புதன், 15 நவம்பர், 2023

கடல் சூழ் உலகு!

வணக்கம்,

உலகம் தோன்றி கிட்டத்தட்ட 120 கோடி ஆண்டுகளுக்கு பின்னர் பூமியில் இருந்த வாயுமண்டலங்கள் நீராக மாறியும், மழை பெய்தும் பெரும் நீர் படுகைகளாக தோன்ற ஆரம்பித்தன. இதுவே இன்றைய கடல்களாகும். இன்றைய பூமியானது 71% கடலால் சூழப்பட்டுள்ளது. இவைதான் உலகின் பெருங்கடல்கள் (World Oceans) என்று அழைக்கப்படுகிறது. 

பள்ளிக்கூடத்தில் social studies பாடத்தில் map குறிக்கும் போது சில கடல் பகுதிகளை sea என்றும், சில கடல் பகுதிகளை ocean என்றும் குறிப்போம். கடல் நிலப்பரப்புகளால் சூழப்பட்டிருக்கும் அல்லது கரையோரம் உள்ள நிலப்பரப்பிலிருந்து விரிந்து இருக்கும்; பல கடல்கள் சங்கமிக்கும்/ஒன்று சேரும் இடம் பெருங்கடலாகும்.

அதே போல சின்ன வயதில் நாம் கேட்கும் கதைகளில் "ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி..." என்று சொல்வதுண்டு. ஆங்கிலத்திலும் "Across Seven Seas.." என்று வரும். இந்த ஏழு கடல்கள் எதை குறிக்கின்றன என தெரியுமா? 

நம் உலகில் ஐந்து பெருங்கடல்கள் இருக்கிறது. அவை,

  • பசிபிக் பெருங்கடல் (North Pacific Ocean & South Pacific Ocean)
  • அட்லாண்டிக் பெருங்கடல் (North Atlantic Ocean & South Atlantic Ocean)
  • இந்திய பெருங்கடல் (Indian Ocean)
  • ஆர்டிக் பெருங்கடல் (Artic Ocean)
  • அண்டார்டிக் பெருங்கடல் (Atlantic Ocean)
five-world-oceans

பசிபிக் பெருங்கடல் : 

  • பசிபிக் பெருங்கடல் உலகின் மிக பெரிய பெருங்கடல் ஆகும். வட ஆர்டிக் பெருங்கடல் முதல் தெற்கு அண்டார்டிக் பெருங்கடல் வரை பரவியுள்ள உலகின் மிகப்பெரிய பெருங்கடல் ஆகும். கிட்டத்தட்ட பூமியின் 30% பரப்பளவை கொண்டுள்ளது. இதன் கிழக்கில் தென் அமெரிக்கா வட அமெரிக்காவும், மேற்கில் ஆஸ்திரேலியா, ஆசிய நாடுகளின் நிலப்பரப்பும் உள்ளன. இது பூமத்திய ரேகையால் (Equator) வடக்கு மற்றும் தெற்கு பசிபிக் பெருங்கடல்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
  • 1519 -ல் Ferdinand Magellan என்னும் போர்த்துகீச மாலுமி தான் முதல் முதலில் உலகை கப்பலில் சுற்றி வந்தவர். அவர் பசிபிக் பெருங்கடலைக் கடக்கும்போது, மகலன் இதனை மார் பசிபியோ (Mar Pacifico) என்றழைத்தார். இச்சொல்லுக்குப் போர்த்துக்கீசிய மொழியில் அமைதியான கடல் என்று பொருளாகும். பசிஃபிக் என்னும் பெயர் இதிலிருந்து உருவானது. 25000 மேற்பட்ட தீவுக்கூட்டங்கள், பவள பாறைகளை கொண்டுள்ளது. பெரும்பாலானவை தெற்கு பசிபிக் கடல் பகுதியில் இருப்பதாக சொல்கின்றனர். 
  • UNESCO அங்கீகாரம் பெற்ற Eastern Island Monument Statues, சிலி நாட்டின் கடற்கரை பகுதியில் தான் அமைந்துள்ளது.
  • உலகின் மிக பெரிய பவளப்பாறை திட்டுகள் இந்த கடல் பகுதியில் தான் இருக்கின்றன. 
  • உலக பெருங்கடகளில் உள்ள மிக ஆழமான இடம் (11,034 m ஆழம்) என்று சொல்லப்படும் மரியானா ட்ரென்ச் (Mariana Trench) பசிபிக் பெருங்கடலில், பிலிப்பைன்ஸ் கடல்பகுதியருகே இருக்கிறது. இப்பகுதியில் இதுவரை யாரும் காணாத அதிசிய கடல்வாழ் உயிரினங்களும், ஆபத்தான உயிரினங்களும் இருப்பதாக ஆராய்சியாளர்கள் சொல்கின்றனர்.
  • Point Nemo என்று அழைக்கப்படும் இடமான கடற்பகுதியும் பசிபிக் பெருங்கடலில் தான் இருக்கிறது. தென் அமெரிக்காவுக்கும் நியூசிலாந்துக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில தான் பழுதடைந்த/ சுற்றுப்பாதையிலிருந்து தவறிய விண்கலங்கள் அழியும்படி/விழும்படி செய்யப்படுகின்றன. இப்பகுதியை விண்வெளி கல்லறை (Space Cemetry) எனவும் சொல்கின்றனர். 2600 கி.மீ  தூரத்திற்கு எந்த நிலப்பரப்பும்  அருகே இல்லாத தனிமையான, ஒதுக்கப்பட்ட இடமாக இது சொல்லப்படுகிறது.
  • மேலும் Ring of Fire என்று சொல்லப்படும் இயற்கை பேரிடர்கள் (பூகம்பம், ஏரிமலை) அதிகம் ஏற்படக்கூடிய இடமும் இப்பகுதியில் இருக்கிறது. 
  • 1521-ல் தான் பசிபிக் கடல் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், இது கி.மு. 3000-16000 ஆண்டுகளில் பல மக்கள் இடம் சிறு படகுகள் மூலம் இடம் பெயரவும், வாணிபத்துக்காகவும் இக்கடலை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அட்லாண்டிக் பெருங்கடல்:

  • அட்லாண்டிக் பெருங்கடல் உலகின் இரண்டாவது பெரிய பெருங்கடல் ஆகும். கிழக்கே ஆப்பிரிக்க ஐரோப்பிய நாடுகளும், மேற்கே வட அமெரிக்க, தென் அமெரிக்க நாடுகளுக்கிடையில் அமைந்துள்ளது. உலகின் பரப்பளவில் 20% கொண்டுள்ளது அட்லாண்டிக் பெருங்கடல். சுமார் 155 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் pangea கண்டம் பல கண்டங்களாய் பிரியும் போது உருவானது அட்லாண்டிக் பெருங்கடல்.
  • மார்ட்டின் வால்டுசிமுல்லர் (Martin Waldseemüller) என்னும் ஜெர்மனிய வரைபடவியலாளர், கிரேக்க கடவுளான அட்லாஸ்-ன் (Atlas) பெயரால் இக்கடலுக்கு அட்லாண்டிக் பெருங்கடல் என பெயர் சூட்டினார். மேற்கத்திய மற்றும் கிரேக்க கதைகளில் வரும் அட்லாண்டிஸ் (Atlantis) நாடு /கண்டம் இக்கடலில் தான் இருந்ததாகவும், 5000 ஆண்டுகளுக்கு முன் கடல்கோளால் அழிந்து போனதாகவும் சொல்கின்றனர். இதன் பெயராலேயே அட்லாண்டிக் பெருங்கடல் பெயர் பெற்றது என்றும் சொல்கின்றனர். 
  • உலகப்புகழ் பெற்ற டைட்டானிக் கப்பல் இங்கிலாந்திலிருந்து அமெரிக்க செல்லும் வழியில் அட்லாண்டி பெருங்கடலில் மூழ்கியுள்ளது. மேலும் இரண்டாம் உலக போரின் போது பல போர்கள் இங்கு நடந்தேறியுள்ளது. 
  • வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle). இங்கு கடலின் அதீத புவியிசை காரணமாக ஏராளமான கப்பல்கள் மற்றும் விமானங்கள் காணாமல் போனதாக சொல்லப்படுகிறது.
  • உலகின் பெரிய முகத்துவாரங்கள் (estuaries) அட்லாண்டிக் பெருங்கடலில் தான் கலக்கிறது. புகழ் பெற்ற பிரேசில் நாட்டு அமேசான் நதியும் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் தான் கலக்கிறது.
  • வட அட்லாண்டிக் பெருங்கடலில் மிக பெரிய எரிமலை தீவுகளும் இருக்கிறது.
  • அட்லாண்டிக் பெருங்கடல் ஆண்டுக்கு சுமார் 1.5 அங்குலங்கள் (3.8 சென்டிமீட்டர்) விரிவடைகிறது என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.  
  • நீல திமிங்கிலம், சுறாமீன்கள், டால்பின்கள், ஜெல்லி மீன்கள் என பல்வேறு வகையான கடல்வாழ் உயிரினங்களுக்கும் உறைவிடமாக அட்லாண்டிக் பெருங்கடல் விளங்குகிறது.

இந்திய பெருங்கடல்:

  • இந்திய பெருங்கடல் உலகின் மிக மூன்றாவது பெரிய பெருங்கடல் ஆகும். கிழக்கே ஆஸ்திரேலியாவும், மேற்கே ஆப்ரிக்க நிலப்பரப்பும், வடக்கே இந்திய நிலப்பரப்பும் இருக்கிறது. பூமி பரப்பளவில் 20% கொண்டுள்ளது இந்திய பெருங்கடல். சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கடைசியாக உருவான கடல் என்று சொல்கின்றனர்.  
  • ஐரோப்பியர்கள் இக்கடலை Eastern ocean (அன்றைய பசிபிக் - Western ocean க்கு எதிர்பக்கம் இருந்ததால்) என்று அழைத்து வந்தனர். சீன கடல் மாலுமிகள், இதனை Western Oceans என்றும் அழைத்து வந்தனர். பழங்கால கிரேக்க புவியலில், இக்கடலை Erythraean Sea என்று அழைத்தனர். 14ஆம் நூற்றாண்டுக்கு பின்னர் தான் Indian Ocean என பெயரிடப்பட்டது. இக்கடற்பகுதியில் இந்திய நிலப்பரப்பில் தான் அதிக கடற்கரையை கொண்டுள்ளது; அதனாலேயே இப்பெயர் பெற்றது.  
  • பூமத்திய ரேகை அருகே இருப்பதால் இஃது உலகின் வெப்பமான கடல் என சொல்லப்படுகிறது. வெப்பம் காரணமாக கடல் உயிரிக்கள் வாழ தேவையான உணவு (phytoplanktons) கிடைக்காமல் போகும் என்பதால் மற்ற பெருங்கடலை காட்டிலும் கடல் வாழ் உயிரினங்கள் சற்று குறைவாகவே இருக்கும்.
  • குறைவான கடல்வாழ் உயிரினங்கள் இருந்தபோதிலும், இது குறிப்பாக ஹம்ப்பேக் திமிங்கலத்திற்கு (Humpback Whale) இனப்பெருக்கதிற்கு ஏற்ற இடமாக திகழ்கிறது.
  • இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் அண்டார்டிகா பிரதேசத்திற்கு அருகில் கேர்கைலன் பீட பூமி (Kerguelen Plateau) என்னும் பகுதி இந்தியாவையும் அண்டார்டிகாவையும் இணைத்த பாலம் போன்ற பெரிய நிலப்பரப்பு, கடலில் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் மூழ்கி போனதாக சொல்கிறார்கள்.
  • அதே போல லெமுரியா என்னும் கடலில் மூழ்கி போன நிலப்பரப்பு (ஆஸ்திரேலியா, தென் இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவின் ஒரு பகுதி ) இந்திய பெருங்கடலில் இருப்பதாக சொல்கிறார்கள். இதனை தமிழர்கள் வாழ்ந்த குமரி கண்டம் என்றும் சொல்கின்றனர்; அதற்கு ஆதாரமாக சில மேற்கோள்களையும் காட்டுகின்றனர். இதை பற்றிய என்னுடைய முந்தைய பதிவை பற்றி படிக்க லெமூரியாவும் குமரி கண்டமும்
  • இந்தோனேஷியா கடல்பகுதிக்கு அருகே Java Trench என்னும் இடம் தான் இந்திய பெருங்கடலில் ஆழமான இடம் (7258 மீ) என சொல்கிறார்கள்.
  • இந்தியாவின் தென்முனையிலிருந்து (குமரி) 1200 கி.மீ தொலைவில் மிக பெரிய ஈர்ப்பு துளை Gravity hole ஒன்று உருவாக்கி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இதனால் 100 மீ வரை கடலின் ஆழம் குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
  • மசாலா பொருட்கள் (மிளகு, ஏலக்காய், இலவங்கம் முதலியன) வாங்கவும், பட்டு துணிகள், தந்தங்கள், விலையுயர்ந்த கற்கள், கைவினை பொருட்கள், குதிரைகள் என பல்வேறு பொருட்கள் வாங்கவும் spice route, silk route ஆக இருந்த இக்கடற்பகுதி பல்லாயிரம் ஆண்டுகளாகவே பல்வேறு பொருட்களை எடுத்து செல்லவும், வாணிபத்துக்காகவும் பயன்படுத்தப்பட்டுளது. சங்ககால பாண்டிய /சேர மன்னர்கள் ரோம் மற்றும் எகிப்து நாடுகளுக்கு இந்திய பெருங்கடல் வழி வர்த்தகம் செய்து வந்தற்கான ஆதாரங்கள் உண்டு. அதே போல பல (தெற்காசிய) நாடுகளை போரிட்டு வென்றெடுத்த இராஜேந்திர சோழன் பெரும் கடற்படையோடு, இந்திய பெருங்கடலை தம் கடற்படை கட்டுப்பாட்டில் வைத்திருந்த வரலாற்று பெருமையும் உண்டு. 
  • உலக வர்த்தகத்தில் இந்தியப் பெருங்கடல் பங்களிப்பு பெருமளவில் உள்ளது. பல்வேறு கடல் வர்த்தகத்தின் பாதை மட்டுமல்லாமல் மற்றும் கனிமங்களின் இருப்புகளையும் கொண்டுள்ளது. இந்த பெருங்கடலில் பல எண்ணெய் வைப்புகளும்(oil deposits) உள்ளன. மொத்த உலக எண்ணெய் உற்பத்தியில் 40 % இந்திய பெருங்கடலிலும், கடல் மூலமாகவும் வர்த்தகம் செய்யப்படுகின்றன.
ஆர்டிக் பெருங்கடல்:

  • பூமி பந்தின் மேல் பகுதியில் கனடா, க்ரீன் லாந்து மற்றும் ரஷ்யாவின் வட பகுதியில் அமைந்துள்ளது ஆர்டிக் பெருங்கடல். உலக பெருங்கடலில் மிக சிறியதும், ஆழமில்லாத கடல் ஆர்டிக் பெருங்கடல் ஆகும்.
  • Artikos என்னும் கிரேக்க சொல்லுக்கு 'near the bear' என்று பொருள். மேலும் வட துருவத்தை சுற்றி இருப்பதால் இது ஆர்டிக் பெருங்கடல் என பெயர் பெற்றது.
  • பல காலங்களுக்கு வெயிலோ வெளிச்சமோ படாத காரணத்தால், கடல் வாழ் உயிரினத்துக்கு தேவையான phytoplanktons & zooplanktons என ஏதும் பெரிதளவில் கிடைக்க வாய்ப்பில்லை. 
  • பணிகரடிகள், சீல் என்னும் கடல் சிங்கங்கள் , திமிங்கிலங்கள் என கடல்வாழ் பாலூட்டிகள் அதிகம் இருக்கின்றன.
  • கடலில் மேற்பகுதி பெரும்பாலும் பனியால் மூடப்பட்டிருக்கும். ஆர்க்டிக் பெருங்கடலின் பெரும்பகுதி வட துருவத்தைச் சுற்றி அமைந்திருப்பதாலும், உறைந்த நிலையில் உள்ள நீரினால் இருப்பதாலும், கடலில் முழுமையாக பயணம் செல்ல இயலாது.

அண்டார்டிக் பெருங்கடல்:
  • இதனை Southern Ocean என்றும் அழைப்பார்கள். அண்டார்டிக் கண்டதை சுற்றி இருப்பதால் இது அண்டார்டிக் பெருங்கடல் என பெயர் பெற்றது. 
  • எல்லோருக்கும் தெரிந்தது போல முழுக்க முழுக்க பனிப்பாறைகளால் நிரம்பியுள்ளது அண்டார்டிக் பெருங்கடல்.
  • மனிதர்களால் உருவாக்கப்பட்ட கார்பன் உமிழ்வுகளில் (Carbon Emmisions) 15% இந்த தெற்கு பெருங்கடல் இழுத்து கொள்வதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 

இது போன்ற எண்ணற்ற அதிசயங்களையும், ரகசியங்களையும், பல ஆபத்துகளையும் கொண்டுள்ளது நம் உலக பெருங்கடல்கள். உங்களுக்கு வேறு ஏதாவது செய்திகள் தெரியுமாயின் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தலாம். 

நன்றி !!!
பி. விமல் ராஜ் 

திங்கள், 30 அக்டோபர், 2023

நிஜாம் நகரில்!

வணக்கம்,

குடும்ப சுற்றுலா செல்ல கோவில்கள், மலைவாச ஸ்தலங்கள், பீச் ரிசாட்டுக்கள் என பல இருக்க, இம்முறை நிஜாம் நகரான ஹைதராபாத்துக்கு செல்லலாம் என முடிவு செய்து குடும்ப படை பரிவாரங்களுடன் 10 பேர் கொண்ட குழுவாக கடந்த ஆகஸ்டில் கிளம்பினோம்.

தெலுங்கானாவின் தலைநகரம்; நிஜாம் மன்னர்கள் ஆண்ட பகுதி; 400 வருட பழமையானது; தெலுங்கு சினிமாவின் மையம் என மிக குறைந்த தகவல்கள் மட்டுமே நமக்கு ஹைதராபாத் பற்றி தெரிந்திருக்கும். தெரியாத மற்ற சில விஷயங்களையும், சுற்றிப்பார்க்கும் சில முக்கிய இடங்களை பற்றியும் சொல்கிறேன். படியுங்கள்...


வரலாறு -
எந்த ஊருக்கு போனாலும் அதன் வரலாறும் பெயர் காரணமும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் கருத்து. தெலுங்கானா - மூன்று லிங்கங்கள் இப்பகுதியில் இருப்பதால் Trilinga Desha என்ற பெயரே பிற்காலத்தில் தெலுங்கானா என்று மருவியுள்ளது. ஹைதராபாத் நகரின் பெயர் காரணத்துக்கு பல காரணங்களை சொல்கிறார்கள். ஹைதராபாத்தின் பழைய பெயர் பாக்கியா நகர் என்றும், நகரின் மத்தியிலுள்ள பாக்கிய லட்சுமி அம்மன் பெயரால் இப்பெயர் பெற்றது என்றும் சொல்கிறார்கள். 'காலிப் அலி தாலிப்' என்னும் இஸ்லாமிய மன்னர் ஹயதார் (Haydar) என அழைக்கப்பட்டுள்ளார். haydar - lion ; abadh - land ; அதனால் இது சிங்கத்தின் நகரம் (haydar badh ) என்று பெயர் பெற்றதாகவும் சொல்லப்படுவதுண்டு. 'முகமது குலி குதுப் ஷா' என்னும் முகலாய அரசனின் காதலி பாகிமதிக்கு 'ஹைதர் மெஹல்' என பெயிரிடப்பட்டு, பின்னர் அவர் பெயராலேயே ஹைதராபாத் என்னும் பெயர் வந்ததாகவும் சொல்லப்படுவதுண்டு.

கிட்ட தட்ட 400 வருடங்கள் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இருந்துள்ளதால் இங்கு இஸ்லாமிய மன்னர்களின் கோட்டைகளும், அரண்மனைகளும் மசூதிகளும் தான் பிரதானம். ஹைதராபாத் முத்துகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. ஹைதராபாத்துக்கு முத்து நகரம் (City of Pearls) என்ற பெயரும் உண்டு. 18ஆம் நூற்றாண்டு முதல் 20 நூற்றாண்டின் இடைப்பகுதி வரை ஆண்ட நிஜாம்கள் முத்தினால் செய்யப்பட்ட நகைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டதால் முத்துக்களை இராக் - பார்சாவிலிருந்து (Iraq-Barsa) வாங்கி குவிக்க தொடங்கினார்கள். இவர்களின் காலம் முதல், முத்து வாணிபம் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை செழிக்கிறது.

hyderabad-tour-travel-tamil

சென்னையை விட ஐதராபாத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக தான் இருக்கிறது. ஒரு இடத்திலிருந்து மறு இடத்துக்கு சாலையில் நீந்தி செல்ல மிகுந்த நேரம் பிடிக்கிறது. சாலை போக்குவரத்துக்கு எல்லா பகுதிகளுக்கும் செல்ல TRTC - Telungana Road Transport Corporation இருக்கின்றது. நான் பார்த்த வரையில், பேருந்துள்ளே விசாலமான seating arrangement இருந்தாலும், பெரும்பாலான பேருந்துகள் படாவதியாய் இரும்பு கூடாய் சாலையில் ஓடிக் கொண்டிருக்கிறது. நகர் முழுவதும் எல்லா பக்கமும் போக மெட்ரோ வசதி இருப்பது மகிழ்ச்சிக்கூரியது.

ஐதராபாத்தில் சுற்றி பார்க்க வேண்டிய சில முக்கிய இடங்கள்:

  • சார்மினார்
  • ஹுசைன் சாகர் ஏரி
  • அம்பேத்கர் சிலை
  • சௌமஹாலா பேலஸ்
  • தெலுங்கானா தலைமை செயலகம்
  • பிர்லா மந்திர்
  • ராமானுஜர் சிலை
  • ராமோஜி ராவ் பிலிம் சிட்டி
சார்மினார் -
ஹைதராபாத் என்று சொன்னவுடன் நமக்கு நியாபகம் வரும் ஒரு இடம் சார்மினார் தான். இந்நகரின் முக்கிய அடையாளமும் விளங்குகிறது. கி.பி. 1591-ல் முகமது குலி குதுப் ஷா என்னும் முகலாய அரசன் சார்மினாரை காட்டியுள்ளார். Char- நான்கு; minar- தூண்கள்; நான்கு தூண்களை (4 Pillars) கொண்டது என்று பொருள். இதன் மேல் மாடியில் மசூதியும் உள்ளது. சதுர வடிவில் நான்கு மினாராக்களையும், பெரும் வளைவுகளையும் கொண்டுள்ள சார்மினார் பளிங்கு கற்கள், சுண்ணாம்பு கற்கள் ஆகியவற்றால் கட்டப்பட்டுள்ளது. நான்கு திசையிலிருந்தும் உள்ளே நுழைவது போல வடிவமைக்கப்பட்டது இதன் தனிசிறப்பு. 4 மாடிகளில் முதல் இரு மாடிகள் வரை சென்று பார்க்க முடியம். மாடிக்கு செல்ல சிறிய செங்குத்தான படிக்கட்டு பாதை வழியே மட்டுமே செல்ல முடியும். எங்களை முதல் மாடிவரை மட்டுமே அனுமதித்தார்கள். உள்புறமாக மாடியை சுற்றி வந்து நான்கு புறமும் பார்த்து ரசிக்கலாம். அங்கிருந்து பார்க்கும் போது நான்கு பிரதான தெருக்களும், பழைய ஹைதராபாத்தின் தோற்றமும் நன்றாகவே இருந்தது. இரவு நேரங்களில் மின்னொளியில் எல்லா கட்டிடங்களும் மின்னிக்கொண்டிருக்கும் காட்சி அற்புதமானது. சார்மினாரின் தென்மேற்கு வாசல் அருகே உள்ள 300 ஆண்டு பழமையான, கிரனைட் கற்களாலேயே செய்யப்பட்டுள்ள மெக்கா மசூதியின் (Meccah Masjid) தோற்றமும் முழுமையாக தெரிந்தது.

குடியரசு/சுதந்திர தின விழாக்காலங்களில் மூவர்ண விளக்குகளால் சார்மினார் அலங்கரிக்கப்படுவதுண்டு. சார்மினாரின் எதிரே எக்கச்சக்க பிளாட்பார கடைகளில் வளையல்கள், மணிகள், மாலைகள், கிளிப், பேக், செப்பல்கள் என போன்ற பெண்களின் பலவித அலங்கார பொருட்களும், பேன்ஸி ஆடைகளும் விற்கப்படுகிறது. பெரும்பாலும் சில்லறை விலையிலேயே இருப்பதால் போர் கணக்கில் கொட்டி விற்கப்படுகிறது. நல்லதாய் பார்த்து தேடி வாங்கி கொள்வது அவரவர் சாமர்த்தியம். நான்கு புரத்தில் உள்ள தெருக்களில் ஒன்றான Laad Bazaar ஒரு முக்கியமானதாகவும், பழமையான மார்க்கெட்டாகவும் விளங்குகிறது. லாட் பஜாரில் பல்வேறு நகைக்கடைகளும், துணிக்கடைகளும் இருக்கிறது. நகைக்கடைகளில் முத்து சார்ந்த நகைகளும், மற்ற கவரிங் நகைகளும், திருமணத்திற்கு தேவையான துணிமணிகளும் பெரிதும் விற்கப்படுகிறது.

சார்மினார் எதிரே ஓரு சிறிய பாக்கிய லட்சுமி கோவில் அம்மன் உள்ளது. அஃது ஒரு அங்கீகரிக்கப்படாத கோவில் கட்டுமானம் என இந்திய தொல்லியல் துறை கூறியுள்ளது. மேலும் அக்கோவில் 1962 வரை எந்த போட்டோவிலும் இடம்பெறவில்லை. 90களின் இடையில் கட்டப்பட்டுள்ளது என்று சர்ச்சையான கருத்தாகவே சொல்லப்படுகிறது.

ஹுசைன் சாகர் ஏரி -
கி.பி. 1563-ல் இப்ராஹிம் குலி குதுப் ஷா என்னும் அரசனால் ஹார்டின் வடிவத்தில் உருவாக்கப்பட்டது ஹுசைன் சாகர் ஏரி. ஏரியின் மத்தியில் ஒற்றைக் வெண்ணிற கிரானைட் கல்லால் செய்யப்பட்ட புத்தர் சிலை 1992-ல் நிறுவப்பட்டுள்ளது. இதன் உயரம் 18மீட்டர் (58 அடி) ஆகும். சிலையின் பீடத்தில் புத்தரின் உருவங்கள் செதுக்கப்ட்டுள்ளன. பெரும்பலும் சினிமாக்களில் ஹைதராபாத்தை காட்டும் போதும் இந்த புத்தர் சிலையை தான் காட்டுவார்கள். இந்த ஏரியை சுற்றி என்.டி.ஆர் கார்ட்ன், லும்பினி பார்க், சஞ்சீவய்யா பார்க், ஜல விஹார் (தீம் பார்க்) என பல கேளிக்கை பார்க்குக்குகள் இருக்கிறது. லும்பினி பார்க்கில் ராட்டினம், வாட்டர் பவுடன், லேசர் ஷோ, போட்டிங் என வேடிக்கை அம்சங்கள் பல் உண்டு. போட்டிங் செல்ல 50, 100 முதல் 700, 1000 ரூபாய் வரையில் பேக்கேஜ் இருக்கிறது. நங்கள் போகும் போது மலை நேரம் ஆகிவிட்டமையால் கூட்டம் அதிகமாகவே இருந்தது. ஒரு பேக்கேஜில் பார்க்கிலிருந்து ஏரியில் உள்ள புத்தர் சிலை வரை சென்று சில நிமிடங்கள் விட்டுவிடுவார்கள்; பின்னர் மீதும் கரைக்கே கூட்டிவந்து விடுவார்கள். பயணம் நேரம் எதோ 30 நிமிடம் தான் இருக்கும். ஆனால் படகு பயணமும் அனுபவமும் மிகவும் அருமையானதாக இருந்தது. இரவில் விளக்கொளியில் வெண்ணிற புத்தர் சிலை வர்ணங்களில் ஜொலித்தது. சஞ்சீவய்யா பார்க்கில் உள்ள மிக பெரிய தேசிய கொடி பட்டொளி வீசி பறந்து கொண்டிருப்பது, படகில் பயணம் செய்யும் போதும் கரையில் இருக்கும் போதும் தெளிவாகவே தெரிந்தது.

அம்பேத்கார் சிலை -
125 அடி உயரமுள்ள சிலை 2023 ஆம் ஆண்டு பாபாசாகிப் அம்பேத்காரின் 132ஆம் பிறந்தநாளின் போது தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் திறந்து வைத்தார். பாராளுமன்றம் போன்ற பீட அமைப்பில் நின்ற 125அடி வெண்கல சிலையில், ஒரு கையில் இந்திய அரசியலமைப்பு புத்தகம் ஏந்தி, மறுக்கையில் ஆள்காட்டி விரலை காட்டியடி படி நிற்கிறார். சீரழிக்கு கீழே உள்ள வட்ட கட்டிடத்தில், பெரிய நூலகமும், மியூசியமும், காணொளி காட்சி அரங்கமும் இருக்கிறது. ஆனால் நாங்கள் சென்றிருந்த போது எங்களுக்கு உள்ளே செல்ல அனுமதிக்க கிடைக்க வில்லை.

சமீபத்தில் திறக்கப்பட்ட தெலுங்கானாவின் புதிய தலைமை செயலகம் ஏரிக்கரை அருகே பிரமாண்ட மாளிகை போல கட்டப்பட்டுள்ளது. மேலும் தெலுங்கானா அமர் ஜோதி என்ற பெயரில் பெரிய அகல் விளக்கு போன்ற ஒரு கட்டமைப்பு கட்டப்பட்டு வருகிறது. அது மறைந்த வீரர்களுக்கான நினைவகம் என்று சொல்லப்படுகிறது.

(Tank Bund road / Lake view road) ஏரி கரை சாலையிலிருந்து அம்பேத்கர் சிலை, ஏரியில் நடுவே உள்ள புத்தர் சிலை, சஞ்சீவய்யா பார்க்கில் உள்ள பெரிய கொடி கம்பம், தெலுங்கானா தலைமை செயலகம் என எல்லாமே கண்ணிற்கு புலப்படும். அதே சாலையில் அம்மாநில அரசியல் தலைவர்கள், தெலுங்கு தேச புலவர்கள், மன்னர்கள் என பலரின் சிலைகளும் வரிசையாய் (நம் மெரினா காமராஜர் சாலை போல) வைக்கப்பட்டுள்ளது.

சௌமஹாலா பேலஸ் -
1720-1948 ஆம் ஆண்டு வரை ஹைதராபாத்தை ஆண்ட நிஜாம் மன்னர்கள் வாழ்ந்த அரண்மனை இது. 1880-ல் கட்டி முடிக்கபட்ட இந்த அரண்மனை, இப்போது அருங்காட்சியகமாக இருக்கிறது. நிஜாம்கள் பயன்படுத்திய மார்பில் சிம்மாசனம் மிக பெரிய தர்பார் மண்டபத்தின் நடுவே வீற்றிருக்கிறது. இதை தவிர போர் கருவிகள், ஆயுதங்கள், பீங்கான் பொருட்கள், விலை உயர்ந்த பொருட்கள் உடைகள், இரும்பு மற்றும் மர பெட்டகங்கள், பெரிய ஓவியங்கள், வரலாற்று புகைப்படங்கள், என எல்லாமே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் இதன் பின் புறத்தில் தோட்டமும், நிஜாம் பயன்படுத்திய Napier, Ford Tourer, Fiat என ஆடம்பர பழங்கால கார்களும், கோச் வண்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் மஞ்சள் நிற 1912 Rolls Royce Silver Ghost தான் பெரிய highlight! நம் வாழ்நாளில் அது போன்ற கார்களை பார்த்திருக்கவே மாட்டோம்.

பிர்லா மந்திர் -
பிர்லா குழுமத்தால் கட்டப்பட்ட பல கோவில்களில் இதுவும் ஒன்று. ஹுசைன் சாகர் ஏரி கரை சாலையருகே சிறிய மலை குன்றின் மீது முழுக்க முழுக்க வெள்ளை நிற பளிங்கு கற்களால் கட்டப்பட்ட வெங்கடாசலபதி பெருமாள் கோவில் இது. மலை மேலே செல்ல வண்டியிலோ அல்லது பொடி நடையாக குறுக்கு வழியிலும் செல்லலாம். மேலே கோவிலுக்குள் நுழைய மொபைல் போன், கேமரா, பேக் என எதுவும் எடுத்து போக கூடாது. படியேறி உள்ளே கோவிலில் ஆஞ்சனேயர் சந்நிதி, சிவன், பார்வதி, பிரம்மா, சரஸ்வதி என எல்லா தெய்வத்துக்கும் தனி சந்நிதி உண்டு. 11 அடியில் உள்ள வெங்கடேஸ்வர பெருமாளை சன்னதியில் தரிசிக்கலாம். கோவில் மேல் தளத்திலிருந்து பார்த்தால் ஒரு பக்கம் நகரின் அழகிய கட்டிடங்களும், மலைகளும் தெரியும். மறுபக்கம் ஹுசைன் சாகர் ஏரியின் முழுமையும், அம்பேத்கர் சிலையும், தலைமை செயலகமும் தெரியும். அங்கிருந்து பார்க்கும் போது தெரியும் ஐதராபாத்தின் நகரின் அழகே அழகு !

ராமானுஜர் சிலை -
ஹைதராபாத்திலிருந்து 35கி.மீ தூரத்தில் பயணத்தில் உள்ளது வைணவ துறவியான ராமானுஜர் சிலை. சாலையிலிருந்து பார்க்கும் போது தூரத்திலிருந்து பார்க்கும் போதே பிரமாண்ட ராமானுஜர் சிலை தெரிகிறது. அமர்ந்த கோலத்தில் கைகூப்பி வணங்குவது போல அமைக்கப்பட்டுள்ளது. இதனை Statue of Equality என சொல்கிறார்கள். 2022-ல் பாரத பிரதமர் நரந்திர மோடி அவர்களால் திறந்து வைக்கபட்டுள்ளது. 216 அடி உயரமுள்ள இந்த பஞ்சலோக சிலை, 700 டன் எடையும் ,1000 கோடி ரூபாய் பொருட்செலவிலும் கட்டப்பட்டுள்ளது. இது உலகிலேயே உயரமான உட்கார்ந்திருக்கும் சிலை (Tallest Sitting Statue) என சொல்லப்படுகிறது. சிலைக்கு கீழே முதல் தளத்தில் சிறிய ராமானுஜர் கோவிலும், தரை தளத்தில் 108 திவ்யதேசங்களில் உள்ள பெருமாள் திருஉருவச்சிலைகள் தனித்தனி சந்நிதிகளாக இருக்கிறது. 108 சன்னைதிகளையும் பார்த்துவிட்டு அப்படியே படியேறி ராமானுஜர் சிலைக்கு அருகே செல்லலாம். சமய ஈடுபாடு கொண்டவர்களுக்கும், பக்திமான்களுக்கும் ஒரு சிறந்த புனித யாத்திரை மையமாக இருக்கிறது. சந்நிதிக்கு போகும் முன்னமே நம் மொபைல் போன், கேமரா போன்றவற்றை வாங்கி வைத்து கொள்கின்றனர். பெரும் பார்க்கிங் வசதியும், கட்டணமாக 200 ரூபாய் வசூலிக்கப்படுக்கிறது.

ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி -
தென்னக சினிமாக்களின் உறைவிடமாக மட்டுமில்லாமல், ஹைதராபாத் நகரின் மற்றொரு பொழுதுபோக்கு அடையாளமாக மாறி கொண்டிருக்கிறது ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி. ஹைதராபாத்திலிருந்து 70 கி.மீ தூரத்தில் உள்ள இந்த ஃபிலிம் சிட்டி 1996-ல் ஆரம்பிக்கப்பட்டது. 1666 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த ஃபிலிம் சிட்டியில் நிரந்திரமாக போடப்பட்ட சினிமா செட்டுக்களான ரயில் நிலையம், விமான நிலையம், மருத்துவமனை, சென்ட்ரல் ஜெயில், போலிஸ் ஸ்டேஷன், மலைக்கோவில், ஓட்டல்கள், பெரிய பங்களா வீடுகள், ஃபாரின் லொகேஷன் தெருக்கள், அடுக்குமாடி அபார்ட்மெண்ட்கள், மீடியா கட்டிடங்கள், மைசூர் பிருந்தாவன் தோட்டம், ராஜஸ்தான் மாளிகை என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. மேலும் புராண / இதிகாச படங்கள் காட்சிகள் எடுக்க தனி செட்டுகள் (movie set) இருக்கிறது.

சினிமாவில் green matt எப்படி காட்சிகள் படம்பிடிக்க படிக்கிறது, அதற்கு sound effects எப்படி சேர்க்கிறார்கள், எப்படி படமாக்கப்படுகிறது எனபதை தனித்தனியாக காட்டுகின்றனர். மேலும் பல நாடுகளின், சினிமா படங்களின் கதாப்பாத்திரங்களை காட்டும் வகையில் மினி டூர் காட்டப்படுகின்றன. அருமையான சண்டை மற்றும் சாகசங்கள் செய்யும் 'Western Stunt Show' ஒன்றும் காட்டப்படுகிறது. இதை தவிர ராமோஜி ராவ் சிட்டியின் highlight ஆக இருப்பது பாகுபலி செட் தான். பாகுபலி படத்தின் படப்பிடிப்பின் போது பயன்படுத்திய சில செட் பிராபர்ட்டிகளை காட்சிக்கு வைத்துள்ளனர். மகிழ்மதி சிம்மாசனம், கோட்டை சுவர் சுற்றிலும் மகிழ்மதியின் மஞ்சள் கொடி, பெரிய யானை சிலைகள், குதிரைகள் இழுத்து செல்லும் பிரமிட் போன்ற அமைப்பு, பாகுபலி கட்டி இழுக்கும் பெரிய தேர், போர் முரசு, அடங்காத காட்டெருமை, போரின் போது ராணா வரும் விசித்திர தேர், பெரும் கற்களையும் அம்புகளையும் எறியும் போர் கருவிகள், பல்வாள் தேவனின் (ராணா) பிரமாண்ட சிலை என திரையில் நாம் பார்த்து வியந்ததை, நேரில் காட்டி நம்மை திகைப்புக்கு உள்ளாகிருக்கிறார்கள். ஒவ்வொரு செட்டுக்கு அருகே நின்று நாம் போட்டோ போஸ் கொடுக்க வேண்டுமாயின் குறைந்தது 30 பேராவது நிற்கிறார்கள். நாம் frame set பண்ணி angle பார்ப்பதற்குள் photo bombing செய்வதுதான் கொஞ்சம் கடுப்பாக இருந்தது.

இங்கு விடுமுறை நாளில் போகாமல் இருப்பது சாலச்சிறந்ததது. அவ்வளவு பெரிய இடத்தில பெரிய கூட்டம் கரைந்து விடும் என்றாலும் கூட, எல்லாவற்றுக்கும் காத்திருக்க வேண்டிய நிலை வரும் (பஸ், உணவு, entry...).    

இது ஒரு சிறந்த விடுமுறை இடமாகவும், ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகவும், பொழுதுபோக்கு மையமாகவும் விளங்குகிறது. இதில் இயற்கை மற்றும் செயற்கையான பூங்காக்கள், சிறிய பறவைகள்/வண்ணத்துப்பூச்சிகளின் சரணாலயம், குழந்தைகள் விளையாட்டு மண்டலங்கள் (கொடை ராட்டினம், சறுக்குமரம்..), செயற்கை நீர்வீழ்ச்சிகள், அழகிய ஃபௌவுன்டன்கள் என பொழுதுபோக்கும் அம்சங்கள் பல இருக்கிறது. உட்கார்ந்து இளைப்பாற இடமும், தண்ணீர் டாங்கிகளும், கழிவறைகளை இருக்கிறது. சைவ/அசைவ உணவகங்கள் நான்கு, ஐந்து இருக்கிறது. அசைவத்தில் பெரிதாய் ஒன்றும் வெரைய்ட்டி இல்லை. சைவத்துக்கு போவது நன்று! ஃபிலிம் சிட்டிக்குள்ளே எல்லா இடத்துக்கும் செல்ல வின்டேஜ் பஸ் வசதியும் உண்டு. ஒவ்வொரு பஸ்ஸிலும் ஒரு வழிகாட்டி ஒருவர் பார்க்க போகும் இடங்களையம், பக்கவாட்டில் இருக்கும் இடங்களையும் பற்றி சொல்லி கொண்டே வருவார். பெரும்பாலும் இங்குள்ள ஊழியர்கள் ஹிந்தியில் தான் பேசுகிறார்கள். ஹிந்தி புரியாதோர் தோராயமாக தான் புரிந்து கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. காலையில் சென்றால் மாலை 6 மணிக்கு தான் முடிக்க முடியும். அப்போதும் ஓரிரெண்டு இடங்களை விட்டுவிடவேண்டியதாய் இருக்கும். இவ்வளவையும் சுற்றி பார்க்க, டிக்கெட் விலைதான் ராக்கெட் போல சொய்ங்ங்ங்... என ஏறி நிற்கிறது. ரூபாய் 1500, 2000, 2500 என பேக்கஜ் வாரியாய் இருக்கிறது. காலை 0945க்கு திறப்பு விழா நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு, மாலை 0545க்கு மூடு விழா நடக்கிறது. அதுமட்டுமல்லால் எந்த ஷோ எப்பொது பார்க்க வேண்டும், எந்த ஈவென்ட், எங்கு, எத்தனை மணிக்குள் போக வேண்டும் என்பதை தெளிவாய் தெரிந்து கொண்டு ஃபிலிம் சிட்டி டூரை ஆரம்பிக்க வேண்டும். டிக்கெட் கவுண்டரிலேயே ஒரு மேப்புடன் சேர்ந்த broucher கொடுத்து விடுகிறார்கள். அதை கவனமாக படித்து, அதன்படி சென்றால் எல்லா நிகழ்ச்சிகளையும், பொழுதுபோக்குகளையும் செட்டுகளையும் பார்த்து, வியந்து, மகிழ்ந்து களைப்புடன் திரும்பலாம்.

நேரமின்மையால் கோல்கொண்டா கோட்டை, பிர்லா அறிவியல் அருங்காட்சியகம், நிஜாம் மியுசியம், சலார்ஜுங் மியுசியம் என பல நல்ல இடங்களை பார்க்க முடியவில்லை. ஹைதராபாத் டூர் அழைத்து சென்ற organsier ஒருவரின் (சொந்தக்காரர்தான்!😉) நச்சரிப்பின் பெயரில் பர்னிச்சர்கள், அலங்கார பொருட்கள், பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் பிரமாண்ட IKEA கடையில் சிலபல ஆயிரங்களை கார்டில் தேய்த்துவிட்டு வந்து சேர்ந்தோம்.

ஹைதராபாதில் ஜூன் -அக்டோபர் மழை பெய்யும் காலமானாலும், மழையினால் எந்த பாதிப்பும் இல்லாமல் சுற்றிப்பார்க்க முடிந்தது. மிதமான வானிலையும், குளிர்ச்சியாகவும் இருக்க அக்டோபர் - பிப்ரவரி காலத்தில் சென்று ஹைதராபாதின் பேரழகையும், பெருமையும் பார்த்து என்ஜாய் செய்யண்டி !😁

ஏமி
ரா? ஹைதராபாத் பர்யாதனக்கு சித்தாமா? ரண்டி... வெல்தாமா ??


நன்றி !!!
பி. விமல் ராஜ்

சனி, 21 அக்டோபர், 2023

லியோ - விமர்சனம்

வணக்கம்,

மாநகரமும் கைதியும் ஹிட்டடித்து, விக்ரம் படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகிவிட்டமையால், இயக்குனர் லோகேஷ் கனகராஜின் லியோ படம் மிகுந்த எதிர்பார்ப்புக்குள் எப்போதோ வந்துவிட்டது. படத்தின் ஒவ்வொரு அப்டேட் வரும் போதும், இப்படம் கண்டிப்பாக LCU -குள் தான் வரும் என பல திரை விமர்சகர்கள் டிகோடிட்டு கொண்டிருந்தனர். மேலும் படக்குழு விட்டுக் கொண்டிருந்த போஸ்டர் அப்டேட்டுகளால் திக்குமுக்காடி போனது சினிமா/விஜய் ரசிகர்கள் கூட்டம். ஜெயிலர் பட வெற்றியை முந்திவிட வேண்டும் என்பதில் தயாரிப்பு தரப்பு மிகுந்த கவனத்துடன் இருப்பதை சமூக வலைத்தளங்களிருந்தும், லோகேஷின் பேட்டிகளிலிருந்தும் அறிய முடிந்தது.

தளபதி விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் என பல பல நட்சத்திர பட்டாளங்களுடன் வெளிவந்துள்ளது லியோ. இதை தவிர LCU சீரிஸில் வரும் மற்ற நடிகர்களும் இருக்கிறார்கள் என்ற  பேச்சும் அடிபட்டது. ஒரு பிரமாண்ட படம் அல்லது எதிர்பார்ப்புக்குரிய படம் என்று சொல்ல வேண்டுமாயின், இது போல பெரிய பட்டாளங்களுடன் கதை பண்ணுவதும் இப்போது பேஷனான ஒன்றாகிவிட்டது. உண்மையிலேயே அவர்களெல்லாம் கதைக்கு தேவையா இல்லையா என்பதெல்லாம் இங்கு தேவையில்லை. எப்படி இயக்குனர் ஷங்கர் படத்தில் சாலமன் பாப்பையா நீதிபதியாக (பாய்ஸ்) /பக்கத்துக்கு வீட்டுகாரராக (சிவாஜி) ஒரு சீனுக்கு வருவாரா அது போல தான் இந்த நட்சத்திர கூட்டமும். 

Leo-movie-review

முதல் சிங்கிள் ட்ராக் "நான் வரவா.."வில் விஜய் சிகரெட் பிடிப்பதை பெருமையாக சொல்கிறார் என சில கோஷ்டிகள் வரிந்துகட்ட ஆரம்பித்தன. டிரைலரில் விஜய் பேசிய (கே)கெட்ட வார்த்தை மீண்டும் சர்சையாக பேசப்பட்டு, படத்திற்கு மேலும் விளம்பரத்தை கூட்டின. இந்த கோஷ்டியெல்லாம் மற்ற படங்கள் வரும் போது எங்கே போனது என தெரியவில்லை. ட்ரைலர் ரிலீஸின் போது தியேட்டரை நாசமாக்கியது, ஆடியோ லான்ச் இல்லை என முடிவெடுத்தது, 4 மணி காட்சி அனுமதி இல்லை என தடை போட்டது என எல்லாமே படத்துக்கு ப்ரமோஷன் ஆகி போனது மேலும் ஹைப்பை கூட்டிவிட்டது. மற்ற படத்தை காட்டிலும் லியோவிற்கு டிக்கெட் டிமாண்ட் கொஞ்சம் ஜாஸ்தியாகவே இருந்தது எல்லோராலும் பார்க்க முடிந்தது.

ட்ரைலரிலேயே லேசாக கதை புரிவது போல தான் இருந்தது. ஹிமாசலத்தில் மனைவி திரிஷா, மகன், மகளுடன் சந்தோஷமாக காபி ஷாப் நடத்தி வருகிறார் பார்த்திபன்(விஜய்). ஒரு பிரச்சனையில் அவரது காபி ஷாப்பில் ஒரு சைக்கோ வழிப்பறி கும்பலிடம் சண்டையிட்டு அவர்களை சுட்டு கொள்வதில் ஆரம்பிக்கிறது விஜய்க்கு பிரச்னை. அது பெரும் செய்தியாகி நாட்டின் மற்ற மாநிலத்தில் உள்ள ரவுடி தாதாக்களுக்கு தெரிய வர, தளபதியை லியோ என சொல்லி தேடி வருகிறது சஞ்சய் தத், அர்ஜுன் கேங். பிளாஷ்பேக்கில் லியோவின் கதையை சொல்ல, உண்மையிலேயே அவர் கடத்தல்/கொலைகாரன் லியோ வா? அல்லது பார்த்திபன் தானா என்று நமக்கும் வில்லன் கோஷ்டிக்கும் சொல்லி புரிய வைப்பது தான் படத்தின் மீதி கதை !

படம் முழுக்க விஜய் Middle-aged man ஆக இருந்தாலும் பாடி fit ஆக வைத்துள்ளார். என்ன.. தலையை மட்டும் கொஞ்சம் சீவியிருக்கலாம். ஆங்காங்கே தளபதியின் நடிப்பும், ஹீரோயிசமும் மிளிர்கிறது. கதைக்கு ஏற்றவாறு நடித்தும் உள்ளார். வெறிக்கொண்டு அலறும் போதும், ஆக்ரோஷமாக சண்டையிடும் போதும், உடைந்து அழும் போதும், குடும்பத்துக்கு ஏதும் ஆகிவிட கூடாது என்னும் படபடப்பிலும் மிறுக்கேறிய முகபாவங்களை காட்டியுள்ளார். அவருடைய ரெகுலரான பாடி லாங்குவெஜ், மனரிசம் என்ற பெயரில் செய்யும் எதையும் இதில் செய்யாமல் இருந்தது நன்று! படம் முழுக்க முக்கால்வாசி சண்டைக்காட்சிகள் தான். எல்லோரையும் அடித்து, மண்டையை/தாடையை உடைத்து, முகரையை கிழித்து தொங்க விடுகிறார். ஹீரோயின் திரிஷா ஓரிரு சீனுக்கு மட்டும் வராமல் படம் முழுக்க வந்து அப்பப்போ ரொமான்ஸும், விஜய்க்கு ஆறுதலும் சொல்கிறார். அவரது நண்பர் கெளதம் மேனன் வனசரக அதிகாரியாக படம் முழுக்க வந்து ஹீரோவிற்கு உதவுகிறார்.

பெரும் போதை வியாபாரியாக வரும் சஞ்சய் தத் வில்லனாய் ஒன்றும் மிரட்டவில்லை. அர்ஜுனுக்கும் நடிக்க பெரிய ஸ்கோப்போ/சீனோ இருக்கவில்லை. அவரையும் கொஞ்சம் கெத்தாக, மாஸாக காட்டியிருக்கலாம். அனுராக் காஷ்யப் என்னும் அருமையான நடிகரை ஒரு சீன், ஒரு டயலாக்கில் கொன்று விடுகின்றனர். பிரியா ஆனந்த், மடோனா செபாஸ்டின், பிக்பாஸ் ஜனனி, சாண்டி மாஸ்டர், மிஷ்கின் என பலரும் சீனில் வந்து போகின்றனர். மன்சூர் அலி கான் பிளாஷ்பேக் சொல்ல ஒரு சீனுக்கு வந்து செல்கிறார். லியோவின் பிளாஷ்பேக் நறுக்கென சின்னதாய் இருந்தாலும், முறுக்கு போல இல்லாமல் சவசவ என பிசுபிசுத்து இருந்தது கொஞ்சம் ஏமாற்றம் தான்.

LCU கனெக்ட் எப்படி, எந்த சீனில் வரும் என்று எதிர்பார்க்கையில், கான்ஸ்டபிள் நெப்போலியன் வந்து சில காட்சிகள் அதகள படுத்தி போகிறார். முதல் பத்து நிமிடம் வரும் hynea fighting scene விறுவிறுப்பாக இருந்தது; எனக்கு பிடித்திருந்தது. பின்பாதியில் 'சுப்பிரமணி'யை உதவிக்கு அழைக்கும் சீன், சின்ன சர்பிரைஸ் போல இருந்தது. மற்றபடி Goosebump scene என எதுவுமே இல்லாதது என்பது ஒரு பெரும் குறை. முதல்பாதி விறுவிறுப்புடன் அதிரிபுதிரியாய் முடிய, பின்பாதி வளவள என்று இழுத்து கொண்டே போனது சற்றே சலிப்பை தருகிறது. இயக்குனர் லோகேஷ், ஒரு மல்டி-ஸ்டாரர் கமர்சியல் படத்துக்கு வெறும் ஆக்ஷன் மற்றும் மசாலா மட்டும் போதும் என நினைத்து விட்டார் போலும்.

பாடல்கள் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. "நான் வரவா.." பாடல் ரசிகர்களுக்காகவே சொருகி சேர்க்கப்பட்டுள்ளது. "அன்பென்னும்" பாட்டு சுமார் ராகம் தான். "Badass மா...." பெரிசா ஒன்னும் இல்லமா...

லியோ விஜய்க்கு மேலும் ஒரு பிளாக் பஸ்டர் தான். 1000 கோடி தொடுமா என்றால் அது சந்தேகம் தான். ஆனால் ஏற்கனவே முதல் இரு நாள் கலெக்ஷன் 200C என சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். லியோ காலத்தை வென்ற ரசனை-யாய் ஆகியிருக்க வேண்டிய படம்; ஆனால் வெறும் hype, commercial, சொதப்பல் திரைக்கதை என சாதாரண விஜய் படமாக போனது கொஞ்சம் வருத்தம். கிளைமேக்ஸில் LCU Connectக்கு முத்தாய்ப்பாக Agent விக்ரமின் வாய்ஸ ஓவர் வருவது, பின் வரும் பார்ட்களில் இவர்கள் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
என்னை பொறுத்தவரை, Keep Calm and Watch the Movie One time ! அந்த அளவு மோசம் இல்லனாலும் It's Bloody Sweet தான்!


நன்றி!!!
பி. விமல் ராஜ்

வியாழன், 21 செப்டம்பர், 2023

கனவுகள் ஆயிரம்!

வணக்கம்,

நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கனவு வரும். ஆசைப்பட்ட பொருள் கிடைக்க வேண்டும், நன்றாய் படித்து நல்ல மார்க் எடுக்க வேண்டும், நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்க வேண்டும், காதலிக்க அழகிய பெண் வேண்டும், திருமணம் செய்ய குணமான பெண் வேண்டும், திட்டாத மனைவி வேண்டும் (ஹ்ம்ம்...), டார்ச்சர் செய்யாத மேனேஜர் வேண்டும் (ஹ்ம்ம்க்கும்..), மற்றவர் முன் நல்ல வசதி வாய்ப்புடன் இருக்க வேண்டும் என ஒவ்வொருவரின் கனவும் அவர்களின் சிந்தனைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றது போல இருக்கும். 
"கனவு என்பது தூங்கும் போது பார்ப்பது அல்ல, தூங்க விடாத ஒன்று. மேலும் அந்த எண்ணங்களால் எண்ணற்ற செயல்கள் நடக்கின்றன." - பாரத் ரத்னா APJ அப்துல் கலாம். 
நம் தூக்கத்தில் வரும் கனவும், தூங்க விடாமல் நாம் துரத்தும் கனவும் ஒன்றல்ல.  இக்கனவுகளின் அர்த்தம் என்ன? இந்த கனவுகள் எதனால் வருகிறது ? ஏன் வருகிறது? என்பதை நான் படித்ததை கொண்டு சொல்கிறேன், படியுங்கள்! 

எனக்கும் ஒரு கனவு இருந்தது. ஒரு மாதத்திற்கு நான்கு பதிவு போட வேண்டும்; நிறைய எழுத வேண்டும்; அதை நிறைய பேர் அதை படிக்க வேண்டும் என ஒரு சராசரி பதிவரின் கனவு தான். முழுமையாக இல்லை என்றாலும் ஏதோ என்னால் முடிந்தவரை எனக்கு தெரிந்ததை கொண்டு எழுதி வருகிறேன். கொஞ்சம் கொஞ்சமாக  இப்போது தான் 150ஆவது பதிவை எட்டியுள்ளேன்.😀 இதுவரையில் என் வலைப்பூவின் பதிவுகளை படித்து, எனக்கு ஊக்கமளித்த அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்! 🙏


நாம் தூங்கும் போது மூளையில் முழுமையாக நிகழும் ஒரு அற்புதமான விஷயம் கனவு. இன்றளவும் மனித அனுபவத்தில் பலரால் விவரிக்க முடியாத ஒன்று. ஒரு கனவு என்பது தூக்கத்தின் போது ஏற்படும் காட்சிகள்
, எண்ண ஓட்டங்கள் மற்றும் உணர்ச்சிகளின் தொடர்ச்சியே ஆகும். பொதுவாக கனவுகள் தூக்கத்தின் சில கட்டங்களில் விருப்பமின்றி நடக்கும். மக்கள் ஒவ்வொரு இரவும் சுமார் இரண்டு மணிநேரம் கனவு காண்கிறார்கள். ஒவ்வொரு கனவும் சுமார் 5 முதல் 20 நிமிடங்கள் வரை நீடிக்கும். இருப்பினும், கனவு காண்பவர் கனவில் நிகழ்ந்ததை விட காட்சிகள் நீளமாக இருப்பதாய் உணரலாம். மேலும் கனவுகள் என்பது உறக்கத்தின் போது உணர்ச்சி, அறிவாற்றல் மற்றும் உணர்ச்சிகரமான நிகழ்வுகளால் வகைப்படுத்தப்படுகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கனவுகளில் என்னவெல்லாம் வரும்? எதெல்லாம் வரும்? 

*) பொருள்/உருவம்/நபர்.
*) விழித்திருக்கும் போது ஒரு நபருக்கு ஏற்படும் ஒரு சம்பந்தமில்லாத/விருப்பமில்லாத பார்வை (vision). ஏற்கனவே நடந்திருக்கும்/ நடக்கப்போகும் ஒரு செயலோ/ நிகழ்வோ/விஷயமோ நம் கண் முன்னே படமாய் ஓடும்.
*) விழித்திருக்கும் போது ஒரு நபர் விரும்பிய ஒரு விஷயம்/ கற்பனையில் உள்ள ஒரு நிகழ்வோ, செயலோ vision னாக முன்வந்து மறையும். வண்டி ஓட்டும் போதோ, வீட்டில்/அலுவலகத்தில் வெட்டியாய் உட்கார்ந்திருக்கும் போதோ, பள்ளி, கல்லூரி வகுப்பில் அமர்ந்த்திருக்கும் போதோ ஏற்படும் ஓர் காட்சியின் திடீர் பார்வை.  
*) ஒரு லட்சியம், இலக்கு அல்லது குறிக்கோள் (இதை பற்றித்தான் தான் அப்துல் கலாம் சொல்லியிருந்தார்).

Why dreams coming in sleep

கனவுகளுக்கு பல வடிவங்கள் உண்டு. கவலை தோய்ந்த கனவுகள், தெளிவான கதை போன்ற கனவுகள், ஆசைகளை நிறைவேற்றும் கனவுகள் மற்றும் பயங்கரமான கனவுகள் என பல உண்டு. கனவுகள் பொதுவாக REM தூக்கத்தின் போது ஏற்படும். REM கனவுகள் (REM dreams) என்றால் என்ன? நாம் கனவு காணும் போது, நம் கண்ணின் கருமணி எல்லா திசைகளிலும் வேகமாக நகரும். இதையே Rapid Eye Movement (REM) என சொல்வார்கள். பொதுவாக தூங்கி 90 நிமிடங்களுக்குள் REM கனவுகள் தொடங்குகிறது. REM தூக்கம் கனவு மற்றும் தொடர் நினைவுகளுடன் தொடர்புடையது. REM தூக்கத்தின் போது ஏற்படும் கனவுகள் மிகவும் தெளிவானதாகவும், கதையைப் போலவும் இருக்கும். அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள எளிதாகிறது. REM தூக்கம் பொதுவாக தூக்க சுழற்சியின் (sleep cycle) பிற்பகுதியில் நிகழ்கிறது. எனவே தூங்கி எழுந்தவுடன் நெருக்கமாக விஷயங்களின் கனவுகள் நினைவில் இருக்கும். REM தூக்கத்தின் போது எழுந்திருக்கும் 80% மக்கள் தங்கள் கனவுகளை நினைவில் வைத்திருக்க முடியும் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. மருத்துவ நடைமுறையில், இளைஞர்கள் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை எழுந்தவுடன் கனவுகளை நினைவில் கொள்கிறார்கள். இருப்பினும், எல்லோரும் தங்கள் கனவுகளை நினைவில் கொள்வதில்லை. சிலர் தங்கள் கனவுகளை நினைவில் வைத்திருக்க மாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் விழித்தவுடன் அவர்களுக்கு சம்பந்தமில்லாத விஷயத்தை / தகவலை உடனடியாக அணுக முடியாது. தூக்கத்தின் போது மூளையில் உள்ள acetylcholine மற்றும் norepinephrine ஆகிய ரசாயன அளவுகள் மாறுவதால் மக்கள் தங்கள் கனவுகளை மறந்து விடுகிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். ஒரு சிலருக்கு NREM (Non-REM) கனவுகளும் வருவதுண்டு. 

கனவுகள் எதனால் வருகிறது?

மக்கள் ஏன் கனவு காண்கிறார்கள் என்பது பற்றி பல கோட்பாடுகள் உள்ளன, ஆனால் உறுதியான பதில் இல்லை. ஒரு சில கோட்பாடுகளில் கனவின் காரணத்தை சொல்ல முயற்சித்துள்ளனர்.

(i) நினைவுகளை ஒருங்கிணைத்தல்: முக்கியமான நினைவுகளைச் சேர்த்து சேமிக்கவும், முக்கியமில்லாதவற்றை அகற்றவும் கனவுகள் தேவைப்படுகிறது. உங்கள் நாளின் நல்ல விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ள கனவுகள் உதவுகிறது.
(ii) உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்துதல்: உங்களுள் உள்ள பயம்/ காமம்/ கோபம் போன்ற உணர்வுகளை சமாளிக்க கனவுகள் உதவக்கூடும்.
(iii) சவால்களுக்கான பயிற்சி: கடினமான நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் பயிற்சியை கனவுகள் கொடுக்கும் .
(iv) பழமையான உள்ளுணர்வு ஒத்திகை: கனவுகள் உங்கள் விடாமுயற்சிகளுடன் சண்டை போடவும், உங்களை சமாதான படுத்தி விமான போல பறக்கும் உள்ளுணர்வைப் பெற பயிற்சி செய்யவும் உதவும்.

பெரும்பாலும் என்னன்ன கனவுகள் வரும்?

- மேலேயிருந்து கீழே விழுவது. 
- முடி/ பல் உடைந்து கொட்டுவது. 
- பாம்பு தீண்டுவது/அல்லது உடம்பில் ஊர்வது. 
- நாய் / வேறொருவர் துரத்துவது. 
- தண்ணீருக்குள் மூழ்குவது. 
- காலியான அறையை பார்ப்பது.
- வண்டியில் போகும் போது விபத்து நேரிடுவது.
- பெட்டி பெட்டியாய் பணம் இருப்பது. 
- பொது இடத்தில நிர்வாணமாய் போவது. 
- முக்கியமான பரீட்சைக்கு படிக்காமல் இருப்பது. 
- நெருக்கமானவர் இறந்தபின் நம்முடன் பேசுவது. 
- பயங்கர உருவங்களை பார்ப்பது.
- ஆகாயத்தில் பறப்பது. 
- மனதிலுள்ள நிறைவேறாத / நடக்க வேண்டும் என விரும்புகின்ற ஆசைகள் நிறைவேறுவது. 
- கற்பனையான மற்றும் இயற்கைக்கு மாறான விஷயங்கள் (fictional & super natural) நடப்பது.

இது போல பல கனவுகள் உலகளாவிய வகையில் பலருக்கு மீண்டும் மீண்டும் வந்துள்ளது. அதற்கேற்ற பற்பல காரணங்களும் சொல்கிறார்கள்.
உதாரணமாக சில : பற்கள் விழுவது தங்கள் உடல்/உருவத்தை பற்றிய கவலையாக இருக்கலாம். மேலும் மற்றவர்கள் உங்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதை பொருத்தும் இக்கனவுகள் வரும் என சொல்கிறார்கள். நாய் அல்லது மனிதர்கள் துரத்துவது, உங்கள் வாழ்கையில் ஏற்பட்டுள்ள கவலைகளையும், பிரச்சனைகளையும் கண்டு பயந்து ஓட முயல்கிறீர்கள் என்று சொல்வதுண்டு. நிர்வாணமாய் பொது இடத்தில் நிற்பது என்பது நீங்கள் செய்யாத தவறுக்கு உங்கள் மீது பழி/குற்றம் சுமத்துத்துதலால் ஏற்படுகிறது என் சொல்கிறார்கள். இறந்தவர் கனவில் வருவது, அவர்கள் ஆத்மா உங்களிடம் பேச முற்படுகிறது என சொல்வார்கள். இன்னும் இப்படி சொல்லி கொண்டே போகலாம்...

மேற்கொண்ட காரணங்களையெல்லம் ஒத்துகொள்ள என்  மனம் ஏனோ ஏற்கவில்லை. அறிவியல் மனோதத்துவத்தின் படி, இதற்கெல்லாம் அலைபாயும் மனமும், எண்ண ஓட்டங்களும், வாழ்கையில் நடக்கும் நிகழ்வுகளால் ஏற்படும் பயமும் மட்டுமே காரணமாக இருக்க முடியும்.

இதில் எனக்கு அடிக்கடி வரும் கனவு, பரீட்சைக்கு படிக்காமல் இருப்பது தான். நான் பள்ளி கல்லூரி படிக்கும் காலத்தில், அடுத்த நாள் பரீட்சைக்கு கூட படிக்காமல் சும்மா மோட்டுவளையை பார்த்து கொண்டே நாள் முழுக்க பகல் கானா கண்டு கொண்டிருப்பேன். காலை 10 மணிக்கு பரீட்சை என்றபோதும் காலை 6 மணிக்கு எழுந்து படிக்க கூட மாட்டேன். (அப்போதெல்லாம் படிக்க பிடிக்க வில்லை என்பதே உண்மை! பின்னர் வருந்தியுள்ளேன்...) பின்பு எப்படியோ படித்து முடித்து பாஸாகி இப்போது ஒரு நல்ல வேலையும் கிடைத்தும் விட்டது. ஆனால் இன்றளவும் எதோ ஒரு முக்கிய பரீட்சை (board exam/university exam/ course certifcation) ஒன்று காலை வேளையில் இருப்பது போலவும், ஒரு வரி கூட படிக்காமல் அசால்டலாக தூங்கி கொண்டிருப்பது போலவும் என் மனம் 'பக் பக்'என அடித்து கொண்டு என்னை பயப்படுத்தும். மூளைக்கு தெரியுது "அடேய் மடையா! நீ படிச்சு முடிச்சு கிழிச்சு 15 வருஷதுக்கு மேல ஆச்சுடான்னு.." சொல்லி என்னை ஒரு உலுக்கு உலுக்கிவிடும். அப்புறம் தான் படுக்கை கட்டில் அதிர 'பே' ன்னு எழுந்து சுதாரித்து கொண்டு, பின்னர் ஒண்ணுக்கு இருந்து விட்டு படுப்பேன். சொல்லி வைத்தது போல ஒவ்வொரு முறையும் இக்கனவு விடியற்காலை வேளையில் தான் வரும். படிக்கும் காலத்தில் கூட இப்படி பயந்ததில்லை, ஏனோ இன்றும் தூக்கத்தில் கனவில் எழுதாத பரீட்சைக்கு பயந்து கொண்டிருக்கிறேன்.😁 

மிகுந்த மனஅழுத்தம் காரணமாக இது போன்ற கனவுகள் வரலாம் என சொல்கிறார்கள். மேலும் வாழ்கையின் அடுத்த கட்டத்துக்கு போக,  என்ன செய்ய போகிறோமோ என்ற இயலாமையும், நம்பிக்கையின்மையும் காரணம் எனவும் சொல்கிறார்கள். என்னவோ ஏதோ.. இது எதுவும் எனக்கு சம்பந்தபட்டதாய் தெரியவில்லை.

இது போல உங்களுக்கு அடிக்கடி வரும் கனவுகள் என்னென்ன என்பதை உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிருங்கள்.  கூடவே என் என்னையும், இப்பதிவின் லிங்க்கையும் சேர்த்து tag செய்து பகிருங்கள்.

இனிமையான உறக்கத்துடன் நிம்மதியாய் தூங்குங்கள்... Sweet Dreams!

நன்றி !!!
பி. விமல் ராஜ்
 

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

ஜெயிலர் - விமர்சனம்

வணக்கம்,

படத்தின் பெயர் வெளியிட்ட நாள் முதல் எல்லோரையும் போலவே நானும் ஜெயிலர் படத்துக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். First look ப்ரோமோவில் தலைவரின் மாஸ் லுக்கை வெளியிட்டனர். நீல சட்டையும், காக்கி பேண்ட்டும், மூக்கு கண்ணாடியும் உண்மையிலேயே தலைவருக்கு நன்றாகதான் இருந்தது. ஆனால் காருக்குள்ளிருந்து வெளியே வந்து கத்தி, துப்பாக்கி எடுப்பதையெல்லாம் பார்க்கும் போது, இன்னொரு தர்பார் போல ஆகிவிட கூடாதுடா சாமி என வேண்டிக் கொண்டிருந்தேன். கண்டிப்பாக இம்முறை நெல்சன் பெரிய தரமான சம்பவம் செய்ய போகிறார் என நினைத்து கொண்டிருந்தேன்.

ஏற்கனேவே சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு என மோதல் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், ஆடியோ லாஞ்சில் தலைவர் சொன்ன 'காக்கா பருந்து' கதை வேறு மீடியாக்களுக்கு தூபம் போட்டது போல ஆகிவிட்டது. எங்கும் இந்த அலப்பறை தான்.

சூப்பர் ஸ்டாருக்கு முந்தைய இரு படமும் சரியாக போகவில்லை. இயக்குனர் நெல்சனும் பீஸ்ட் செமயாய் அடி வாங்கிட்டார். அதனால் இருவருக்குமே ஜெயிலர் ஒரு முக்கியமான படமாக ஆகிவிட்டது. சூப்பர் ஸ்டார் அவரது மாஸை, கெத்தை விட்டுக் கொடுக்காமலிருக்க, அவர் கொடி மீண்டும் பறக்க இந்த படம் ஜெயித்தே ஆக வேண்டும். அதேபோல வெற்றி இயக்குனர் என்ற பெயரை தக்க வைத்து கொள்ளவும், தன்னை மீண்டும் நிரூபிக்கவும் நெல்சனுக்கு இந்த படம் கண்டிப்பாக வெற்றியடைய வேண்டும். எப்படியாவது ஓடி விடவேண்டும் என்பதற்காகவா இல்லை கதைக்காகவா என தெரியவில்லை. படம் முழுக்க மெகா நட்சத்திரங்கள் கொண்டு வந்து இறக்கியுள்ளனர். இதற்கு பதிலாய் கொஞ்சம் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

Jailer-movie-review

படத்தின் கதை இதுதான். போலீஸ் அதிகாரி அர்ஜுன் (வசந்த் ரவி) சிலை கடத்தல் கும்பலை தேடி போகையில் கொலை ஆவதாய் சொல்கிறார்கள். மகனை கொன்றவர்களை பழி வாங்கும் ரிடயர்ட் ஜெயிலர் அப்பாவான முத்துவேல் பாண்டியனின் கொலை மாஸான பழி வாங்கலே படத்தின் கதை. கடைசியில் மகன் சாகவில்லை; அவருக்கும் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உண்டு என தெரிந்து மகனையே போட்டு தள்ளும் பாசமான 'தங்கப்ப தக்கம்' பார்முலா கிளைமேக்ஸ்.

சூப்பர் ஸ்டார் பற்றி என்ன சொல்வது? தல முதல் அடிவரை தலைவரு அலப்பர தான்! அதே ஸ்டைல், மிடுக்கு, வேகம், பவர் டெலிவரி என நம்மை படம் முழுக்க கவர்கிறார்.🤩 வில்லன்களை கொலை செய்யும் போது, அந்த லேசான சிரிப்பு உண்மையிலேயே சைக்கோ போல தான் இருக்கிறது. ஆனால் தலைவரிடம் இது போன்ற வழக்கமான மாஸ் கமர்ஷியல் படமாய் இல்லாமல் வேற லெவலில் எதிர்பார்க்கிறோம் என யாரவது சொல்லுங்களேன் ப்ளீஸ்...🙏

ஒரு சில இடங்களில் சூப்பர் ஸ்டாரின் பழைய படங்களின் ஸ்டைல் மேனரிசம் காட்டி ரசிகர்களின் goosebumps momentகளை ஏற்றியுள்ளார். படத்தில் ஒரு சண்டை கூட இல்லை. எல்லோரையும் சதக்..சதக்... இல்லன்னா.. பட்.. பட்..பட்.. என ஸ்நைபர் ஷாட்டில் போட்டு தள்ளி விடுகின்றனர். ஒரு முன்னாள் போலீஸ் ஜெயிலர் ஆல் இந்தியா லெவல்ல தாதாகள் பிராண்டாக இருப்பது தான் எப்படி என தெரியவில்லை.

படத்தில் பெரிய பட்டாளமே நடித்துள்ளது. ரம்யா கிருஷ்ணன் மனைவியாக வருகிறார். சூப்பர் ஸ்டாரின் மகனாக வசந்த் ரவி முகத்தில் ரியாக்ஷன் காட்டாமல் சும்மா வந்து போயுள்ளார். பேரனாக மாஸ்டர் ரித்து இருக்கிறார். யோகி பாபு காமெடி ஓரிரெண்டு இடத்தில தான் இருக்கிறது. அதுவும் சுமாராக தான் இருக்கிறது. மலையாள நடிகர் விநாயகனின் வில்லன் நடிப்பு மிரட்டலாக இருந்தது. ரத்த நிற கண்ணில் எதிரிகளை அடித்தே கொல்கிறார். ரஜினிக்காக சரியான வில்லன் தேர்வு!👍மற்ற எல்லா பெரிய நடிகர்களும் திரையில் வந்து போயுள்ளனர். பிளாக் காமெடி 'டாக்டர்' அளவு ஒர்கவுட் ஆகவில்லை. ஏன் வைத்தார்கள் என தெரியவில்லை. மலையாள தேசத்திலிருந்து மோகன்லால், கன்னட தேசத்திலிருந்து சிவராஜ்குமார், தெலுங்கில் சுனில், ஹிந்தியில் ஜாக்கி ஷெராப் என எல்லா வுட்டிலிலும் ஆட்கள் இறக்கியுள்ளனர். ஆனால் இவர்கள் எல்லோரும் 10 நிமிஷத்துக்கு மேல் திரையில் வரவில்லை. இவர்கள் எல்லாரையும் வில்லனாக காட்டியிருந்தால் கூட இன்னும் அடிப்பொலியாக இருந்திருக்கும்.  

பாடல்கள் எல்லாமே எனோ எனக்கு சுமார் ரகம் போல தான் இருந்தது. அனிருத்தின் BGM மாஸு பீசு... தமன்னாக்கு ஒரு பாட்டிற்கு மட்டும் வந்து ஆடி செல்கிறார். 'காவலா' பாட்டு ரீல்ஸில் பட்டி தொட்டியெங்கும் பரபரக்க, ஏனோ பெரிதாய் என்னை ஈர்க்கவில்லை. வேணும்ன்னா தமன்னாக்காக ஒருமுறை பார்க்கலாம். 'ரத்தமாரே' பாட்டு எதுக்குனே தெரியவில்லை. 'டைகர் கா ஹுக்கும்' பாடலில் ஒரு சில வரிகள் மாஸாய் இருந்தது; பாட்டாய் கேட்டால் ஒரே இரைச்சல் தான். ஆனால் தலைவரையே தம்மை பற்றி சுய தம்பட்டம் அடிப்பது போல, வரிகள் வைப்பது என்பது எல்லா படத்திலும் (பேட்ட - மாஸு மரணம், தர்பார் - சும்மா கிழி...), எல்லா பாட்டிலும் ரசிக்க முடியவில்லை. 

நேற்று முதல் படம் பார்த்த எல்லாரும் இன்ஸ்டாவிலும் , வாட்ஸாப் ஸ்டேடசிலும் படம் தாறுமாறு, second half வேற லெவல்... அப்படி இப்படின்னு போட்டுருக்காங்க.. ஆனா எனக்கு என்னமோ அப்படி தெரியல. ஆனா ஒண்ணு மட்டும் உறுதி. தர்பார், அண்ணாத்தே-க்கு இது எவ்வளவோ தேவலை..

மொத்தத்தில் படம் ரஜினி ரகிகர்களுக்கானது. மற்றவர்கள் ஒரு முறை பார்க்கலாம் ! Tiger ka Hukum.. அவ்வளவு பெரிசா கம்பீரமான கட்டளை இல்லை. அர்த்தமாயிந்தா ராஜா !😉


நன்றி!!!
பி. விமல் ராஜ் 

திங்கள், 31 ஜூலை, 2023

பரோட்டா ஸ்பெஷல்!

வணக்கம்,

இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு  உணவுக்கும் ஓர் முக்கிய இடம் உண்டு. பல உணவுகள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது என்றாலும் அவை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். நம் நாட்டில் உள்ள மக்களிடம் "உங்களுக்கு பிடித்த உணவு எது?" என்று கேட்டால் அது பெரும்பாலனவர்கள் பிரியாணியும் பரோட்டாவும் என்று தான் சொல்வார்கள். இவற்றின் பிறப்பும், வருகையும் பற்றி தான் இங்கு சுவைக்க போகிறோம்.

பிரியாணி (Biriyani) என்ற சொல்லுக்கு பார்ஸி மொழியில் 'வறுத்த /வறுக்கப்பட்ட உணவு ' என்று பொருள். பிரியாணி பிறந்த இடம் பெர்சியா (இப்போதைய ஈரான்). 14-ஆம் மற்றும் 15-ஆம் நூற்றாண்டில் முகலாயர்களின் படையெடுப்பின் போது மன்னர்களுக்காக சமைக்கப்பட்ட உணவு என்று சொல்லபடுகிறது. எனினும் பிரியாணி பிறந்த இடம் பெர்சியாவா அல்லது அரேபியாவா என்று இன்னும் சரியாக தெரியவில்லை. மேலும் ஷாஜகான் தன் ஆசை மனைவி மும்தாஜுன் அன்பு கட்டளையின் பெயரில் தம் போர் வீரர்களின் சீரான ஊட்டசத்துக்காக சமைக்கப்பட்ட / உருவாக்கபட்ட உணவு தான் பிரியாணி என்றும் சிலர் சொல்வதுண்டு. பிரியாணி பற்றி என் முந்தைய பதிவுகளில் பிரியாணி பிறந்த கதை என எழுதியுள்ளேன். அதனால் இதில் பிரியாணியின் தம்பி பரோட்டாவை பற்றி ருசிக்கலாம்.

பரோட்டா (Parotta) என்றாலே நம்மில் பலருக்குப் பிடித்த உணவு என்பது போல என்றாகிவிட்டது. சின்ன தள்ளுவண்டிக் கடைகளிருந்து பெரிய ஸ்டார் ஹோட்டல்கள் வரை எல்லா இடங்களிலும் பரோட்டாவிற்குத் தனி மவுசு உண்டு. கடையில் பரோட்டா போடுவதைப் பார்த்தாலே நமக்கு பசிக்க ஆரம்பித்து விடும். டீ, தோசை, பரோட்டா செய்பவர்களை மட்டும் தான் மாஸ்டர் என சொல்கிறார்கள். ஓட்டல் கிச்சனுக்கோ அல்லது ரோட்டோர ஸ்டாலிலோ பார்த்தால், சொன்ன பேச்சு கேட்காத பிள்ளையை அம்மா அப்பா அடிப்பது போல; கணவனை மனைவி அடிப்பது போல மாஸ்டர் பரோட்டாவை அடித்து துவைத்து கொண்டிருப்பார். மைதா மாவையும் தண்ணீரையும் விட்டுப் பிசைந்து, சாப்ட் ஆகும் வரை செம்மையாய் அடிஅடியென அடித்து, எண்ணெய் ஊற்றி, கொழுக் மொழுக் உருண்டையாக உருட்டி, வட்ட வட்டமாகத் தட்டி அடுக்கி விடுவார்கள். அடுத்து மாவை வட்டம் பெரிசாகும் வரை வீசியடிப்பது. பரோட்டா மாவை வீசியடித்தல் என்பதே ஒரு தனி கலை; அது கடைக்குக் கடை, மாஸ்டருக்கு மாஸ்டர் வேறுபடும். வீசி பறக்கவிட்ட பின்னர் மீண்டும் சுருள் சுருளாய் வைத்து, தலையில் ஒரே போடாய் போட்டு அதற்குரிய பெரிய இரும்பு கடாயில் வரிசையாய் அடுக்கி, எண்ணெய்யில் குளிப்பாட்டி வருத்து, பொரித்து எடுத்து,  வெந்தபின் பரோட்டாக்களில் நாளை தனியாய் அடுக்கி, கைதட்டுவது போல எல்லா பக்கமும் தட்டுதட்டி நம்ம தட்டுல வைக்கும் போது பாருங்க... ஸ்ஸ்ஸ்ப்ப்பப்பா.. அதன் சுவையோ சுவை தான் போங்க..  

Parotta-special

பரோட்டாவின் சுவை கூடுவது அதன் குருமா அல்லது சால்னாவில் தான். சிக்கனோ, மட்டனோ, பீஃப்போ வெறும் சால்னாவோ... பரோட்டாவை பிச்சி போட்டு, காரசாரமான குழம்பு போல எண்ணெய் மிதக்கும் சால்னாவை சிலபல கரண்டிகளை ஊற்றி ஊறவைத்து ருசிக்க ருசிக்க சாப்பிடும் போது நமக்கே தெரியாமல் ஒரு புடி பிடித்து விடுவோம்.

பரோட்டாவின் பிறப்பிடம் கேரளாதான் என்று பலரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் பரோட்டா பிறந்து வட இலங்கையில். ஆங்கிலேயர் காலத்தில், இலங்கையிலிருந்து தமிழ் நாட்டில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வேலைக்காக பலர் வந்து சென்று கொண்டிருந்தனர். சீக்கிரம் கெட்டு போகாத உணவாகவும், கம்மியான செலவில் செய்து சாப்பிடவும் தான் ஆரம்பத்தில் பரோட்டா தயார் படுத்தபட்டது. வட இலங்கையில் தமிழர்கள் உருவாக்கிய உணவான பரோட்டா, தூத்துக்குடி வழியாக இந்தியா வந்தது. பிற்காலத்தில் 1970, 80களில் கேரளாவில் ஆரம்பிக்கபட்ட சில கடைகள் மற்றும் திரைப்படங்கள் வாயிலாக பரோட்டா மலையாள தேசத்தில் விருப்பமான உணவாகவும், தவிர்க்க முடியாத உணவாகவும் மாறிப் போனது. பின்னர் பர்மா, மலேசியாவிற்கு போன தமிழர்கள் வாயிலாக மீண்டும் தமிழகம் வந்து வெவ்வேறு வடிவில், சுவையில் வந்து நம் மனதை கொள்ளை கொண்டு வருகிறது.

தமிழ் நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வகையான பரோட்டாக்கள் உண்டு. அதன் சுவையும் வகையாய் இருப்பதுண்டு. தென் பகுதியில்
ப்ரோட்டா (brotta) என்றும் சொல்லப்படுவதுண்டு. சில இடங்களில் பரோட்டா (parotta) என்றும், ரோட்டா (barotta) என்றும் சொல்வார்கள்.

  • விருதுநகர் பரோட்டா
  • தென்காசி பரோட்டா
  • குற்றாலம் பரோட்டா
  • மதுரை பன் பரோட்டா
  • தூத்துக்குடி பரோட்டா
  • கன்னியாகுமரி பரோட்டா
  • மலபார் பரோட்டா
  • கோழிக்கோடு பரோட்டா
  • சிலோன் பரோட்டா
  • காரைக்கால் லாப்பா பரோட்டா
  • காயின் பரோட்டா
  • வீச்சு பரோட்டா
  • செட் பரோட்டா

இது போக கிழி பரோட்டா, பொட்டலம் பரோட்டா, பரோட்டா பிரியாணி என புதுசு புதுசாய் என்னென்னமோ பரோட்டாவெல்லாம் வந்து கொண்டிருக்கிறது.
சில பரோட்டாகளில் உள்ளே stuff (முட்டை /சிக்கன்/மட்டன்/பீஃப்) வைத்து கொடுப்பார்கள். சிலது கைக்கு அடக்கமாக சிறியதாக இருக்கும்; சில பரோட்டாகள் பெரிதாக இருக்கும். இன்று தமிழகத்தில் மதுரையிலும், திருநெல்வேலியிலும் தான் பரோட்டா தரமானதாக இருக்கும் என நம்பிக்கை பரவலாக உண்டு.

கடையில் முந்தின நாள் மீந்த பரோட்டாவை மறுநாள் சுட வைத்து வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி போட்டு அகண்ட கடாயில் டங்.. டடங்..டங்க்.. டங்க்.. டடங்... என ஒலிஎழுப்பி தாளம் போட்டு, கொத்து பரோட்டா என புதிய ஐட்டதை கண்டுபிடித்த பெருமையும் மதுரையையே சாரும்.

வடநாட்டில் பராத்தா (Paratha) என்ற உணவும் இங்கு பிரசித்தம். பராத்தா கோதுமை மாவில் செய்யப்படுவது. பெரும்பாலும் அப்படியே சுட்டு, வட்ட மண் குடுவையில் சுட்டு வைத்து சாப்பிடும் ஒரு உணவு பதார்த்தம். இதிலும் உருளை, பன்னீர் ,கோபி, நான்-வெஜ் என stuff செய்து தரப்படுகிறது. இந்த பராத்தாக்கள் அரபு தேசத்திலிருந்தும், முகலாய படையெடுப்பின் போதும் நம் நாட்டிற்குள் வந்திருக்கலாம் என சொல்கிறார்கள். வடநாட்டு பராத்தாவும், நம்ம ஊர் பரோட்டாவும் ஒன்றல்ல. பராத்தா சாப்பிட நன்றாகவே இருந்தாலும், நம்ம பரோட்டாவின் சுவையே வேறு ரகம். 

Parotta-comedy-tamil

என்னங்க.. படித்தவுடன் உங்களுக்கும் பரோட்டா சாப்பிட வேண்டும் என தோன்றுகிறதா? அப்புறம் என்ன.. தெரு முனையில் இருக்கும் கடைக்கு போய் பரோட்டா சாப்பிட்டுடலாம் வாங்க.! பரோட்டா சாப்பிட்டால் உடம்புக்கு கேடு, வயிறு வீணாய் போகும் என்றெல்லாம் சிலர் சொல்வார்கள். சில நேரத்தில் ஒவ்வாமை காரணமாக வயிறு கடாமுடா, கலகலவென சத்தம் போடும் தான். அதற்கு காரணம் மைதாவா அல்லது குழைத்து அடித்த சால்னாவா என தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஹ்ம்ம்... இதையெல்லாம் பார்த்தால் நம்மால் எந்த ஒரு சாப்பாட்டையும் ருசிக்க முடியாது! அவுங்க கிடக்குறாங்க; நீங்க கோட்டை அழிச்சிட்டு முதலிருந்து சாப்பிட ஆரம்பிங்க !!!   

ஒரு செட்டு பரோட்ட்டா பார்சல்ல்ல் !


நன்றி!!!
பி. விமல் ராஜ்

செவ்வாய், 18 ஜூலை, 2023

டிஜிட்டல் திருடர்கள்!

வணக்கம்,

பூஜ்ஜியமும் ஒண்ணும் வேகமாக சுழன்று கொண்டிருக்கும் நமது யுகத்தில் எல்லாமே டிஜிட்டல் மயமாக மாறி கொண்டிருக்கிறது. ஆன்லைன் ஷாப்பிங், உணவு அல்லது மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்வது, விடுமுறை நாட்களைத் திட்டமிடுவது மற்றும் மாதந்தோறும் கட்டவேண்டிய பில்கள் வரை, பெரும்பாலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளால் நம் வாழ்க்கையை எளிதாக்கப்படுகிறது. இதனால் பல இடங்களில் நன்மையையும் தீமையும் சேர்ந்தே வருகிறது. திருடர்கள் முன்பெல்லாம் வீடு புகுந்து திருடுதல், வழிப்பறி, வங்கி கொள்ளை என தங்கள் கைவரிசையை காட்டி வந்தனர். காலம் மாறும் போது திருடர்களும் நம்மை விட பன்மடங்கு வேகமாக அப்டேட் ஆகி கொண்டே இருக்கின்றனர். இது போன்ற டிஜிட்டல் திருடர்களை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.

Digital-scammers

டிஜிட்டல் மயத்தால் ஏற்படும் நன்மைகள் பல  இருக்கின்றது. பாதுகாப்பானது, நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை,
உடனடி மற்றும் வசதியான கட்டண முறை, புதிய தொழில்நுட்பங்களுக்கு வழிகாட்டுதல், மேம்படுத்தப்பட்ட வேகம் மற்றும் சரியான நேரத்தில் பணம் விநியோகம்/பரிமாற்றம் என சொல்லிக்கொண்டே போகலாம். எந்த ஒரு தொழில்நுட்பம் புதிதாய் வரும் போதும், அதை தவறான வழியில் பயன்படுத்தி ஏமாற்றுவோரும், ஏமாறப்படுபவரும் இருந்து கொண்டே இருக்கின்றனர். 

சில ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு சில டிஜிட்டல் /சைபர் மோசடிகளை பற்றி பார்க்கலாம்.

  • UPI Scams
  • Card OTP Scams
  • Phishing Emails/Msgs
  • Fraudulent Apps 

UPI (Unified Payments Interface) பற்றி நம்மில் பலருக்கு தெரியும். வங்கி கணக்குகள் மூலமாக பணம் செலுத்தாமல், மொபைல் நம்பர் மூலம் வேகமாகவும், எளிதாகவும், பாதுகாப்புடனும் பண பரிவர்த்தனை செய்ய தொடங்கப்பட்ட ஓர் தொழில்நுட்பம் ஆகும். 2022-ல் நாளொன்றுக்கு 24-36 கோடி வரை பண பரிவர்த்தனை இந்தியாவில் நடக்கிறது. அரசாங்க தரவுகளின்படி, 2021-22 ஆம் ஆண்டில் 84,000 UPI Scams மோசடி வழக்குகள் இருந்தன. மேலும் 2020-21ல், 77,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் மத்திய நிதி அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2022-23 ஆம் ஆண்டில் நம் நாட்டில் 95,000 க்கும் மேற்பட்ட UPI பரிவர்த்தனை மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரே வருடதில் இதுபோன்ற UPI Scams வழக்குகள் கிட்டத்தட்ட இரட்டிப்பாகி நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே போய்க் கொண்டிருக்கிறது.
   
1.) மோசடி செய்யும் UPI Scammerகள், பாதிக்கப்பட்டவர்களை தங்கள் தொலைபேசியில் remote access மென்பொருளை ஏதேனும் ஒரு காரணத்திற்காக பதிவிறக்கம் செய்யச் சொல்கிறார்கள். அப்படி பாதிக்கப்பட்டவர் அவர்களின் வார்த்தைகளுக்கு விழுந்தவுடன், சைபர் ஹாக்கர்கள் தங்கள் மொபைலிலிருந்து கட்டுப்பாட்டை எடுத்து கொண்டு, அவர்களின் மின்-வாலட்டை (e-wallet) குறிவைத்து காலி செய்துவிடுகிறார்கள்.

2.) Customer Care Executiveகளாக காட்டிக் கொள்ளும் சில மோசடியாளர்கள், KYC-ஐ முடிக்கவில்லை அல்லது அவர்களின் ஆதார் அல்லது பான் விவரங்களைப் புதுப்பிக்கவில்லை எனக்கூறி, அவர்களின் UPI wallet-ஐ block ஆகாமல் தடுப்பதாக சொல்லி மக்களை அச்சுறுத்துவதை பணம் பறிக்கின்றனர்.

3.) இது போன்ற மோசடி செய்பவர்கள் பயன்படுத்தும் பொதுவான முறைகளில் ஒன்று, UPI-ல் தவறாக பணம் அனுப்பிவிட்டோம். அதை திருப்பி அனுப்ப இந்த லிங்க் -ஐ கிளிக் செய்து அனுப்புங்கள் என கூறியும், அல்லது உங்களுக்கு வரும் ஒரு OTPஐ சொல்லுங்கள் என கூறி மொத்த பணத்தையும் திருடிவிடுகின்றனர்.

4.) மற்றொரு முறை, போலியான QR code களை அனுப்பி பாதிக்கப்பட்டோர் scan செய்து PIN number ஐ போட்டவுடன் பணத்தை திருடிவிடிகின்றனர். கடைக்காரர்களின் QR போலவே போலியான வேறொன்றை பிரிண்ட் செய்து கடையில் அவர்களுக்கு தெரியாமல் வைத்து விடுவார்கள். பின்னர் கடைக்காரர் கண்டுபிடிக்கும் வரை அந்த பணத்தை திருடிக்கொண்டு சென்றுவிடுவார்கள். 

இது போன்ற UPI தொடர்பான மோசடியில் சிக்காமல் தடுக்க:
*) எதிர்பாராத / தெரியாதவரிடமிருந்து வரும் பணப் பரிமாற்றங்களில் சந்தேகம் கொண்டு கவனமாய் இருங்கள்.
*) உங்களுக்கு வரும் UPI, PIN அல்லது எந்த ஒரு OTP யையும் யாருக்கும் சொல்ல வேண்டாம்.
*) பணம் செலுத்தும் போதுதான் உங்களுடைய PIN / OTP மொபைலில் போட வேண்டி வரும்; பணம் பெறப்படும் போது PIN / OTP உங்களுக்கு வர வேண்டிய அவசியம் இருக்காது; யாருக்கும் தரவும் வேண்டாம்.

Credit/Debit Card Scams -
கிரெடிட் அல்லது கிரெடிட் கார்டுகளை வைத்தும் பல மோசடிகள் நடந்து வருகின்றது.
1) பெரிய வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் பெயரை சொல்லி குறைந்த வட்டியில் கிரெடிட் கார்டு தருவதாக போனில் பேசி ஆசை காட்டுவார்கள். வலையில் விழுந்த பின்னர்,  உங்களுடைய தனிப்பட்ட தகவல்களையும், (ஆதார், பான் நம்பர்) வங்கி கணக்குகள், PIN என கேட்டு பணம் முழுவதையும் திருடிவிடுவார்கள்.
2.) அதேபோல போனில் தொடர்பு கொண்டு, உங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டில் உள்ள அங்கீகரிக்கப்படாத அல்லது மோசடியான கட்டணங்கள் குறித்து உங்களை எச்சரிப்பது போல கூறி ஒரு 3 இலக்க OTP அனுப்புவார்கள். அதை அவர்களிடம் பகிர்ந்தவுடன் பெரும் தொகையோ அல்லது மொத்த பணமும் காலி.
3.) தொண்டு நிறுவனத்திலிருந்து பேசுவதாக சொல்லி நன்கொடை தர சொல்லி, உங்களுடைய கிரெடிட் அல்லது கிரெடிட் கார்டு தகவல்களை கேட்டு பெறுவார்கள். அல்லது உங்கள் போனில் ஒரு லிங்க் அனுப்பி, அதில் வங்கி/கார்டு தகவல்களை பதிய சொல்லி பணத்தை அமுக்கி விடுவார்கள்.
4.) Skimmer ஸ்கிம்மர் போன்ற கருவிகளை ATM மெஷினில் பொருத்தி, உங்களுடைய கார்டு நம்பர் மற்றும் PIN நம்பர்களை திருடி, பின் மொத்தமாக பணத்தை எடுத்து விடுவார்கள். சில சமயங்களில் POS மெஷின் (card swiping machine) பொருத்தி,  உங்கள் கார்டு swipe ஆகும் போது அதிலுள்ள magnetic strip மூலம் உங்கள் முக்கிய தகவல்களை திருடி பின்னர் பணத்தை எடுத்து விடுகின்றனர்.
5.) Card Cracking - சமீப காலமாக அதிகமாக செய்யப்படும் ஒரு மோசடி. கார்டு கிராக்கிங்கின் முக்கிய சாராம்சம் என்னவென்றால், மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவரின் கணக்கில் போலி காசோலைகள் அல்லது போலி பில்களை டெபாசிட் செய்கிறார்கள். பின்னர், மோசடி செய்பவர்கள் கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் திரும்பப் பெறுகிறார்கள். நிதி நிறுவனம் சிக்கலைக் கண்டுபிடிக்கும் நேரத்திற்குள், மோசடி செய்பவர்கள் சிட்டாய் பறந்துவிடுகிறார்கள்.

இது போன்ற Card தொடர்பான மோசடியில் சிக்காமல் தடுக்க:
*) சம்பந்தமில்லாமல் வரும் போன் கால்களில் நம் தகவல்களை கொடுக்க கூடாது.
*) கம்பெனி / வங்கி பெயரை சொல்லி OTP/PIN அல்லது மற்ற தகவல்களை கேட்டாலோ, கொடுக்காமல், போன் காலை துண்டிப்பது நல்லது.
*) சுலபமான PIN நம்பரை வைக்க கூடாது. PIN நம்பரை கார்டுக்கு பின்னல் எழுதி வைக்கவும் கூடாது.

Phishing Emails/Msgs -
உங்கள் மெயில் ஐடிகளுக்கு வரும் வேண்டாத சில ஸ்பேம்களே இவை. பெரும்பாலும் மக்களை ஆசைகாட்டி வலையில் சிக்க வைக்கும் சங்கதிகளாக தான் இருக்கும். 'உங்களுக்கு லாட்டரியில் 100 கோடி பணம் பரிசு', ' பம்பர் குலுக்கலில் உங்களுக்கு வெளிநாட்டிலிருந்த்து 50 லட்சம் டாலர்கள் பரிசு', 'உங்களுக்கு 5 லட்சம் மதிப்புள்ள கிரெடிட் கார்டு dispatch செய்யப்பட்டுள்ளது', 'உங்கள் ஆதார்/பான்/ பாங்க் கணக்கு தேதி காலாவதியாகி விட்டது'.. இது போன்ற மெயில்களில் வரும் லிங்கை கிளிக் செய்தாலோ, கேட்கப்பட்டுள்ள முக்கிய தகவல்களை கொடுத்தாலோ.. அவ்ளோதான்! பெரும்பாலும் இவை  நம் தகவல்களை திருடி பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்களாகவே இருக்கும்.        

*) இது போன்ற Phishing Mails தொடர்பான மோசடியில் சிக்காமல் தடுக்க, இவ்வகை மெயில்களை தொடாமல், திறக்காமல் இருப்பது நல்லது.

Fraudulent Apps-
மோசடி செய்பவர்கள் டேட்டிங் வலைத்தளங்கள், சமூக வலைத்தளங்கள், டேட்டிங் ஆப்ஸ் (dating apps) போன்றவற்றை கொண்டு அரட்டை அறைகளைப் (private chat rooms) பயன்படுத்தி தனிப்பட்ட விவரங்கள் சேகரித்து அல்லது மக்களிடமிருந்து மிரட்டியும் பணத்தைப் பெறுகிறார்கள். சமீபகாலத்தில் அதிகப்படியான வரும் ஸ்கேம்களில் ஒன்று லோன் ஆப்ஸ் (loan apps). அரசின் அங்கீகரிக்கப்படாத சில மோசடி நபர்கள்/நிறுவனங்கள் மக்களுக்கு உடனடி கடன் வசதி தருவதாய் சொல்லி தகவல்களை பெற்றுவிடுகின்றன. பின்னர் பெரும் வட்டிபோட்டு அதிக பணத்தை திருப்பி கேட்கின்றனர்; அல்லது அவர்களுடைய மொபைல் போனை ஹேக் செய்து, அந்தரங்க போட்டோக்கள் , விடீயோக்களை அனுமதியில்லாமல் எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறிக்கின்றனர். அடுத்தது பெட்டிங் ஆப்ஸ்கள் (bettings apps) மக்களை பெரிதும் ஏமாற்றி பணம் பறித்து கொண்டு இருக்கின்றனர். இவர்கள் ஏமாற்றவில்லை என்றாலும் ஆன்லைனில் சூதாடி பெரும் பணமெல்லாம் ஜெயிக்க முடியாது. நம்முடைய பணஆசையை முதலீடாக கொண்டு பெரும் பணம் ஈட்டுகிறார்கள்.  

இது போன்ற Apps தொடர்பான மோசடியில் சிக்காமல் தடுக்க: அங்கீகரிக்க படாத ஆப்ஸ் களை மொபைலில் நிறுவல் இருப்பது நல்லது. மேலும் எந்த ஒரு ஆப்பை நிறுவும் போது அதனுடைய terms and conditions படித்து, மொபைலில் எதற்கு permission கொடுக்க வேண்டுமோ அதற்கு மட்டுமே கொடுத்தால் நலம்.

இது போன்று பல எண்ணிலடங்கா பணம் டிஜிட்டல் உலகத்தில் கொள்ளை போய் கொண்டே இருக்கிறது. நம்முடைய கவனமும், சரியான விழிப்புணர்வுமே இது போன்ற மோசடிகளிடமிருந்து நாம் தப்பிக்க பெரும் துணையாக இருக்கும்.

Cybercrime Complaint Number – 155260.
National Cyber Crime Reporting Portal (Helpline Number -1930)
https://cybercrime.gov.in

சைபர் திருடர்களை பற்றிய முந்தைய பதிவு: http://www.pazhaiyapaper.com/2014/04/cyber-crime.html


நன்றி !!!
பி.விமல் ராஜ்

வெள்ளி, 30 ஜூன், 2023

குமரிக்கண்டமும் லெமூரியாவும்!

வணக்கம்,

இந்த உலகமானது உருவான காலம் முதல் பல புவியியல் மாற்றங்களுக்கு ஆளாகியுள்ளது. நம் தொன்மையை விளக்கி சொல்ல இந்தியாவில் பெரும்பாலும் 2500 முதல் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்பொருள் ஆதாரங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. சில இடங்களில் புராண சான்றுகளும், இலக்கிய சான்றுகளும் நமக்கு வரலாற்று ஆதாரமாய் கிடைத்துள்ளன. தமிழ் மொழியும் மற்றும் தமிழ் மக்களின் நிலமும் தொன்மையும், பெருமையும் வாய்ந்தது. அதை சுற்றி பல கருத்து மோதல்கள், முரண்பாடுகள்,  வேறுபட்ட கோட்பாடுகள் என பல இருக்கின்றன. அதில் சில காலங்களாக பெரிதும் பேசப்படுவது குமரிக்கண்டம் பற்றி சர்ச்சைகளும் கருத்தாக்கங்களும் தான். அதனை பற்றிய சில சுவாரஸ்ய விஷயங்களை பற்றி  பார்க்கலாம்.

லெமுரியா கண்டம்:
முதலில் லெமூரியா கண்டம் பற்றி பார்ப்போம். 1864-ல் ஆங்கிலேய விலங்கியல் நிபுணர் பிலிப் ஸ்க்லேட்டெர் (Philip Sclater) என்பவர்,  லெமுர் (lemur) என்னும் ஒருவகை குரங்கின விலங்கின் படிமங்கள் மடகாஸ்கர் தீவிலும், இந்தியாவில் சில பகுதிகளிலும் இருப்பதை அறிந்தார். அது எப்படி கிழக்கு ஆப்பிரிக்காவிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் இல்லாமல் நடுவில் பெரும் கடலால் பிரிக்கப்பட்டுள்ள இந்தியா, மடகாஸ்கர் ஆகிய இரு நிலப்பரப்பில் ஒரே இனம் (species) இருக்க/இருந்திருக்க முடியும் என்பதை ஆராய்ந்தார். இதன் மூலம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் மடகாஸ்கர், இந்தியாவின் தென் பகுதி மற்றும் ஆஸ்திரேலியா மூன்றும் இணைக்கப்பட்டு, ஒரே நிலப்பரப்பாக இருந்திருக்க கூடும்; பின்னாளில் துருவ மாற்றம் (polar shift), டெக்டோனிக் தகடுகளின் மாற்றம் (tectonic plates shift), கண்டப் பெயர்ச்சி  (continental drift) ஆகிய புவியியல் காரணத்தினால் இங்குள்ள நிலப்பரப்பு கடலுக்குள் முழுகியிருக்கலாம் என அனுமானித்தார். அந்த தொலைந்த/ மூழ்கிய நிலப்பரப்பை "லெமுரியா கண்டம்" என பெயரிட்டு தன் கோட்பாட்டை முன் வைத்தார்.  இக்கருத்து சிலரால் ஒத்துக் கொள்ளப்பட்டாலும், பலர் இது வெறும் அனுமானம் மட்டுமே; உண்மையில் இப்படி இருக்க வாய்ப்பில்லை என்றும் கூறிவந்தனர். பின்வரும் நூற்றாண்டில்,  1912-ல் Alfred Wegener என்னும் ஜேர்மன் புவியியலாளர், பல்லாயிரம் மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கண்டப் பெயர்ச்சியினால் pangea என்னும் எல்லா கண்டங்களும் சேர்ந்த நிலப்பரப்பு கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்து பிரிந்தது இப்போதுள்ள உலக வரைபடம் போல ஆனது என்பதை முன்வைத்தார். அதற்கு பிறகு லெமுரியா கண்டம் பற்றி பெரிதும் பேசப்படாமல் போனது. 

பின்னர் 1930-ல் சூரிய நாராயண சாஸ்திரி என்னும் தமிழ் பேராசிரியர் குமரி நாடு என்றும், குமரிக்கண்டம் என்றும் தமிழர் நிலப்பரப்பை சொல்கிறார். லெமூரியாவை குமரிக்கண்டம் என்று முதன்முதலில் தம் நூலில் குறிப்பிடுகிறார். அதற்கு முன்னர் 16ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கந்த புராணத்தில் இடம்பெற்றுள்ள அண்டகோசப் படலத்தில் உலகம் என்பது பின்வரும் மாதிரியாக விவரிக்கப் பட்டுள்ளது.

"பிரபஞ்சத்தில் பல உலகங்கள் உள்ளன. ஒவ்வொரு உலகமும் பல கண்டங்களால் ஆனது ஆகும். இக்கண்டங்களில் பல பேரரசுகள் இருந்தன. இப்பேரரசுகளில் ஒன்று பரதன் என்ற மன்னனால் ஆளப்பட்டது. அவனுக்கு எட்டு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். பரதன் தன்னுடைய பேரரசுகளை ஒன்பது பகுதிகளாகப் பிரித்து நிர்வகித்தார். பரதனின் மகள் குமரியால் ஆளப்பட்ட பகுதி குமரிக்கண்டம் எனப்பட்டது. குமரிக் கண்டம் பூமியில் ஒரு சிறந்த பேரரசாகக் கருதப்பட்டது."

அடியாருக்குநல்லார் என்னும் புலவர் 12 ஆம் நூற்றாண்டில் எழுதிய சிலப்பதிகார உரையில், கடலில் தொலைந்து போனதக சொன்ன நிலப்பரப்பு தற்போதைய கன்னியாகுமரிலிருந்து தென்திசையில் 700 கவட்டம் (7500மைல்) தூரத்தில் குமரியாரும்,  பஃறுளியாறும் இருந்ததாக சொல்லப்படுகிறது.

மேலும் சீன பழங்கதைகளில், தங்கத்தை வெட்டி எடுக்க பாண்டிய மன்னனால் சீன அடிமைகள் நியமிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் குமரியாறு, பஃறுளியாறு என இரு ஆறுகளும், மேரு மலையும் இருந்ததற்கான சான்றுகளும் அதில் உள்ளது. 

தேவநேய பாவாணர் மற்றும் பிற தமிழ் அறிஞர்களும் தமிழர்கள் முதன் முதலில் இங்கு தான் தோன்றினர் என்று கூறியுள்ளார். ஆதிமனிதன் தோன்றிய இடமாகவும் இருக்க வாய்ப்புண்டு என்றும், பின்னாளில் கடற்கோளால் அழிந்து கடலினுள் போயிருக்க கூடும் என்றும் சொல்லியுள்ளனர். இந்நிலப்பரப்பு பாண்டிய மன்னனின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளதாகவும், கபாடபுரம், தென்மதுரை போன்ற நகரங்கள் இருந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. பல இலக்கியங்கள் இங்குள்ள நகரங்களில் இயற்றப்பற்றிருக்க கூடும் என்றும் அதற்கான சான்று பண்டைத் தமிழ் இலக்கிய நூல்களில் சில தகவல்கள் உண்டு என்று சொல்கிறார்கள். சிலப்பதிகாரத்தில் 'நன்னீர் பஃறுளியாறும் குமரி நாடும் கொடும்கடல் கொண்டு போனதாக' பாடல் வரிகள் உண்டு. 4500 முதல் 5000 ஆண்டுகளுக்கு முன் குமரிக்கண்டம் இருந்துள்ளதாக குறிப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

1960-ஆம் ஆண்டு இந்திய பெருங்கடலில் கடற்தள ஆராய்ச்சியாளர் செய்த ஆராய்ச்சியில், தமிழகத்தின் கன்னியாகுமரிக்குத் தெற்கே இரண்டு கண்டங்கள் இருந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளதாகச் சொல்கிறார்கள். முதலாகக் கப்பலில் சென்று ஒலிச்சமிக்ஜை அனுப்பி உளவு செய்ததில் [Ultra-Sonic Probing] தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதைக் கண்டார்கள். 1960-1970 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட இந்து மாக்கடல் கடற்தள வரைபடங்களில், குமரிக் கண்டத்தின் சொந்த அமைப்பு நிலை காணப்படுகிறது. அரபிக் கடலுக்குத் தெற்கில், லட்சத் தீவுகள் நீட்சியில் மாலத் தீவின் வடக்குப் பகுதியுடன் பிணைந்து, தெற்கில் சாகோஸ் ஆர்கிபிலாகோ (Chagos Archipelago) வரை சுமார் 2000 மைல் தூரம் வரைக் குமரிக் கண்டம் இருந்திருப்பதாகத் தெரிகிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த (கி.மு. 8000) பனி யுகத்தின் போது இந்து மாக்கடலில் கடல்நீர் மட்டம் குன்றிக் குமரிக் கண்டம் முழுவதும் புறத்தே தெரியும்படி மேலாக உயர்ந்திருந்தது.

மற்றுமொரு ஆராய்ச்சியின்படி இந்துமா கடலுக்கடியில் மூழ்கிய நிலப்பரப்பு ஒன்று இருக்கிறது என்றும் ஆய்வுகள் சொல்கின்றன.ஆயினும் அஃது குறைந்தது 10,000 முதல் 15,000 ஆண்டுகள் முன் மூழ்கியிருக்க வாய்ப்புண்டு என்றும் சொல்லப்படுகிறது, இக்கருத்தின்படி அது குமரிக்கண்டமாக இருக்க வாய்ப்பில்லை என்றும் சில கூற்றுகள் உள்ளது. மேலும் குமரிக்கண்டம் இருந்ததாக சொல்லப்படும் இடத்தில கடல் 200 மீட்டர் வரை ஆழத்தில் உள்ளது. சில இடங்களில் 2000 மீட்டருக்கு மேல் கடல் ஆழம் இருக்கிறது. 

தமிழ் தேசியவாதிகளும், தமிழ் இன ஆதரவாளர்களும் இலக்கியத்தின் ஆதாரங்களை கொண்டு, குமரிக்கண்டம் இருந்ததாக வாதிடுகிறார்கள். இன்னும் சிலர் விஞ்ஞான ஆராய்ச்சியின்படி குமரிக்கண்டம் நிரூபணம் ஆகாத ஒரு கட்டுக்கதை என்றும் சொல்கின்றனர். இந்திய அரசாங்கம் இது போன்று கடலில் மூழ்கிய நகரங்களின் (பூம்புகார், கொற்கை..) பெருமையும், அதன் வரலாற்றையும் வெளிக்கொணர்ந்து உலக நாடுகளிடைய நம் தொன்மையும் பெருமையும் பறைசாற்ற வேண்டும். நிலையான அதிகாரபூர்வ தொல்பொருள் ஆதாரம் வரும் வரையில், இது போன்ற சர்ச்சைகளும் கருத்துக்களும் குமரிக்கண்டத்தை சுற்றி வந்து கொண்டே தான் இருக்கும்.


நன்றி!!!
பி. விமல் ராஜ்