செவ்வாய், 28 ஜூன், 2022

யாருக்கான பெருமை இது ? : June Pride

வணக்கம்,

பொதுவாக நம் எல்லோருக்கும் இரு பாலினங்கள் இருக்கிறது என தெரியும். ஒன்று ஆண், இன்னொன்று பெண். சினிமா மூலமாகவும், ஏதாவது ஃபாரம் எழுதும் போதும் ஆண், பெண், திருநங்கை என மூன்றாம் பாலித்னதை பற்றியும் நாம் அறிந்திருப்போம். ஆனால் இந்த மூன்று பாலினத்தையும் தவிர 76 வகையான பாலின வகைகள் இருக்கிறது. அதற்கான மக்களும், அவர்களுக்கான ஆதரவும் உலகெங்கும் பரவி இருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. இவர்களை பற்றி தான் இப்பதிவில் பார்க்க போகிறோம்.

இந்த ஜூன் மாதத்தை Pride June என்று சொல்கிறார்கள். பல்வேறு நாடுகளில் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள். 1969 களில் மேற்கத்திய நாடுகளில் மாற்று பாலின மக்களுக்கும், அதே பாலினத்தின் மீது விருப்பு கொண்டவருக்கும்சில போராட்டங்களுக்கு பின்னர் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதை கொண்டாடும் விதமாகதான் இந்த ஜூன் மாதத்தில் LGBTQ/ LGBTQIA (Lesbian, Gay, Bisexual,Transgender, Queer, Intersex & Asexual) என்று சொல்லப்படும் திருநங்கைகள், திருநம்பிகள், ஓரின சேர்க்கையாளர்கள், ஈரின சேர்க்கையாளர்கள் என எல்லோரும் ஒன்று கூடி ஊர்வலம் போகிறார்கள். வானவில் நிறங்களில் கொடியேந்தி, முகத்தில் வண்ணம் பூசி ஊர்வலவாக சென்று கொண்டாடுகிறார்கள். 

LGBTQ flag-June pride

கடந்த 10/20 ஆண்டுகளுக்கு முன் வரை இந்த கேளிக்கை கொண்டாட்டங்கள், பாலின சேர்க்கை பற்றிய திரைப்படங்களும், விவாதங்களும், அதற்கான ஆதரவுகளும் வெளிநாடுகளில் மட்டுமே நடந்து கொண்டிருந்தன. ஆனால் சில ஆண்டுகளாக நம் நாட்டிலும் இதற்கான குரல்கள் ஒலிக்க தொடங்கியிருக்கிறது.

இரு நாட்களுக்கு முன் சென்னை, கோவை, மதுரை, ஹைதராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம், புது தில்லி, மும்பை என நாடு முழுவதும் இதற்கான கொண்டாட்ட ஊர்வலங்கள் நடந்து வருகிறது. இதற்கு முன் நம்மூரு மக்களுக்கு இந்த சமாச்சாரம் பற்றி பெரிதாய் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

வடஇந்தியாவில் சில பாலிவுட் படங்கள் மூலமாகவும் (Dostana, Girlfriend, Fire, Monsoon Wedding..), செய்திகளில் சில lesbian மற்றும் gay சம்பவங்களாலும் நமக்கு அறிமுகமாயின. தமிழிலும் ஆங்காங்கே சில படங்களில் இது போன்ற ஓரின சேர்க்கை பற்றி தொட்டும் தொடாமலும் வந்து சென்றது (பொம்மலாட்டம், கோவா, வேட்டையாடு விளையாடு...). மற்ற மொழிகளிலும் இந்த கதையமைப்பை கொண்ட படங்கள் வந்து கொண்டு தான் இருந்தன. ஆனால் இப்போதைய OTT காலத்தில், வெப் சீரிஸ்களிலும், படங்களிலும் நேரடியாக ஓரின சேர்க்கையை ஆதரித்தும், அந்த வாழ்க்கை சரியன்றும் சொல்லி படம் எடுத்துள்ளனர். அப்படங்கள் வந்த இடம் தெரியாமல் போனதும், பெரிதாய் யாரும் கண்டு கொள்ளவில்லை என்றாலும், இது போன்ற படங்கள் எதை ஊக்குவிக்கின்றன என தெரியவில்லை. இதை பார்த்து வருங்காலம் கெட்டுவிடும் என்றோ, கலாசாரம் சீர்கெட்டு போகும் என்பதோ என் வாதம் அல்ல. இதை இப்போது இங்கு ஏன் திணிக்க அல்லது மக்களிடையே பரப்ப முயல்கிறார்கள் என்ற கேள்விதான் எனக்குள் புரியாமல் ஓடிக்கொண்டிருகிறது. 

ஆட்டிசம் என்பது ஒரு கொடிய நோயல்ல; ஓர் மன ரீதியான கோளாறு மட்டுமே என்று சொல்வதை போலவும், கொடும் தொற்று நோயால் பாதிக்கபட்டவர்கள் ஒதுக்கி வைக்க பட வேண்டியவர்கள் இல்லை என்று சொல்வதை போலவும், இது போன்ற ஓரின சேர்க்கை, மூன்றாம் பாலினம் போன்ற பிரச்சனைகள் ஒருவகையான ஹார்மோன் கோளாறு மட்டுமே என்றும், இவர்களை ஒதுக்கி வைக்காமல் ஆதரவு கொடுக்க வேண்டும் என சொல்லி விழிப்புணர்வு செய்ய வேண்டிய சில தனியார் அமைப்புகளும், திரைத்துறையினரும் இதை ஒரு வேறு வடிவில் மார்க்கெட்டிங் ப்ரோமோஷன் செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கான காரணம் தான் ஏன் என புரியவில்லை.

சாதி மறுப்பு திருமணம் செய்தால் சாதி ஒழியும் என சொல்கிறார்கள்; பெண்கள் படித்தால் நாளைய சமூகம் நன்றாக முன்னேறும் என சொல்கிறார்கள். அது போல இந்த LGBTQ ஊர்வலங்கள் எதை குறிக்க ஊர்வலம் செல்கின்றது என இதை பெரிதாய் ஊக்குவிப்பவர்கள் தான் சொல்ல வேண்டும்.

தனி மனித சுதந்திரம் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் இந்த மீடியாக்கள் ஆதரித்து ப்ரோமோஷன் செய்யலாம் என்ற எண்ணம் ஏன்? எப்படி? வந்தது என தெரியவில்லை.    

இது போல எண்ணம் கொண்டவர்கள் அல்லது மக்கள் யாவும் நம்மை போலவே சாதாரண மக்கள் தான். யாரும் தம் குடும்பத்தில் திருநங்கையோ, திருநம்பியோ அல்லது இன்ன பிறபாலினங்களோவோ இருக்க வேண்டும் என்று வேண்டி கொண்டோ, ஆசைப்படுவதோ இல்லை. உடலில் ஹார்மோன் ரீதியான பிரச்சனைகள் காரணமாக இந்த எண்ணங்கள் வருகிறது என சொல்கிறார்கள். அவர்களை வெறுக்காமல் ஆதரவு அளித்து அவர்கள் போக்கில் வாழ விட்டு விடவேண்டும். அதை விடுத்து இது போன்ற கேளிக்கை கொண்டாட்டங்கள் அவர்களுடைய நடைமுறையை ஊக்குவிவைப்பது போலவும், இதை பற்றி தெரியாத மற்றவர்களுக்கு நாமே டமாரம் அடித்து இப்படி இருந்தாலும் பரவாயில்லை.. தப்பில்லை என இயற்கைக்கு மாறான ஒன்றை நாமே சொல்லி கொடுப்பது போல தான் இருக்கிறது.  

இரு நாட்களாய் பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக வரும் வீடியோக்களை பார்த்த பின் தோன்றியதையே இங்கு பகிர்ந்துள்ளேன்.


நன்றி!!!

பி.விமல் ராஜ்

சனி, 4 ஜூன், 2022

விக்ரம் - சினிமா விமர்சனம்

வணக்கம்,

கிட்ட தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பிறகு உலக நாயகனின் படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல் ஹசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சூர்யா என நட்சத்திர பட்டாளத்துடனும், பெரும் எதிர்பார்ப்புடனும் படம் வெளிவந்துள்ளது.

படத்தின் டைட்டில் டீஸரே "Once Upon a Time There Lived a Ghost" என ஆரம்பித்து பலரை விருந்துக்கு அழைத்து, வேட்டு வைப்பது என அதகளமாய் இருந்தது டீசர். ட்ரைலரிலும் மாஸான ஆக்ஷன் த்ரில்லராகவே காட்டியுள்ளனர். மேலும் பல சினிமா டிகோடர்கள் மார்வல் யூனிவெர்ஸ் போலவே லோகேஷ் யூனிவெர்ஸ் இருக்கிறது; இந்த படத்துக்கும் கைதி படத்துக்கும் சில ஓற்றுமைகள், கனெக்ஷன் இருக்க போகிறது என்ன சொல்லி யூகித்து வந்தனர். பகத் பாசில் போலீஸ், கமலின் மகன் தான் சூர்யா, ட்ரைலரில் காட்டிய அந்த குழந்தையே சூர்யா தான் என நாளொரு நாளாய் ஒவ்வொரு புதிய அப்டேட்டுகளை விட்டு கொண்டே இருந்தது விக்ரம் பட டீம்.

இந்த எதிர்பார்புகளையெல்லாம் மனதில் கொண்டு படம் பார்க்கலாம் என நினைக்கும் போது, ரிலீசன்று விக்ரம் படம் பார்க்க வரும் முன் கைதி படத்தை ஒருமுறை பார்த்துவிட்டு வாருங்கள் என இயக்குனர் கோரிக்கை விட, அப்போதே தெரிந்து விட்டது இவை இரண்டுக்கும் கனெக்ஷன் உண்டு என்று. இரண்டு படங்களையும் எப்படி லிங்க் செய்தார்கள்,  கதை எப்படி ஆரம்பித்து முடிகிறது என்பதை பார்ப்போம். ஆரம்பிக்கலங்களா ???

vikram-movie-review

போலீஸ் கையில் பிடிபட்ட பல கோடி மதிப்புள்ள கோகெயின் சரக்குக்காக போலீஸ் அதிகாரி காளிதாஸ் ஜெயராம் கொல்லப்படுகிறார். அதனால் கொண்ட ஆத்திரமும், நாட்டை போதையியில்லா  நாடாக்கும் முயற்சியிலும், தனி மனித புரட்சியாக காளிதாஸின் தந்தையாக உலக நாயகன் கமல் ஹாசனின் அதிரடி வேட்டையே விக்ரம் படத்தின் கதை.  

கைதி படத்தில் உள்ள சம்பவங்களை இதில் சீக்குவலாக சேர்த்துள்ளனர். கைதியில் வில்லனாக வந்த நார்கோட்டிக்ஸ் அதிகாரி, நரேன், திருச்சியில் பிடிபட்ட 1 டன் சரக்கு என சில விஷயங்கள் இதிலும் வருகிறது. போனஸாக அடைக்கலம், அன்பு, டில்லி, காமாட்சி என கிளைமேக்சில் பலரையும் காட்டி இன்னும் பூஸ்டப் கொடுத்துள்ளனர். 

மேலும் அடுத்த சீக்குவலுக்கு இப்போவே லீட் கொடுத்து சூர்யாவை எல்லோருக்கும் மேல் பெரிய வில்லனாக காட்டியுள்ளனர். சூர்யா இதில் நடிக்கிறார் என்பதை படக்குழு சொல்லாமலேயே சஸ்பென்சாகவே வைத்திருக்கலாம். அது இன்னும் அல்டிமேட் ட்விஸ்ட்டாக இருந்திருக்கும்.

இயக்குனரின் மற்ற படம் போலவே பெரும்பாலும் இருட்டிலேயே கதை நகர்கிறது. அன்பரிவின் ஸ்டண்ட்டும் அனிருத் பின்னணி இசையும் அதிரடியாகவும், அட்டகாசமாகவும் இருக்கிறது. படத்தில் எதிர்பாராத இடங்களில் பல ட்விஸ்ட்கள் இருக்கிறது. அதுவே படத்தின் பெரும் பலம். இன்டெர்வல் ட்விஸ்ட், டினா ட்விஸ்ட், வில்லன் ட்விஸ்ட், கிளைமேக்சில் இரு ட்விஸ்ட்கள் என ஹைப்பர் ஏறிக்கொண்டே போகிறது. 

உலகநாயகனின் நடிப்பு சொல்லவே தேவையில்லை. கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம். கருப்பு வெள்ளை தாடியும், முடியுமாய் கரகர குரலில் நடிப்பில் மிரட்டி எடுத்திருக்கிறார். குழந்தையோடு வரும் பாடலிலும், மகனுக்காக அழும் போதும், கோபப்படும் போதும்  வாழ்ந்திருக்கிறார். 

ஃபகத் பாசில் எப்போதும் போல சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். போலீஸ் ஏஜெண்டாக வந்து குற்ற சம்பவங்களை தன் டீமுடன் கண்டுபிடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காயத்ரி. சில காட்சிகள் மட்டுமே வந்து இறந்தும் விடுகிறார். விஜய் சேதுபதி மெயின் வில்லனாக எப்போதும் போல அசத்தியுள்ளார். அவரது அறிமுக காட்சியும், பல்லிடுக்கில் அவர் வைக்கும் போதை மருந்து மேனரிஸமும், வீட்டில் பாம் வைத்துள்ளனர் என்று தெரிந்தவுடன் அவர் பதறும் விதமும் அருமை. 

சில இடங்களில் லாஜிக் சறுக்கல்களும், வேகதடைகளும் இருக்கதான் செய்கிறது. கிளைமேக்ஸில் தீபாவளி கொண்டாடுவது போல குண்டுகள் வெடித்து சிதறிக்கொண்டிருந்தாலும் போலீஸ் அந்த பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. கமல் எப்படி தலைமறைவாகவே இருந்தார்.? ஆயுதங்களை எப்படி அங்கு கொண்டு வந்தார்?? என நீள்கிறது சந்தேகங்கள்... மேலும் படத்தின் வேகதடைக்கு காரணம் கதையின் நீளமா ? இல்லை தொடர் சண்டை காட்சிகளா? என்னவென்று தெரியவில்லை. 

ஆனால் அந்த சறுக்கல்களெல்லாம் கதையின் ஓட்டத்தில் ம(றை)றந்து விடுகிறது. ஏற்கனவே இயக்குனர் கைதி எடுக்கும் போதே சீக்குவலுக்கு யோசித்து தான் எழுதினாரா? இல்லை விக்ரம் கதைக்காக கைதி படத்துடன் சேர்த்து வருமாறு திரைக்கதை எழுதினாரா என தெரியவில்லை. இரண்டுமே நன்றாகவே பொருந்தியிருக்கிறது. விக்ரம் -3 -ல் சூர்யாவின் வில்லத்தனம், அதோடு இன்னும் சில ஆசிரிய திருப்பங்களை வைத்துள்ளாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.


நன்றி!!!

பி. விமல் ராஜ்