செவ்வாய், 15 ஜனவரி, 2019

பேட்ட பராக் !

வணக்கம்,

ஒரு உண்மையான ரஜினி ரசிகன் வெறியன், ரஜினி ரசிகர்களுக்காகவே வெறியர்களுக்காகவே படம் எடுத்தால், எப்படி இருக்குமோ அப்படி தான் இருக்கிறது பேட்ட திரைப்படம். சன் பிக்சர்ஸ் தயாரிப்பு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கம், சூப்பர் ஸ்டார், சிம்ரன், திரிஷா, சசிகுமார், குரு சோமசுந்தரம், பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி, நவாஸுதீன் சித்திக் என பெரிய நட்சத்திர பட்டாளமே பேட்டையில் இருக்கிறது.

petta-movie-review

பல இடங்களில் ரஜினியின் பழைய பட வசனங்களையும், ஸ்டைல்களையும்  அள்ளி தெளித்திருக்கிறார்கள். எல்லா காட்சியிலும் தலைவரின் ஆக்கிரமிப்பு இருக்கிறது. கிளைமாக்ஸ் டுவிஸ்ட் செம.. யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஓப்பனிங் ஸீன், ரவுடிகளை மிரட்டும் போதும், அவருடைய ட்ரேட் மார்க் சிரிப்பை சிரிக்கும் போதும், அந்த ஸ்டைல் நடை, மேனரிசம், சோகம், அழுகை என எல்லா காட்சிகளிலும் நம்மை கவர்கிறார் சூப்பர் ஸ்டார்.

பாடல்கள் கிட்ட தட்ட எல்லாமே கலர்புல்லாக, பெப்பியாக இருக்கிறது. "மரண மாஸ் " மற்றும் "உல்லால.. உல்லால .." பாட்டும் தாளம் போட்டு கொண்டே நம்மை மீண்டும் மீண்டும் பாட வைக்கிறது. "பேட்ட பராக்.." தீம் வரும் போது தியேட்டரில் விசில் சத்தம் காதை கிழிக்கிறது.

விஜய் சேதுபதி நடிப்பிலும், கதாபாத்திரத்திலும் கெத்து காட்டியுள்ளார். வில்லனாக நவாஸுதீன் வந்து அவரும் பங்கை சரியாய் செய்துள்ளார். மற்றபடி பலரும் திரையில் வந்து போனாலும், ரஜினியே சிறப்பாய், நிறைவாய் தெரிகிறார்.

படம் முழுக்க சூப்பர் ஸ்டார் வந்தால் மாஸும்,  விசிலும் தியேட்டரை கிழிக்க வேண்டும் என்பதில் இயக்குனர் உறுதியாக இருந்துள்ளார். அதில் வெற்றியும் பெற்றுள்ளார். பேட்ட உண்மையிலேயே மரண மாஸ் !

சினிமா ரசிகனின் பார்வை-

இன்னும் எத்தனை நாளுக்கு தான் சூப்பர் ஸ்டாரை நாங்கள் ஒரு மாஸ் ஆக்ஷன் கமர்ஷியல் ஹீரோவாகவே பார்ப்பது என தெரியவில்லை. தீவிர ரஜினி ரசிகன் அதை தான் எதிர்பார்க்கிறான் என்று வைத்து கொண்டாலும், அவருள் இருக்கும் நடிப்பு திறமையையும், கதாபாத்திரத்தின் மூலம் மாஸ் சேர்த்து திரையில் காண்பதே என்னை போன்ற சூப்பர் ஸ்டாரின் /சினிமா ரசிகர்களுக்கு பிடிக்கும். அதை தான் விரும்புவார்கள். 

இரண்டு நாயகிகள் இருந்தும் இருவரும் நான்கு/ ஐந்து சீன்களுக்கு மேல் வரவில்லை. ஓவர் பில்டப், எல்லோரும் ஹீரோவின் துதி பாடுவது, ஜோக் என்ற பெயரில் கிச்சு கிச்சு மூட்ட முயல்வது, பிளாஷ்-பாக், பகை, பழிவாங்கல் சென்டிமென்ட், காதல் என அதே கமர்சியல் பார்முலா.

ஏற்கனவே கபாலி, காலா, 2.0 என படங்கள் சூப்பர் ஸ்டாரின் பார்முலாவிலிருந்து விலகி வந்திருந்தாலும், திரைக்கதையில் தெளிவோ, பலமோ இல்லாதால் படம் விமர்சனங்களுக்கு உள்ளானது .

ஜிகர்தண்டா அசால்ட் சேது போல, ரமணா பிரொபஸர் போல,  வடசென்னை ராஜன் போல ஏதாவது ஒரு செம வெயிட்டான கதாபாத்திரத்திலோ, அரசியல் திரில்லர் போல, மிஸ்ட்ரி திரில்லர் என ஏதாவது ஒரு வித்தியாசமான ஒரு திரைக்கதையிலோ தலைவரை தரிசிக்க வேண்டும் என தோன்றுகிறது. பின்வரும் காலங்களில் யாரவது இப்படி எடுத்தால் நலம். கோடி புண்ணியம்.

அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் !


நன்றி!!!
பி.விமல் ராஜ்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

1 Comments:

Kasthuri Rengan சொன்னது…

நேர்த்தியான விமர்சனம்