வியாழன், 30 மார்ச், 2023

நீரும் சோறும் - தமிழர் பண்பாடு

வணக்கம்,

தமிழரின் பண்பாடு மிக தொன்மையானது. சங்க காலத்துக்கும் முந்தையது. மனித வாழ்வியலில் அதுவும் குறிப்பாக தமிழர் வாழ்வியலில் நீருக்கும் சோறுக்கும் முக்கிய இடம் உண்டு. அதனை பற்றிய சற்றே பெரிய பதிவு இது.

நீர்:
இப்போது போலவே பன்நெடுங்காலம் முதல் தமிழ்நாடு வெப்ப மண்டலத்தை சேர்ந்த பகுதியாக விளங்கி வருகிறது. எனவே நீரின் தேவையும், நீர் குறித்த நம்பிக்கையும், அதனை ஒட்டிய பண்பாடும் தமிழர் வாழ்வில் மிக முக்கிய பங்காற்றுகிறது.

"இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்" என 10ஆம் நூற்றாண்டு பிங்கல நிகண்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழ் மொழி இனிமையானது என்றும், (நீர்மை) தன்மையானது, இயல்பானது என்றும் பொருள் தரும். தமிழை நீருடன் ஒப்பிட்டு உயர்வாக சொல்கின்றனர். குளிர்ச்சியுடையது, தன்மையுடையது என்பதால் நீரை 'தண்ணீர்' என தமிழர்கள் சொல்கிறார்கள். நீரினால் உடலை குளிர்விப்பதால் குளி(ர்)த்தல் என சொல்கிறார்கள்.

திருக்குறளில் வானத்திலிருந்து நீர் (மழையாய்) வருவதால் அதனை அமிழ்தம் என்றும், நீரின்றி இவ்வுலகத்தில் ஒன்றுமில்லை என்றும் சொல்லப்படுகிறது.

"வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று."

"நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு"


சங்ககாலம் முதல் தமிழர்கள் நீர்நிலைகளை பல பெயர்களை வைத்து அழைத்துள்ளனர். சுனை, கயம், பொய்கை, ஊற்று ஆகிய நீர்நிலைகள் தானே நிலத்திலும் மலையிலும் ஊறி வரும் தன்மை உடையது. மழை நீர் தேங்கி நிற்கும் சிறிய இடம் 'குட்டை' என அழைக்கப்படும். குளிப்பதற்கு பயன்படும் நீர் என்பதால் 'குளம்' என்றும், ஆற்றிலிருந்த்து பிரிந்து ஓடிக்கொண்டே இருப்பது 'ஓடை' என்றும், உண்பதற்கும் குடிப்பதற்கும் பயன்படுவதால் 'ஊருணி' என்றும், ஏர் (உழவு) தொழிலுக்கு பயன்படும் நீர் 'ஏரி' என்றும், மற்ற நீரை சேர்த்து ஏந்தி வைக்கும் இடம் 'ஏந்தல்' என்றும், கண்ணாறுகளை உடையது 'கண்மாய்' என்றும் பெயரிட்டு தமிழர்கள் அழைத்து வந்தனர். இப்படி தமிழ் மொழியில் பெரும்பாலான சொற்கள் காரணப்பெயர்களாகவே இருப்பது வியப்பு!

நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்பதில் யாருக்கும் சிறிதளவும் ஐயமில்லை.1800 ஆண்டுகளுக்கு முன் காவேரி கரையில் கட்டிய கல்லணை அதற்கு மிக சிறந்த சான்றாகும். மேலும் 9ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட மிகப்பெரிய வீரநாராயண ஏரி (வீராணம் ஏரி), மதுராந்தகம் ஏரி என பல நீர்நிலைகளை கட்டி வீணாய் கடலில் கலக்கும் நீரை உழவுக்கும், மக்களுக்கும் பயன்படுமாறு செய்துள்ளனர்.

ஆற்று நீர் எப்படி ஒரு இடத்திலிருந்து மறுஇடம் போகிறதோ, அது போல தெய்வங்களும் இடம் பெயர்ந்து போகும் என்பது தமிழர் நம்பிக்கை. தெய்வ வழிபாட்டின் போது கரகம் குடங்களில் மஞ்சள் நீரை ஏந்தி வருவார்கள். மஞ்சள் நீர் கலந்த குடத்தை சாமியாடிகளின் தலையில் ஊற்றி குளிர்விப்பார்கள். அப்படி செய்தால் தெய்வம் குளிர்விக்கும் என்பதும் ஒரு நம்பிக்கை.

தமிழகம் வறண்ட பகுதி என்பதால், நெடுஞ்சாலைகளில் கோடைகாலத்தில் நீர்ப்பந்தல் வைப்பது அக்காலம் முதல் அறமாக பார்க்கப்பட்டது. வீடுகளிலும் செம்பு பாத்திரத்தில் நீரை ஊற்றி பூசை வேளையில் வைப்பார்கள். செம்பு குவளையிலும் நீரில் பூவையும், பூ இதழ்களையும் போட்டு வைப்பார்கள். இன்றளவும் (மஞ்சள்) நீராடுவதை ஒரு சடங்காகவே வைத்திருப்பவர்கள் நம் தமிழர்கள்.

நீரடித்து நீர் விலகாது.
தண்ணீரிலே தடம் பிடிப்பான்.
தாயையும் தண்ணீரயும் பழிக்கலாமா?

இது போன்ற பல பழமொழிகளும், மரபு தொடர்களும் நீரை வைத்து இயன்றளவும் சொல்லப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நம் வாழ்விலும், பண்பாட்டிலும் நீர் எப்படி நீக்கமற நிறைந்துள்ளது என்பதை அறியலாம்.

Neerum soorum

சோறு:
நீரை போலவே தமிழர் பண்பாட்டோடு சோறு (உணவு) எப்படி ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது என்பதை படித்து ருசிகர புசிக்கலாம்.

ஆதி மனிதன் முதல் இன்று வரை அனைவரும் ஓடி திரிந்து வேலை செய்தது உணவுக்காக தான். காற்றையும் வெளிச்சத்தையும் உண்டு உயிர்வாழும் உயிரினங்களுக்கு மத்தியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே புவியியல் நிலைமைகளை அறிந்து உடலுக்கும் மனதுக்கும் ஏற்ற உணவு வகைகளை உண்டு வாழ்ந்துள்ளனர் தமிழர்கள். ஒரு குறிப்பிட்ட மக்களுடைய பண்பாட்டை, தொன்மையை அறிய அவர்தம் உணவு பழக்க வழக்கங்களை கவனிக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. தமிழர்கள் நிலங்களை ஐவகை திணையாய் பிரித்து வாழ்ந்து வந்தவர்கள். அவர்கள் வாழ்கின்ற நிலத்தின் விளைப்பொருட்கள், உற்பத்தி முறை, சமுக பொருளாதார படிநிலைகள் ஆகியவற்றை கொண்டு உணவு பழக்கவழக்கங்கள் அமையும். அத்தகைய சிறந்த வழக்கத்தையே தமிழர்கள் கொண்டிருந்தனர்.

குறிஞ்சித் திணை -  மலைநெல், மூங்கில் அரிசி, தினை

முல்லைத் திணை -  தினை, சாமை, நெய், பால்
மருதத் திணை -  செந்நெல், வெண்நெல், அரிசி
நெய்தல் திணை - மீன், உப்பு விற்று வரும் உணவுப் பொருள்
பாலைத் திணை - வழிப்பறியினால் வரும் பொருள்

இன்று போலவே அன்றும் தமிழர்கள் புலால் உணவான மீன், ஆடு, கோழி, மாடு, பன்றி ஆகிய  இறைச்சி வகைகளை சமைத்து உண்டு கொண்டிருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. 'சமைத்தல்' என்ற சொல்லுக்கு பக்குவப்படுத்துதல் என்று பொருள். அடுப்பில் வைத்து சமைப்பதால் அடுதல் என்றும் பொருள் தரும். சமையல் செய்யும் இடம் காட்டில் அல்லது அடுக்களை என்று அழைக்கப்பட்டது. வீட்டுக்கு கடைசியில் இருப்பதால் அடுப்பாங்கிடை என அழைக்கப்பட்டு பின்னாளில் மருவி அடுப்பங்கரை என ஆனது.  நீரிட்டு அவித்தல், வேக வைத்தால், வறுத்து வைத்தல், சுடுதல், வற்றலாக்குதல், எண்ணெயிட்டு பொரித்தல், ஊறவிட்டு வேகவைத்தல் ஆகியவை சமையலின் முறைகளாகும். 

எளிய மக்கள் நிறைய நீரில் தானியங்களை வேகவைத்து உண்பது கஞ்சியாகும். கஞ்சியினை “நீரடுபுற்கை” என்கிறார் திருவள்ளுவர். கஞ்சியில் சேர்க்கப்படும் மற்றொரு பொருள் மோர். வற்றல் என்பது மழைக்காலத்திற்கு எனச் சேமிக்கப்பட்ட உணவாகும். காய்கறிகள் நிறையக் கிடைக்கும் காலத்தில் உப்புக் கலந்த மோரில் ஊறவைத்துப் பின்னர் வெயிலில் நீர் வற்றக் காயவைத்துச் சேமிப்பர். வெண்டை, மிளகாய், பாகல், சுண்டை, கொவ்வை, கொத்தவரை, கத்தரி, மணத் தக்காளி ஆகியன வற்றலுக்கு உரிய காய்கறிகள். 

காய்கறி என்ற சொல் காய்களையும் மிளகையும் சேர்த்துக் குறிக்கும். கி.பி. 15ஆம் நூற்றாண்டில்தான் சிலி நாட்டில் இருந்து வந்த மிளகாய் தமிழ் நாட்டிற்குள் புகுந்தது. அதுவரை தமிழர் சமையலில் உறைப்புச் சுவைக்காக கறுப்பு மிளகினை மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இறைச்சி உணவிற்கு அதிகமாகக் கறியினைப் பயன்படுத்தியதால் இறைச்சியே “கறி” எனப் பின்னர் வழங்கப்பட்டது. வெள்ளை மிளகினைத் தமிழர் குறைவாகவே பயன்படுத்தியுள்ளனர். பழந்தமிழர் உணவு வகைகளைக் கூர்ந்து கவனித்தால் ஓர் உண்மை புலப்படும். தமிழர் உணவு முறைகளில் வறுத்தும், சுட்டும், அவித்தும் செய்யப்படும் உணவுப் பண்டங்களே அதிகமாக இருந்தன. எண்ணெயில் இட்ட பண்டங்கள் அண்மைக் காலங்களிலேயே மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் தயாரிப்பில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் நிலக்கடலை எண்ணெய்யும் விஜயநகர ஆட்சிக் காலத்திலேயே இங்கு அறிமுகமானது.

அறுவடை செய்யப்பட்ட நெல்லைப் பாதுகாப்பாக சேமித்து வைக்க பெரிய மண் பானைகள், பத்தாயம் அல்லது குதிர் எனும் மரப்பலகைகளால் செய்யப்பட்ட அமைப்பு மற்றும் செங்கற்கள் கொண்டு அமைக்கப்பட்ட நெற்களஞ்சியங்கள் ஆகியவை பண்டைய நாட்களில் இருந்தன.

உப்பு
உணவில் சுவைக்காக சேர்த்து கொள்ளப்படுவது உப்பு. அந்த உப்பு நம் உணவிலும் வாழ்விலும் மனித குல வரலாற்றிலும் பெரும் பங்கு வகிக்கிறது.  மனிதனின் நாகரிக வளர்ச்சியில் நெருப்பை உருவாக்கக் கற்றதுபோல் உப்பினைப் பயன்படுத்தக் கற்றதும் ஒரு முக்கியமான அறிவியல் நிகழ்ச்சிதான். 

உப்பு என்ற தமிழ்ச் சொல்லுக்குச் ‘சுவை’ என்றுதான் பொருள்.  இனிப்பு, கசப்பு, துவர்ப்பு என்று சுவைகளெல்லாம் உப்பு என்ற சொல்லை அடியாகக் கொண்டே பிறந்தவை. சமையலுக்கு பயன்படுத்தப்படும். உப்பிற்கு ‘வெள்ளுப்பு’ என்று பெயர் பழந்தமிழ் நாட்டுப் பொருளாதாரத்திலும் தமிழ் பண்பாட்டிலும் உப்புக்குத் தனி இடம் உண்டு. பழந்தமிழர்களால் சுவையின் சின்னமாகவும் வளத்தின் சின்னமாகவும் உப்பு கருதப்பட்டது. தன் உருவம் தெரியாமல் பிற பொருள்களோடு கலந்து பயன்தருவது வெள்ளுப்பு ஆகும். 

செய்த வேலைக்கு மாற்றாக நெல்லும் (சம்பாவும்) உப்பும் (அளத்தில் விளைவது) கொடுத்த வழக்கத்தினால்தான் ‘சம்பளம்’ என்ற சொல் பிறந்தது என்பர் சிலர். ஆங்கிலத்திலும் Salary என்ற சொல் Salt என்பதன் அடியாகப் பிறந்தது என்றும் கூறுவர்.

ஒருவர் இறந்த எட்டாவது அல்லது பத்தாவது நாளில் இறந்தார்க்குப் படைக்கும் உணவுகளை உப்பில்லாமல் செய்யும் வழக்கம் இன்னமும் பல சாதியாரிடத்து இருக்கின்றது. உப்பு உறவின் தொடர்ச்சிக்கு உள்ள ஒரு குறியீடு ஆகும். இறந்தாரோடு உள்ள தொடர்பை அறுத்துக் கொள்ளவே இவ்வாறு செய்கின்றார்கள். உப்பு நன்றி உணர்ச்சியின் தோற்றுவாய் ஆகவும் கருதப்படுகிறது. தின்ற உப்பிற்குத் துரோகம் செய்வது என்பது நன்றி மறந்ததனைக் காட்டும் வழக்கு மொழி. 'உப்பிட்டவரை உள்ளவும் நினை'; 'உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பான்',  போன்ற பழமொழிகள் மக்களின் வாழ்க்கை முறை உப்போடு கலந்துள்ளதை அறியலாம்.

பழந்தமிழ் நாட்டின் மிகப் பெரிய சந்தைக்குரிய உற்பத்திப் பொருளாக உப்புதான் விளங்கியிருக்கிறது. கடற்கரையில் விளையும் உப்பினை வண்டிகளில் ஏற்றிச் செல்லும் ‘உமணர்’ என்ற வணிகர்களைப் பற்றிய செய்திகள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. கிறித்துவுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த அழகர் மலைத் தமிழிக் கல்வெட்டு உப்பு வணிகன் ஒருவனையும் குறிக்கிறது. உப்பு விளையும் களத்திற்கு அளம் என்றும் பெயர். பெரிய உப்பளங்களுக்கு அரசர்களின் பட்டப் பெயர்களைச் சூட்டியிருக்கிறார்கள். அவை பேரளம், கோவளம் (கோ+அளம்) என்ற பெயர்களில் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ் நாட்டின் சமூகப் படிநிலைகளை அடையாளம் காட்டும் பொருள்களில் ஒன்றாகவும் உப்பு விளங்கியுள்ளது. ஆக்கிய சோற்றோடு உப்பைச் சேர்த்து உண்பது ஒரு வழக்கமாகும். சாதிய ஒடுக்குமுறை கடுமையாக இருந்த அக்காலத்தில் ஒடுக்கப்பட்ட சாதியார், சோறு உலையில் இருக்கும்போதே அதில் உப்பையிடும் வழக்கத்தைக் கொண்டு இருந்தனர். இலையில் தனியாக உப்பிட்டு உண்ணும் வழக்கம் மேட்டிமையின் சின்னமாகக் கருதப்பட்டது போலும்.

சோறு விற்றல் 
பண்டை காலத்தில் சோறு நீரும் என்றுமே விற்பனைக்கு இருந்ததில்லை. ஏனெனில் பசிக்கும் தாகத்துக்கும் வந்தவரிடம் காசு வாங்குவது பாவம் என்று என்னும் வழக்கம் உடையவர்கள் தமிழர்கள். நெடுந்தூரம் பயணிப்பவர்கள், வெளியூரிலிருந்து வருபவர்கள் என பொதுமக்கள் தங்கவும் இளைப்பாறவும் சத்திரங்களும், சாவடிகளும் இருந்துள்ளன. போன நூற்றாண்டின் இடைப்பகுதி வரை பல உணவு/ அன்னதான சத்திரங்கள் நடைமுறையில் இருந்துள்ளதை அறியலாம். கோவில்களில் வழங்கப்படும் உணவு அடியார்களுக்கும், துறவறம் பூண்டவர்களுக்கும் மடப்பள்ளியில் சமைத்து கொடுக்கப்பட்டது. இடையில் 15-ம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சிக் காலத்தில் ஊர்ச் சத்திரங்களில் சோறு விற்கப்படத் தொடங்கியது. நாயக்கர் ஆட்சிக்குப் பிந்தைய ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஹோட்டல் எனப்படும் உணவு விடுதிகள் உருவாகின. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் நகரங்கள், சிறு நகரங்களில் காசுக்கு சோறு விற்கும் உணவுவிடுதிகள் உருவாகின. ஆங்கிலேயர் காலத்தில் தான் சாவடிகளும், சத்திரங்களும் உணவு விற்கும் சிறு கடைகளாக, ஓட்டல்களாக ஆரம்பிக்கப்பட்டன.

இது போல தமிழ் சமூகம் மற்றும் பண்பாடு சேர்ந்த பல விஷயங்களை நம் பண்டைய உணவு வழக்கங்கள் சொல்கின்றன. இன்று நாம் உணவில் உட்கொள்ளும் பல பதார்த்தங்களும் இத்யாதிகளும் கடந்த சில நூற்றாணடுகளில் சேர்க்கப்பட்டதாகும்.   

மானுடவியல் ஆராய்ச்சியாளர் தொ.ப. அவர்களின் 'பண்பாட்டு அசைவுகள்' மற்றும் தயாளன், ஏ.சண்முகநாதன் அவர்களின் 'மானுட வாசிப்பு-தொ.ப வின் தெறிப்புகள்' ஆகிய நூல்களை படித்து, அதன் மூலம் நான் தெரிந்து கொண்ட தமிழரின் வரலாற்று மற்றும் பண்பாட்டு தொன்மையை உங்களிடம் பகிர்ந்துள்ளேன். இதை போலவே பண்பாட்டில் மாறிய/மாற்றப்பட்ட மாற்றங்களை பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் எழுதுகிறேன்.

தகவல்கள்:
பண்பாட்டு அசைவுகள் - தொ. பரமசிவம்
மானுட வாசிப்பு - தொ.ப.வின் தெறிப்புகள் - தயாளன், ஏ.சண்முகநாதன்


நன்றி!!!
பி. விமல் ராஜ்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!

2 Comments:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பு...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அனைவரும் படித்து அறிய வேண்டிய புத்தகம். நன்றி