செவ்வாய், 24 மே, 2022

கோவிலா? மசூதியா??

வணக்கம், 

சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்படுவது இந்தியாவில் உள்ள முகலாய காலத்து மசூதிகள், கோவில்களை இடித்து கட்டப்பட்டதா? என்ற பெரும் சர்ச்சை தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஏற்கனவே 1992ஆம் ஆண்டு, அயோத்தியில் உள்ள பாபர் மசூதி (Babar Masjid) ராமஜென்ம பூமியில் கட்டப்பட்டுள்ளது என்று கூறப்பட்டு இடிக்கப்பட்டது. இதன் காரணமாக பல மத கலவரங்கள் நடந்து பலரின் உயிரும், உடமைகளும் பறிபோனது. இந்த வழக்கு 27 ஆண்டுகளுக்கு பிறகு 2019-ல் தீர்ப்பானது. இங்கு இடிக்கப்பட்ட மசூதிக்கு கீழே எந்த இந்து கோவில்களுக்கான கட்டிட அமைப்பும் இல்லை என்றும், சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் இடத்தில ராமர் கோவிலும், அதனருகே சற்று தள்ளி 5 ஏக்கர் இடத்தில் மசூதியும் கட்டி கொள்ளலாம் என கூறியுள்ளது. 

இப்போது அடுத்ததாக சில மசூதிகளையம்/முகலாய கட்டிடங்களையும் சிலர் குறி வைத்துள்ளனர். 

Dispute on Mosques in India

வாரணாசியில் உள்ள ஞானவாபி (Gyanvapi Mosque) மசூதி காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதியை இடித்து கட்டப்பட்டது என்றும், மசூதியில் உள்ள சுவற்றில் இந்து தெய்வங்களின் சிலைகள் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. மேலும் மசூதியிலுமுள்ள கிணற்றில் சிவலிங்கம் ஒன்று உள்ளதாக சொல்கிறார்கள். அதை உறுதி செய்யும் வகையில் சில புகைப்படங்களும் உலா வருகிறன்றன. அவை போலியா? உண்மையா என தெரியவில்லை. வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கு விரைவில் தீர்ப்பாக உள்ளது.

மதுராவில் உள்ள ஷாஹி இடிகா மசூதி ( Shahi Idigah Mosque) அவுரங்கசீப் காலத்தில் கட்டப்பட்டது. இது கிருஷ்ண ஜென்ம பூமியில் கட்டப்பட்டுள்ளதக சொல்கிறார்கள். கிருஷ்ணரின் கொள்ளு பேரன் வஜ்ரநாப் என்பவர் கிருஷ்ணருக்கு இங்கு கேசவ் தேவ் கோவிலை கட்டியுள்ளார். பின்னர் குப்த மன்னரிகளின் காலத்தில் புதுப்பிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. 17ஆம் நூற்றாண்டில் இக்கோவில் இடிக்கப்பட்டு ஷாஹி இடிகா மசூதி கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் 20ஆம் நூற்றாண்டில் பலரின் உதவியால், கேசவ் தேவ் கோவில் புதுப்பித்து மசூதியருகே கட்டப்பட்டு உள்ளது. புராண கதைகளின்படி கிருஷ்ணர் பிறந்த இடமான மதுரா சிறைச்சாலை, சிறுவயதில் வாழ்ந்து விளையாடிய கோகுலம், பிருந்தாவனம் ஆகிய இடங்ககள் என 13.7 ஏக்கர் இடம் சர்ச்சையில் உள்ளது. வழக்கு அலகாபாத் நீதிமன்றத்தில் உள்ளது.

மத்தியபிரதேசத்தில் தர் மாவட்டத்தில் உள்ள போஜ்சாலா - கமால் மௌலா மசூதி (Bhojsala -Kamal Maula Mosque). 2003 வரை இந்துக்கள், வசந்த் பஞ்சமியன்று இசுலாமியர்கள் நமாஸ் படித்த பின்னர் உள்ளே சென்று வழிபட அனுமதிக்க பட்டுள்ளனர். இப்போது இரு தரப்பினரும் இந்த இடத்தை சொந்தம் கொண்டாடுகிறார்கள். 10ஆம் நூற்றாண்டில் பாராமரா வம்சத்தை சேர்ந்த போஜ் மகாராஜா கட்டிய வாகதேவி (சரஸ்வதி கோவில்) என்றும், இது பாடசாலையாக இருந்துள்ளது என்றும் சொல்கின்றனர். பின்னர் டேளவார் கான் கோரி  என்னும் முகலாய அரசன் மசூதியாக மாற்றி காட்டியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த வழக்கும் மத்திய பிரதேச நீதி மன்றத்தில் விசாரணையில் உள்ளது.

அதோடு இல்லை, தில்லியில் உள்ள குதுப் மினார் (Qutub Minar) பல ஜெயின் மற்றும் இந்து கோவில்களை இடித்து முகலாய மன்னர் குதுப்புதின் ஐபக் கட்டியுள்ளார் என்று வழக்கு தொடரப்பட்டிருந்தது. இன்று (மே 24, 2022) தில்லி நீதிமன்றம் குதுப் மினார் தொல்லியல் துறைக்கு சொந்தமான இடமே என்றும், வழிபாடும் இடம் அல்ல என்றும், மீண்டும் இடித்து புதுப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தீர்ப்பை வழங்கியுள்ளது.

உலக அதிசயமான தாஜ் மகாலையும் (Taj Mahal) விட்டு வைக்கவில்லை. அது தேஜோ மஹாளயா  என்னும் சிவன் கோவில் என்றும், அதனை மாற்றி தான் மும்தாஜ் சமாதியை ஷாஜஹான் காட்டியுள்ளார் என்றும், தாஜ்மாகாலுக்கு அடியில் சிவன் கோவில் உள்ளது என்றும் சொல்கின்றனர். அடித்தளத்தில் உள்ள 22 அறைகள் இருப்பதாகவும், அதில் இந்து கோவிலுக்கான ஆதாரங்கள் இருக்கின்றது என சொல்லி வருகின்றனர். அதுபோக ஜெய்ப்பூர் அரச குடும்பத்தின் வாரிசுகளின் ஒருவரான தியாகுமாரி, தங்களின் அரச குடும்பத்துக்கு சொந்தமான இடத்தில் ஷாஜஹான் அபகரித்து தாஜ் மகால் கட்டியுள்ளார் என்று வழக்கு தொடர்ந்துள்ளார்

இன்னும் நிறைய இருக்கிறது, சென்னை மயிலையில் கபாலீசுவரர் கோவில் முன்னர் இருந்த இடத்தில் இருந்து இடிக்கபட்டு இப்போதுள்ள சாந்தோம் சர்ச் கட்டப்பட்டுள்ளது என்று சொல்கின்றனர். பிற்காலத்தில் இப்போதுள்ள இடத்தில கோவில் மாற்றி கட்டப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. 

இந்தியா முழுவதும் இதே போல பல தேவாலயங்களும், பல மசூதிகளும் கட்டப்பட்டுள்ள இடங்கள் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அனைவருக்கும் தெரிந்தது போலவே முகலாய/ஐரோப்பிய படையெடுப்புகள் மூலம் பல செல்வங்கள், வளங்கள், புராதன கோவில்கள், கட்டிடங்கள் என பலவற்றை இழந்துள்ளோம். படையெடுப்பின் போது அழிக்கப்பட்ட/கட்டப்பட்ட கட்டிடங்கள், வழிபாட்டு இடங்கள், அரண்மனைகள் என எல்லாமே சரித்திர நிகழ்வு (பிழை) தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 500 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு வரலாற்று சம்பவத்தினால் மாறிய விஷயங்கள் பல இருக்கிறது. இதை அப்படியே விட்டு விடுவதே சால சிறந்தது. அதை மனதில் கொண்டு, இப்போதுள்ள மக்கள் வழிபடும் இடத்தில் உரிமை கோருவது சிலரின் அறிவிலிதண்மையை காட்டுகின்றது. இது முழுக்க முழுக்க அரசியல் விளையாட்டு என்பதில் எள்ளவும் சந்தேகமில்லாமல் தெரிகிறது.   

1991 ஆம் ஆண்டில் இயற்றிய சட்டத்தின்படி Places of Worship Act, 1991 (வழிபாட்டு தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 1991) பாபர் மசூதி நிலப்பிரச்சினை தவிர்த்து, 15 ஆகஸ்டு 1947 முன்னர் வழிப்பாட்டுத் தலங்கள் எவ்வாறு இருந்ததோ அப்படியே தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும் என்றும், 15 ஆகஸ்டு 1947 நாளுக்கு முன்னர் வழிப்பாட்டு தலத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் அதனை எதிர்த்து வழக்காட முடியாது என்றும் கூறுகிறது. 

ஏற்கனவே அயோத்தியில் ராமர் பிறந்த இடம் என கூறி 450 ஆண்டு கால வரலாற்றை சிறப்பு மிக்க பாபர் மசூதியை இடித்தன் மூலம் இன்றும் மத கலவரங்களும் சர்ச்சைகளும் ஓடி கொண்டே இருக்கின்றது. மீண்டும் இதை தொடர்வோமாயின் இந்தியாவின் பன்முகத்தன்மையும், ஒற்றுமையும், எதிர்கால வளர்ச்சியும் கேள்விக்குறி ஆகிவிடும். 


நன்றி!!!

பி. விமல் ராஜ் 


ஞாயிறு, 15 மே, 2022

சென்னை பகுதிகளின் பெயர் காரணம்!

வணக்கம்,

தமிழ்நாட்டின் வரலாறு மிக தொன்மையானது. தமிழின் வரலாற்றை சொல்லும் போது தஞ்சை, காஞ்சி, திருச்சி, மதுரை, மாமல்லபுரம், நெல்லை என மற்ற மாவட்டங்களை பற்றி பலரும் பேசுவார்கள். ஆனால் சென்னையை பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சென்னை மாநகரம் ஒரு வேகமாக வளரும் நவீன தலைநகரம் என்று வைத்து கொண்டாலும், இதன் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. 

பல்லாவரம் அருகே மலைகளில் கற்கால சான்றுகள் இருக்கின்றன. சென்னையில் உள்ள பல கோவில்கள் 1000-1500 ஆண்டுகள் பழமையானது. அச்சமயத்தில் இந்த இடத்திற்கு சென்னை என பெயர் இருந்திருக்கவில்லை. சோழர் காலத்தில் புலியூர் கோட்டம் என்றும், தொண்டை மண்டலம் என்று அழைக்க பட்டுள்ளது. தர்மாலா சென்னப்ப நாயக்கரிடமிருந்து ஆகஸ்ட் 22, 1639-ல் மூன்று மைல் நீள இடத்தை ஆங்கிலேயர் வாங்கி, சென்னை பட்டணம் என்று பெயரிட்டனர். அதுவே பிற்காலத்தில் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு பின்னர் சென்னை ஆனது.  

ஏற்கனவே தமிழக ஊர்களின் பெயர் காரணம் என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இதில் சென்னையிலுள்ள இடங்களின் பெயர் காரணத்தை பற்றி இப்பதிவில் பார்க்கலாம். சென்னையில் உள்ள பல இடங்கள் (ஏரியாக்கள்), பாக்கம், ஊர், சாவடி, கரை, சேரி, என முடிவது  போல இருக்கிறது.

பாக்கம் என முடியும் பல ஊர்கள், நீர்நிலை (குளம்/ஏரி) அருகே உள்ள ஊராகவோ/இடமாகவோ இருக்கும். சாவடி என முடியும் இடங்கள், சுங்க சாவடி இருந்த இடமாக இருக்கும். கரை என முடியும் ஊர்கள், ஆற்றுக்கு அருகே உள்ள ஊரின் பெயராக இருக்க கூடும். பெரும்பாலான இடங்கள் கோவில் மற்றும் இந்து புராண பின்னணியில் உள்ள பெயராக இருந்திருக்கிறது. சில ஊர்களின் பெயர்கள் 18, 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் உருவாக்கபட்டு பெயர் பெற்றுள்ளது. அவற்றுள் சிலவற்றை பகிர்கிறேன்.

ஆவடி (Avadi)- 'ஆ 'என்றால் பசு, குடி என்றால் வீடு/இடம் என்பதாகும். பசுக்கள் அதிகம் உள்ள இடம் என்பதால், ஆயக்குடி அல்லது ஆவக்குடி என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் ஆவடி என அழைக்கபட்டிருக்கலாம்.

அம்பத்தூர் (Ambattur) - சக்தி பீட கோவில்களில் ஐம்பத்தி ஓராம் (51) ஊர் என்பதற்காக இப்பெயர் பெற்றது.

வில்லிவாக்கம் (Villivakkam) - வில்வ மரங்கள் அதிகம் என்பதால் இவ்விடம் வில்லிவாக்கம் ஆனது.

நடுவான்கரை (Naduvankarai) - கூவம் ஆற்று படுகை அருகே உள்ள கரை என்பதால் இது நடுவான்கரை என பெயர் பெற்றது. இப்போதைய அண்ணா நகர்.

திருவான்மியூர் (Thiruvanmiyur) - வால்மீகி முனிவருக்கு இங்கு கோவில் இருந்தது என்பதற்காக திருவால்மீகியூர் என அழைக்கப்பட்டு, பின்னர் திருவான்மியூர் ஆனது.

மந்தவெளி (Mandaveli) - கூவம் ஆறு அருகே ஆடுமாடுகள் மேயும் மந்தைகள் மிகுந்த பகுதி என்பதால் மந்தைவெளி எனஆனது.

அமைந்தகரை (Amjikarai) - கூவம் ஆற்றின் அருகே இருப்பதால் இது அமைந்தகரை.

அடையாறு (Adyar) - சென்னையில் ஓடும் இரண்டு ஆறுகளில் ஓன்று அடையாறு. அதன் பெயராலேயே இப்பெயர் வந்தது.

பட்டினபாக்கம் (Pattinapakkam) - 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பட்டினத்தார் இங்கு வந்து தியாகராஜ கோவிலில் வழிபட்டு முக்தி அடைந்ததாலேயே பட்டினம்பாக்கம் என பெயர் பெற்றது.

திருவொற்றியூர் (Thiruvotriyur) - 'ஒற்றி ஊர்' என்பதற்கு அடமான இடம் என்று அர்த்தம். பல்லவ மன்னர்கள் காலத்தில் இந்த இடம் அடமானத்தில் இருந்தது என சொல்லப்படுகிறது. அப்பெயர் பின்னாளில் திருவொற்றியூர் ஆனது.

புராண கதையின் படி, பிரளய  காலத்தில்  இந்த உலகை  அழியாமல் காக்கும் பொருட்டு சிவபெருமானிடம் எல்லோரும் வேண்டிக் கலங்கினர்அப்போது தன் நெற்றிக் கண்ணிலிருந்து வெப்பத்தை உண்டாக்கினார்அந்த வெப்பத்தைக் கொண்டு சூழ்ந்திருந்த தண்ணீரை ஒற்றி ஒற்றி எடுத்தார் என்றும் அதனால் இந்த ஊருக்கு 'திரு ஒற்றியூர்'  என்றும் பின்னர் அதுவே திருவொற்றியூர் 
என மருவியதாகவும் சொல்லப்படுகிறது.

வியாசர்பாடி (Vyasarpadi) - வியாச முனிவரின் பெயரால் இப்பெயர் வந்தது என சொல்லப்படுகிறது.

பார்க் டவுன் (Park Town ) - சென்னை சென்ட்ரல் அருகே 1970 முன் வன உயிரியல் பூங்கா ஒன்று இருந்தது. பின்னாளில் இடப்பற்றாக்குறை காரணமாக அது வண்டலூருக்கு மாற்றியமைக்கபட்டது.

கொசபேட்டை(Kosapet) - மண் பபாண்டங்கள் செய்யும் குயவர்கள் பேட்டை என்ற பெயரே கொசப்பேட்டை ஆனது.

தண்டையார்பேட்டை(Tondaiyarpet) - 18ஆம் நூற்றாண்டில் ராமநாதபுரம் மாவட்டதில் தொண்டி என்ற ஊரில் பிறந்த குணங்குடி மஸ்தான் சாஹிப் இப்பகுதியில் வாழ்ந்து மறைந்தார். அதனால் இது தொண்டியார் பேட்டை என அழைக்கப்பட்டு பின்னர் தண்டையார்பேட்டை ஆனது.

வண்ணாரப்பேட்டை (Washermanpet/Vannarapet) - பக்கிங்ஹாம் கால்வாய் அருகே துணி வெளுக்கும் தொழிலாளர்கள் வசித்த இடம் என்பதாலேயே இது வண்ணாரப்பேட்டை என்றானது
சிந்தாதரிப்பேட்டை (Chindadaripet) - துணி நெசவு செய்யும் தொழிலாளர்கள் இருக்கும் இடம். 'சின்ன தறி பேட்டை' என்பதே சிந்தாதரிப்பேட்டை ஆனது.

மயிலாப்பூர் (Mylapore)- மயில் ஆடும் ஊர். மயில் ரூபத்தில் பார்வதி சிவனை வணங்கிய இடம் என்பதால் இது மயிலாப்பூர்.

திருவல்லிக்கேணி (Triplicane) - 'திரு அல்லி கேணி'. அல்லி மலர்கள் அதிகம் பூக்கும் இடம் ஆதலால் இது இப்பெயர் பெற்றது.

எழும்பூர் (Egmore) - சூரியன் முதலில் படும் ஊர் என்பதால் எழுமியூர் என பெயர். பின்னாளில் எழும்பூர் ஆனது.

ராயப்பேட்டை(Royapettah) - தெலுங்கு பேசும் நாயக்க மன்னர்களின் தளபதிகளான ராயர்கள் இருந்த இடம் என்பதால் ராயர் பேட்டை என்று அழைக்கப்பட்டு பின்னர் ராயப்பேட்டை ஆனது.

கொத்தவால் சாவடி (Kotawal Chavadi) - 'கொத்தவால்' என்பதற்கு வரி வசூலிப்பவர் என்று பொருள். வரி வசூல் செய்யும் சாவடி இருந்திருப்பதால் இப்பெயர் வந்தது.

பூந்தமல்லி (Ponnamallee/Poondhamalli) - பூவிருந்த அல்லி - அல்லி மலர்கள் அதிகம் பூத்து குலுங்கும் இடம் அதலால் இப்பெயர் வந்தது.

சேப்பாக்கம் (Chepauk) - Che Bagh. Che -ஆறு ; Bagh - garden (தோட்டம்). ஆறு தோட்டங்கள் உள்ள இடம் என்று பொருள்.

கோடம்பாக்கம் (Kodambakkam) - Ghoda Bagh. Ghoda- குதிரை; Bagh- garden (தோட்டம்). குதிரைகளை கட்டி வைக்கப்பட்ட இடம் என போறும். அதுவே கோடம்பாக்கம் ஆனது.

சேத்துப்பட்டு (Chetpet) - 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து, சென்னையில் பல கட்டிடங்களை கட்டியவர் நம்பெருமாள் செட்டியார். அவர் பெயராலேயே இது செட்டியார் பேட்டை என அழைக்கப்பட்டது. பின்னாளில் சேத்துப்பட்டு என்றானது.

அண்ணா சாலை (Anna Salai/ Mount Road) - செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து செயின்ட் தாமஸ் மலைக்கு செல்லும் பாதை என்பதால் அது மவுண்ட் ரோடு என ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்டது. பின்னர் அது அண்ணா சாலை ஆனது.

மாம்பலம் (Mambalam) - மஹா வில்வ அம்பலம் என்ற பெயர் கொண்ட இப்பகுதி, நிறைய வில்வ மரங்களை கொண்டது. அதுவே பின்னர் மாம்பலம் ஆனது.

தேனாம்பேட்டை (Tennampet) - தென்னம் பேட்டை. தென்னை மரங்கள் அதன் இருக்கும் பகுதியாக இருந்ததால் தென்னம் பேட்டை. அதுவே தேனாம்பேட்டை ஆனது.

நந்தனம் (Nandanam) - பூத்து குலுங்கும் நந்தவனம் இருந்த பகுதி பின்னாளில் நந்தனம் ஆனது.

சைதாப்பேட்டை (Saidapet) - ஆற்காடு நவாபின் தளபதி சையது ஷாவின் பெயரால் இது சையது ஷா பேட்டை என அழைக்கப்பட்டு, பின்னர் சைதாப்பேட்டை ஆனது.

பரங்கிமலை (St. Thomas Mount) - கிருத்துவத்தை பரப்ப வந்த பரங்கியர் வாழ்ந்த /இருந்த மலை என்பதாலேயே இது பரங்கிமலை என அழைக்கப்பட்டது. இன்னொரு சிலர், பிருங்கி முனிவர் செய்த இடம் என்பதாலேயே பிருங்கி மலை என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் பரங்கி மலை ஆனது.

கிண்டி (Guindy) - பிருங்கி முனிவர் தவம் செய்து அவரின் கிண்டி (கமண்டலம்) இருந்த இடம் என்பதால் இது கிண்டி என பெயர் பெற்றது.

நங்கநல்லூர் (Nanganallur) - நங்கை நல்லூர். நங்கை என்பது திருமணம் ஆகாத கன்னி பெண்ணை குறிக்கும். இங்கு நங்கையாக இருக்கும் ராஜராஜகேஸ்வரி அம்மன் பெயராலேயே இப்பெயர் வந்தது.

மீனம்பாக்கம் (Meenambakkam) - இப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் மீன்வளம் அதிகமாக இருந்துள்ளதால் மீனம்பாக்கம் என பெயர் வந்தது.

திரிசூலம் (Thirusoolam) - இங்குள்ள திரிசூலநாதர் கோவில் பெயராலேயே இப்பெயர் வந்தது.

பல்லாவரம் (Pallavaram) - பல்லவர்கள் இருந்த இடம் என்பதால் பல்லவபுரம் என்று குழிக்கஅழைக்கப்பட்டு பின்னர் பல்லாவாம் ஆனது,

கிரோம்பேட்டை (Chromepet) -  தோல் தொழிற்சாலை இருந்த இடம் என்பதால் இது (கிராம் லெதர்) கிரோம்பேட்டை ஆனது.

தாம்பரம் (Tambaram) -  தாமாபுரம் என்ற பெயர் செங்கல்பட்டு திருகச்சூர் சிவன் கோவிலில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதுவே தாம்பரம் என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.  தாம்பு என்பது கயிரு என்று பொருளை குறிக்கும். இங்கு கயிறு திரிக்கும் தொழிற்சாலைகள் இருந்திருப்பதால் தாம்பரம் என பெயர் வந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

மாடம்பாக்கம் (Madambakkam) - திருப்புகழ் நூலில் இந்த இடத்தை பெயரை மாடையாம்பதி என்று அழைக்கப்பட்டுள்ளது. அதுவே பின்னாளில் மாடம்பாக்கம் ஆகியுள்ளது.

ராஜகீழ்ப்பக்கம் (Rajakilpakkam) - சோழ காலத்தில் மன்னர்கள் மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வர் கோவிலுக்கு சென்று விட்டு வரும் வழியில் பள்ளத்தில் இறங்கி மக்களை பார்த்த இடம் ராஜகீழ்ப்பாக்கம் என்று அழைக்கப்படுகிறது. 

பெருங்களத்தூர் (Perungalathur) - ஒரு காலத்தில் நிறைய குளங்கள் இருந்திருக்க வேண்டும். அதனாலேயே இப்பெயர் வந்தது.

இன்னும் சில இடங்களின் பெயர்கள் சமீப காலத்தில் சேர்க்கபட்டதால் காரண பெயர்கள் சரிவர தெரியவில்லை. மேலும் சில இடங்கள் வாய்மொழியின் அழைக்கப்படும் காரணமாக மட்டும் இருப்பதால் சரியான தரவுகள் நமக்குக் கிடைக்கவில்லை.


நன்றி!!!
பி. விமல் ராஜ் 


சனி, 16 ஏப்ரல், 2022

பீஸ்ட் & கே.ஜி.எஃப் : Chapter 2 - சினிமா விமர்சனம்

வணக்கம்,

இது எனது 125 ஆவது பதிவு. கடந்த 9 ஆண்டுகளாக என் எழுத்துக்கு மதிப்பு கூட்டி, எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்!!! 🙏

இரண்டு படம் ஒரே நேரத்தில் வரும் போது, எந்த படம் வெற்றி அடையும் என்ற கேள்விக்கு இரண்டு படமும் வெற்றி அடைய வேண்டும் என்று ஒரு பேட்டியில் பதில் சொல்லியுள்ளார் நம்ம 'ராக்கிங் ஸ்டார்' யாஷ். அதனால் Beast Vs KGF: Chapter 2 என்று தனித்தனியாய்  இல்லாமல், Beast & KGF: Chapter 2 என இரண்டு படத்துக்கும் ஒன்றாகவே விமர்சனம் எழுதி விடலாம் என நினைத்தேன். வாங்க விமர்சனத்துக்குள்ளே போவோம்.  இன்னைக்கி நாம முதல்ல பாக்க போற படம்...

பீஸ்ட் 

தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த தமிழ் புத்தாண்டுக்கு திரைக்கு வந்துள்ள படம் தான் பீஸ்ட். பர்ஸ்ட் லுக் வந்ததிலிலிருந்து இது வேற மாறி...வேற மாறி... என ரசிகர்களும், இயக்குனரும் மாறி மாறி சொல்லிவந்தனர். ஏற்கனவே வந்த இரு பாடல்களும் பட்டி தொட்டியெங்கும் reels போடும் அளவுக்கு போயுள்ளதால், எல்லாரையும் போல நாமும் ரிலீசுக்காக காத்திருந்தோம்.

ஒரு தீவிரவாதி கும்பல் மாலில் உள்ள மக்களை பிணைய கைதிகளாக பிடித்து வைத்து கொண்டு, அவர்களின் தலைவரை விடுவிக்க கோரி அரசை மிரட்டுகின்றனர். அதே சமயம் மாலில் செக்கூரிட்டி ஆபிஸராக வேலைக்கு போகும் ஒரு முரட்டுத்தனமான முன்னாள் உளவாளி (விஜய்) இருக்க, மக்களை அவர் எப்படி மீட்கிறார் என்பதேயே கதையாக ட்ரைலரில் காட்டினார்கள். இதற்கு முன் இயக்குனரின் டாக்டர் படத்தில் ட்ரைலரில் வேற மாறி கதையும், படத்தில் வேற மாறி டார்க் காமெடியாக காண்பித்தது போல, இதிலும் செய்வார்கள் என நினைத்தேன். ஆனால், அப்படி செய்யவில்லை; நம்மை தான் நல்லா வச்சு செஞ்சுட்டார்கள்.

டிரைலரில் சொன்ன அதே கதை தான். இயக்குனர் நெல்சன் கொஞ்சம் சீரியஸா யோசிச்சு படம் எடுத்திருந்தா செமையா வந்திருக்கும். ஆனா உண்மை என்னன்னா சீரியல் அளவுக்கு கூட யோசிக்கல. ஒரு சில காட்சிகள் தலையில அடிச்சிகிற மாறி எடுத்து வச்சிருக்காங்க. கமர்ஷியல் படத்தில் லாஜிக் பார்க்க கூடாது தான், அதுக்காக இப்படியா நெல்சன் ?


மால் போன்ற பெரிய செட், ஆப்கானிஸ்தான் செட்டெல்லாம் உண்மையிலேயே நன்றாக பிரமாண்டமாக இருந்தது.

அனிருத் இசையில் பாடல்கள் கேட்க ஜாலிலோ ஜிம்கானாவாக இருந்தாலும் இந்த இடத்தில் ஏன் இந்த பாட்டு என யோசிக்க வைக்கிறது. Beast BGM உன்மையிலேயே தாறுமாறு!👌 இப்ப கூட என் காதில் கேட்டு கொண்டே இருக்கிறது.

விஜயின் நடிப்பு மற்றும் ஸ்கிரீன் பிரசன்ஸ் குட். அவர் திரையில் அழகாய் தெரிகிறார். ஆக்ஷன், காமெடி, டான்ஸ், அவருடைய நக்கல், சர்காஸம் என எல்லாம் சரியாக செய்துள்ளார். அவர் ஏன் உளவாளி வேலையை விட்டார், ஏன் இந்த மாலில் உள்ளவர்களை காப்பாற்ற முயல்கிறார் என அதற்கான காரணத்தையெல்லாம் சரியாய் சொல்லிவிட்டு, கதையை சொதப்பி வைத்துள்ளனர்.  

நாயகி பூஜா ஹெக்டே எப்போதும் போல சில காட்சிகளுக்கிடையே வந்து போய்விட்டார். 

செல்வராகவன் என்னும் இயக்குனர் அரக்கனை, நடிக்க விட்டுவிட்டு எப்படி டம்மி ஆக்கிவிட்டார் பாருங்கள் என அங்கலாய்த்து கொள்ள வேண்டியது தான்...ஹ்ம்ம்.. அதுவும் அமைச்சருடன் அவர் பேசும் வசனங்கள் எல்லாம் லொள்ளு சபா சந்தானம் - மனோகர் வசனங்களை போல கலாய்த்து கொள்ளு(ல்லு)ம் வசனங்களாக இருக்கிறது. படம் பார்க்கும் போது நாமே அட கண்ணறாவியே என கடுப்பாகி விடுவோம்.

மலையாள நடிகர் டாம் சாக்கோ தீவிரவாதி தலைவனாக, ஹைஜாக் ஆப்ரேஷனை சரியாய் செய்யாமல், குழப்பி கடைசியில் ஹீரோ கையால் சாகிறார்.

யோகிபாபு, டாக்டரில் நடித்த மாகாளி, கிளி, வி.டி.வி கணேஷ் என எல்லோர் பாத்திரமும் வீண். முதல் இரண்டு படங்களில் டார்க்  காமெடியில் புகுந்து விளையாடிய இயக்குனர், பீஸ்ட்-ல் நம்ம டிக்கெட் காசில் டார்க் காமெடி செய்துவிட்டார். 

பெரிய நடிகரை வைத்து எந்த புது தலைமுறை இயக்குனர் இயக்கினாலும் இப்படி தான் இருக்கும் போல. நெல்சனின் அடுத்த படம் சூப்பர் ஸ்டாருடன் என யோசிக்கும் போது, இப்பவே என் கண்ணில் நீர் வழிகிறது...🙄😭

இரண்டு நாளாய் கலவையான விமர்சனம் வந்த போதும், யார் சொல்லியும் கேட்காமல், "ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன்.." என Beast க்கு போய் நான் கடுப்பில் Burst ஆனது தான் மிச்சம். விஜய் ரசிகர்கள் மட்டும் பார்த்த, சிலகிக்க வேண்டிய படம். மற்றவர்கள் இதை படித்தும் பார்க்க ஆசை என்றால், ஒரு முறை பார்க்கலாம்.

கே.ஜி.எப்: Chapter 2

கே.ஜி.எஃப் முதல் பாகத்தை தியேட்டரில் பார்க்காத பலர், இம்முறை கண்டிப்பாக தவறவிட்டிருக்க மாட்டார்கள். நானும் தான்!  K. G. F: Chapter 1 முழுவதும் ஆக்ஷன், ஆங்காங்கே அம்மா சென்டிமன்ட், ஹீரோ பில்ட்அப் என கலந்து கட்டி கமர்ஷியல் கலவையாக பான் இந்தியா படமாக கல்லா கட்டினார்கள். வசனங்களும், ஒரு சில சிலிர்க்க வைக்கும் காட்சிகளும், வசனங்களும் படத்தை வேற லெவலுக்கு கொண்டு போனது.  

அதே வேகத்தோடு இரண்டாம் பாகம் இருக்குமா? என்ற மிக பெரிய கேள்விக்குறியோடு படம் பார்க்க சென்றவர்கள், களிப்பு பெருமிததோடு தான் படம் பார்த்து விட்டு போனார்கள். பொதுவாக முதல் பாகத்தின் தாக்காதாலும், வெற்றியினாலும் தான் இரண்டாம் பாகம் எடுப்பார்கள். இங்கு படம் எடுக்கும் போதே இரண்டாக பிரித்து, இரண்டாம் பாகத்துக்கு தனி கதை என ஒரு வித வெற்றி ஃபார்முலாவை வைத்து முயற்சி செய்து, வெற்றியும் பெற்றுள்ளார்கள்.

கருடனை கொல்ல KGF வந்த ராக்கி பாய், தங்கம் இங்கிருந்து தான் எடுக்கப்படுகிறது என அறிந்து அந்த சாம்ராஜ்யதிற்குத் தானே அதிபதி ஆகி விட எண்ணி கருடனை போட்டு தள்ளுவதில் முடியும் முதல் பாகம், அவர் எப்படி அந்த தங்க சுரங்க ராஜாங்கத்தை ஆட்கொண்டார், எப்படி எதிரிகளை விழ்த்தினார், நாட்டிற்கே எப்படி சிம்ம சொப்பனமாக மாறி பின்னர் எப்படி royal death ஆகிறார் என்பதே கே. ஜி. எஃப்: Chapter 2 வின் கதை.

முதல் சீனிலேயே ராக்கியின் அம்மா வந்து கதை சொல்லுகிறார் (பிளாஷ் பேக் கட்). அது தான் கிளைமாக்ஸாக இருக்குமோ என நினைத்தேன். அதேதான்... பின்வரும் நாளில் விட்ட இடத்திலிருந்து இன்னொரு புதையல் வேட்டை கதை எடுக்க வாய்ப்புண்டு. படம் பார்ப்பவர்களுக்கு புரியும்... 😉

யாஷ் பெரிய ராஜாங்கத்தை கட்டி ஆளும் தாதா /கிரிமினல் சுல்தானாக வந்து கம்பீரமாய் செல்கிறார். சண்டை காட்சியிலும், அம்மா பாசத்தை காட்டும் போதும் அதகள படுத்தியிருக்கிறார். படம் முழுக்க கோட் சூட்டுடன் எப்போதும் கையில் பாட்டிலோடு வந்து, எதிர்பவர்களையெல்லாம் மிஷின் கன்னால் டுப்..டுப்..டுப்..டுப் என சுட்டு தள்ளி விடுகிறார். மிச்சம்வர்களை ஒரே அடியில் மட்டையாக்கி விடுகிறார். "என்னை வெல்பவன் எவனடா?" என கெத்து காட்டியுள்ளார். ஆரம்பித்தது முதல், படம் முழுக்க ராக்கி பாய் பன்ச் பேசி கொண்டே இருக்கிறார். வில்லன்ஸ் குரூப் வேறு ஹீரோக்கு பில்டப் கொடுத்து கொண்டே போகின்றனர். அதை மட்டும் கொஞ்சம் குறைத்து இருக்கலாம். 

சஞ்சய் தத் மெயின் வில்லன் அதிராவாக வந்து மிரட்டுகிறார். பல முறை அடிபட்டு, சாகும் அளவுக்கு போய், பீனிக்ஸ் பறவை போல திரும்பி வந்து ஹீரோவை எதிர்த்து கடைசியில் இறக்கிறார். பிரகாஷ் ராஜ் அவரது தந்தை இடத்தில் இருந்து கொண்டு கே. ஜி. எஃப் -ன் கதையின் இரண்டாம் பாகத்தை நமக்கு சொல்கிறார். மற்ற கமர்ஷியல் பட ஹீரோயின் போல சில காட்சிகளுக்கு மட்டும் வந்து செல்லாமல், வசனம் நிறைய இல்லையென்றாலும் படம் முழுக்க அழகாக வலம் வந்து கிளைமாக்ஸ் சண்டைக்கு காரணமாகி இறக்கிறார் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி. Chapter 1ல் முகம் காட்டாத ரவினா டன்டன், இதில் பிரதமர் ரெமிகா சென்னாக வந்து கம்பீரமாய் போகிறார். பெரிய கம்பேக் ரோல் தான். இன்னும் Chapter 1 -ல் நடித்த பலர் இதிலும் வந்து போயுள்ளனர்.

சவ சவ என இழுத்து கொண்டே போகும் படத்தின் முதல் பாதி, இண்டர்வெலில் சூடு பிடித்து "அட!" போட வைக்கிறது. இரண்டு மூன்று காட்சிகளில் "செம்ம டா" என சொல்லி நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறார் இயக்குனர் பிரசாந்த் நீல். உண்மையிலேயே படத்தை ரசிக்கும் படியாக, மாஸாக கொடுத்து யாஷ்க்கு மேலும் மாஸ் கூட்டியிருக்கிறார்.

முதல் பாகம் போல KGF சுரங்கமும், மாளிகையும் தான் இதிலும் வருகிறது. படம் முழுக்க தூசும், மண்ணும், தெறிக்கும் புல்லட்டும் தான் பறக்கிறது.

அடப்பாவிகளா.. இப்படியெல்லாம் செய்ய முடியுமா? எங்காவது நடக்குமா?? என லாஜிக் பார்க்க முடியாத, பக்கா south indian மசாலா காட்சிகளாக சில இருந்தாலும், கதையின் ஓட்டத்தில் புல்லட்டை விட வேகமாய் கடந்து மறைகிறது.

மொத்தத்தில் KGF: CHAPTER 2 என்னும் அதிரடி மாஸ் மசாலாவை அலுப்பு தட்டாமல் மீண்டும் கொடுத்திருக்கிறார்கள் கன்னட சந்தன கட்டைகாரர்கள் (Sandalwood).😁


நன்றி!!!

பி.விமல் ராஜ்

வியாழன், 7 ஏப்ரல், 2022

தீண்டத்தகாத பாத்திரங்கள் !

வணக்கம் ,

ஒரு சின்ன இடைவேளை விட்டு மீண்டும் எழுதுகிறேன். பல நாட்களாக கிடப்பில் இருந்த ஒரு பதிவை தூசி தட்டியுள்ளேன். பதிவு மட்டுமல்ல; இதன் கருத்தும் தூசி தட்டப்பட வேண்டியவை தான். கருத்தை ஒரு குட்டி கதையிலிருந்து ஆரம்பிக்கிறேன்..

ஒரு வீட்டு சமையலறையில், ஞாயிற்றுகிழமை மாலை வேளையில்...

அலுமினிய கடாய் அக்கா: ஏண்டி! எப்பவும் ப்ரில் போட்டு விளக்கி வைச்ச புது பொண்ணு மாற்றி பளபளன்னு இருப்ப... இப்போ ஏன் மங்களா பிசுபிசுன்னு இருக்கே.. இன்னைக்கி உன்னை வீட்டு ஐயா விளக்கி வைச்சாரா??

சின்ன எவர்சில்வர் டமரா: ஹ்ம்.. போங்கக்கா.. மனசே சரியில்ல..

அலுமினிய கடாய் அக்கா: ஏன்?? என்னாச்சு??? 

சின்ன எவர்சில்வர் டமரா: அக்கா, நம்மை மட்டும் என் இப்படி ஒதுக்கி வச்சுருக்காங்க.? 

அலுமினிய கடாய் அக்கா: உன்கிட்ட முட்டை ஊத்தி அடிச்சு ஆம்லெட் போடறாங்க.. என்கிட்டே கறி வறுவல், இல்லன்னா கிரேவி செய்றாங்க.. நானும் நீயும் அசைவ சாப்பாடு சமைக்கிற பாத்திரங்கடி.. அதான் நம்மை தனியா வைச்சுருக்காங்க. கழுவி வைச்சாலும் ஒரு மூலையிலே போட்டு வைப்பாங்க.. நம்ம ரெண்டு பேர் மட்டுமா?? அலுமினிய பேசின் பெரியம்மா,  நம்ம பெரியக்கா மண்சட்டி கடாய்,  மீன் கரண்டி மாமா, எல்லாரும் தான்...

சின்ன எவர்சில்வர் டமரா: நம்ம எல்லாத்தயும் ஒரே கடையில தான வாங்குனாங்க.. எப்படி இருந்தாலும் மட்டன் சாப்ஸோ, அக்காரவடிசலோ எல்லாத்தையும் ஒரே தட்டுல போட்டு தான சாப்பிட போறாங்க??

அலுமினிய கடாய் அக்கா: அட..ஆமாண்டி..சரி தான்... சோறு போட்டு வெண்டைக்காய் சாம்பார், உருளை கிழங்கு வறுவல்ன்னு தட்டுல தான் சாப்பிடுவாங்க. ரசத்தை தட்டுல ஊத்தி உறிஞ்சி குடிப்பாங்க.. அதே தட்டுல தான் பிரியாணி போட்டு சாப்பிடுவாங்க, கறி குழம்பு ஊத்துவங்க, முட்டை பொடிமாஸ் செய்வாங்க.. அதிலேயே சாப்பிட்டுடுவாங்க.. தட்டை சாப்பிட்டுட்டு கழுவிடுவாங்கல்ல.. அதனாலதானோ ??

சின்ன எவர்சில்வர் டமரா: ங்கே... என்னது.. அப்ப மத்த பாத்திரத்தையெல்லாம் கழுவ மாட்டாங்களா ?? 

அலுமினிய கடாய் அக்கா: கழுவுவாங்.. ஏய்.. இப்படியெல்லாம் கிராஸ் கேள்வி கேட்டா எனக்கு பதில் தெரியாது பாத்துக்கோ..

ஆனாலும் கொஞ்சம் ஓவரா ஆச்சாரம் பாக்குறவங்க இப்படி தான் தனித்தனியா பிரிச்சு வைப்பாங்க.. 

சின்ன எவர்சில்வர் டமரா: அதுக்குன்னு மீன் சாப்பிட்ட/தொட்ட கையோட ரசம்/மோர் பாத்திரத்தை கூட தொடாம இருக்குறது.. அசைவம் சமைக்கிற பாத்திரத்துல, வேற எந்த பாத்திரத்தையும் கலக்காம இருக்கிறது எல்லாம் எப்படி சரியாகும்... நாமும் அவங்க வீட்டு பாத்திரம் தானே?!? சொந்த வீட்டுல, சொந்த பாத்திரத்தையே இப்படி பண்ணுனா.. ம்ம்ம்..  என்னக்கா பண்றது... 

அலுமினிய கடாய் அக்கா: சரி ..சரி .. விடு . ஒரு சிலரெல்லாம் இப்படி தான்... சபீனா போட்டு விளக்கி வைச்சா எல்லா விளக்கமாறும் பாத்திரமும் ஒண்ணு தான்னு இங்க பல பேர்க்கு தெரியல.. . இவுங்கெல்லாம் ஓட்டல்ல போனா என்ன பண்ணுவாங்க?? ஹஹா....ஹஹா..ஹஹா....ஹஹா...

சின்ன எவர்சில்வர் டமரா: ஆமா..ஆமா ..ஹா ..ஹஹா....ஹஹா..

ஞாயிறு, 2 மே, 2021

புதிய விடியல் ஆரம்பம் !

வணக்கம்,

சின்ன இடைவெளி விட்டு மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கிறேன். தேர்தல் முடிவை அலசும் என்னை போன்ற ஓர் சாமானியனின் அரசியல் பதிவு இது. 

இதுவரை வந்த ஓட்டு எண்ணிக்கை முடிவின் படி, திமுக கூட்டணி வெற்றி பெற்று விட்டது. எல்லா முடிவுகளும் அப்படிதான் சொல்கின்றன. ஜெயலலிதா இருந்திருந்தால் பா.ஜ.க வுடன் கூட்டணி இருந்திருக்காது. இம்முறையும் அதிமுகவே வென்றிருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக பா.ஜ.கவின் நடவடிக்கைகளும், செயல்பாடும் நம் மக்களை மேலும் கடுப்பாகி விட்டது. அதனால் மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என அதிமுகவை சற்று ஒதுக்கி வைத்துள்ளனர். எதிர்பார்த்தபடி நட்சத்திர தொகுதியில்  யார் வெல்வார்கள் என மக்கள்  நினைத்தார்களோ அவரே வென்றுள்ளனர். சில இடங்களில் மாறுபட்டிருப்பது சற்றே வேதனைக்குரியது. 

இன்று காலை முதல் பெரும்பாலானோர் வீட்டில் தேர்தல் லைவ் செய்திகள் தான் ஓடி கொண்டிருக்கும். நேற்று வரை கொரோனா தா(க்)கம் கொண்ட டி.வி சேனல்கள், "போனால் போகட்டும் போடன்னு" இன்று மட்டும் கொரோனா செய்திகளுக்கு லீவு விட்டு விட்டார்கள். உயிரிழப்பு, நோய் தொற்று, மருத்துவனை சேர்க்கை, ஆக்சிஜன் பற்றாக்குறை என எல்லாவற்றுக்கும் பாஸ் (Pause) போட்டு வைத்துள்ளார்கள். நாளை முதல் மறுபடியும் லூப்பில் போட்டு ப்பிளே (Play) செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். சில சேனல்களில், நடுநடுவே விளம்பரம் போட்டு வழக்கத்தைவிட சற்று அதிகமாய் சம்பாதித்திருப்பார்கள் என நினைக்கிறேன்.

புதிய விடியல் ஆரம்பம் !

சரி.. கட்சி நிலவரத்துக்கு வருவோம். அதிமுக ஏன் தோற்றது என நாலரை வருட பழைய புராண கதையை சொல்லி போரடிக்க விரும்பவில்லை. மக்கள் அதிருப்தி, நிர்வாக சீர்கேடு என்றெல்லாம் கூட  அளக்க தேவையில்லை. பா.ஜ.க வுடன் கூட்டணி என்ற ஒற்றை விஷயமே அவர்களை ஒதுக்குவதற்கு போதுமான காரணம் என எண்ணுகிறேன். பேரிடர் சமயத்தில் ஓடி ஓடி சென்று வேலை செய்தவரின் வெற்றி இழுபறியில் இருக்க, ராக்கெட் விஞ்ஞானியின் வெற்றியும், கொங்கு பக்கத்து வெற்றியும் சுலபமாகி இருப்பதை கண்டு மக்களின் மனநிலையை என்னவென்று சொல்ல தெரியாமல் முழி பிதுங்கி போயுள்ளேன்.

உலக நாயகன் கமலஹாசன் கட்சி ஆரம்பித்து, அதிரடியாக வலம் வந்து, கடைசி வரை ஜெயிப்பது போல வந்து கொண்டிருக்கிறார். நல்ல ஒரு போட்டியாளராக தான் களத்தில் இருந்திருக்கிறார். இன்னும் பெரிதாய் வந்திருக்கலாம்! ம்ம்ச்ச்... ஹ்ம்ம்.. 2006 தேர்தலில் விஜயகாந்த் ஒரு சீட்டுடன் சட்டசபைக்கு வந்து, பின்னர் 2011 தேர்தலில் பலமான எதிர்க்கட்சியாக உட்கார்ந்தார். அதேபோல ம.நீ.ம க்கும் நடந்திருக்கலாம் என சொல்லவில்லை... நடந்திருந்தால் நன்றாக இருக்கும் என சொல்கிறேன். அதைவிட ஒரு சினிமா ரசிகனின் ஆசையாக, உலக நாயகனின் புரிபடாத கன்னி பேச்சை சட்டசபையில் கேட்பதற்கு பதிலாய், சேனாபதியின் கரகர குஜராத்தி பேச்சையும், விக்ரமின் மிரட்டலான விருந்தையும் காண என் கண்கள் விழைகிறது! (நடந்தால் நன்றாக இருக்கும்..)

அடுத்து நம்ம தம்பிகளின் அன்பு அண்ணன்/ தமிழ் சமூகத்தின் இனமான, வீரமான, தலைவன் செந்தமிழன் சீமான். இம்முறையும் ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை.  2011, 2016 தேர்தலில் ஏன் தோற்றீர்கள் என கேட்டதற்கு, எங்கள் வாக்காளர்கள் இன்னும் ஓட்டு போடும் வயதுக்கு வரவில்லை சொல்லி  கொண்டிருந்தனர். இந்த முறையும் அவர்கள் வாக்காளர்கள் வயசுக்கு வரவில்லை போல. அடுத்த முறையாவது... ஹ்ம்ம் வேண்டாம் விடுங்க... ஆனால் ஒரு விஷயத்தில் இவரை பாராட்டலாம்; கூட்டணி இல்லை என்று சொல்லி தனியே நின்று கெத்து காட்டி நிற்கிறார். தமிழ் தேசிய ஆட்சியில் அதிபர் சீமான் என்கிற கனவுலகில் இருந்த இவர் தம்பிகள் மீண்டு வர சில நாட்கள் ஆகும். வாயுள்ள பிள்ளை பிழைச்சிக்கும் தான்; ஆனா ஓவரா பேசுற வாய் .........  இம்முறையும் ஓட்டை பிரிக்கும் இவர்கள் தொழிலை செவ்வனே செய்துள்ளார்கள். இல்லாவிட்டால் இன்னும் சில தொகுதிகளில் தி.மு.க வென்றிருக்கும். 

அண்ணன் எப்போ சாவான், திண்ணை எப்போ காலியாகும் என காத்திருந்து பின்வாசல் வழியாக வாளேந்தி வந்த ஆர்.எஸ்.எஸ்./ பா.ஜ.க. / இந்துத்துவா கட்சிகள், சற்றே பலமான அடியுடன் யோசித்து கொண்டிருப்பார்கள். தற்போது 4 தொகுதிகளை கைப்பற்றி நிற்கின்றனர். அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருந்தாலும் திமுக தில்லுடன் மோத சமாளிக்க வேண்டும்.   

10 வருடங்களுக்கு பிறகு தி.மு.க ஆட்சிக்கு வருகிறது. வாழ்த்துக்கள்! இன்னும் கொஞ்ச காலங்களில் விழபோகும் பேரடியை யோசிக்காமல் ஊரெங்கும் உடன்பிறப்புக்கள் மகிழ்ச்சி பொங்க வெற்றி களியாட்டதில் இருக்கின்றார்கள். ஏற்கனவே இருக்கும் பிரச்சனைகளை விட, எக்கச்சக்க இடியாப்ப சிக்கலில் நாடும், மாநிலமும் இருக்கிறது. சற்றே உண்மையை சொல்ல வேண்டுமானால், நம் டோப்பாவை கழட்டிவிட்டு மண்டையை சொரியும் அளவுக்கு பிரச்சனைகள் இருக்கிறது. அதை சரிவர கவனித்து, மத்தியில் சமாளித்து ஆட்சி நடத்த வேண்டும். ஏற்கனவே மத்திய அரசு ஒன்றும் செய்யவில்லை அல்லது மிகவும் சொற்பமாக நிதியை ஒதுக்குகிறார்கள் என சொல்லி  கொண்டிருந்தார்கள். இப்போது அதுவும் இழுபறியாக இல்லாமல், இருபுறமும் அவதானித்து, சரியான முடிவுகளை எடுப்பது நல்லது. கத்தி மேல் நடக்க போகும் தளபதியின் ஆட்சி எப்படி இருக்கும் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

இதிலிருந்து ஒன்று தெளிவாய் தெரிகிறது. மூன்றாம் அணி என யார், எப்பொது வந்தாலும் இந்த இரு பெரும் கட்சிகளை தாண்டி வ(ள)ர முடியவில்லை. மதிமுக, மநகூ, நாதக, மநீம.. என யார் வந்தாலும் மக்கள் முடிவு வேறு விதமாக தான் இருக்கிறது. 

எனக்கு இதில் ஒரே ஒரு அல்ப சந்தோஷம். அப்பாடா! நல்ல வேளை!! ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கவில்லை... எத்தனை பேர் வாயில் புகுந்து புறப்பட வேண்டியதோ.. மயிரிழையில் தப்பித்தார் தலைவர்! ஹி..ஹி ஹி.. :-) 

தமிழ்நாட்டை போலவே கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் பா.ஜ.க. கூட்டணியை கூட்டி அள்ளி குப்பையில் போட்டுவிட்டார்கள் அந்த மாநில மக்கள். நம்மை விட சேட்டன்களும், பெங்காளிகளும் ரோஷகாரங்க போல... 

ஒரு வழியாக விடியல் வந்துவிட்டது. கட்சிக்கா, மக்களுக்கா, யாருக்கென தான் தெரியவில்லை. இனிமேலாவது நம்ம தமிழ் நாட்டுக்கு நல்லது நடந்தால் சரி! 

"வெற்றி நடை போடும் தமிழகமே" பாடலின் வேறொரு வெர்ஷனை 2026-ல் கேட்கலாம், தயாராகுங்கள்! 


நன்றி!!!

பி. விமல் ராஜ்

சனி, 31 அக்டோபர், 2020

தமிழக ஊர்களின் பெயர் காரணம்

வணக்கம்,

நாம் வசிக்கும் ஊரின் பெயரும், அதன் பெயர் காரணத்தையும் நாம் பெரிதாய் கவனிப்பதில்லை. தமிழகதில் பல ஊர்களின் பெயர்கள் காரணப் பெயராகவே இருந்துள்ளது. அது காலப்போக்கில் மாறி, மருவி ஏதோ ஒரு பெயரில் அழைக்கப்படுகிறது. அதை பற்றி தான் இப்பதிவில் பார்க்க போகிறோம். எல்லா ஊர்களின் பெயர்களும் காரண பெயராகவே இருந்துள்ளது. எல்லா ஊர்களுக்கும் இது தான் உண்மையான பெயர் காரணம் என்று தெளிவாக சொல்ல முடியவில்லை. சில புராண கதையின் படியும், சங்ககாலத்தில் பெற்ற பெயரின் படியும் சில ஊரின் பெயர்கள் இருக்கிறது. நான் இணையத்தில் படித்து தெரிந்து கொண்டதை உங்களிடம் பகிர்கிறேன்.

name reason for tamil cities

சென்னை-    
சங்க காலத்தில் பெண்ணாற்றிற்கும், பொன்னையாற்றுக்கும் நடுவே உள்ள தொண்டை மண்டலத்தில் தான் இப்போதுள்ள சென்னை இருக்கிறது. சோழர் காலத்தில் புலியூர் கோட்டம் என்று அழைக்கப்பட்டுள்ளது. பின்னாளில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்ட ஆங்கிலேயர்கள் 1639-ல் தர்மாலா சென்னப்ப நாயக்கரிடம் கடற்கரை ஒட்டிய 3 மைல் இடத்தை வாங்கி, இவ்விடத்திற்கு சென்னப்பட்டினம் என பெயர் சூட்டினார்கள். 

கடலோரத்தில் வாழ்ந்த 'மதராசன்' என்ற மீனவ தலைவனின் பெயரால் மதராஸ்/ மதராசபட்டினம் என்று அழைக்கபட்டது என்றும்,  போர்த்துக்கீசிய வணிகன் மெட்ரா (Madra)  என்பவரின் பெயராலேயே மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது என்றும், மேடு என்பதிலிருந்து மேடுராசபட்டணம் என் அழைக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. 

(சென்னையிலுள்ள இடங்களின் பெயர் காரணத்தை வேறொரு பதிவில் பகிர்கிறேன்.)

செங்கல்பட்டு-
செங்கழுநீர் பட்டு என்ற பெயர் தான் இப்போது செங்கல்பட்டு என்று அழைக்கப்படுகிறது.

பொள்ளாச்சி- 
இயற்கை அழகுடன் ஆட்சி செய்யும் பொழிலாட்சி என்ற பெயர் தான் பொள்ளாச்சி என்று மருவி போனது.

தூத்துக்குடி - 
கி.மு. 1 ஆம் நூற்றாண்டில் சோதிக்கரை என்றும் முத்துகுளித்துறை என்றும் அழைக்கப்பட்டுள்ளது. அக்காலத்திலிருந்தே இப்பகுதியில் முத்துக்குளிக்கும் தொழில்முறை இருந்து வந்துள்ளது. பின்னர் 17ஆம் நூற்றாண்டில் ஒரு ஆங்கிலேய அதிகாரி, அவரது அறிக்கையில் தவறுதலாக தோத்துக்குரை என்று பதிவு செய்துள்ளார். அதுதான் பின்னாளில் தூத்துக்குடி என மாறியுள்ளயது. ஐரோப்பியர்களின் வாயில் தூத்துக்குடி என்ற பெயர் நுழையாததால் Tuticorin என்று ஆங்கிலத்தில் பதிவானது.
  
ஆற்காடு- 
அத்தி மாலை அணிந்த சோழ மன்னர்களின் ஆண்ட நிலப்பகுதியை ஆற்காடு என்று அழைத்தனர் என்றும், ஆல் -ஆலமரம் நிறைந்த பகுதியால் ஆற்காடு என்று அழைத்தனர் என்றும் சொல்லப்படுகிறது.

சேலம்- 
மலைகள் நிறைந்த இப்பகுதியை சைலம் என்று அழைத்தனர்.அதுவே பின்னாளில் சேலம் என்றானது. மேலும் இப்பகுதி சேரநாட்டின் ஒரு பகுதியாக இருந்ததால் சேரலம் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் சேலம் ஆனது என்றும் ஒரு சிலர் கூறுவர். 

கோயம்புத்தூர்-
சங்க காலத்தில் கோசர் இனத்தை சேர்ந்த சிற்றரசர்கள் கொங்கு மண்டலத்தை ஆண்டு வந்துள்ளார்கள். அவர்கள் பெயராலேயே கோசர்புத்தூர் என்றும் கோசம்புத்தூர் என்றும் அழைக்கப்பட்டு, பின்னாளில் மருவி கோயம்புத்தூர் என்றானது.

கொங்கு மண்டலத்தில் படுகர் இனத்தை சேர்ந்த மலைவாழ் தலைவனின் பெயர் கோவன். அவருடைய பெயராலேயே கோவன்புத்தூர் என்று அழைக்கப்பட்டு பிறகு கோயம்புத்தூர் ஆனது.

இங்குள்ள கோணியம்மன் கோவிலில் பெயராலேயே இப்பகுதி கோணியம்மன் புத்தூர் என்று அழைக்கப்பட்டு பின்னர் கோயம்புத்தூர் என்று மாறியது.

உதகமண்டலம் -
மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் பல படுகர், இடும்பர், தோடா என மலைவாழ் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் மொழியில் ஒத்தை கல் மந்தை /ஒத்தை கல் மாந்தை என அழைக்கப்பட்டுள்ளது. அப்பெயர் ஆங்கிலேயரின் வாயில் நுழையாததால் Ootacamund என்று அழைக்கப்பட்டது. பின்னர் அரசு உதகமண்டலம் என்று மாற்றியது .

ஏற்காடு- 
ஏரியும் காடும் இருக்கும் பகுதி. ஏரிக்காடு என்ற பெயர் ஏற்காடு என்றானது.
    
திருச்சிராப்பள்ளி -
முன்பொரு காலத்தில் இவ்விடம் திருசிராய்பள்ளி என்று அழைக்கபட்டுள்ளதது.  சிராய் - பாறை, பள்ளி - கோவில். பாறை மீது அமைந்துள்ள கோவில். மலைக்கோட்டையை குறிக்கிறது. திருசிராய்பள்ளி  என்ற பெயர் தான் திருச்சிராப்பள்ளி என மருவியுள்ளது.

மேலும் திரிசரன் என்ற பெயருடைய அரக்கன் சிவனை வழிப்பட்டு பயனடைந்ததாக  சொல்லப்படுகின்றது.அவன் பெயராலேயே இது திரிசரன்பள்ளி என்று அழைக்கப்பட்டு பின்னாளில் திருச்சிராப்பள்ளி என்றானது.

சிரா என்ற துறவி இங்குள்ள பாறையில் தவம் செய்ததாக சொல்லப்படுகிறது. அதனாலும் இது சிராப்பள்ளி என்று பெயர் பெற்றிருக்கலாம் என்றும் சொல்லபடுகிறது.

தஞ்சாவூர்-
எட்டாம் நூற்றாண்டில் தனஞ்செய முத்தரையர் என்ற அரசரின் பெயரில் தனஞ்செய்யூர் என்ற ஊர் உருவாக்கப்பட்டது. பின்னாளில் அதுவே தஞ்சாவூர் என மாறி போனது. தஞ்சை என்னும் சொல்லுக்கு வளமான குளிர்ந்த வயல்கள் உள்ள பகுதி என்ற பொருளும் உண்டு.
 
சிதம்பரம் -
பெரும்பற்றப்புலியூர் என்பதே பழைய பெயர். அங்கு வியாக்கிரபாதர் என்ற முனிவர் பூசை செய்த இடம். சித் - ஞானம் ; ஆம்பரம் - ஆகாயம். இதனால் தான் இது சிதம்பரம் என்று அழைக்கப்பட்டுள்ளது. 

சிற்றம்பலம் என்ற பெயர் தான் பின்னாளில் சிதம்பரம் என்று மருவி போனது. மேலும் இவ்விடத்தில் தில்லை மரங்கள் சிறந்த காடடுகள் இருந்துள்ளதால் இதற்கு தில்லை அம்பலம் என்ற பெயரும் உண்டு.

காஞ்சிபுரம்-
மிக பழமையான நகரங்களில் ஒன்று. காஞ்சி மலர்கள் அதிகம் இருப்பதால் காஞ்சி என்று அழைக்கப்பட்டுள்ளது. பல்லவர்களின் தலைநகரமாகி பின்னாளில் காஞ்சிவரம் என்று அழைக்கப்பட்டு, இப்போது காஞ்சிபுரம் ஆயிற்று.

மதுரை-
குமரிக்கண்டம் காலம் தொட்டு, சங்க காலம், இடைக்காலம் என எல்லா காலங்களிலும் பாண்டியர்களின் தலைநகராக மதுரை இருந்துள்ளது. வைகை நதிக்கரையில் மருத மரங்கள் அதிகம் இருந்ததால், மருத துறை என்ற பெயரே மதுரை என்று அழைக்கப்பட்டது.  
 
பெரு மதில்களும், அதற்குள்  குறு மதில்களும் இருக்கும் நகரம் மதில் நிரை  என்று அழைக்கப்பட்டு , பின்னாளில் மதுரை என்றானது. 

ஈரோடு - 
பெரும்பள்ளம் மற்றும் பிச்சைக்காரன் பள்ளம் ஆகிய இரு ஓடைகளுக்கு நடுவே உள்ள ஊர் என்பதால் இதை ஈரோடை என்று அழைத்துள்ளனர். பின்னாளில் அதுவே ஈரோடு ஆனது.

திருநெல்வேலி-
இப்பகுதி முன்னாளில் வேணுவனம் என்று அழைக்கப்பட்டுள்ளது. வேணு என்பதற்கு மூங்கில் என்று பொருள். மூங்கில் நிறைந்த வனம் என்பதால் இப்பெயரைகொண்டுள்ளது. மூங்கில்/ நெல் நிறைந்த பகுதி நெல்வேலி என்று அழைக்கப்பட்டது.

புராண கதைகளில் வேதபட்டர் என்ற சிவபக்தர், நெய்வேத்தியத்திற்கு உலர வைத்திருந்த நெல்மணிகளை மழையில் நினைய விடாமல் சிவபெருமான் வேலி போட்டு தடுத்ததால், இவ்விடத்திற்கு  திருநெல்வேலி என்று பெயர் வந்தது.       
 
கன்னியாகுமரி-
முன்னபொரு காலத்தில் இப்பகுதி நாஞ்சில் நாடு, வேணாடு என்று அழைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மிகுந்த வயல்களை கொண்டுள்ளது. நாஞ்சில் என்பதற்கு வயலை உழ பயன்படும் கலப்பை என்று பொருள் தரும். அதனால் இது நாஞ்சில் நாடு என பெயர் வந்துள்ளது.

புராண கதையின் படி, பார்வதி தேவி குமரி பகவதி என்ற பெயரில்  சிவனை வழிபட்டு வந்தடைந்தாக சொல்லப்படுகிறது. குமரி பகவதி அம்மன் சிறு பெண்ணாக, கன்னி பெண்ணாக இருப்பதால் இந்த அம்மனின் பெயராலேயே இவ்வூர் கன்னியாகுமரி என்று பெயர்அழைக்கப்பட்டுள்ளதது. 

கும்பகோணம்- 
சோழ நாட்டில் புகழ் பெற்ற ஊராக இருந்துள்ளது. அக்காலத்தில் குடந்தை என்றும் குடமூக்கு என்றும் அழைக்கப்பட்டுள்ளதது. புராண கதையின் படி, அமிர்தம் இருக்கும் கூடத்தின் மூக்கு வழியே கீழே விழுந்த பரவிய ஊர் குடமூக்கு என்று பெயர் பெற்றது. பின்னாளில் கும்பகோணம் என்று மாறியுள்ளது.

தருமபுரி-
சங்ககாலத்தில் இவ்வூர் தகடூர் என்று அழைக்கப்பட்டுள்ளது. தகடு என்பதற்கு இரும்பு என்று பொருள். தாது பொருட்கள் இருக்கும் இடம் என்பதால் தகடூர் என்றானது. பின்னாளில் 15/16ஆம் நூற்றாண்டில் தருமபுரி என்று அழைக்கப்பட்டுள்ளது.

இது போல தமிழ்நாட்டில், பல ஊர்களின் பெயர்கள் மருவியுள்ளது. உங்களுக்கு தெரிந்த ஊர்களின் பெயர்கள் இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.


நன்றி!!!
பி.விமல் ராஜ்  

புதன், 30 செப்டம்பர், 2020

சிவப்பு விளக்கு பகுதி

வணக்கம்,

காமாத்திபுரா - மும்பையில் விபச்சாரம் நடக்கும் ஒரு பகுதி. ஆம் திரைப்படங்களிலும், செய்திகளிலும் பார்க்கும் அதே சிவப்பு விளக்கு பகுதி தான். சோனாகாச்சி - இந்த பகுதியும் அதே வகையறா தான். கொல்கத்தாவில் இருக்கிறது.

நம் நாட்டில் சிவப்பு விளக்கு பகுதியை பற்றி தெரியாதவர்கள்/ கேள்விப்படாதவர்கள் யாருக்கும் இருக்க முடியாது. மும்பை, கொல்கத்தா  மட்டுமல்ல.. இன்னும் பல மாநிலங்களில், பல ஊர்களில் வெகு ஜோராக தொழில் நடந்து வருகிறது. ஆதிகாலம் முதல் பெண்கள்களை மதிக்கும், தெய்வமாக போற்றும் நம் நாட்டில், எப்படி இது போன்ற ஒரு முக்கிய நகரங்களில், ஒரு பகுதியே பலான சமாச்சாரங்கள் நடக்கும் முக்கிய இடமாக மாறியது? அதுவும் எப்படி சட்டப்பூர்வமான ஒரு தொழிலாக இருக்கிறது ?  இதற்கு 200 ஆண்டு கால வரலாறு இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிக்கிறதா? இப்போதைக்கு ஆசியாவில் மிக பெரிய விபச்சார விடுதி /தொழில் நடக்கும் இடம் மும்பையிலும், கொல்கத்தாவிலும் தான் இருக்கிறது.


காமாத்திபுரா வரலாறு-
1795 - பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் போர்த்துகீசியர்கள் அப்போதைய பம்பாய் மாகாணத்தில் சில பகுதிகளை ஆட்சி செய்து கொண்டிருந்த சமயம். ஏழு தீவுகளை (இப்போது மும்பை) ஒருங்கிணைக்க பாலம் கட்ட பல தொழிலாளர்களை அழைத்து வந்தனர். ஆந்திரா பகுதியிலிருந்து சில தெலுங்கு பேசும் 'காமாத்திஸ்' என்னும் கூலி வேலை செய்யும் மக்களை அழைத்து வந்து லால் பஜாரில் குடிவைக்கபட்டனர். அந்த இடமே பின்னாளில் காமாத்திபுரம்/காமாத்திபுரா ஆனது. பாலம் கட்டும் வேலை முடிந்ததும், சரியான வருமானம் இல்லாததாழும், ஏழ்மை நிலையாலும் அந்த ஊரில் உள்ள சில பெண்கள் தாங்களாகவே முன்வந்து விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் எண்ணிக்கை கம்மியாக தான் இருந்தது; பின்னர் மராட்டிய மண்ணில் பல ஊரிலிருந்து ஏழை பெண்கள்களும், குடும்ப பெண்களும் கடத்தி வரப்பட்டு, வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தபட்டனர். இக்காலத்தில் கிழக்கு இந்திய கம்பெனி அதிகாரிகளும், ஆங்கிலேய சிப்பாய்களும் அவர்களுடைய இச்சைக்காக காமாத்திபுரம் வந்து போக, இது பாலியல் தொழிலுக்கான இடமாக மாறியது. ஆங்கிலேய அரசுக்கும் இதன் காப்பாளர்கள் மூலம் வரியும் வந்து கொண்டிருந்தது.

பின்னர் நேபாளம் , சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்ட பெண்களும், மற்ற வெளிநாட்டு பெண்களும் ஒவ்வொரு தெருக்களில் குடியமர்த்தப்பட்டு பல மன்னர்களுக்கும், செல்வந்தர்களுக்கும், ஆங்கிலேய அரசு அதிகாரிகளுக்கும் பெண்கள் விருந்தாக்கபட்டனர். ஆயிரக்கணக்கான பெண்கள் தெருவெங்கும் எல்லா வீடுகளிலும் தொழிலில் இருந்ததால், இதை முறைசெய்ய பாலியல் பெண்களுக்கு அரசு அங்கீகாரம் கொடுத்து, உரிமம் வழங்கப்பட்டது. பெண்களை தேடி வருவோர்கள், எந்தெந்த வீடுகளில் உரிமம் எண்ணும், சிகப்பு விளக்கும் எரிகிறதோ, அது தான் வேசிகளின் வீடு/விடுதி. அந்த பகுதியில் பல வீடுகளில் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருப்பதால், அப்பகுதி சிவப்பு விளக்கு பகுதி என பெயர் பெற்றது. இவர்களுடைய காம இச்சைக்காகவும், பேராசைக்காகவும் பல பெண்கள்  நாசமாக்கப்பட்டு, இக்கொடுமை இன்று வரை தெடர்ந்து வருகிறது. சிறு வயது பெண்கள் முதல் பருவ வயது பெண்கள் வரை பலர் இங்கு வலுக்கட்டாயமாகவும், தெரியாமல் கடத்தி கொண்டு இங்கு விடப்படுகிறார்கள். இங்கு பிறக்கும் (பெண்) குழந்தைகள் பருவமடைந்ததும் இதே தொழிலில் ஈடுபடுத்த பட்டனர். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னும், ஆங்கிலேய அரசிடமிருந்து அங்குள்ள பாலியல்  தரகுகளிடமும், தாதாகளிடமும் இவ்விடம் கைமாறியது. பெரிதாக எந்த மாற்றமும் இல்லாவிடில், தொழில் கனச்சிதமாக நடந்து கொண்டிருந்தது. ஆசியாவின் இரண்டாவது மிக பெரிய பாலியல் நகரமாக இருந்த காமாத்திபுரா,  1990 களின் ஆரம்பத்தில்  சில சமூக நல ஆர்வலர்களின் முயற்சியுடன், வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்ட பெண்கள் சிலர் மீட்கப்பட்டு மறுவாழ்வு தரப்பட்டது. மேலும் அக்காலத்தில் எய்ட்ஸ் நோயால் பல பெண்களும் ஆண்களும் பாதிக்கபட்டதால், ஆணுறை பற்றிய விழிப்புணர்வும், கலந்தாய்வும் நடத்தப்பட்டு பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, இந்த தொழிலிருந்து மீட்கப்பட்டனர்.    

சமீபத்திய கணக்கீட்டின்படி பல பெண்கள், பாலியல் தொழிலை விட்டு சாதாரண வாழ்க்கையில் வாழ ஆரம்பித்துவிட்டனர். இப்போது சொற்ப எண்ணிக்கையில் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தாலும், இன்றும் இது போன்ற ஜல்சா காரியங்களுக்கு இவ்விடம் பெயர் பெற்று தான் விளங்குகிறது.

சோனாகாச்சி வரலாறு-
சோனா-தங்கம் ; காச்சி- மரம். சோனாகாச்சி என்பதற்கு பொன்னாலான மரம் என்று பொருள். வங்காளத்தில் முன்பொரு காலத்தில் ஒரு தாய் தன்னுடைய மகன் இறக்கும் வேளையில் 'நான் இறந்தும் மரமாக இருப்பேன்' என்று கூறியதை கொண்டு ஒரு மரம் நட்டு, மசூதியும் கட்டினாள். பின்னர் அந்த இடம் தான் சோனாகாச்சி என்று அழைக்கப்பட்டது.

மும்பை காமாத்திபுரம் போல இவ்விடம் பாலியல் நகரமாக எப்படி மாறியது என்பதற்கு சரியான தரவுகள் கிடைக்கவில்லை. ஆயினும் ஆசியாவில் மிக பெரிய பாலியல் நகரத்தில் சோனாகாச்சி முதல் இடத்தில் உள்ளது. 90-களின் ஆரம்பத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். பின்னாளில் பலரின் உதவியுடன் பல பெண்கள் மீட்டெடுத்து சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.  

ஏற்கனவே சொன்னது போல மும்பை, கொல்கத்தா மட்டுமல்லாமல், புதுடெல்லி, நாக்பூர், வாரணாசி,ஹைதராபாத் என பல முக்கிய நகரங்களில் பாலியல் நகரங்கள் இன்றும் இருக்கிறது. பாலியல் தொழில் (Prostitution) செய்வது இந்தியாவில் சட்டபூர்வமான தொழில் என்பது பலருக்கு தெரியாது. ஆனால், விடுதி அமைத்து தொழில் நடத்துவது, (பெண்) தரகு வேலை பார்ப்பது போன்றவை தான் சட்டத்துக்கு எதிரானவை.

இக்கொடுமைகளை எந்த அரசும் களையவோ, பாலியல் நகரங்களை தடை செய்யவோ முற்படவில்லை என்பது தான் வேதனைக்குரிய விஷயம் ஆகும்.
 

நன்றி!!!
பி.விமல் ராஜ்  

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

செயற்கை நுண்ணறிவு (AI) - வருங்காலத்தின் ஆரம்பம்

வணக்கம்,

இந்த உலகம் தோன்றிய காலம் முதல், பல கண்டுபிடிப்புகள், தத்துவ விதிகள், விஞ்ஞான வளர்ச்சிகள் என மாறி கொண்டே இருக்கிறது. புதுப்புது செயல்கள் நடந்து கொண்டே இருக்கிறது. நம் உலகமானது இயந்திரமயமாக்களிலும், கணினி துறையிலும், செயற்கை நுண்ணறிவிலும் (AI - 
Artificial Intelligence) நம் கற்பனைக்கடங்கா எல்லையை நோக்கி போய் கொண்டிருக்கிறது. அதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். தொழில்நுட்பத்தை பற்றிய கொஞ்சம் பெரிய பதிவு தான். பொறுமையான படிக்கவும்.

யுவால் நோவா ஹராரி (Yuval Noah Harari)இஸ்ரேலிய வரலாற்றாய்வாளர், தத்துவவாதி மற்றும் புத்தக எழுத்தாளர். அவர் எழுதிய 21 Lessons for 21st Century  என்னும் புத்தகத்தில் வருங்காலதில் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியும், வேலைவாய்ப்பில் செயற்கை நுண்ணறிவின் பங்கு பற்றியும் விவரித்துள்ளார்.

ஹாலிவுட் சயின்ஸ் பிக்ஷன் படங்களில் வருவது போல எல்லா தொழில்நுட்பங்களும் ஒரு நாள் மனிதனை மீறி செயல்பட ஆரம்பிக்கும் அதுவே நாம் வாழும் பூவுலகின் அழிவுகாலத்தின் ஆரம்பம் என சொல்லியிருப்பார்கள். அதை நாமும் கைகொட்டி ரசித்து விட்டு மறந்து விடுவோம். ஆனால் இது நூறு சதவிகிதம் உண்மையில்லை என்று வைத்து கொண்டாலும், 80% நடப்பதற்கு  வாய்ப்புண்டு என்று பல அறிஞர்கள் சொல்கிறார்கள். இந்த AI யினாலும், டெக்னாலஜியாலும் நம்மில் பலருக்கு வேலைவாய்ப்புக்கள் பறிபோக வாய்ப்புண்டு என்று சொல்கிறார்கள்.



artificial-intelligence-future-jobs-lost-in-2050

அதெப்படி இருக்கிற வேலை போகும்? பின்னர் அந்த வேலையை யார் செய்வார்கள் என்ற கேள்விக்கு சில பதில்கள். 20 வருடங்களுக்கு முன் இருந்த உலகளவில் இருந்த பல தொழில்களும், வேலைகளும்/வேலைவாய்ப்புக்களும் இப்போது இல்லை. உதாரணமாக, 

1.) STD - PCO  கடைகள்
2.) இன்டர்நெட் பிரௌசிங் சென்டர்கள்.
3.) போட்டோ பிலிம்களை கழுவி, பிரிண்ட் போடும்  ஸ்டூடியோக்கள்.
4.) சுற்றுலா தளத்தில் போட்டோ எடுப்பவர்கள்.
5.) வீடியோ- ஆடியோ காஸட் / சி.டி -  டி.வி.டி கடைகள்.
6.) வாழ்த்து அட்டை துயாரிப்பவர்கள்.
7.) ரேடியோ/டேப் ரெக்கார்டர் ரிப்பர் செய்பவர்கள்.
8.) தட்டச்சு அலுவலர்கள் / தட்டச்சு மையங்கள்.

9.) டெலிபோன் ஆப்ரேட்டர்கள்.
இதுபோல இன்னும் பல தொழில்கள் இருக்கிறது. 

உலகில் நடக்கவுள்ள அல்லது கண்டுபிடிக்க உள்ள தொழில்நுட்ப மாற்றங்களை கணிப்பது மிக மிக கடினம். ஐம்பது வருடங்களுக்கு முன் உள்ள அறிஞர்களும்,விஞ்ஞானிகளும் இப்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியையும், அதன் வேகத்தையும் கணித்திருக்கவே மாட்டார்கள்.  

இன்னும் சொல்ல போனால் 2040-2050 ஆண்டுகளில் மக்கள் வேலை செய்யப்போகும் / உபயோகப்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் இன்னும் கண்டுபிடிக்கவே இல்லை என்பதே உண்மை.

இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார நிபுனர் ஜான் மேநார்ட் கீன்ஸ் (John Maynard Keynes) என்பவர் அவரது ஆராய்ச்சி பதிவு ஒன்றில் 2030-ல் மக்கள் வாரத்திற்கு அதிகபட்சம் 15-20 மணிநேரம் தான் உழைப்பார்கள். அவர்களுக்கு விரக்தியும், மனசோர்வும் தான் மேலோங்கி நிற்கும். அதிலிருந்து விடுபட கேளிக்கைகளிலும், அவர்களது கலாச்சரத்திலும்தான் நேரத்தை செலவிடுவார்கள் என்று கூறியுள்ளார்.

இப்போது செய்யும் பல தனித்துவ வேலைகளை, எதிர்காலத்தில் இயந்திரங்களும், ரோபோக்களுமே செய்து விடும். இதனால் எதிர்காலத்தில்  
சமூக உறுதியற்ற தன்மையும்  (Social instability), படைப்பாற்றல் (Creativity) மிகுந்த வேலைகளும் அதிக அளவில் இருக்கும். இதனால் உலகளவில் பொருளாதாரத்தில் மாற்றங்களும், ஏற்றத்தாழ்வுகள் நிறைய இருக்கும். அகால மரங்களும், தற்கொலைகளும், சட்டவிரோத செயல்களான கொள்ளை, போதை போன்ற செயல்களும் பெருமளவில் அரங்கேறும்.ஜான் மட்டுமல்ல, பல ஆராய்ச்சியாளர்கள் இதைதான் கூறுகின்றனர். 

" ஒரு புத்தகம் மக்களுக்கு உணவையோ, உடையையோ கொடுக்காது. ஆனால் அவர்களுக்கு இந்த உலகில் வாழ்வதற்கு ஒரு தெளிவான அறிவை கொடுக்கும். அது போல, இந்த புத்தகம்  மனிதத்தின் எதிர்காலம் பற்றி விவாதிக்க தெளிவான அறிவையும், அதிகாரத்தையும் கொடுக்குமேயானால், இஃது ஓர் சிறந்த படைப்பாகும்." 
யுவால் நோவா ஹராரி

வருங்காலத்தில் நடக்க கூடியவை என யுவால் என பல துறைகளையும் பற்றி கூறியுள்ளார். அவற்றுள் சில.

தகவல் - Data 
தகவல் (information / data) வருங்காலத்தில் உலகின் மிக பெரிய அதிகாரத்தின் ஆதாரமாக விளங்கப்போகிறது. யாரிடம் தகவல்கள் கொட்டி கிடைக்கிறதோ, அவரே சர்வ வல்லமை படைத்தவராகி உலகையே ஆளக்கூடிய வல்லரசாக இருப்பார். ஏனெனில் தகவல்கள் எதிர்காலத்தின் ஆகச்சிறந்த பலமுள்ள ஆயுதமாக உருவெடுக்கும் என கூறுகின்றனர். இன்னும் சுலபமாக சொல்ல வேண்டுமானால், சமீபத்தில் வெளிவந்த 'இரும்புத்திரை ' படத்தில் வரும் வசனத்தை நினைவு படுத்துகிறேன். 'Information is Wealth' இந்த டேட்டாக்கள் என் கையில் இருந்தால் இந்த உலகையே ஆளும் டிஜிட்டல் உலகத்தின் முடிசூடா மன்னனாக இருப்பேன் என்று அர்ஜுன் சொல்வார். ஆதிகாலம் முதல் இப்போது வரை அதிக நிலங்கள் (land/real estate) வைத்திருப்போரை அதிகாரம் உள்ளவர் என்று சொல்வார்கள்.அரசாங்கங்கள் அவர்களை கட்டுபடுத்த முயற்சி செய்யும். ஆனால் வருக்காலத்தில் யாரிடம் நிறைய டேட்டாக்கள் இருக்கிறதோ அவரே அதிகாரம் உள்ளவர் ஆகப் போகிறார்கள்.

மனித எண்ணங்களை திருடுதல் - Human Hacking 
கணினியும், இயந்திரத்தையும் hacking செய்வதை பற்றி கேள்விப்பட்டுள்ளோம். அப்படி hack செய்து திருடுபவர்கள், வருங்காலத்தில் மனிதனின் மூளையை குறிவைத்து hack செய்ய போகிறார்கள். நம்பமுடியவில்லை தானே !?! நீங்கள் நம்பவில்லை என்றாலும் அதுதான் நிஜம்! நம்முடைய சிஸ்டம், மொபைல், வங்கி கணக்குகள், சமூக வலைத்தளங்கள், டிஜிட்டல் சாதனங்கள் மட்டுமல்லாமல், நம் மூளையும், நம் எண்ணங்களையும் hack செய்வதற்கான ஆராய்ச்சியில் ஏற்கனவே இறங்கி விட்டார்கள்.

நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கிறது, நம் அடையாள தொழில்நுட்பத்தையும் (biometric) hack செய்து மக்களையும் ஆட்கொள்ள முடிவு செய்து விட்டனர். அப்படி செய்துவிட்டால், நாம் என்ன செய்ய வேண்டும், என்னென்ன நினைக்கிறோம், எதை செய்ய வேண்டும் என எல்லாவற்றையும் அவர்களே முடிவு செய்து விடுவார்கள். இது முழுமையாக  கொண்டுவர முடியாவிட்டாலும், 50% சதவிகிதம் வெற்றிபெற்று விட்டால் கூட மனித இனத்தின் அழிவு யாராலும் தடுக்க முடியாத ஒன்றாகிவிடும்  என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

கல்வி - Education 
2040-50-ல் பல வேலைகள்/வேலைவாய்ப்புகள் இல்லாமல் போகும். இப்போதுள்ள பிள்ளைகளும் பள்ளி/கல்லூரிகளில் சொல்லி கொடுக்கும் பாடங்கள் /பாடத்திட்டங்கள் எல்லாம் பயனற்று போக வாய்ப்புண்டு என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இதுநாள் வரை மனிதனின் முதல் 25-30 ஆண்டுகள் கற்றலுக்காக செலவிட்டு, மீதம் உள்ள ஆண்டுகள் கற்றதை பயன்படுத்தி உலகில் வாழ தயார்படுத்தி கொள்வதே வழக்கமாய் இருந்தது. ஆனால் இனி வரும் காலங்களில் படித்து முடித்து வேலைக்கு போகும் நேரத்தில், படித்தது பலவும் காலாவதியான தகவல்/படிப்பு/ விஷயங்களாக இருக்கும் என்று சொல்கின்றனர்.இவற்றிற்கு ஒரே வழி வாழ்நாளில் கடைசி வரை நம்மை சீர்படுத்தி கொள்ள இந்த போட்டிமயமான உலகில் வெல்ல தொடர்ந்து வாழ நாம் கற்றலை நிறுத்தவே கூடாது. 50 வயதிலும் கற்று கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்கின்றனர். இப்போதே இந்த நிலைதான் இருக்கிறது என்றாலும், எதிர்காலத்தில் நிலைமை இன்னும் போட்டிமயமானதாக இருக்கும்.

மக்களுடைய உணர்வுசார் நுண்ணறிவையும் (emotional intelligence), மனதையும் சமநிலை படுத்தி (mind balance) கொண்டு வாழ பழகி கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள்.

அரசியல் - Politics 
உலக வல்லரசு நாடுகளும் சரி, வளர்ந்து வரும் நாடுகளும் சரி இன்றளவிலும் பழமைவாதையும், தேசியத்தையும், மத கொள்கைகளையும் மட்டுமே பேசி கொண்டிருக்கிறது. எந்த ஒரு உலக அரசியல்வாதிகளும் எதிர்காலத்தில் வரவிருக்கும் பிரச்சனையை எப்படி சமாளிப்பது, எப்படி மக்களை முன்னேற்றுவது என்றெல்லாம் பேசுவதோ இல்லை. உலகம் வெப்ப மயமாதல், வருங்காலத்தில் இயந்திரத்தாலும், தொழில்நுட்பத்தாலும் பறிபோகும் வேலைவாய்ப்புக்கள், எதிர்கால சந்ததிகளுக்கு கல்விமுறை என நீண்ட கால முடிவெடுத்தலை இதுவரை முன்வைக்க வரவில்லை.   

புதிய பிரிவு- Useless Class 
உலக மக்களில் upper class, upper middle class, middle class, lower class என்று பிரிப்பார்கள். அதில் புதிதாக Useless class என்னும் புதிய பிரிவு வருங்காலத்தில் வரும். தொழில்நுட்பத்தால் வேலைப்பறிபோன கூட்டம் பெருமளவில் நிற்கும் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். அவர்களை தான் useless class என்று சொல்கிறார்கள். இவர்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்டி, மானியம் வழங்க வேண்டும்; அல்லது மக்களே அவர்களது துறையில் மேலும் கற்று, தொடர்ந்து முன்னேற வாழ பழகி கொள்ள வேண்டும். அல்லது பெரும்பாலானோர் சமூக கேடான விஷயங்களில் ஈடுபட்டு நாட்டுக்கும், சமுதாயத்திற்கும் பெரும் பிரச்சனையாக இருப்பார்கள்.

பறிபோகும் வேலைகள் - Job Lost
அசுர வேக தொழில்நுட்ப வளர்ச்சியினால், எதிர்காலத்தில் பலரின் வேலைவாய்ப்புகள் பறிபோகும். இன்று உலகெங்கும் லட்சக்கணக்கானோர் வாடகை வண்டிகளை (Taxi) ஓட்டி வருகின்றனர். எதிர்காலத்தில் தானியங்கி டாக்ஸிகளும்,கார்களும் நம் சாலையெங்கும் ஓடி கொண்டிருக்கும். அதற்கான ஆயுத்த வேலைகளில் Tesla, Google போன்ற தொழில்நுட்ப முதலைகள் இப்போதே ஆரம்பித்து விட்டனர், 

மேலும் டெலிகாலர்கள், கஸ்டமர் சேவை அதிகாரிகள், வங்கி கேஷியர்கள், பேங்க் லோன் அதிகாரிகள், ஹோட்டலில் ஆர்டர் எடுப்பவர்கள், போஸ்டல்/கூரியர் வேலைகள், வீடு மற்றும் அலுவலகம் தூய்மை  செய்பவர்கள் என பல வேலைவாய்ப்புக்கள் உலகளவில் பறிபோக இருக்கிறது.

புதிய வேலைகள் - Future Jobs 
நோயாளிகளுக்கு தானாகவே ஆபரேஷன் செய்யும் மெஷின்கள், மருந்து கடைக்காரர் பதிலாக தானாய் மருந்து, மாத்திரையை எடுத்து கொடுக்கும் தானியங்கி  மெஷின்கள் என பலவும் மாறி வர போகிறது.

வயதானவர்களை பார்த்து கொள்ளும் caretaker -கள், உளவியல் நிபுணர்கள், மறுவாழ்வு மையங்கள்,  நியூட்ரிஷன் /டயட்டிங் நிபுணர்கள், பல்வேறு துறையிலுள்ள creative designerக்கள், ரோபோடிக்/பாட்  என்ஜினீயர்கள், Virtual Currency Organizer, தானியங்கி வாகனங்களை பாதுகாக்கும்/ மேற்பார்வை பார்க்கும் ஆய்வாளர்கள், AR/ VR  என்ஜினீயர்கள் என வருங்காலத்தில் இந்த வேலைகலெல்லாம் கொட்டி கிடக்க போகிறது.

கண்டிப்பாக இன்னும் 30 ஆண்டுகளில் விண்வெளி சுற்றுலா பயணம் ஒரு சாதாரண நிகழ்வாக பார்க்கப்படும். விண்வெளியி துறையில் பயிற்சி பெற்றவர்கள் பெரும் வாய்ப்புகளை பெறுவார்கள். 

The Matrix படத்தில் வருவது போல ஒரு செயற்கையான உலகத்தை உருவாக்கி அதில் நம்மை உலவ விட போகிறார்கள். ஏற்கனவே அது போல Virtual Reality விளையாட்டுகள் வந்து விட்டாலும், அதை விட பலமடங்கு தொழில்நுட்ப வளர்ச்சியில் வளர்ச்சியடைந்து virtual உலகத்தில் நம்மை மூழ்கடிக்க செய்ய போகிறார்கள். Virtual Tour என்ற கனவுலகத்தில் நம்மை கட்டுப்படுத்தி விடுவார்கள் .

இதெல்லாம் உங்களை பயமுறுத்துவதற்காக எழுதவில்லை. இதெல்லாம் கண்டிப்பாக நடந்துவிடும் என்று சொல்லவில்லை. முன்பே சொன்னது  போல, எல்லா தொழில்நுட்ப வளர்ச்சியும் நாம் 100% நேர்த்தியாக கணிப்பது சாத்தியமல்ல. மேலே சொன்னதில் 60% சதவிகிதம் நடந்தாலே போதும். வேலையில்லா திண்டாட்டமும், பொருளாதார ஏற்ற இறக்கமும் வந்து சேரும். இதில் தப்பிக்க ஒரே வழி, தொடர்ந்து கற்றல் தான். அப்படி இல்லாவிடில் useless class என்னும் தொழில்நுட்பத்தால் வேலை பறிபோன கூட்டம் பெருமளவு நிற்கும் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.

இந்த விஞ்ஞான மற்றும் அறிவியல் மாற்றங்களிலிருந்து நம்மை காத்துக்கொள்ள ஒரே வழி கற்றலே ஆகும். தொடர்ந்து கற்று, மற்றவர்க்கும் கற்பித்து அவரவர் தம் வாழ்வியலை சிறப்பிப்போம்.


நன்றி!!!
பி.விமல் ராஜ்   

வெள்ளி, 31 ஜூலை, 2020

பழமொழிகளும் அதன் அர்த்தங்களும் - பகுதி 2

வணக்கம், 

வலைப்பதிவில் சில நாட்களுக்கு இடைவெளி விட்டு, மீண்டும் எழுத ஆரம்பித்துள்ளேன். கொரோனா பொது முடக்க காலத்தில் நிறைய பதிவுகள் வேண்டும் என நினைத்திருந்தேன், ஆனால் இப்போது தான் எழுத ஆரம்பித்துள்ளேன்.

ஒருவருடைய செய்கையோ, செயலையோ, குறிக்க பழமொழிகளை சொல்லுவது நம்மூரில் வழக்கம். தமிழில் பல பழமொழிகளும் அதற்கு பல அர்த்தங்களும் சொல்லப்படுவதுண்டு. ஏற்கனவே பழமொழிகளும் அதன் அர்த்தங்களும் என்ற தலைப்பில் எழுதிய பதிவு நல்ல வரவேற்பை பெற்று, பெரும்பாலானோர் அப்பதிவை பார்த்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக இந்த இரண்டாம் பாகத்திலும் எனக்கு தெரிந்த, கேட்ட பழமொழிகளையும் அதன் அர்த்தங்களும் இணையத்தில் தேடி இங்கு பகிர்கிறேன்.


பழமொழிகள்:

1.) அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்தரியில் குடை பிடிப்பான். 

சொல்லப்படும் பொருள்:
 சில மணி நேர மழையில் முளைக்கும் காளான்களை சொல்வது. ஒரே நாளில் முளைத்து இறக்கும் காளானை போல, திடீரென பணக்காரனாகும் நபரை பார்த்து ஏளனமாய் சொல்வது. 

உண்மையான விளக்கம்:
இதற்கு இரண்டு வித அர்த்தகங்களை சொல்வார்கள். ஒன்று, அர்ப்பணித்து வாழ்பவன் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான். ஒருவன் தர்மத்தை அர்ப்பணித்து வாழ்பவன், எந்நேரமாயினும் மற்றவருக்கு தானம் அளிப்பான் என்பதே சரியான அர்த்தம். மற்றொன்று, சிறு பிள்ளைகளுக்கு போடப்படும் விடுகதை. மழையில் பெய்த காளான் குடை போல விரிந்து நிற்கும். அதைத்தான் விடுகதை போல அப்படி சொல்வார்கள்.

2.) கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்க கூடாது

சொல்லப்படும் பொருள்:
கப்பலே கவிழ்ந்து நட்டமானாலும், கன்னத்தில் கை வைத்து கொண்டு உட்கார கூடாது.

உண்மையான விளக்கம்:
கப்பல் விடும் அளவிற்கு செல்வம் இருந்து, பின் கப்பலே கவிழ்ந்து நட்டமானாலும், கன்னமிடுதல் - திருட்டு (கன்னத்தில் கை ) கூடாது.

3.) கோத்திரம் அறிந்து பெண் கொடு பாத்திரம் அறிந்து பிச்சை இடு.

சொல்லப்படும் பொருள்
யாருக்கு என்ன கொடுக்க வேண்டுமோ அதை தான் கொடுக்க வேண்டும். எல்லோருக்கும் தானம் தருமம் செய்ய கூடாது.

உண்மையான விளக்கம்:
கிட்டத்தட்ட சரியான அர்த்தம் தான். ஆனால் இது மன்னர்களுக்கு சொல்லப்பட்ட பழமொழி. 'கோத்திரம் ' என்பது கோவின் திறம். அதாவது அரசனின் திறம் அறிந்து பெண் கொடுக்க வேண்டும். 'பாத்திரம்' என்பது புலவர்களின் பாட்டு திறமை அறிந்து பரிசளிக்க வேண்டும் என்பதே சரியான பொருள்.

4.) தை பிறந்தால் வழி பிறக்கும்.

சொல்லப்படும் பொருள்:
தை மாதம் பிறந்தால் நல்ல வழி அல்லது நல்ல விஷயம் நடக்கும் .

உண்மையான விளக்கம்:
தை மாதத்தில் அறுவடை காலத்தில், விவசாயிகளின் கையில் பணவரவு இருக்கும். அதை வைத்து கொண்டு அவர்களுக்கு வேண்டியதை செய்யலாம்.
இன்னொரு பொருள், வயலில் முளைத்து இருக்கும் நெல் மணிகள் வரப்பை அடைத்து கொண்டு வழியில்லாமல் வளர்ந்து நிற்கும். தை மாதம் பிறந்தவுடன் கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு, வரப்பில் நடக்க வழி கிடைக்கும்.  

5.) முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதைப் போல.

சொல்லப்படும் பொருள்:
தன் தகுதிக்கு மீறிய செயலை ஒருவர் செய்யும் போது இப்படி சொல்வார்கள்.

உண்மையான விளக்கம்:
முயலான் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்டது போல என்பதே சரியான பொருள்.
கொம்பு தென் மலை உச்சியில் தான் இருக்கும். முயற்சி செய்யாமல், சோம்பி இருப்பவன் அதை அடைய முடியாது என்பதற்க்காக சொல்லப்பட்டது.

6.) பெண் புத்தி பின் புத்தி.

சொல்லப்படும் பொருள்:
பெண்கள் எந்த ஒரு செயலையும் முன் யோசனை இல்லாமல் செய்து விடுவார்கள். அதற்கு பின் வருத்தப்படுவார்கள்.

உண்மையான விளக்கம்:
உங்கள் எந்த ஒரு முடிவாயினும், செயலாயினும் பின் விளைவுகளை யோசித்து அதற்கு ஏற்றார் போல முடிவு எடுப்பார்கள் என்பதே சரியான பொருள்.நாம் அதையே தலைகீழாக புரிந்து கொண்டு சொல்கிறோம்.

7.) கோல் ஆட குரங்கு ஆடும்.

சொல்லப்படும் பொருள்:
குரங்காட்டி ஆடு என்று சொன்னால் குரங்கு ஆடாது. கோலை எடுத்து மிரட்டினால் தான் ஆடும்.

உண்மையான விளக்கம்
என்னதான் சிறு பிள்ளைகளுக்கு நல்லொழுக்கங்களை சொல்லி கொடுத்தாலும், கண்டித்து சொன்னாலொழிய மனதில் பதியாது.

8.) யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கு ஒரு காலம் வரும்.

சொல்லப்படும் பொருள்:
நல்லவனுக்கு ஒரு காலம் வந்தால், தீயவனுக்கு ஒரு காலம் வரும். வலியவனுக்கு ஒரு காலம் வந்தால், எளியவனுக்கு ஒரு காலம் வரும் என்று சொல்வார்கள்.

உண்மையான விளக்கம்:
'ஆ நெய்' - பசுவின் நெய் தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் சத்து சேர்ந்து பருமனாக மாறமுடியும். அதே போல 'பூ நெய்' - பூவிலுள்ள தேனை சாப்பிட்டு வந்தால் உடலின் எடை குறையும். 

9.) ஆமை புகுந்த வீடு விளங்காது

சொல்லப்படும் பொருள்:
வீட்டுக்குள் ஆமை புகுந்தால் வீட்டில் நல்லது நடக்காது.

உண்மையான விளக்கம்:
கல்லாமை, இல்லாமை, முயலாமை, அறியாமை, பொறாமை முதலியவை வீட்டில் புகுந்தால் நல்லது நடக்காது என்பதற்காக சொன்னார்கள்.

10.) குறைக்கிற நாய் கடிக்காது 

சொல்லப்படும் பொருள்:
தெருவில் போகும் போது நாய் குரைத்து கொண்டே இருந்தால் அது நம்மை கடிக்காது. வெறும் வாய் பேச்சில் வீரர்கள், பெரிதாக ஏதும் செய்ய மாட்டார்கள்.

உண்மையான விளக்கம்:
குழைகிற நாய் கடிக்காது. நம்மிடம் பாசமாய் குழைந்து காலை நக்கும் நாய் நம்மை கடிக்காது. நம் மீது பாசம் உள்ளவர்கள் நமக்கு தீங்கு செய்ய மாட்டார்கள் என்பது தான் சரியான அர்த்தம்.

11.) ஆற்றில் போட்டாலும் அளந்து போடு. 

சொல்லப்படும் பொருள்:
நாம்  தர்மம் செய்யும் போதோ, வேறு ஏதாவது செய்யும் போதோ அளவுடன் தான் கொடுக்க/ செய்ய  வேண்டும். 

உண்மையான விளக்கம்:
அகத்தில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்பது சரியான பொருள்.
அகம் என்பது உடல். அதாவது என்ன சாப்பிட்டாலும் அளவுடன் தான் சாப்பிட வேண்டும். அப்போது தான் ஆரோக்கியமான வாழு கிடைக்கும் என்பது இதன் அர்த்தம்.

12.) கழுதை கெட்டால் குட்டி சுவர்/ கழுதைக்கு பரதேசம் குட்டிச்சுவர். 

சொல்லப்படும் பொருள்:
கழுதை எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு குட்டி சுவத்திற்கு அருகே போய் நின்று கொண்டிருக்கும். அதுபோல ஒரு சிலர் அடிக்கடி ஒரே இடத்துக்கு போகும் போது இந்த பழமொழியை சொல்வார்கள். 

உண்மையான விளக்கம்:
ஒருவர் எந்த முயற்சியும் செய்யாமல், சாதாரண விஷயம் கூட பரதேசம் போவது போல நினைத்து திருப்திப்பட்டு கொல்வபவர்களுக்காக சொன்ன பழமொழி இது.

இன்னும் நிறைய இருக்கிறது. அதை பின்வரும் பதிவுகளில் பகிர்கிறேன். 

முதல் பகுதிக்க்கான சுட்டி - பழமொழிகளும் அதன் அர்த்தங்களும் 


நன்றி !!!

-பி .விமல் ராஜ்