சனி, 4 ஜூன், 2022

விக்ரம் - சினிமா விமர்சனம்

வணக்கம்,

கிட்ட தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பிறகு உலக நாயகனின் படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல் ஹசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சூர்யா என நட்சத்திர பட்டாளத்துடனும், பெரும் எதிர்பார்ப்புடனும் படம் வெளிவந்துள்ளது.

படத்தின் டைட்டில் டீஸரே "Once Upon a Time There Lived a Ghost" என ஆரம்பித்து பலரை விருந்துக்கு அழைத்து, வேட்டு வைப்பது என அதகளமாய் இருந்தது டீசர். ட்ரைலரிலும் மாஸான ஆக்ஷன் த்ரில்லராகவே காட்டியுள்ளனர். மேலும் பல சினிமா டிகோடர்கள் மார்வல் யூனிவெர்ஸ் போலவே லோகேஷ் யூனிவெர்ஸ் இருக்கிறது; இந்த படத்துக்கும் கைதி படத்துக்கும் சில ஓற்றுமைகள், கனெக்ஷன் இருக்க போகிறது என்ன சொல்லி யூகித்து வந்தனர். பகத் பாசில் போலீஸ், கமலின் மகன் தான் சூர்யா, ட்ரைலரில் காட்டிய அந்த குழந்தையே சூர்யா தான் என நாளொரு நாளாய் ஒவ்வொரு புதிய அப்டேட்டுகளை விட்டு கொண்டே இருந்தது விக்ரம் பட டீம்.

இந்த எதிர்பார்புகளையெல்லாம் மனதில் கொண்டு படம் பார்க்கலாம் என நினைக்கும் போது, ரிலீசன்று விக்ரம் படம் பார்க்க வரும் முன் கைதி படத்தை ஒருமுறை பார்த்துவிட்டு வாருங்கள் என இயக்குனர் கோரிக்கை விட, அப்போதே தெரிந்து விட்டது இவை இரண்டுக்கும் கனெக்ஷன் உண்டு என்று. இரண்டு படங்களையும் எப்படி லிங்க் செய்தார்கள்,  கதை எப்படி ஆரம்பித்து முடிகிறது என்பதை பார்ப்போம். ஆரம்பிக்கலங்களா ???

vikram-movie-review

போலீஸ் கையில் பிடிபட்ட பல கோடி மதிப்புள்ள கோகெயின் சரக்குக்காக போலீஸ் அதிகாரி காளிதாஸ் ஜெயராம் கொல்லப்படுகிறார். அதனால் கொண்ட ஆத்திரமும், நாட்டை போதையியில்லா  நாடாக்கும் முயற்சியிலும், தனி மனித புரட்சியாக காளிதாஸின் தந்தையாக உலக நாயகன் கமல் ஹாசனின் அதிரடி வேட்டையே விக்ரம் படத்தின் கதை.  

கைதி படத்தில் உள்ள சம்பவங்களை இதில் சீக்குவலாக சேர்த்துள்ளனர். கைதியில் வில்லனாக வந்த நார்கோட்டிக்ஸ் அதிகாரி, நரேன், திருச்சியில் பிடிபட்ட 1 டன் சரக்கு என சில விஷயங்கள் இதிலும் வருகிறது. போனஸாக அடைக்கலம், அன்பு, டில்லி, காமாட்சி என கிளைமேக்சில் பலரையும் காட்டி இன்னும் பூஸ்டப் கொடுத்துள்ளனர். 

மேலும் அடுத்த சீக்குவலுக்கு இப்போவே லீட் கொடுத்து சூர்யாவை எல்லோருக்கும் மேல் பெரிய வில்லனாக காட்டியுள்ளனர். சூர்யா இதில் நடிக்கிறார் என்பதை படக்குழு சொல்லாமலேயே சஸ்பென்சாகவே வைத்திருக்கலாம். அது இன்னும் அல்டிமேட் ட்விஸ்ட்டாக இருந்திருக்கும்.

இயக்குனரின் மற்ற படம் போலவே பெரும்பாலும் இருட்டிலேயே கதை நகர்கிறது. அன்பரிவின் ஸ்டண்ட்டும் அனிருத் பின்னணி இசையும் அதிரடியாகவும், அட்டகாசமாகவும் இருக்கிறது. படத்தில் எதிர்பாராத இடங்களில் பல ட்விஸ்ட்கள் இருக்கிறது. அதுவே படத்தின் பெரும் பலம். இன்டெர்வல் ட்விஸ்ட், டினா ட்விஸ்ட், வில்லன் ட்விஸ்ட், கிளைமேக்சில் இரு ட்விஸ்ட்கள் என ஹைப்பர் ஏறிக்கொண்டே போகிறது. 

உலகநாயகனின் நடிப்பு சொல்லவே தேவையில்லை. கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம். கருப்பு வெள்ளை தாடியும், முடியுமாய் கரகர குரலில் நடிப்பில் மிரட்டி எடுத்திருக்கிறார். குழந்தையோடு வரும் பாடலிலும், மகனுக்காக அழும் போதும், கோபப்படும் போதும்  வாழ்ந்திருக்கிறார். 

ஃபகத் பாசில் எப்போதும் போல சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். போலீஸ் ஏஜெண்டாக வந்து குற்ற சம்பவங்களை தன் டீமுடன் கண்டுபிடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காயத்ரி. சில காட்சிகள் மட்டுமே வந்து இறந்தும் விடுகிறார். விஜய் சேதுபதி மெயின் வில்லனாக எப்போதும் போல அசத்தியுள்ளார். அவரது அறிமுக காட்சியும், பல்லிடுக்கில் அவர் வைக்கும் போதை மருந்து மேனரிஸமும், வீட்டில் பாம் வைத்துள்ளனர் என்று தெரிந்தவுடன் அவர் பதறும் விதமும் அருமை. 

சில இடங்களில் லாஜிக் சறுக்கல்களும், வேகதடைகளும் இருக்கதான் செய்கிறது. கிளைமேக்ஸில் தீபாவளி கொண்டாடுவது போல குண்டுகள் வெடித்து சிதறிக்கொண்டிருந்தாலும் போலீஸ் அந்த பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. கமல் எப்படி தலைமறைவாகவே இருந்தார்.? ஆயுதங்களை எப்படி அங்கு கொண்டு வந்தார்?? என நீள்கிறது சந்தேகங்கள்... மேலும் படத்தின் வேகதடைக்கு காரணம் கதையின் நீளமா ? இல்லை தொடர் சண்டை காட்சிகளா? என்னவென்று தெரியவில்லை. 

ஆனால் அந்த சறுக்கல்களெல்லாம் கதையின் ஓட்டத்தில் ம(றை)றந்து விடுகிறது. ஏற்கனவே இயக்குனர் கைதி எடுக்கும் போதே சீக்குவலுக்கு யோசித்து தான் எழுதினாரா? இல்லை விக்ரம் கதைக்காக கைதி படத்துடன் சேர்த்து வருமாறு திரைக்கதை எழுதினாரா என தெரியவில்லை. இரண்டுமே நன்றாகவே பொருந்தியிருக்கிறது. விக்ரம் -3 -ல் சூர்யாவின் வில்லத்தனம், அதோடு இன்னும் சில ஆசிரிய திருப்பங்களை வைத்துள்ளாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.


நன்றி!!!

பி. விமல் ராஜ்    


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்,லைக் பண்ணுங்க!