான் நாம் அபசகுனம் என்று மாற்றியுள்ளோம்.  (இப்படி தான் இருந்திருக்கும் என நானே யோசித்து எழுதியது).

7.)  புரட்டாசி மாதம் ஏன் மாமிசம்  சாப்பிட கூடாது ?
புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு விசேஷ மாதம். அதனால் பெருமாளுக்கு நோன்பு நோற்று விரதம் எடுத்து, மாமிசம் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.

உண்மை காரணம்- புரட்டாசி மாதத்தில் வெயிலும் இல்லாமல், மழையும் இல்லாமல் பருவ நிலை மாறும் காலம். இம்மாதத்தில் அசைவ உணவை சாப்பிட்டால், உடல் சூடேறி உபாதைகள் வர நேரிடும். அதனால் தான் மாமிச உணவை தவிர்த்து, ஒரு பொழுது உணவை (அளவாக)  சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாய் இருக்கும் என பின்பற்றினார்கள். இதில் பெருமாள் எப்படி வந்தார் என சத்தியமாய் எனக்கு தெரியாது!

8.) ஏன் இரவில் அரச மரத்தடியே படுக்கக் கூடாது ?
இரவு நேரத்தில் அரச மரத்தடியே படுத்து தூங்கினால், காத்து கருப்பு அடித்து விடும் என சொல்வார்கள்.

உண்மை காரணம்- அரசமரம் பகலில் கரியமில வாயுவை எழுத்து கொண்டு, பிராண வாயுவை விடும். ஆனால் இரவில் பிராண வாயுவை எழுத்து கொண்டு, கரியமில வாயுவை வெளியிடும். மரத்தடியில் இரவில் தூங்குபவர்கள்  கரியமில வாயுவை சுவாசித்தால், மூச்சு திணறல் ஏற்படும், உயிர் போகவும் வாய்ப்புண்டு. அதனால் தான் இரவில் அரச மரத்தடியே படுக்க கூடாது என சொல்லி வைத்தார்கள்.

9.) மொய் வைக்கும் போது ஏன் ஒற்றைப் படையில் (101 ருபாய் , 501 ருபாய், 1001 ருபாய்) மொய் வைக்கிறார்கள்?
ஒற்றைப் படையில் மொய் வைப்பது தான் சம்பிரதாயம். அப்படி தான் வைக்க வேண்டும்.

உண்மை காரணம்- இரட்டைப்படை எண்ணை எளிதில் வகுக்க முடியும். அப்படி வகுத்தால் மீதம் (remainder) பூஜியமோ அல்லது perfect number தான் வரும். ஆனால் ஒற்றைப் படை எண்ணை வகுத்தால் பூஜ்யம் வராது. அதுமட்டுமல்லாமல் decimal ஆக தான் வரும். இது போல கணவன் மனைவி பிரியாமல், யாராலும் பிரியப்படாமல் இருக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. உதாரணம்: (100/2=50) , (101/2=50.5)

10.)  உப்பை கொட்டினால் வீட்டுக்கு கடன் வந்து சேரும்
வீட்டில் உப்பை கொட்டினால் வீட்டுக்கு கடன் வந்து சேரும்.

உண்மை காரணம்- பழங்காலம் முதல் உப்பு மருத்துவம் மற்றும் சமையலில் மிக முக்கியமான பொருள் ஆகும். பண்ட மாற்று முறையிலும் உப்பு மிக முக்கியமானது. அதனால் அதை பத்திரமாக பாதுகாத்து கொள்ள வேண்டி சொல்லியிருப்பார்கள்.

11.) இன்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்கும்!
கடந்த பதினைந்து அல்லது இருபது  வருடங்களாக பரவலாக இந்திய பெற்றோர்களால் நம்ப படும் ஒரு அசாத்திய நம்பிக்கை. இதற்கு விளக்கம் தர கொஞ்சம் நிறைய எழுத வேண்டும். அதனால் இதை பற்றி விரிவாக அடுத்த பதிவில் எழுதுகிறேன்.


 நன்றி !!!

-பி .விமல் ராஜ்

செவ்வாய், 18 ஜூலை, 2017

பற்றி எரிகிறது வீரம் !

வணக்கம்,
இது எனது வெற்றிகரமான 100வது பதிவு! இந்த நாலரை வருடத்தில் இப்போது தான் செஞ்சுரியே போட முடிகிறது. இத்தனை நாட்களாய் என் பதிவுகளை பொறுமையாய் படித்து, கருத்தளித்து, எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்த அனைவருக்கும் எனது அன்பார்ந்த நன்றிகள் !!!

100th-post-pazhaiyapaper

எனது நூறாவது பதிவில் ஏதாவது ஒரு சமூக பிரச்சனையை பற்றி எழுத வேண்டும் என தோணியது. அதன் விளைவே இப்பதிவு. இப்போதெல்லாம் செய்திகளில், ஒரு முக்கிய செய்தி ஒன்று அடிக்கடி வருகிறது. இளைஞர் தீக்குளிப்பு! முதியவர் தீக்குளிக்க முயற்சி! பெண் தீக்குளித்து இறப்பு! 

தீக்குளித்தல் - ஒருவர் தாமாகவே நெருப்பில் பாய்ந்து உயிரை மாய்த்து கொள்வது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயமல்ல. விரக்தியின் விளிம்புக்கு சென்ற பின் முடிவெடுக்கும் அசாதாரண முடிவு. கொள்கை, லட்சியதிற்காக இப்படி இறப்பவர்களை, பெரும்பாலும் வீரமகனாகவே மாற்றி விடுவது நம் நாட்டின் மரபு.

"என் தலைவருக்கு நியாயம் கிடைக்காவிட்டால், நான் இங்கேயே தீக்குளிப்பேன்" என்ற அரசியல் அல்லக்கைகளின் வசனத்தை பல படங்களில் நாம் கேட்டிருப்போம். இது வெறும் வசனம் மட்டுமல்ல. இது போன்ற சம்பவங்கள், பல இடங்களில் இன்றும் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

இது இன்றோ, நேற்றோ ஆரம்பித்தல்ல. சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பே துணிச்சல் மிக்க வீர செயல்கள் என சொல்லப்படும் தீக்குளிப்பு சம்பவங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டன.

வருடம் 1965 ஆம் ஆண்டு. மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சியால், சென்னை மாகாணமெங்கும் இந்தி எதிர்ப்பு போராட்டம் ஆரம்பித்து, பல இடங்களில் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த சமயம்.

திருச்சி கீழப்பழுவூரை சேர்ந்த 27 வயது இளைஞர் இந்தி எதிர்ப்பு போராட்டதிற்காக தீக்குளித்து இறந்தார். இறக்கும் முன், "தமிழ் மொழியை காக்க நான் தீக்குளிக்க போகிறேன்" என கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை விட்டிருக்கிறார். மொழிக்காக உயிரை விட்டதால், இவரை மொழி தியாகியாக்கி, அவர் மரணத்தை வீர மரணம் ஆகிவிட்டனர். நம் தமிழக வரலாற்றில் அச்சில் பதிந்த முதல் தீக்குளிப்பு (வீர) மரணம்.  அதன் பிறகு ஓரிரு ஆண்டுகளில் கோடம்பாக்கம் சிவலிங்கம் (21), விருகம்பாக்கம் அரங்கநாதன்(33), அய்யம்பாளயம் வீரப்பன் (26), சத்தியமங்கலம் முத்து (21).மாயவரம் சாரங்கப்பாணி (20),  கீரனூர் முத்து (21) என இந்தி திணிப்புக்காகவும், இந்தி எதிர்ப்புக்காகவும் பலர் உயிரை மாய்த்து கொண்டுள்ளனர். இவர்கள் இறப்புக்கு பின் இவர்களை மொழிக்காக உயிர்விட்ட வீர மகன்களாகவும், தியாகிகளாகவும் சித்தரிக்கப்பட்டனர்.


தீக்குளித்து இறந்தவர்களுக்கு, இறந்த பின் வீரர் அல்லது போராளி அல்லது வீரமரணம் என போற்றப்பட்டு, அவர்களது குடும்பத்துக்கு உதவி பணமும், மற்ற சலுகைகளும் கொடுக்கபட்டது. பின்னாளில் இதுவே ஒரு ட்ரெண்டாகி போனது வருத்தத்திற்குரியது.

அதன் பின்னர் 1968 ஆம் ஆண்டில், அறிஞர் அண்ணா இறந்த போதும் பலர் தீக்குளித்து உயிரை மாய்த்து கொண்டனர். 1972-ல் எம்.ஜி.ஆர் கட்சியிலிருந்து விலக்கிய போது இருவர் தீக்குளித்து இறந்தனர். 1981-ல் கலைஞர் கைதுக்காக 21 பேர் உயிரை மாய்த்து கொண்டனர். அதில் பெரும்பாலானோர் தீக்குளித்து இறந்து போயினர்.பின் 1987-ல் எம்.ஜி.ஆர் இறந்த செய்தி கேட்டு 31 பேர் தீக்குளித்தனர். இவர்கள் அனைவருக்கும் தீக்குளித்தற்காக / உயிரை தியாகம் செய்ததற்காக சன்மானமும், வீரர்கள் என புகழாரம் சூட்டப்பட்டு கொண்டும் இருந்தது.

அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு முத்துக்குமார் (26), இலங்கை தமிழர்கள் மீதான தாக்குதலை எதிர்த்து தீக்குளித்து இறந்தார். அது பெரும் செய்தியாகி அவர் சாவை வீர மரணமாக கருதி, இன்றும் வருடந்தோறும் நினைவேந்தல் கூட்டம் நடந்து வருகிறது. 2011-ல் செங்கோடி (20) ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நால்வருக்கும் நியாயம் கிடைக்க வேண்டி தீக்குளித்துள்ளார். 2016-ல் விக்னேஷ் (26) காவிரி பிரச்சனையில் தமிழக விவசாயிகளுக்கு நியாயம் கிடைத்திட தீக்குளித்துள்ளார். இது போல தமிழ் நாட்டில் அரசியலில் நடந்த மாற்றத்தால் ஏற்படும் மக்கள் பிரச்னைக்காக பலரும் தீக்குளித்தும், பிற வழியிலும்  உயிரை மாய்த்துள்ளனர். கடைசியாக 2016-ல் ஜெயலலிதா இறந்தபின் சிலர் தீக்குளித்துள்ளனர்.

தம் உயிரே ஆனாலும் அதை மாய்த்து கொ(ல்லு)ள்ளும்  உரிமை யாருக்கும் கிடையாது. இறந்தவர்கள் பலரும் 20 முதல் 30 வயதுடையவர்கள் தான். இந்த வீர மரணங்களுக்கெல்லாம் காரணம் என்னவாக இருக்கும் ???  நொடி பொழுதில் வந்த முடிவா?  கொள்கை வெறியா? இல்லையெனில் அரசியல் பின்னணியா? என யாருக்கும் இதுவரை தெளிவாக தெரியவில்லை.

இவர்கள் அனைவரும் அவர்தம் சொந்த முடிவின் பெயரிலும், கொள்கைக்கவும், தாமாகவே முன் வந்து இருந்ததாகவே எடுத்து கொள்வோம். அது ஓர் தவறான மனநிலையை தான் குறிக்கிறது. இவர்கள் இறப்பை வீர மரணம் என்றும், இறந்த பின் அவர் குடும்பத்துக்கு பொருளும் பணம் கொடுப்பது இச்செயலை அரசியல்வாதிகளே ஊக்கப்படுத்துல் போலாகும். கிட்டத்தட்ட அவர்களின் தீக்குளிப்பை வீரச்செயல் என்றே போற்றப்பட்டு அவர்களை மாவீரர்களாக்கி வருகின்றனர். ஒருவர் தீக்குளிக்க முற்பட்டால், அவரை தடுத்து கண்டிக்க/தண்டிக்க வேண்டும். அதை விடுத்து அவரை நாயகனாக்கினால், பின்னாளில் வருவோரெல்லாம் அவரை ஒரு முன் மாதிரியாக எடுத்து கொண்டு, அதை பின்பற்றி கொண்டு ,தம்மை தாமே பற்ற வைக்க ஆரம்பித்து விடுவார்கள். ஹ்ம்ம்..  அதை தான் செய்கிறார்கள்.

நான் இவர்களின் மரணத்தையோ, கொள்கையையோ தவறாக விமர்சிக்கவில்லை. இளம் வயதில் இறப்புக்கு பின், இவர்கள் குடும்பத்தின் நிலை என்னவாகும்? இது போன்ற கொள்கைப்பிடிப்பும், வீர மரணமும்  ஏன் வசதியில் பின் தங்கிய மக்களுக்கே வருகிறது? இறந்தவர்களில் ஒருவர் கூட வசதி படைத்தவர்களோ/ அரசியல்வாதிகளோ அல்லது அவர்களின் சொந்தமோ இல்லை. எதையும் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

தமிழ் நாட்டில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 2000 பேர் தீக்குளித்து இறக்கின்றனர். தமிழ் நாட்டில் மட்டுமல்ல. இந்தியா முழுவதும், இது போல நடந்து கொண்டுதான் இருக்கிறது. வாழ்க்கையில் விரக்தி, பரிட்சையில் தோல்வி, திருமணம் வாழ்வு கசந்து போகுதல், வன்கொடுமை, அரசியல், மொழி, சாதியம் என காரணங்கள் வெவ்வேறு இருக்கிறது. இந்நிலை மாற வேண்டும். எந்த ஒரு பிரச்சனைக்கும் உயிரை மாய்த்து கொள்வது தீர்வல்ல. அதை எப்போது அரசும், அரசியல்வாதிகளும் மற்ற மக்களும் புரிந்து கொள்வார்கள் என தெரியவில்லை.

தகவல்கள்- The Hindu, Sify News, Tamil Tribune

நன்றி !!!
-பி .விமல் ராஜ்