திங்கள், 31 ஜூலை, 2023

பரோட்டா ஸ்பெஷல்!

வணக்கம்,

இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு  உணவுக்கும் ஓர் முக்கிய இடம் உண்டு. பல உணவுகள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது என்றாலும் அவை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். நம் நாட்டில் உள்ள மக்களிடம் "உங்களுக்கு பிடித்த உணவு எது?" என்று கேட்டால் அது பெரும்பாலனவர்கள் பிரியாணியும் பரோட்டாவும் என்று தான் சொல்வார்கள். இவற்றின் பிறப்பும், வருகையும் பற்றி தான் இங்கு சுவைக்க போகிறோம்.

பிரியாணி (Biriyani) என்ற சொல்லுக்கு பார்ஸி மொழியில் 'வறுத்த /வறுக்கப்பட்ட உணவு ' என்று பொருள். பிரியாணி பிறந்த இடம் பெர்சியா (இப்போதைய ஈரான்). 14-ஆம் மற்றும் 15-ஆம் நூற்றாண்டில் முகலாயர்களின் படையெடுப்பின் போது மன்னர்களுக்காக சமைக்கப்பட்ட உணவு என்று சொல்லபடுகிறது. எனினும் பிரியாணி பிறந்த இடம் பெர்சியாவா அல்லது அரேபியாவா என்று இன்னும் சரியாக தெரியவில்லை. மேலும் ஷாஜகான் தன் ஆசை மனைவி மும்தாஜுன் அன்பு கட்டளையின் பெயரில் தம் போர் வீரர்களின் சீரான ஊட்டசத்துக்காக சமைக்கப்பட்ட / உருவாக்கபட்ட உணவு தான் பிரியாணி என்றும் சிலர் சொல்வதுண்டு. பிரியாணி பற்றி என் முந்தைய பதிவுகளில் பிரியாணி பிறந்த கதை என எழுதியுள்ளேன். அதனால் இதில் பிரியாணியின் தம்பி பரோட்டாவை பற்றி ருசிக்கலாம்.

பரோட்டா (Parotta) என்றாலே நம்மில் பலருக்குப் பிடித்த உணவு என்பது போல என்றாகிவிட்டது. சின்ன தள்ளுவண்டிக் கடைகளிருந்து பெரிய ஸ்டார் ஹோட்டல்கள் வரை எல்லா இடங்களிலும் பரோட்டாவிற்குத் தனி மவுசு உண்டு. கடையில் பரோட்டா போடுவதைப் பார்த்தாலே நமக்கு பசிக்க ஆரம்பித்து விடும். டீ, தோசை, பரோட்டா செய்பவர்களை மட்டும் தான் மாஸ்டர் என சொல்கிறார்கள். ஓட்டல் கிச்சனுக்கோ அல்லது ரோட்டோர ஸ்டாலிலோ பார்த்தால், சொன்ன பேச்சு கேட்காத பிள்ளையை அம்மா அப்பா அடிப்பது போல; கணவனை மனைவி அடிப்பது போல மாஸ்டர் பரோட்டாவை அடித்து துவைத்து கொண்டிருப்பார். மைதா மாவையும் தண்ணீரையும் விட்டுப் பிசைந்து, சாப்ட் ஆகும் வரை செம்மையாய் அடிஅடியென அடித்து, எண்ணெய் ஊற்றி, கொழுக் மொழுக் உருண்டையாக உருட்டி, வட்ட வட்டமாகத் தட்டி அடுக்கி விடுவார்கள். அடுத்து மாவை வட்டம் பெரிசாகும் வரை வீசியடிப்பது. பரோட்டா மாவை வீசியடித்தல் என்பதே ஒரு தனி கலை; அது கடைக்குக் கடை, மாஸ்டருக்கு மாஸ்டர் வேறுபடும். வீசி பறக்கவிட்ட பின்னர் மீண்டும் சுருள் சுருளாய் வைத்து, தலையில் ஒரே போடாய் போட்டு அதற்குரிய பெரிய இரும்பு கடாயில் வரிசையாய் அடுக்கி, எண்ணெய்யில் குளிப்பாட்டி வருத்து, பொரித்து எடுத்து,  வெந்தபின் பரோட்டாக்களில் நாளை தனியாய் அடுக்கி, கைதட்டுவது போல எல்லா பக்கமும் தட்டுதட்டி நம்ம தட்டுல வைக்கும் போது பாருங்க... ஸ்ஸ்ஸ்ப்ப்பப்பா.. அதன் சுவையோ சுவை தான் போங்க..  

Parotta-special

பரோட்டாவின் சுவை கூடுவது அதன் குருமா அல்லது சால்னாவில் தான். சிக்கனோ, மட்டனோ, பீஃப்போ வெறும் சால்னாவோ... பரோட்டாவை பிச்சி போட்டு, காரசாரமான குழம்பு போல எண்ணெய் மிதக்கும் சால்னாவை சிலபல கரண்டிகளை ஊற்றி ஊறவைத்து ருசிக்க ருசிக்க சாப்பிடும் போது நமக்கே தெரியாமல் ஒரு புடி பிடித்து விடுவோம்.

பரோட்டாவின் பிறப்பிடம் கேரளாதான் என்று பலரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் பரோட்டா பிறந்து வட இலங்கையில். ஆங்கிலேயர் காலத்தில், இலங்கையிலிருந்து தமிழ் நாட்டில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வேலைக்காக பலர் வந்து சென்று கொண்டிருந்தனர். சீக்கிரம் கெட்டு போகாத உணவாகவும், கம்மியான செலவில் செய்து சாப்பிடவும் தான் ஆரம்பத்தில் பரோட்டா தயார் படுத்தபட்டது. வட இலங்கையில் தமிழர்கள் உருவாக்கிய உணவான பரோட்டா, தூத்துக்குடி வழியாக இந்தியா வந்தது. பிற்காலத்தில் 1970, 80களில் கேரளாவில் ஆரம்பிக்கபட்ட சில கடைகள் மற்றும் திரைப்படங்கள் வாயிலாக பரோட்டா மலையாள தேசத்தில் விருப்பமான உணவாகவும், தவிர்க்க முடியாத உணவாகவும் மாறிப் போனது. பின்னர் பர்மா, மலேசியாவிற்கு போன தமிழர்கள் வாயிலாக மீண்டும் தமிழகம் வந்து வெவ்வேறு வடிவில், சுவையில் வந்து நம் மனதை கொள்ளை கொண்டு வருகிறது.

தமிழ் நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வகையான பரோட்டாக்கள் உண்டு. அதன் சுவையும் வகையாய் இருப்பதுண்டு. தென் பகுதியில்
ப்ரோட்டா (brotta) என்றும் சொல்லப்படுவதுண்டு. சில இடங்களில் பரோட்டா (parotta) என்றும், ரோட்டா (barotta) என்றும் சொல்வார்கள்.

  • விருதுநகர் பரோட்டா
  • தென்காசி பரோட்டா
  • குற்றாலம் பரோட்டா
  • மதுரை பன் பரோட்டா
  • தூத்துக்குடி பரோட்டா
  • கன்னியாகுமரி பரோட்டா
  • மலபார் பரோட்டா
  • கோழிக்கோடு பரோட்டா
  • சிலோன் பரோட்டா
  • காரைக்கால் லாப்பா பரோட்டா
  • காயின் பரோட்டா
  • வீச்சு பரோட்டா
  • செட் பரோட்டா

இது போக கிழி பரோட்டா, பொட்டலம் பரோட்டா, பரோட்டா பிரியாணி என புதுசு புதுசாய் என்னென்னமோ பரோட்டாவெல்லாம் வந்து கொண்டிருக்கிறது.
சில பரோட்டாகளில் உள்ளே stuff (முட்டை /சிக்கன்/மட்டன்/பீஃப்) வைத்து கொடுப்பார்கள். சிலது கைக்கு அடக்கமாக சிறியதாக இருக்கும்; சில பரோட்டாகள் பெரிதாக இருக்கும். இன்று தமிழகத்தில் மதுரையிலும், திருநெல்வேலியிலும் தான் பரோட்டா தரமானதாக இருக்கும் என நம்பிக்கை பரவலாக உண்டு.

கடையில் முந்தின நாள் மீந்த பரோட்டாவை மறுநாள் சுட வைத்து வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி போட்டு அகண்ட கடாயில் டங்.. டடங்..டங்க்.. டங்க்.. டடங்... என ஒலிஎழுப்பி தாளம் போட்டு, கொத்து பரோட்டா என புதிய ஐட்டதை கண்டுபிடித்த பெருமையும் மதுரையையே சாரும்.

வடநாட்டில் பராத்தா (Paratha) என்ற உணவும் இங்கு பிரசித்தம். பராத்தா கோதுமை மாவில் செய்யப்படுவது. பெரும்பாலும் அப்படியே சுட்டு, வட்ட மண் குடுவையில் சுட்டு வைத்து சாப்பிடும் ஒரு உணவு பதார்த்தம். இதிலும் உருளை, பன்னீர் ,கோபி, நான்-வெஜ் என stuff செய்து தரப்படுகிறது. இந்த பராத்தாக்கள் அரபு தேசத்திலிருந்தும், முகலாய படையெடுப்பின் போதும் நம் நாட்டிற்குள் வந்திருக்கலாம் என சொல்கிறார்கள். வடநாட்டு பராத்தாவும், நம்ம ஊர் பரோட்டாவும் ஒன்றல்ல. பராத்தா சாப்பிட நன்றாகவே இருந்தாலும், நம்ம பரோட்டாவின் சுவையே வேறு ரகம். 

Parotta-comedy-tamil

என்னங்க.. படித்தவுடன் உங்களுக்கும் பரோட்டா சாப்பிட வேண்டும் என தோன்றுகிறதா? அப்புறம் என்ன.. தெரு முனையில் இருக்கும் கடைக்கு போய் பரோட்டா சாப்பிட்டுடலாம் வாங்க.! பரோட்டா சாப்பிட்டால் உடம்புக்கு கேடு, வயிறு வீணாய் போகும் என்றெல்லாம் சிலர் சொல்வார்கள். சில நேரத்தில் ஒவ்வாமை காரணமாக வயிறு கடாமுடா, கலகலவென சத்தம் போடும் தான். அதற்கு காரணம் மைதாவா அல்லது குழைத்து அடித்த சால்னாவா என தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஹ்ம்ம்... இதையெல்லாம் பார்த்தால் நம்மால் எந்த ஒரு சாப்பாட்டையும் ருசிக்க முடியாது! அவுங்க கிடக்குறாங்க; நீங்க கோட்டை அழிச்சிட்டு முதலிருந்து சாப்பிட ஆரம்பிங்க !!!   

ஒரு செட்டு பரோட்ட்டா பார்சல்ல்ல் !


நன்றி!!!
பி. விமல் ராஜ்

செவ்வாய், 18 ஜூலை, 2023

டிஜிட்டல் திருடர்கள்!

வணக்கம்,

பூஜ்ஜியமும் ஒண்ணும் வேகமாக சுழன்று கொண்டிருக்கும் நமது யுகத்தில் எல்லாமே டிஜிட்டல் மயமாக மாறி கொண்டிருக்கிறது. ஆன்லைன் ஷாப்பிங், உணவு அல்லது மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்வது, விடுமுறை நாட்களைத் திட்டமிடுவது மற்றும் மாதந்தோறும் கட்டவேண்டிய பில்கள் வரை, பெரும்பாலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளால் நம் வாழ்க்கையை எளிதாக்கப்படுகிறது. இதனால் பல இடங்களில் நன்மையையும் தீமையும் சேர்ந்தே வருகிறது. திருடர்கள் முன்பெல்லாம் வீடு புகுந்து திருடுதல், வழிப்பறி, வங்கி கொள்ளை என தங்கள் கைவரிசையை காட்டி வந்தனர். காலம் மாறும் போது திருடர்களும் நம்மை விட பன்மடங்கு வேகமாக அப்டேட் ஆகி கொண்டே இருக்கின்றனர். இது போன்ற டிஜிட்டல் திருடர்களை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.

Digital-scammers

டிஜிட்டல் மயத்தால் ஏற்படும் நன்மைகள் பல  இருக்கின்றது. பாதுகாப்பானது, நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை,
உடனடி மற்றும் வசதியான கட்டண முறை, புதிய தொழில்நுட்பங்களுக்கு வழிகாட்டுதல், மேம்படுத்தப்பட்ட வேகம் மற்றும் சரியான நேரத்தில் பணம் விநியோகம்/பரிமாற்றம் என சொல்லிக்கொண்டே போகலாம். எந்த ஒரு தொழில்நுட்பம் புதிதாய் வரும் போதும், அதை தவறான வழியில் பயன்படுத்தி ஏமாற்றுவோரும், ஏமாறப்படுபவரும் இருந்து கொண்டே இருக்கின்றனர். 

சில ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு சில டிஜிட்டல் /சைபர் மோசடிகளை பற்றி பார்க்கலாம்.

  • UPI Scams
  • Card OTP Scams
  • Phishing Emails/Msgs
  • Fraudulent Apps 

UPI (Unified Payments Interface) பற்றி நம்மில் பலருக்கு தெரியும். வங்கி கணக்குகள் மூலமாக பணம் செலுத்தாமல், மொபைல் நம்பர் மூலம் வேகமாகவும், எளிதாகவும், பாதுகாப்புடனும் பண பரிவர்த்தனை செய்ய தொடங்கப்பட்ட ஓர் தொழில்நுட்பம் ஆகும். 2022-ல் நாளொன்றுக்கு 24-36 கோடி வரை பண பரிவர்த்தனை இந்தியாவில் நடக்கிறது. அரசாங்க தரவுகளின்படி, 2021-22 ஆம் ஆண்டில் 84,000 UPI Scams மோசடி வழக்குகள் இருந்தன. மேலும் 2020-21ல், 77,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் மத்திய நிதி அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2022-23 ஆம் ஆண்டில் நம் நாட்டில் 95,000 க்கும் மேற்பட்ட UPI பரிவர்த்தனை மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரே வருடதில் இதுபோன்ற UPI Scams வழக்குகள் கிட்டத்தட்ட இரட்டிப்பாகி நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே போய்க் கொண்டிருக்கிறது.
   
1.) மோசடி செய்யும் UPI Scammerகள், பாதிக்கப்பட்டவர்களை தங்கள் தொலைபேசியில் remote access மென்பொருளை ஏதேனும் ஒரு காரணத்திற்காக பதிவிறக்கம் செய்யச் சொல்கிறார்கள். அப்படி பாதிக்கப்பட்டவர் அவர்களின் வார்த்தைகளுக்கு விழுந்தவுடன், சைபர் ஹாக்கர்கள் தங்கள் மொபைலிலிருந்து கட்டுப்பாட்டை எடுத்து கொண்டு, அவர்களின் மின்-வாலட்டை (e-wallet) குறிவைத்து காலி செய்துவிடுகிறார்கள்.

2.) Customer Care Executiveகளாக காட்டிக் கொள்ளும் சில மோசடியாளர்கள், KYC-ஐ முடிக்கவில்லை அல்லது அவர்களின் ஆதார் அல்லது பான் விவரங்களைப் புதுப்பிக்கவில்லை எனக்கூறி, அவர்களின் UPI wallet-ஐ block ஆகாமல் தடுப்பதாக சொல்லி மக்களை அச்சுறுத்துவதை பணம் பறிக்கின்றனர்.

3.) இது போன்ற மோசடி செய்பவர்கள் பயன்படுத்தும் பொதுவான முறைகளில் ஒன்று, UPI-ல் தவறாக பணம் அனுப்பிவிட்டோம். அதை திருப்பி அனுப்ப இந்த லிங்க் -ஐ கிளிக் செய்து அனுப்புங்கள் என கூறியும், அல்லது உங்களுக்கு வரும் ஒரு OTPஐ சொல்லுங்கள் என கூறி மொத்த பணத்தையும் திருடிவிடுகின்றனர்.

4.) மற்றொரு முறை, போலியான QR code களை அனுப்பி பாதிக்கப்பட்டோர் scan செய்து PIN number ஐ போட்டவுடன் பணத்தை திருடிவிடிகின்றனர். கடைக்காரர்களின் QR போலவே போலியான வேறொன்றை பிரிண்ட் செய்து கடையில் அவர்களுக்கு தெரியாமல் வைத்து விடுவார்கள். பின்னர் கடைக்காரர் கண்டுபிடிக்கும் வரை அந்த பணத்தை திருடிக்கொண்டு சென்றுவிடுவார்கள். 

இது போன்ற UPI தொடர்பான மோசடியில் சிக்காமல் தடுக்க:
*) எதிர்பாராத / தெரியாதவரிடமிருந்து வரும் பணப் பரிமாற்றங்களில் சந்தேகம் கொண்டு கவனமாய் இருங்கள்.
*) உங்களுக்கு வரும் UPI, PIN அல்லது எந்த ஒரு OTP யையும் யாருக்கும் சொல்ல வேண்டாம்.
*) பணம் செலுத்தும் போதுதான் உங்களுடைய PIN / OTP மொபைலில் போட வேண்டி வரும்; பணம் பெறப்படும் போது PIN / OTP உங்களுக்கு வர வேண்டிய அவசியம் இருக்காது; யாருக்கும் தரவும் வேண்டாம்.

Credit/Debit Card Scams -
கிரெடிட் அல்லது கிரெடிட் கார்டுகளை வைத்தும் பல மோசடிகள் நடந்து வருகின்றது.
1) பெரிய வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் பெயரை சொல்லி குறைந்த வட்டியில் கிரெடிட் கார்டு தருவதாக போனில் பேசி ஆசை காட்டுவார்கள். வலையில் விழுந்த பின்னர்,  உங்களுடைய தனிப்பட்ட தகவல்களையும், (ஆதார், பான் நம்பர்) வங்கி கணக்குகள், PIN என கேட்டு பணம் முழுவதையும் திருடிவிடுவார்கள்.
2.) அதேபோல போனில் தொடர்பு கொண்டு, உங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டில் உள்ள அங்கீகரிக்கப்படாத அல்லது மோசடியான கட்டணங்கள் குறித்து உங்களை எச்சரிப்பது போல கூறி ஒரு 3 இலக்க OTP அனுப்புவார்கள். அதை அவர்களிடம் பகிர்ந்தவுடன் பெரும் தொகையோ அல்லது மொத்த பணமும் காலி.
3.) தொண்டு நிறுவனத்திலிருந்து பேசுவதாக சொல்லி நன்கொடை தர சொல்லி, உங்களுடைய கிரெடிட் அல்லது கிரெடிட் கார்டு தகவல்களை கேட்டு பெறுவார்கள். அல்லது உங்கள் போனில் ஒரு லிங்க் அனுப்பி, அதில் வங்கி/கார்டு தகவல்களை பதிய சொல்லி பணத்தை அமுக்கி விடுவார்கள்.
4.) Skimmer ஸ்கிம்மர் போன்ற கருவிகளை ATM மெஷினில் பொருத்தி, உங்களுடைய கார்டு நம்பர் மற்றும் PIN நம்பர்களை திருடி, பின் மொத்தமாக பணத்தை எடுத்து விடுவார்கள். சில சமயங்களில் POS மெஷின் (card swiping machine) பொருத்தி,  உங்கள் கார்டு swipe ஆகும் போது அதிலுள்ள magnetic strip மூலம் உங்கள் முக்கிய தகவல்களை திருடி பின்னர் பணத்தை எடுத்து விடுகின்றனர்.
5.) Card Cracking - சமீப காலமாக அதிகமாக செய்யப்படும் ஒரு மோசடி. கார்டு கிராக்கிங்கின் முக்கிய சாராம்சம் என்னவென்றால், மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவரின் கணக்கில் போலி காசோலைகள் அல்லது போலி பில்களை டெபாசிட் செய்கிறார்கள். பின்னர், மோசடி செய்பவர்கள் கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் திரும்பப் பெறுகிறார்கள். நிதி நிறுவனம் சிக்கலைக் கண்டுபிடிக்கும் நேரத்திற்குள், மோசடி செய்பவர்கள் சிட்டாய் பறந்துவிடுகிறார்கள்.

இது போன்ற Card தொடர்பான மோசடியில் சிக்காமல் தடுக்க:
*) சம்பந்தமில்லாமல் வரும் போன் கால்களில் நம் தகவல்களை கொடுக்க கூடாது.
*) கம்பெனி / வங்கி பெயரை சொல்லி OTP/PIN அல்லது மற்ற தகவல்களை கேட்டாலோ, கொடுக்காமல், போன் காலை துண்டிப்பது நல்லது.
*) சுலபமான PIN நம்பரை வைக்க கூடாது. PIN நம்பரை கார்டுக்கு பின்னல் எழுதி வைக்கவும் கூடாது.

Phishing Emails/Msgs -
உங்கள் மெயில் ஐடிகளுக்கு வரும் வேண்டாத சில ஸ்பேம்களே இவை. பெரும்பாலும் மக்களை ஆசைகாட்டி வலையில் சிக்க வைக்கும் சங்கதிகளாக தான் இருக்கும். 'உங்களுக்கு லாட்டரியில் 100 கோடி பணம் பரிசு', ' பம்பர் குலுக்கலில் உங்களுக்கு வெளிநாட்டிலிருந்த்து 50 லட்சம் டாலர்கள் பரிசு', 'உங்களுக்கு 5 லட்சம் மதிப்புள்ள கிரெடிட் கார்டு dispatch செய்யப்பட்டுள்ளது', 'உங்கள் ஆதார்/பான்/ பாங்க் கணக்கு தேதி காலாவதியாகி விட்டது'.. இது போன்ற மெயில்களில் வரும் லிங்கை கிளிக் செய்தாலோ, கேட்கப்பட்டுள்ள முக்கிய தகவல்களை கொடுத்தாலோ.. அவ்ளோதான்! பெரும்பாலும் இவை  நம் தகவல்களை திருடி பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்களாகவே இருக்கும்.        

*) இது போன்ற Phishing Mails தொடர்பான மோசடியில் சிக்காமல் தடுக்க, இவ்வகை மெயில்களை தொடாமல், திறக்காமல் இருப்பது நல்லது.

Fraudulent Apps-
மோசடி செய்பவர்கள் டேட்டிங் வலைத்தளங்கள், சமூக வலைத்தளங்கள், டேட்டிங் ஆப்ஸ் (dating apps) போன்றவற்றை கொண்டு அரட்டை அறைகளைப் (private chat rooms) பயன்படுத்தி தனிப்பட்ட விவரங்கள் சேகரித்து அல்லது மக்களிடமிருந்து மிரட்டியும் பணத்தைப் பெறுகிறார்கள். சமீபகாலத்தில் அதிகப்படியான வரும் ஸ்கேம்களில் ஒன்று லோன் ஆப்ஸ் (loan apps). அரசின் அங்கீகரிக்கப்படாத சில மோசடி நபர்கள்/நிறுவனங்கள் மக்களுக்கு உடனடி கடன் வசதி தருவதாய் சொல்லி தகவல்களை பெற்றுவிடுகின்றன. பின்னர் பெரும் வட்டிபோட்டு அதிக பணத்தை திருப்பி கேட்கின்றனர்; அல்லது அவர்களுடைய மொபைல் போனை ஹேக் செய்து, அந்தரங்க போட்டோக்கள் , விடீயோக்களை அனுமதியில்லாமல் எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறிக்கின்றனர். அடுத்தது பெட்டிங் ஆப்ஸ்கள் (bettings apps) மக்களை பெரிதும் ஏமாற்றி பணம் பறித்து கொண்டு இருக்கின்றனர். இவர்கள் ஏமாற்றவில்லை என்றாலும் ஆன்லைனில் சூதாடி பெரும் பணமெல்லாம் ஜெயிக்க முடியாது. நம்முடைய பணஆசையை முதலீடாக கொண்டு பெரும் பணம் ஈட்டுகிறார்கள்.  

இது போன்ற Apps தொடர்பான மோசடியில் சிக்காமல் தடுக்க: அங்கீகரிக்க படாத ஆப்ஸ் களை மொபைலில் நிறுவல் இருப்பது நல்லது. மேலும் எந்த ஒரு ஆப்பை நிறுவும் போது அதனுடைய terms and conditions படித்து, மொபைலில் எதற்கு permission கொடுக்க வேண்டுமோ அதற்கு மட்டுமே கொடுத்தால் நலம்.

இது போன்று பல எண்ணிலடங்கா பணம் டிஜிட்டல் உலகத்தில் கொள்ளை போய் கொண்டே இருக்கிறது. நம்முடைய கவனமும், சரியான விழிப்புணர்வுமே இது போன்ற மோசடிகளிடமிருந்து நாம் தப்பிக்க பெரும் துணையாக இருக்கும்.

Cybercrime Complaint Number – 155260.
National Cyber Crime Reporting Portal (Helpline Number -1930)
https://cybercrime.gov.in

சைபர் திருடர்களை பற்றிய முந்தைய பதிவு: http://www.pazhaiyapaper.com/2014/04/cyber-crime.html


நன்றி !!!
பி.விமல் ராஜ்

வெள்ளி, 30 ஜூன், 2023

குமரிக்கண்டமும் லெமூரியாவும்!

வணக்கம்,

இந்த உலகமானது உருவான காலம் முதல் பல புவியியல் மாற்றங்களுக்கு ஆளாகியுள்ளது. நம் தொன்மையை விளக்கி சொல்ல இந்தியாவில் பெரும்பாலும் 2500 முதல் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்பொருள் ஆதாரங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. சில இடங்களில் புராண சான்றுகளும், இலக்கிய சான்றுகளும் நமக்கு வரலாற்று ஆதாரமாய் கிடைத்துள்ளன. தமிழ் மொழியும் மற்றும் தமிழ் மக்களின் நிலமும் தொன்மையும், பெருமையும் வாய்ந்தது. அதை சுற்றி பல கருத்து மோதல்கள், முரண்பாடுகள்,  வேறுபட்ட கோட்பாடுகள் என பல இருக்கின்றன. அதில் சில காலங்களாக பெரிதும் பேசப்படுவது குமரிக்கண்டம் பற்றி சர்ச்சைகளும் கருத்தாக்கங்களும் தான். அதனை பற்றிய சில சுவாரஸ்ய விஷயங்களை பற்றி  பார்க்கலாம்.

லெமுரியா கண்டம்:
முதலில் லெமூரியா கண்டம் பற்றி பார்ப்போம். 1864-ல் ஆங்கிலேய விலங்கியல் நிபுணர் பிலிப் ஸ்க்லேட்டெர் (Philip Sclater) என்பவர்,  லெமுர் (lemur) என்னும் ஒருவகை குரங்கின விலங்கின் படிமங்கள் மடகாஸ்கர் தீவிலும், இந்தியாவில் சில பகுதிகளிலும் இருப்பதை அறிந்தார். அது எப்படி கிழக்கு ஆப்பிரிக்காவிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் இல்லாமல் நடுவில் பெரும் கடலால் பிரிக்கப்பட்டுள்ள இந்தியா, மடகாஸ்கர் ஆகிய இரு நிலப்பரப்பில் ஒரே இனம் (species) இருக்க/இருந்திருக்க முடியும் என்பதை ஆராய்ந்தார். இதன் மூலம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் மடகாஸ்கர், இந்தியாவின் தென் பகுதி மற்றும் ஆஸ்திரேலியா மூன்றும் இணைக்கப்பட்டு, ஒரே நிலப்பரப்பாக இருந்திருக்க கூடும்; பின்னாளில் துருவ மாற்றம் (polar shift), டெக்டோனிக் தகடுகளின் மாற்றம் (tectonic plates shift), கண்டப் பெயர்ச்சி  (continental drift) ஆகிய புவியியல் காரணத்தினால் இங்குள்ள நிலப்பரப்பு கடலுக்குள் முழுகியிருக்கலாம் என அனுமானித்தார். அந்த தொலைந்த/ மூழ்கிய நிலப்பரப்பை "லெமுரியா கண்டம்" என பெயரிட்டு தன் கோட்பாட்டை முன் வைத்தார்.  இக்கருத்து சிலரால் ஒத்துக் கொள்ளப்பட்டாலும், பலர் இது வெறும் அனுமானம் மட்டுமே; உண்மையில் இப்படி இருக்க வாய்ப்பில்லை என்றும் கூறிவந்தனர். பின்வரும் நூற்றாண்டில்,  1912-ல் Alfred Wegener என்னும் ஜேர்மன் புவியியலாளர், பல்லாயிரம் மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கண்டப் பெயர்ச்சியினால் pangea என்னும் எல்லா கண்டங்களும் சேர்ந்த நிலப்பரப்பு கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்து பிரிந்தது இப்போதுள்ள உலக வரைபடம் போல ஆனது என்பதை முன்வைத்தார். அதற்கு பிறகு லெமுரியா கண்டம் பற்றி பெரிதும் பேசப்படாமல் போனது. 

பின்னர் 1930-ல் சூரிய நாராயண சாஸ்திரி என்னும் தமிழ் பேராசிரியர் குமரி நாடு என்றும், குமரிக்கண்டம் என்றும் தமிழர் நிலப்பரப்பை சொல்கிறார். லெமூரியாவை குமரிக்கண்டம் என்று முதன்முதலில் தம் நூலில் குறிப்பிடுகிறார். அதற்கு முன்னர் 16ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கந்த புராணத்தில் இடம்பெற்றுள்ள அண்டகோசப் படலத்தில் உலகம் என்பது பின்வரும் மாதிரியாக விவரிக்கப் பட்டுள்ளது.

"பிரபஞ்சத்தில் பல உலகங்கள் உள்ளன. ஒவ்வொரு உலகமும் பல கண்டங்களால் ஆனது ஆகும். இக்கண்டங்களில் பல பேரரசுகள் இருந்தன. இப்பேரரசுகளில் ஒன்று பரதன் என்ற மன்னனால் ஆளப்பட்டது. அவனுக்கு எட்டு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். பரதன் தன்னுடைய பேரரசுகளை ஒன்பது பகுதிகளாகப் பிரித்து நிர்வகித்தார். பரதனின் மகள் குமரியால் ஆளப்பட்ட பகுதி குமரிக்கண்டம் எனப்பட்டது. குமரிக் கண்டம் பூமியில் ஒரு சிறந்த பேரரசாகக் கருதப்பட்டது."

அடியாருக்குநல்லார் என்னும் புலவர் 12 ஆம் நூற்றாண்டில் எழுதிய சிலப்பதிகார உரையில், கடலில் தொலைந்து போனதக சொன்ன நிலப்பரப்பு தற்போதைய கன்னியாகுமரிலிருந்து தென்திசையில் 700 கவட்டம் (7500மைல்) தூரத்தில் குமரியாரும்,  பஃறுளியாறும் இருந்ததாக சொல்லப்படுகிறது.

மேலும் சீன பழங்கதைகளில், தங்கத்தை வெட்டி எடுக்க பாண்டிய மன்னனால் சீன அடிமைகள் நியமிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் குமரியாறு, பஃறுளியாறு என இரு ஆறுகளும், மேரு மலையும் இருந்ததற்கான சான்றுகளும் அதில் உள்ளது. 

தேவநேய பாவாணர் மற்றும் பிற தமிழ் அறிஞர்களும் தமிழர்கள் முதன் முதலில் இங்கு தான் தோன்றினர் என்று கூறியுள்ளார். ஆதிமனிதன் தோன்றிய இடமாகவும் இருக்க வாய்ப்புண்டு என்றும், பின்னாளில் கடற்கோளால் அழிந்து கடலினுள் போயிருக்க கூடும் என்றும் சொல்லியுள்ளனர். இந்நிலப்பரப்பு பாண்டிய மன்னனின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளதாகவும், கபாடபுரம், தென்மதுரை போன்ற நகரங்கள் இருந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. பல இலக்கியங்கள் இங்குள்ள நகரங்களில் இயற்றப்பற்றிருக்க கூடும் என்றும் அதற்கான சான்று பண்டைத் தமிழ் இலக்கிய நூல்களில் சில தகவல்கள் உண்டு என்று சொல்கிறார்கள். சிலப்பதிகாரத்தில் 'நன்னீர் பஃறுளியாறும் குமரி நாடும் கொடும்கடல் கொண்டு போனதாக' பாடல் வரிகள் உண்டு. 4500 முதல் 5000 ஆண்டுகளுக்கு முன் குமரிக்கண்டம் இருந்துள்ளதாக குறிப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

1960-ஆம் ஆண்டு இந்திய பெருங்கடலில் கடற்தள ஆராய்ச்சியாளர் செய்த ஆராய்ச்சியில், தமிழகத்தின் கன்னியாகுமரிக்குத் தெற்கே இரண்டு கண்டங்கள் இருந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளதாகச் சொல்கிறார்கள். முதலாகக் கப்பலில் சென்று ஒலிச்சமிக்ஜை அனுப்பி உளவு செய்ததில் [Ultra-Sonic Probing] தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதைக் கண்டார்கள். 1960-1970 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட இந்து மாக்கடல் கடற்தள வரைபடங்களில், குமரிக் கண்டத்தின் சொந்த அமைப்பு நிலை காணப்படுகிறது. அரபிக் கடலுக்குத் தெற்கில், லட்சத் தீவுகள் நீட்சியில் மாலத் தீவின் வடக்குப் பகுதியுடன் பிணைந்து, தெற்கில் சாகோஸ் ஆர்கிபிலாகோ (Chagos Archipelago) வரை சுமார் 2000 மைல் தூரம் வரைக் குமரிக் கண்டம் இருந்திருப்பதாகத் தெரிகிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த (கி.மு. 8000) பனி யுகத்தின் போது இந்து மாக்கடலில் கடல்நீர் மட்டம் குன்றிக் குமரிக் கண்டம் முழுவதும் புறத்தே தெரியும்படி மேலாக உயர்ந்திருந்தது.

மற்றுமொரு ஆராய்ச்சியின்படி இந்துமா கடலுக்கடியில் மூழ்கிய நிலப்பரப்பு ஒன்று இருக்கிறது என்றும் ஆய்வுகள் சொல்கின்றன.ஆயினும் அஃது குறைந்தது 10,000 முதல் 15,000 ஆண்டுகள் முன் மூழ்கியிருக்க வாய்ப்புண்டு என்றும் சொல்லப்படுகிறது, இக்கருத்தின்படி அது குமரிக்கண்டமாக இருக்க வாய்ப்பில்லை என்றும் சில கூற்றுகள் உள்ளது. மேலும் குமரிக்கண்டம் இருந்ததாக சொல்லப்படும் இடத்தில கடல் 200 மீட்டர் வரை ஆழத்தில் உள்ளது. சில இடங்களில் 2000 மீட்டருக்கு மேல் கடல் ஆழம் இருக்கிறது. 

தமிழ் தேசியவாதிகளும், தமிழ் இன ஆதரவாளர்களும் இலக்கியத்தின் ஆதாரங்களை கொண்டு, குமரிக்கண்டம் இருந்ததாக வாதிடுகிறார்கள். இன்னும் சிலர் விஞ்ஞான ஆராய்ச்சியின்படி குமரிக்கண்டம் நிரூபணம் ஆகாத ஒரு கட்டுக்கதை என்றும் சொல்கின்றனர். இந்திய அரசாங்கம் இது போன்று கடலில் மூழ்கிய நகரங்களின் (பூம்புகார், கொற்கை..) பெருமையும், அதன் வரலாற்றையும் வெளிக்கொணர்ந்து உலக நாடுகளிடைய நம் தொன்மையும் பெருமையும் பறைசாற்ற வேண்டும். நிலையான அதிகாரபூர்வ தொல்பொருள் ஆதாரம் வரும் வரையில், இது போன்ற சர்ச்சைகளும் கருத்துக்களும் குமரிக்கண்டத்தை சுற்றி வந்து கொண்டே தான் இருக்கும்.


நன்றி!!!
பி. விமல் ராஜ்

புதன், 31 மே, 2023

சட்டம் என் கையில் !

வணக்கம்,

நம் நாட்டில் உள்ள சட்டங்கள் எல்லோருக்கும் பொதுவானது, சமமானது என சொல்கிறோம். ஆனால் நம்மில் பலருக்கு அடிப்படை சட்டத்தின் அடிப்படை கூட தெரியாது. அன்றாட வாழ்வில் அது தேவை படவில்லை என எண்ணி, அதை பற்றி நாம் பெரிதும் கவலை பட்டதில்லை. நான் படித்து அறிந்து கொண்ட சில சட்டங்களையும், விதிகளையும் உங்களிடம் பகிர்கிறேன்.

சுதந்திரம் அடைந்த பின்னும் ஆங்கிலேயர் இயற்றி பின்பற்றி வந்த சட்டங்களை நம் நாடும் பின்பற்றி வந்தது. பின்னர் 1950-ல்  டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களால் இந்திய அரசியலமைப்பு சட்டம் (Constitution Of India) இயற்றப்பட்டது. நமது நவீன இந்தியாவில் பல்வேறு வகையான சட்ட அமைப்புக்கள் உள்ளது. இந்தியா ஒரு கலப்பின சட்ட அமைப்பைக் கொண்டது. அதிலுள்ள சட்டங்கள் காலனித்துவ காலத்திலிருந்து மரபுரிமையாகப் பெற்ற சட்ட கட்டமைப்பிற்குள்ளும், ஆங்கிலேயர்களால் ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல சட்டங்களும் இருக்கின்றன. 450 கட்டுரைகள், 12 அட்டவணைகள், 101 திருத்தங்கள் மற்றும் 117,369 சொற்கள் கொண்ட இந்திய அரசியலமைப்பு ஒரு நூற்றாண்டில் மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பாகும். ஒட்டு மொத்தமாக 1248 சட்டங்கள் உள்ளது.

இந்திய சட்டங்களின் அமைப்பு மூன்று வகையாக பிரிக்கலாம்.

  • பொது சட்டம் (Common Law)
  • குற்றவியல்  சட்டம் (Criminal Law)
  • சிவில் சட்டம்  (Civil Law)
பொது சட்டம் (Common Law)
சட்டமன்றம் அல்லது அதிகாரபூர்வ சட்டங்களின் மூலம் நிறுவப்பட்ட விதிகள் மற்றும் சட்டங்களுக்கு மாறாக, நீதித்துறை முன்மாதிரிகளாலும், நீதிபதிகளாலும் விசாரிக்கப்பட்டு வழக்குகளின் முடிவிற்குப் பிறகு நீதிபதிகளால் நிறுவப்பட்ட சட்ட விதிமுறைகளின் தொகுப்பாக இருப்பது  பொது சட்டம்  என குறிப்பிடப்படுகிறது. இது ஒரு உலகளாவிய சட்டமாகும். உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இப்போது பொதுவான சட்ட அதிகார வரம்புகள் அல்லது அமைப்புகளில் வாழ்கின்றனர்.

குற்றவியல் சட்டம் (Criminal Law)
சமூகத்தில் உள்ள குற்றங்களை குறைக்க குற்றவியல் சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கொள்ளை, கொலை, கடத்தல், கற்பழிப்பு, மற்றும் பல உள்ளிட்ட சில குற்றங்கள் குற்றவியல் சட்டத்தின்படி வழக்குத் தொடரப்பட்டு தண்டிக்கப்படுகின்றது. இந்திய தண்டனைச் சட்டம் (IPC-Indian Penal Code), இந்திய சாட்சியச் சட்டம் (IEC-Indian Evidence Act), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (Code of Criminal Procedure) ஆகியவை குற்றவியல் சட்டங்களாக இருக்கின்றன.

சிவில் சட்டம்  (Civil Law)
குற்றமாகாத நடத்தையை அல்லது விஷயங்களை சீராக்கவும், சிவில் நீதிமன்றங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை சிவில் நடைமுறைச் சட்டம் (CPC-Civil Procedure Code ) நிர்வகிக்கிறது. தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளையும், சொத்து, மதம், குடும்ப சண்டைகள் அல்லது இதுபோன்ற கருத்து வேறுபாடுகள் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க சிவில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. குடும்ப சட்டம் (Family Law), ஒப்பந்த சட்டம் (Contract Law), நிர்வாக சட்டம் (Administration Law), நிறுவன சட்டம் (Corporate Law), சட்டப்பூர்வ சட்டம் (Statutory Law) என உட்பிரிவுகள் இதில் இருக்கின்றது.

Indian laws and Constitution

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில சட்டங்கள் சிலவற்றை பற்றி இங்கு பார்க்கலாம்.

இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்: 
Article 1- ஒன்றியத்தின் பெயரும் ஆட்சி நிலவரையும்
(i) இந்தியா எனப்படும் பாரதம்  மாநிலங்களின் (யூனியன்) ஒருங்கிணைப்பு ஆகும்.

Article 5- அரசமைப்பின் தொடக்கநிலையில் குடியுரிமை
இந்த சாசனம் துவக்கப்பட்ட நாளில் இந்தியாவில் தொடர்ந்து வாழும் ஒருவர்,
(அ) இந்திய நிலப்பகுதியில் பிறந்தார், அல்லது
(ஆ) அவருடைய பெற்றோர்களில் ஒருவர் இந்தியாவில் பிறந்திருப்பின்,
(இ) இந்த சாசனம் துவக்கப்படுவதற்கு ஐந்து ஆண்டுகள் முன்பிருந்தே இந்தியாவில் வசித்து வரும் ஒவ்வொருவரும் இந்தியாவின் குடிமகன் ஆவார்.

Article 14- சட்டத்தின் முன்னர் சமன்மை
அரசு, இந்திய ஆட்சி நிலவரைக்குள் சட்டத்தின் முன்னர் சமன்மையையும், சட்டங்கள் அளிக்கும் பாதுகாப்பில் சமன்மையையும் எவர் ஒருவருக்கும் மறுக்க கூடாது. 

Article 15-  மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதைத் தடை செய்தல்
(i) அரசு எந்த ஒரு குடிமகனையும் மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம்  அல்லது வேறு காரணத்தின் பேரிலும் வேறுபடுத்தி பார்க்க கூடாது,
(ii) குடிமகன் எவரையும்,
(அ)  எந்த ஒரு குடிமகனையும் மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் இவற்றை காரணம் காட்டி,
(ஆ) கடைகள், உணவு விடுதிகள், தாங்கும் விடுதிகள் கேளிக்கைக்கான பொது இடங்கள் இவற்றுக்குள் செல்வதையோ, அல்லது
(இ)கிணறு, குளம், பொது குளியலறைகள், ஆலைகள் இவற்றை பயன்படுத்துவதையோ கூடாது என்று குறைபாடு, கடப்பாடு அல்லது நிபந்தனை விதிக்க கூடாது.  

Article 17- தீண்டாமை ஒழிக்கப்பட்டது. அதன் நடைமுறை வழக்கம் எந்த வகையிலும் இல்லாதபடிக்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. தீண்டாமையின் விளைவாய் செயலாக்கப்படுகிற எந்த குறைபாடும் சட்டப்படி தண்டிக்க தக்கதாகும்.

Article 19- சுதந்திரமாய் செயல்படுவதற்கான உரிமை
(i) இந்தியா குடிமக்கள் அனைவருக்கும் -
(அ) சுதந்திரமாய் பேசவும் (எண்ணங்களை உணர்வுகளை) பேசவும், வெளிப்படுத்தவும்
(ஆ) ஆயுதமில்லாமல் அமைதியாய் கூடுவதற்கும்
(இ) சங்கங்கள் அமைப்புகள் இவற்றை உருவாக்குவதற்கும்
(ஈ) இந்தியாவிற்குள் தடையின்றி இங்கும் சென்று வரவும்
(உ) இந்திய நிலப்பகுதியில் எந்த ஒரு இடத்தில  வாசிப்பதற்கும்
(ஊ) சொத்துக்களை தேடி கொள்ளவும், வைத்திருக்கவும் விற்கவும்
(எ) எந்த ஒரு பணியில் ஈடுபடுவதற்கும் எந்த ஒரு தொழில் அல்லது வர்த்தகம் செய்யவும் உரிமை உண்டு.

Article 22 - கைது செய்தல், காவல் வைத்தல் இவற்றிலிருந்து பாதுகாப்பு
(i)  ஒருவர் எந்த காரணத்திற்காக கைது செய்ய படுகிறார் என்ற காரணத்தை தெரிவிக்கும் அவரை காவலில் வைக்க கூடாது. அவர் தாமுக்குடைய சட்ட ஆலோசகரை கலந்தாலோசிக்கவும், அவரை தமது பாதுகாப்பிற்கு பயன்படுத்தி கொள்ளவும் அவருக்குள்ள உரிமை மறுக்கப்பட கூடாது.
(ii) கைது செய்து காவலில் வாய்த்த ஒரு நபரை அவர் கைது செய்யப்பட்ட 24 மணிநேரத்திற்குள் அருகிலுள்ள ஒரு குற்றவியல் நடுவரிடம் முன்னிலை படுத்த வேண்டும்.

Article 23 - மனிதரை வணிக பொருளாக்குதல், வலுக்கட்டாயமாக வேலை சுமத்துதல்
(i) மனிதரை வணிகமாக வைக்கும் தொழிலும் (human trafficking) , பிச்சையெடுக்க வைப்பதும், வற்புறுத்தி வேலை வாங்குவதும் தண்டிக்கத்தக்க குற்றமாகும்.

Article 24- தொழிற்சாலையில் சிறார்களை பணியமர்த்த தடை
பதினான்கு வயதிற்கு உட்பட்ட குழந்தல்களை தொழிற்சாலையிலோ அல்லாது சுரங்கத்திலோ அல்லது வேறு அபாயகரமான வேலையில் பணியமர்த்த கூடாது,

Article 25- வழிபாட்டு சுதந்திரம்
பொது ஒழுங்கு, ஒழுக்க முறைமை மற்றும் உடல் மனநலம் ஆகியவற்றிற்கும் உடன்பட்டு தம் மனசாட்சியின் படி செயல்பட அனைவருக்கும் உரிமை உண்டு. ஒரு மதத்தை கொண்டாடவும், கடைபிடிக்கவும், பரப்பவும் அவர்கள் உரிமை உடையவராவார்.

Article 46-
அரசு பிற்படுத்தபட்ட மக்களிடையே குறிப்பாக பட்டியல் சாதியினர் (Scheduled Castes) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes) இவர்களின் கல்வி சார்ந்த பொருளாதார நாளங்களில் அக்கறை காட்டி உயர்த்துவதோடு அவர்களை சமூக அநீதியிலிருந்தும் அணைத்தது வகை சுரண்டல்களிலிருந்தும் பாதுகாக்க வேண்டும்.

Police Act 1861-
ஒரு காவல் அதிகாரியானவர் எப்போதும் தன் கடமை உணர்வுடன் இருக்க வேண்டும். அவர் பொறுப்பில் இருக்கும்வரை எப்போதும் கடமையிலிருந்து ஓய்வு ( off duty) என்பதே இல்லை.

Maternity Benefit Act 1961, Section 4 -
வேலையில் இருக்கும் ஒரு கர்ப்பிணி பெண்ணை எப்போதும் பணி நீக்க முடியாது. ஒரு கர்ப்பிணி பெண் தன் கர்ப காலத்தில் பணிக்கு வர முடியாத காரணத்தை வைத்து, எந்த நிறுவனமும் / மேலாளரும்/முதலாளியும் அவர்களை வேலையை விட்டு அனுப்ப கூடாது.

Section 4(1) - எந்த ஒரு நிறுவனம் எந்த கர்ப்பிணி பெண்ணையும் பிரசவ தேதியிலிருந்து (குழந்தை பிறத்தல்/ கர்ப்பத்தின் முடிவு/கருச்சிதைவு) ஆறு வாரம் வரை வேலையில் பணியமர்த்த கூடாது.

Section 4(2) - எந்த ஒரு  கர்ப்பிணி பெண்ணும் எந்த ஒரு நிறுவனத்திலும் பிரசவ தேதியிலிருந்து (குழந்தை பிறத்தல்/ கர்ப்பத்தின் முடிவு/கருச்சிதைவு) ஆறு வாரம் வரை எந்த வேலைக்கும் போகவோ/சேர கூடாது.

Section 4(3)-  Section (6) க்கு எந்த ஒரு பாரபட்சமின்றி  எந்த ஒரு  கர்ப்பிணி பெண்ணுக்கும் அவள் கேட்டு கொண்டதாலும், கட்டாயத்தாலும்  Section 4 -ல் உள்ள காலத்தில் கடினமான வேலைகளையோ (நீண்ட நேரம் நிற்க வைத்தால் உட்பட்டு)  செய்ய வைக்க கூடாது.

Gas Cylinder Rules, 2004, and Explosives Act, 1884.
வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்களுக்கு 40 லட்சம் வரை நுகர்வோர்களால் (பாதிக்கப்பட்டோர்கள்) சமையல் எரிவாயு நிறுவனங்கள் மூலம் இழப்பீடு பெற முடியும்.

தண்டனை சட்டங்கள் :
IPC 109-
குற்றத்திற்கு உடந்தை; குற்றவாளிக்கு உடந்தை யாக இருத்தல்
தண்டனை:குற்றத்திற்கேற்றவாறு சிறை அல்லது அபராதம்.

IPC 110-
மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை க்குரிய குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல்
தண்டனை:ஏழு ஆண்டு சிறை மற்றும் அபராதம்.

IPC 140-
தரைப்படை, வான்படை, கடற்படை வீரரால் பயன்படுத்தப்படும் உடை அல்லது பதக்கம் முதலியவை அணிந்து கொண்டு தாமும் அத்தகைய படையை சேர்ந்தவர் என நம்பிக்கை ஏற்படுத்துதால்
தண்டனை: மூன்று மாதம் சிறை அல்லது 500 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும்.

IPC 143-
சட்டவிரோதமான கும்பலில் உறுப்பினராக இருத்தல்.
தண்டனை: ஆறு மாதம் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.

IPC 144-
சட்டவிரோதமான ஆயுதங்களை கைக்கொண்டிருக்கும் கும்பலில் உறுப்பினராக இருத்தல்.
தண்டனை: 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.

IPC 153(அ)-
வழிபடும் இடத்தில் வகுப்புகளிடையே பகைமையை வளர்த்தல்.
தண்டனை: 3 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும். 

IPC 163-
பொது ஊழியர்கள் ஒரு கடமையை நிறைவேற்ற ஊதியத்தைத் தவிர கையூட்டு பெறுதல்
தண்டனை: ஒர் ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும். 

IPC 171-
பொது ஊழியருடைய சீருடை அல்லது அடையாள அட்டை ஆகியவற்றை பொது ஊழியர் அல்லாதவர் ஏமாற்றும் எண்ணத்தில் அணிதல்.
தண்டனை: 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.

IPC 212 -
மரண தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவருக்கு புகலிடம் அளித்தல்.
தண்டனை: 5 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும்

IPC 231/232/233/234-
போலி நாணயத்தை உண்டாகுதல்; இந்திய நாணயங்களை போலியாக செய்தல்; போலி நாணயம் செய்வதற்கான கருவிகளை செய்தல் அல்லது விற்பனை செய்தல்; போலி இந்திய நாணயங்களைச் செய்வதற்கான கருவிகளைச் செய்தல் அல்லது விற்பனை செய்தல்
தண்டனை: 7 ஆண்டு சிறை மற்றும் அபராதம்.

IPC 274/275 -
மருந்துப் பொருட்களில் கலப்படம்; கலப்படம் செய்யப்பட்ட மருந்துகளை விற்றல்
தண்டனை: 6 மாதம் சிறை மற்றும் அபராதம்.

IPC 292/293-
இருபது வயத்துக்கு குறைவாக உள்ளவரிடம் ஆபாசமான பொருளை (புத்தகம், புகைப்படம், எழுத்து, துண்டுப்பிரசுரம்,  படம் வரைதல் மற்றும் ஓவியம்) விற்றல் / வாடகைக்கு கொடுத்தல்/விநியோகிப்பதல்/காட்சிப்படுத்துதல் 
தண்டனை:  3 மாதங்கள் வரை சிறை அல்லது 2000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும்.

IPC 294(B)-
பொது இடத்தில் எந்த ஒரு ஆபாசச் செயலைப் புரிதல்/ ஆபாசமாக பேசுதல்/பாடுதல்/ஆபாச வாசகத்தை உச்சரித்தல்
தண்டனை:  3 மாதங்கள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

IPC 302-
கொலைக்குற்றம் புரிந்தவனுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள்தண்டனை விதிக்கப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும்.
தண்டனை: மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை

IPC 306-
ஒருவரை தற்கொலைக்கு தூண்டுதல்.
தண்டனை: பத்தாண்டுகள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு காலத்திற்கான விளக்கத்துடன் கூடிய சிறைத்தண்டனை மற்றும் அபராதம்.

IPC 307-
கொலை முயற்சி செய்தல்
தண்டனை: பத்தாண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய ஒரு காலத்திற்கான விளக்கத்துடன் கூடிய சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மேலும் அபராதம் விதிக்கப்படலாம்;

IPC 341-
தவறான திசை, இடம், போக்கில் வழி நடத்துதல்
தண்டனை: ஒரு மாதம் சிறை அல்லது 500 ரூபாய் அபராதம்.

IPC 376-
பாலியல் வன்புணர்வு / கற்பழிப்புக்கான தண்டனை சட்டம்.
தண்டனை:  ஏழு ஆண்டுகளுக்கு குறையாமல் சிறை தண்டனை அல்லது ஆயுட்கால சிறை மற்றும் அபராதம். வன்புணர்வால் பாதிக்கப்பட்டவர் ஈடுபட்டவரின் மனைவியோ/அல்லது 12 வயதுக்கு கீழ் இல்லமல் இருந்தால் இரண்டாண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம்.

IPC 420-
ஏமாற்றுதல் மற்றும் நேர்மையற்ற முறையில் சொத்து விநியோகத்தை தூண்டுதல்.
தண்டனை: 7 ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து.

IPC 454 -
வலிந்து வீடு புகுந்ததற்கான குற்றத்திற்குத் தண்டனை
தண்டனை: 3 ஆண்டு  சிறை அல்லது அபராதம்.

புத்தகத்திலும் இணையத்திலும் படித்ததை வைத்து, மிக சில சட்டங்களை பற்றி மட்டுமே இங்கு பகிர்ந்துள்ளேன். மேலும் விரிவான தகவல்களுக்கு:

  1. இந்திய தண்டனை சட்டங்களின் விளக்கங்கள் மற்றும் நீதிமன்ற படிவங்கள் - சோ.சேசசலம்
  2. இந்திய அரசியல் அமைப்பு சட்டம் - சி.எஸ். தேவ்நாத்

நன்றி!!!
பி. விமல் ராஜ்

புதன், 3 மே, 2023

வர்கலா என்னும் கடல் சொர்க்கபுரி!

வணக்கம்,

வெயில் சுட்டெரிக்கிறது. சித்திரை வெயிலும் அலுவலக வேலைகளும் மண்டையை பிளக்க, கோடை  விடுமுறைக்கு எங்காவது செல்லலாம் என யோசித்தோம். இம்முறை கடற்கரை நகருக்கு செல்லலாம் என எண்ணி, நீண்ட நாள் செக்-லிஸ்டில் உள்ள வர்கலாவை டிக் செய்தோம். வர்கலா பற்றியும், நான் கண்டு ரசித்ததையும் இங்கு பகிர்கிறேன்; படித்து மகிழுங்கள்.

வரலாறு-
வர்கலாவின் பெயர் புராண கதைகளின்படி காரணம் சொல்லப்படுகிறது. அது இப்போது நமக்கு தேவையில்லை. வர்கலாவில் கடற்கரைக்கு அருகில் இயற்கையாகவே அமைக்க பெற்றுள்ள செந்நிற பாறைகளும், மலைக்குன்றுகளும் (cliffs) தான், இவ்விடத்திற்கு தனித்தன்மையையம் பெருமையும் சேர்க்கிறது. 23 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வண்டல் செம்மண் பாறைகளால் ஆன இக்குன்றுகளை 'Varkala Formation' என்று புவியியல் அறிஞர்கள் சொல்கின்றனர். இது அரபிக்கடலில் அமைந்துள்ள cliff beachகளில் முக்கியமானதும் அழகானதும் ஆகும். குதூகல நகரமான கோவாவிலும் இது போன்ற cliff beachகள் இருக்கிறது. வர்கலாவை 'மினி கோவா' என்றும் 'தென்னிந்தியாவின் கோவா' என்றும் 'அரபிக்கடலின் முத்து' என்றும் பெருமையாய் சொல்வதுண்டு. 2005-ல் ஸ்ரீ நாராயண குரு (கேரளாவின் ஆன்மீக தலைவர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி) அவர்களின் மறைவுக்கு  பின், இங்குள்ள ரயில் நிலையம் வர்கலா சிவகிரி என்று அழைக்கப்படுகிறது. 2015-ல் இந்திய புவியியல் ஆய்வு மையம் (Gelogical Survey of India), வர்கலாவை தேசிய புவியியல் நினைவுச் சின்னமாக (National Geological Monument) அறிவித்தது.

வர்கலா - கேரளா மாநிலத்தில் திருவானந்தபுரத்திலிருந்து 50 கி.மீ தொலைவில் இருக்கும் ஓர் அழகிய கடற்கரை நகரம். திருவானந்தபுரத்திலிருந்தும் கொல்லம் நகரிலிருந்தும் வர்கலாவிற்கு பஸ்ஸிலோ/ காரிலோ ஒன்றரை மணி நேரத்தில் செல்லலாம்.  சென்னையிலிருந்தும் மற்ற மாவட்டங்களிலிருந்தும் ரயில்கள் தினசரி வந்து செல்கின்றன. வர்கலா டவுன் மற்ற எல்லா ஊரையும் போல எந்த ஒரு சலசலப்பும் இன்றி அமைதியாய் இருக்கின்றது. இங்கு எல்லா முக்கிய கடைகளும், அலுவலகங்களும், வீடுகளும், குடியிருப்புகளும் டவுனில் தான் இருக்கிறது. ATM சென்று பணம் எடுக்க வேண்டுமானாலும், மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமானாலும் வர்கலா டவுனுக்கு தான் வரவேண்டும். மேலும் 2000 ஆண்டு பழமையான ஜனார்த்தன சுவாமி கோவிலும், 17ஆம் நூற்றாண்டு போர்த்துகீசிய அன்ஜெங்கோ கோட்டையும் இங்குள்ளது.

வர்கலா டவுனிலிருந்து 3 கி.மீ தூரத்தில் மலைக்குன்றுகளும் கடற்கரையும் இருக்கின்றது. மற்ற கடற்கரை நகரை போலவே இங்கும் பல கடற்கரைகள் இருக்கிறது. Kappil beach, Black sand beach, Papanasam beach, Odayam  beach என பல இருக்கிறது. அனைத்துமே ஒரே வரிசையில் ஒன்றாய் இருக்கின்றது. கடற்கரையை ஒட்டிய மலைகுன்றுகள் (cliffs) வளைவான தோற்றத்தை கொண்டுள்ளது. அதாவது ஒரு முகட்டில் பார்த்தல் முழு மலைத்தொடரும் 'நெக்லெஸ்' போல வளைந்து இருக்கும். 

Varkala-beach

குன்றுகளின் உச்சியை ஒட்டி ஒரு கடைசியிலிருந்து மறுகடைசி வரை கடைகளும், தங்குமிடங்களும் (resort), உணவு விடுதிகளும் (restaurant) வரிசைகட்டி இருக்கின்றது. எல்லா ரிசார்ட்களும் மலைக்குன்றின் cliff முகட்டில் தான் இருக்கிறது. அதனால் பெரும்பாலான ரிசார்ட்களில் அறையிலிருந்தோ அல்லது வெளியே பால்கனி வழியே பார்த்தாலே கடல் காட்சியளிக்கிறது. அதுவும் முதல்/இரண்டாம் மாடி என்றால், பரந்து விரிந்த கடலின் காட்சி அகல கோணத்தில் தெளிவாய் தெரிகிறது. நாங்கள் தங்கியிருத்த அறையின் வெளியே உள்ள திண்ணையின் அருகே வந்து பார்த்தாலே கடல் தெரிந்தது. கண்ணை மூடி கடலின் அலையோசையை கேட்பது தியானத்தை  விட பெரிது. மேலும் காலை எழுந்தவுடன் அலைக்கடலின் ஓசையோடு கடலையும், காபியையும் ரசிப்பது அலாதியான இன்பம்! கூகிள் மற்றும் பிற வலைத்தளங்களில் தங்குமிடங்களை பற்றி தீர தேடி அலசிய பின் அறையை பதிவு செய்வது உசிதமானது.   

Varkala-seashore

கடைகளில் பெரும்பாலும் வெளிநாட்டினரையே குறிவைப்பது போல இந்தயாவின் கலை பொருட்களை மைய வியாபாரமாக வைத்துள்ளனர். காஷ்மீரி புடவை/ ஷால்/ கம்பளிகள், திபெத்திய துணிகள்/பாத்திரங்கள், சின்ன சின்ன வெண்கல சிலைகள்/ பொம்மைகள், மரத்திலான கலைப்பொருட்கள், தோல் பைகள், காதி பொருட்கள் என அனைத்தும் விற்கப்படுகின்றன. மூலிகை பொருட்கள், வாசனை திரவியங்கள், ஆண்கள் மற்றும் பெண்களின் அணிகலன்கள் (வெள்ளி, கிரிஸ்டல், நவரத்தினம், சிலிகா மற்றும் ஆடம்பர அழகு கற்கள் போன்றவற்றால் செய்யப்பட்டவை) ஆகியவையும் விற்கப்படுகின்றன. இவையனைத்துக்கும் யானை விலை, குதிரை விலை சொல்கிறார்கள். ஆரம்ப விலையே 2000க்கு மேல் தான். இதை தவிர காட்டன், லினனில் செய்த ஆண் பெண் துணிமணிகள், ஜூட் பைகள், சிறிய அலங்கார பொம்மைகள், விளையாட்டு பொருட்கள், கழுத்தில் போடும் மணிகள் என சாமான்யர் வாங்கும் விலையிலும் பொருட்கள் இருக்கிறது. பெரும்பாலான கடைகளை திபெத்திய மக்களும், வடகிழக்கு மக்களும், வடஇந்திய மக்களுமே வைத்து நடத்துகின்றனர். வெகுசில கடைகளில் தான் சேட்டனின் மலையாளம் வருகிறது. மற்றவர்கள் ஆங்கிலத்தில் தான் பேசுகின்றனர். மலையாளமோ/தமிழோ அங்குள்ள பலரும் புரிந்து கொள்வது சற்றே சிறப்பு.    

இரண்டு கடைகளுக்கு ஒரு கடை காபி கடையும் (கஃபே), ஓட்டல்களும் இருக்கின்றது. பெரும்பாலும் சைனீஸ் உணவுகள், பராத்தா, நான், ரொட்டி, பர்கர், பீட்சா, மோமோ, சிக்கன், மீன், ஆகியவை கிடைக்கிறது. வெஜ் பிரியர்களுக்கு மிகவும் சொற்பமாக தான் உள்ளது. நம்மவூர் இட்லி, தோசை, சாதா மீல்ஸ் எல்லாம் ஏதாவது ஓரிரு கடையில் கிடைத்தால் பெரிதினும் பெரிது. இரவு நேரத்தில் எல்லா ஓட்டல்களிலும் வாசலில் சுட சுட கடலிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன்களை காட்சிப்படுத்தி, உணவுக்கு தயார் செய்து கொடுக்கிறார்கள். மினி கோவா என்றதும் எல்லா கடைகளிலும் சரக்கு இருக்கும் நினைத்து கொண்டு வருவோர்க்கு ஏமாற்றம் நிச்சயம். ஒரு சில ரிசார்ட்களிலும், ஓட்டல்களிலும் மட்டுமே விற்கப்படுகிறது. பல இடங்களில் காலி பாட்டில்களை நம்மால் காண முடிகிறது. இரவில் எல்லா கடைகளும் விளக்கொளியில் பளபளவென கலர்கலராய் மின்னிகொண்டிருக்க, எதிரே கரும் இருட்டில் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் சிறு சிறு வெளிச்ச புள்ளிகளாய் கடலில் படகுகள் தெரிந்து கொண்டிருந்தன. 

Varkala-shopping

குன்றின் விளிம்பில் சிறிய இரண்டடி கல் சுவர்/மரப்பலகை தடுப்புகள் மட்டுமே போடப்பட்டுள்ளது. அங்கங்கே கடலையும், கடற்கரையையும் பார்த்து ரசிக்க வியூ பாயிண்ட்களும், செல்பி பாயிண்ட்களும் உண்டு. மலையின் எந்த பக்கம் இருந்தாலும் கடலும் கடற்கரையும் தெரியும். எப்போதும் கடல் சீற்றத்தில் அலறி கொண்டே இருக்கிறது. சாதாரணமாக கரையிலிருந்து கடலை பார்த்தாலே நம் கண்பார்வையில் கிட்டத்தட்ட 4.5 கி.மீ தூரம் வரை பார்க்க முடியும் (நேரம், வெளிச்சம் மற்றும் சீதோஷ்ணம் பொறுத்தது). ஆனால் 80 அடி உயரமுள்ள வர்கலா மலை குன்றுகளின் மேல் நின்று அரபி கடலை கிட்டத்தட்ட 15 கி.மீ வரை பார்க்கலாம் (என் அனுமானம் தான்!). தூரத்தில் போகும் பெரிய சிறிய கப்பல்கள், அங்கங்கே மிதக்கும் மீன் பிடி படகுகள், வானில் நமக்கு அருகில் பறக்கும் கழுகுகள் என ரம்மியமான காட்சிகளை பார்க்க முடியும். அதுவும் காலையிலோ/மாலையிலோ வெயில் தாழ இருக்கும் போது நாமும் இயற்கையோடு இயற்கையாக ஒன்றி விடுவோம். உச்சி வேளையின் போது  சூரியன் கடலில் பட்டு, கடல் தங்க நிறத்தில் தகதகவென ஜொலித்து கொண்டிருக்கும். நங்கள் சென்ற போது வெயில் கடுமையாக இல்லாமல் அவ்வப்போது நல்ல (கன) மழை பெய்து நம்மை குளி(ர்)வித்தது. 

Varkala beach

மலை முகட்டிலிருந்து கீழே கடற்கரைக்கு வர சில இடங்களில் படிக்கட்டுகள் இருக்கின்றது. மலைகுன்றுகளின் அடிபாகத்தை கடல் நீர் அரிக்காமல் இருக்க படிக்கட்டுகளின் முடிவில் (குன்றின் அடிப்பகுதியில்) பாறைக்கற்கள் போடப்பட்டுள்ளன. அதிலிருந்து சில அடிதூரத்திலேயே கடல் அலைகள் நம்மை வரவேற்கிறது. சில சமயத்தில் அலைகள் இப்பாறைகள் வரை வந்து முட்டி மோதி, சுற்றுலா பயணிகள் போட்டு வைத்திருந்த செருப்புகளை கவர்ந்து செல்கின்றன. மற்ற கடற்கரை காட்டிலும் இங்கு அலைகள் சற்றே ஆக்ரோஷமானதாய் இருப்பதை போல எனக்கு தெரிந்தது. அந்த நீண்ட கடற்கரை முழுவதும், ஆங்காங்கே மக்கள் கரையிலிருந்தும், சற்றே தள்ளி கடலிலும் சென்று குதித்து அலையோடு விளையாடி, குளித்து, களித்து கொண்டிருந்தனர். சில ஆபத்தான இடங்களில் முக்கோண சிகப்பு கொடி நடப்பட்டிருந்தது; அதை தாண்டி செல்வது அவரவர் பொறுப்பும் விருப்பும். ஓர் குறிப்பிட்ட உயரமான இடத்தில், அவசர உதவி மீட்பு குழுவை சேர்ந்த நபர் (Emergency Rescue Person) கலர் குடையின் கீழ் அமர்ந்து கொண்டு தூரத்தில் (ஆழ்) கடலில் நீந்த செல்பவர்களை விசில் போட்டு தடுத்து கொண்டிருந்தார். மற்றபடி வேறு எந்த முதலுதவி சாதனமோ, மற்ற பொருட்களான structure, மிதக்கும் மிதவைகள், safe jacketகள், speed boat போன்றவை இருந்த மாறி தெரியவில்லை. 

கரையில் ஒரு ஓரத்தில் sea surfing என சொல்லப்படும் கடலில் மிதக்கும் விளையாட்டு, சுற்றுலா பயணிகளுக்கு பயிற்சியாளர் மூலம் பயிற்சி தரப்பட்டு கொண்டிருந்தது. கடல் நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமே இந்த விளையாட்டிற்கு செல்வது நல்லது. காயக்கிங் (kayaking) போன்ற படகு விளையாட்டும் உண்டு என சொன்னார்கள். அனால் எங்கே நடக்கிறது என தெரிந்து கொள்ள முடியவில்லை. நான் பெரிதும் ஆவலோடு எதிர்பார்த்த பாரா கிளைடிங் (Para Gliding) தற்போது சீசன் இல்லாதால் போக முடியவில்லை. அதில் கொஞ்சம் வருத்தம் தான்.

ஏற்கனவே சொன்னது போல முழு நீள கடற்கரையையும் நாம் நடந்தே கடக்கலாம். அப்படி நடந்து செல்லும் போது மீனவர்கள் (வேலைசெய்யும்) வலைபோடும் இடமும், அதையும் தாண்டி சென்றால் கருப்பு நிற கடற்கரை மண்ணையும் காணலாம். ஒர் இடத்தில சிகப்பு கொடியை தாண்டி சென்றாலோ அல்லது மலைக்குன்றின் மறுபக்கத்தில் உள்ள படிக்கட்டுகளின் மூலமாகவோ மறுபக்க கடற்கரைக்கும் செல்லலாம். 

வர்கலாவில் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலமே பீக் சீசன் என சொல்கிறார்கள். இப்போது ஏப்ரலில் நாங்கள் சென்றது off-season என்றாலும், மிதமான கூட்டமும், இதமான வானிலையும் இருந்ததால் நிம்மதியாய் சென்று வர முடிந்தது. கடலையும் கடற்கரையையும் ஆறு முதல் அறுபது வயது வரை எல்லோருக்கும் பிடிக்கும். அவ்வளவாக பிடிக்காதவர்கள் கூட இங்கே வந்தால் சில மணிநேரத்தில் சொக்கி போய் குதூகலிப்பார்கள். மொத்தத்தில் கடலும் கடல் சார்ந்த இடமும் பிடித்தவர்களுக்கு வர்கலா ஓர் அருமையான சொர்கபுரியாக இருக்கும் என்றே சொல்ல வேண்டும். 


நன்றி!!!
பி. விமல் ராஜ் 

வியாழன், 20 ஏப்ரல், 2023

மாறிய பண்பாட்டு அசைவுகள் !

வணக்கம்,

தமிழரின் பண்பாடு மிக தொன்மையானது. சங்க காலத்துக்கும் மிக முந்தையது. தமிழரின் இலக்கியம், கல்வெட்டுக்கள், தொல்பொருள் அகழ்வாராய்வுகள், அவர்கள் பயன்படுத்தி வந்த பல்வகைப் மட்பாண்டங்கள், செங்கல் கட்டமைப்புகள், பண்டைய எழுத்து முறை, அகழ்ந்தெடுக்கப்பட்ட செயற்கைப் பொருட்கள், குகைகள் மற்றும் மட்பாண்டங்களில் காணப்படும் எழுத்து வடிவங்கள், ஆற்றுப்படுகைகளில் கிடைத்த நாணயங்கள், அரசர்களின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட நாணயங்கள், ஆகியன சங்க கால மக்களின் வாழ்க்கை ஒழுக்கத்தினை அறிய உதவும் சான்றுகளாக இருந்தன. தமிழ் மொழிக்கு எவ்வளவு புகழ் உள்ளதோ அதுபோன்று தமிழரின் பண்பாடுகளு அத்தகைய சிறப்பும், புகழும் நிலைத்து இருக்கிறது.

தமிழர் பண்பாடு என்பது கலை, இலக்கியம், உணவு, உடை, பழக்கவழக்கம், வழிபாட்டு முறை என அனைத்தும் கலந்தது. தொன்ம குடிகளாய் இருந்த நாம், அன்று போல இன்றும் அதே பாரம்பரிய பண்பாட்டில் தான் வாழ்கின்றோமா என்றால் 'இல்லை' என்பதே அதற்கு உண்மையான பதிலாகும். காலத்திற்கு ஏற்றார் போல கொஞ்சம் கொஞ்சமாக நம் பண்பாடும், வழக்காற்றாலும் மாறிக்கொண்டே வந்துள்ளது. பன்முக கலாச்சாரங்கள் கலக்கும் போது இத்தகைய மாற்றங்களை தடுக்க வாய்ப்பில்லை. அதனை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

tamilar-panpaattu-maatrangal

உணவு :
தமிழரின் உணவு என்பது மண் சார்ந்த வாழ்வியலோடும், பண்பாட்டோடு கலந்தது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே புவியியல் நிலைமைகளை அறிந்து உடலுக்கும் மனதுக்கும் ஏற்ற உணவு வகைகளை உண்டு வாழ்ந்துள்ளனர் தமிழர்கள். ஒரு குறிப்பிட்ட மக்களுடைய பண்பாட்டை, தொன்மையை அறிய அவர்தம் உணவு பழக்க வழக்கங்களை கவனிக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. இதைப்பற்றி ஏற்கனவே முந்தைய பதிவில் எழுதியுள்ளேன் (நீரும் சோறும் - தமிழர் பண்பாடு !).

உடை:
"உண்பது நாழி உடுப்பவை இரண்டே" என்று புறநானூற்றில் சொல்லப்படுவது போல பண்டைய தமிழர்கள் மேலாடை, கீழாடை என இரு வகையான ஆடைகளுடனிருந்தமையால் பெண்களும் அவ்வாறே இருந்திருப்பார்கள். பருவகால மாற்றத்தின் போது உடைகள் வேறுபட்டிருக்கலாம். அரச குலத்தவர் மட்டுமே கணுக்கால் அளவு துணி உடுத்தியிருப்பதும், மற்றவர்கள் முழங்கால் வரை கட்டப்பட்ட அரையாடையினையே உடுத்தியிருப்பதும் இயல்பாக ஒன்றாக இருந்துள்ளது. சிலப்பதிகாரத்திற்கு முந்தைய காலங்களில் பெண்கள் மேலாடை அணித்துள்ளதாக ஏதும் குறிப்பில்லை. 9ஆம் நூற்றாண்டு முன்னர் கோவில்களில் வடித்த பெண் சிற்பங்கள் பெரும்பாலும் மார்பு கச்சை இல்லாமல் இருப்பதாய் கொண்டு அக்காலத்தில் பெண்கள் மேலாடை அணியாமல் இருந்திருக்க வாய்ப்புண்டு என்பதாகவும் சொல்கின்றனர்.

'புடைவை' என்னும் சொல் ஆண்களும் பெண்களும் அணிந்து கொள்ளும் நீண்ட துணியினையே குறிக்கும். திருநாவுக்கரசர் தமது பாடலில் 'வெண்புடைவை மெய் சூழ்ந்து' என சமண துறைகளில் உடையை சொல்கிறார். 15ஆம் நூற்றாண்டுக்கு பின்னர் விஜயநகர பேராசின் ஆட்சியில் தான் புடவை 14,16,18 முழ சேலைகள் கட்டும் வழக்கம் வந்தது. சாதிப்படி நிலைக்கு ஏற்றார் போல புடவை தலைப்பை இடது/வலது தோல் மாற்றி கட்டும் வழக்கமும் உருவானது. ஆண்கள் அணியும் மேல் சட்டையும், அரைக்கால் / முழுக்கால் சட்டையும் நவாப்புகளும், ஆங்கிலேயரும் வந்த பின்னரே இப்பழக்கம் வந்துள்ளது .

பண்டிகை:
தமிழர்களின் தனிபெரும் திருவிழாவாக இருப்பது தைப்பொங்கல் திருநாள் ஆகும். தை மாதத்தில் உழவர் மக்கள் அறுவடை காலத்தில் கொண்டாப்படும் ஓர் முக்கிய பண்டிகையாக இருக்கிறது. சமய எல்லையினை கடந்து அனைவரும் கொண்டாடும் ஒரு விழாவாகவும் இருக்கிறது. பிறப்பு, இறப்பு போன்ற தீட்டுக்களால் பாதிக்கப்படாத திருவிழா இது. பொங்கல் திருவிழாவின் போது திருவிளக்கின் முன் படையலில் கரும்பும், காய்கறிகளும், கிழங்கு வகைகளும் முக்கிய இடத்தை பிடித்திருப்பதை பார்க்கலாம். கிழங்கு வகைகளில் சேனை கிழங்கு, கருணை, சிறுக்கிழங்கு, பனங்கிழங்கு போன்றவற்றை படைப்பார்கள்.

பொங்கல் போலவே பெரிதும் கொண்டாடப்படும் மற்றொரு பண்டிகை சிறுவீட்டு பொங்கலாகும். மார்கழி மாதம் முழுவதும் வைகறை பொழுதில் எழுந்து, வாசலில் நீர் தெளித்து, கோலமிட்டு, சாண உருண்டைகளில் பூ (பீர்க்கம், பூசணி, செம்பருத்தி) சொருகி வைக்கும் வழக்கம் இருந்த்துள்ளது. இவ்வாறு வாசலில் பூ வைக்கும் வீடுகள் பெண் பிள்ளைகளை கொண்டிருக்கும். மார்கழி மாதம் பெளர்ணமி அன்று தொடங்கி, தை மாதம் பெளர்ணமி அன்றுதான் ஆண்டாளின் நோன்பு முடிவடைகிறது. தைப்பூச தினதிற்கு முன்பே, அப்பெண் பிள்ளைகள் களிமண்ணில் சிறு வீடுகட்டி, பொங்கல் இட்டு , தனக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமைய பெண் குழந்தைகள் இறைவனை வழிபட்டிருக்கிறார்கள். இப்போன்ற சிறு வீட்டு பொங்கல் இந்திராவும் தென் மாவட்டங்களில் நடந்து வருகிறது. தைப்பூசம், திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம், மாசிக்களரி என்னும் சிவராத்திரி , சித்திரை பிறப்பு, வைசாசி விசாகம், ஆடி பதினெட்டாம்பெருக்கு ஆகிய பண்டிகைகள் தமிழ்நாட்டில் சைவமும் சமணமும் தழைத்தோங்குவற்கு முன்பே தமிழர்களால் கொண்டாடப்பட்டவை ஆகும்.

இன்று பெரும் தமிழர் பண்டிகை போல கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை தமிழரின் பாரம்பரிய பண்டிகை அல்ல. ஆரிய படையெடுப்பிற்கு பின்னர், புராண கதைகளில் வரும் கண்ணன் நரகாசுரனை அழித்த நாள் என கொண்டாடப்பட்டு வருகிறது. வட இந்தியாவில் இராமன் ராவணனை கொன்று அயோத்தி திரும்பிய நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டைய காலத்தில் சமண மாதத்தில் 24ஆம் தீர்த்தங்கரர் இறந்த நாளில் விளக்கேற்றி கொண்டாடப்பட்டு வந்தது; அதை மழுங்கடித்து திசை திருப்பவே நரகாசுரன் இறந்த நாளில் பட்டாசு வெடித்து, விளக்கேற்றி கொண்டாடப்படுவதாக சொல்லப்படுகிறது.

தாலி கட்டுதல்:
இப்போதைய தமிழர் திருமண விழாவின் போது மணமகன் மணமகளுக்கு தாலி கட்டும் நிகழ்வு ஓர் முக்கிய அம்சமாக விளங்குகிறது. தாலி கட்டுதலை மையமாய் வைத்து பல சடங்குகளும், சம்பிரதாயங்களும் இன்றும் நடந்து கொண்டு தான் இருக்கிறன்றன. தொன்ம காலங்களிலும், சங்க இலக்கிய நூல்களான சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவற்றிலும் தாலியை பற்றி குறிப்பு ஏதும் இல்லை. இதன் மூலம் பண்டைய காலத்தில் தாலி காட்டும் வழக்கம் இருந்ததில்லை என்பதாக அறியமுடிகிறது.

தாலி என்பது காதணி, மூக்கணி, விரலணி போல கழுத்தில் அணியும் ஒரு அணிகலன்களாக அணிந்துள்ளனர். மேலும் தீயவை அண்டாமலிருக்க இடுப்பில் அரைஞாண் கயிறு, தாயத்து, நாய் காசு, அரசிலை, மணி போன்றவற்றை கட்டியுள்ளதாக குறிப்புள்ளது. மேலும் வீரத்தின் அடையாளமாக ஆண்கள் புலிப்பல்லை கயரிலோ/சங்கிலியிலோ கோர்த்து போட்டுக்கொள்ளும் வழக்கமும் இருந்துள்ளது.

தாலி என்னும் சொல்லின் வேர் அறியபடவில்லை. ஆயினும் ஒரு சிலரின் கருத்துக்கள் படி, தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்ததுள்ளதாக சொல்கின்றனர். தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருளாகும். பனை ஓலைத் தாலி, அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து தாலியாய் ஆக்கினர். பொன்னாலான தாலியில் ஒவ்வொரு சமூகத்திற்கு ஏற்றாப்போல உருவத்தில் மாறுபடும். அது சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வை குறிக்கும் விதமாகவும் இருக்கிறது. உணவு சேகரிக்கும் வழக்கம் உடைய சிலர் கழுத்தில் தாலிக்கு பதிலாக காரை கயிறை காட்டுவார்கள். கழுத்தில் இருக்கும் காரை எலும்புடன் ஒட்டி இருப்பதால் அது 'காரை கயிறு' என்ற பெயர்பெற்றது. 7ஆம் நூற்றாண்டில் ஆண்டாள் திருமண சேவையை பற்றி பாடும் போதும் எல்லா அணிகலன் பற்றியும் சடங்குகள் பற்றியும் பாடியுள்ளார். ஆனால் அதிலும் தாலியை பற்றி பாடலோ/குறிப்போ ஏதுமில்லை. கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரை வரலாற்றில் தாலி கட்டுதலோ, தாலி என்ற சொல்லோ வழக்கில் இல்லை. இதை பல தமிழ் ஆய்வாளர்களும் புலவர்களும் உறுதியாக சொல்லியுள்ளனர். அதன் பின் தான் திருமணங்களில் தாலிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, அதனை புனிதமான மங்கள பொருளாக மாற்றியுள்ளனர்.

கோவில் வழிபாடு:
பெரு தெய்வ வழிபாடு என்பது சைவ வைணவ முறையில் வழிபடப்படும் தெய்வங்களான சிவன், பார்வதி, திருமால், லட்சமி, கண்ணன், நவகிரகங்கள் ஆகியன ஆகும். பண்டைய தமிழர்கள் சிறுதெய்வ வழிபாட்டு முறையே பெரிதும் பின்பற்றினார்கள். சிறுதெய்வ வழிபாடு என்பது நாட்டார் தெய்வங்களை வழிபடும் முறையாகும். இந்த சிறுதெய்வ வழிபாட்டில் வீட்டுத்தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு, இனதெய்வ வழிபாடு, ஊர்த்தெய்வ வழிபாடு மற்றும் வெகுசனத் தெய்வ வழிபாடு எனப் பல வகைகள் காணப்படுகின்றன. ஐயனார், கருப்பு சாமி, சுடலைமாடன், மதுரை வீரன், மாரியம்மன், பேச்சியம்மன் போன்ற சிறு தெய்வங்கள் காவல் தெய்வங்களாகவும் இருக்கின்றன. இந்த தெய்வ வழிபாட்டு முறையில் பொதுவான இலக்கணங்களோ, வரைமுறைகளோ வகுக்கப்படவில்லை. அவை காலம்காலமாக முன்னோர்களால் செய்யப்படுகின்றன சடங்குகளை அடிப்படையாக வைத்து பின்பற்றப்படுகின்றன. இந்த தெய்வங்களின் வழிபாடானது நாட்டார் மக்களின் நம்பிக்கை அடிப்படையிலும், அவர்கள் முன்னோர்கள் கற்றுத் தந்த முறைப்படியும் நடக்கிறது. சிறுதெய்வ வழிபாட்டின் போது கண்டிப்பாக படையல் (பலி) கொடுக்கும் வழக்கம் இருக்கும். சில சிறுதெய்வங்களுக்கு படையலில் பொங்கலும், உளுந்து சுண்டலும், பானகமும் படைக்கப்படுகிறது. வேறு சில தெய்வங்களுக்கு ஆடு, கோழி, கிடாய், பன்றி என படையலாக வைக்கப்படுகிறது. சில காவல் தெய்வங்களுக்கு சுருட்டு, கள் என படைக்கப்படுவதையும் காண முடிகிறது.

பண்டைய காலத்தில் இப்போது உள்ளது போல கோவில் பூசைக்கு பார்ப்பனர்கள் உபயோகப்படுத்த படவில்லை. குருமார்கள் என்று சொல்லப்படுபவர்களே கோவிலில் பூசாரிகளாகவும், பூசை செய்பவர்களாகவும் இருந்துள்ளனர். இந்த குருமார்கள் சாதி அடுக்கில் உயர்ந்தவர்களாக இருக்கவில்லை. மாறாக சடங்கு செய்யும் அந்தந்த சாதியினருக்கு தங்கள் சமூக படிநிலையில் கீழ்பட்டவர்களாகவே இருந்துள்ளனர். பறையர், மருத்துவர் (நாவிதர், குடிமகன்) ,வண்ணார் , வள்ளுவர், வேளார் (மண்பாண்டம் செய்வோர்), பண்டாரம் (நந்தவனம் வைத்து பூத்தொடுப்பவர்) ஆகிய சாதிகளை சேர்ந்தோர் குருமார்களாக இருந்துள்ளனர். சில நூற்றாண்டுகளுக்கு முன் வரை பழனி, இராமேஸ்வரம் ஆகிய கோவில்களில் பண்டாரம் என்போர் குருமார்களாக இருந்து கோவிலுக்கு சேவகம் செய்துள்ளனர். ஆனால் நாயாக்கர் காலத்தில் இவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டு அவை பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இப்போதுள்ள நமது பண்பாடு எவ்வளவு மாறுதலுக்கு பின்னர் நாம் பின்பற்றிவருகிறோம் என்பதை இதன் மூலம் அறியலாம். இதைத்தவிர நாமறியா பண்பாட்டு தொன்மங்கள் பல இருக்கிறது. முன்பே சொன்னது போல சில நூற்றாண்டுகளில் படையெடுப்புகள், இனக்குழுக்களின் வருகை, சாதி/மதங்களின் குறுக்கீடுகள் என வரும் பொழுது, இது போல பல பண்பாட்டு மடை மாற்றங்களும், மாற்று கலாசாரமும் கலப்பது இயல்பான ஒன்றே ஆகும். இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு பிறகு என்னன்ன மாற்றங்கள் வரும் மிகவும் என்பதை காலமே முடிவு செய்யும்.

தகவல்கள்:
பண்பாட்டு அசைவுகள் - தொ. பரமசிவம்
மானுட வாசிப்பு - தொ.ப.வின் தெறிப்புகள் - தயாளன், ஏ.சண்முகநாதன்

நன்றி!!!
பி. விமல் ராஜ்

வியாழன், 30 மார்ச், 2023

நீரும் சோறும் - தமிழர் பண்பாடு

வணக்கம்,

தமிழரின் பண்பாடு மிக தொன்மையானது. சங்க காலத்துக்கும் முந்தையது. மனித வாழ்வியலில் அதுவும் குறிப்பாக தமிழர் வாழ்வியலில் நீருக்கும் சோறுக்கும் முக்கிய இடம் உண்டு. அதனை பற்றிய சற்றே பெரிய பதிவு இது.

நீர்:
இப்போது போலவே பன்நெடுங்காலம் முதல் தமிழ்நாடு வெப்ப மண்டலத்தை சேர்ந்த பகுதியாக விளங்கி வருகிறது. எனவே நீரின் தேவையும், நீர் குறித்த நம்பிக்கையும், அதனை ஒட்டிய பண்பாடும் தமிழர் வாழ்வில் மிக முக்கிய பங்காற்றுகிறது.

"இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்" என 10ஆம் நூற்றாண்டு பிங்கல நிகண்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழ் மொழி இனிமையானது என்றும், (நீர்மை) தன்மையானது, இயல்பானது என்றும் பொருள் தரும். தமிழை நீருடன் ஒப்பிட்டு உயர்வாக சொல்கின்றனர். குளிர்ச்சியுடையது, தன்மையுடையது என்பதால் நீரை 'தண்ணீர்' என தமிழர்கள் சொல்கிறார்கள். நீரினால் உடலை குளிர்விப்பதால் குளி(ர்)த்தல் என சொல்கிறார்கள்.

திருக்குறளில் வானத்திலிருந்து நீர் (மழையாய்) வருவதால் அதனை அமிழ்தம் என்றும், நீரின்றி இவ்வுலகத்தில் ஒன்றுமில்லை என்றும் சொல்லப்படுகிறது.

"வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று."

"நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு"


சங்ககாலம் முதல் தமிழர்கள் நீர்நிலைகளை பல பெயர்களை வைத்து அழைத்துள்ளனர். சுனை, கயம், பொய்கை, ஊற்று ஆகிய நீர்நிலைகள் தானே நிலத்திலும் மலையிலும் ஊறி வரும் தன்மை உடையது. மழை நீர் தேங்கி நிற்கும் சிறிய இடம் 'குட்டை' என அழைக்கப்படும். குளிப்பதற்கு பயன்படும் நீர் என்பதால் 'குளம்' என்றும், ஆற்றிலிருந்த்து பிரிந்து ஓடிக்கொண்டே இருப்பது 'ஓடை' என்றும், உண்பதற்கும் குடிப்பதற்கும் பயன்படுவதால் 'ஊருணி' என்றும், ஏர் (உழவு) தொழிலுக்கு பயன்படும் நீர் 'ஏரி' என்றும், மற்ற நீரை சேர்த்து ஏந்தி வைக்கும் இடம் 'ஏந்தல்' என்றும், கண்ணாறுகளை உடையது 'கண்மாய்' என்றும் பெயரிட்டு தமிழர்கள் அழைத்து வந்தனர். இப்படி தமிழ் மொழியில் பெரும்பாலான சொற்கள் காரணப்பெயர்களாகவே இருப்பது வியப்பு!

நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்பதில் யாருக்கும் சிறிதளவும் ஐயமில்லை.1800 ஆண்டுகளுக்கு முன் காவேரி கரையில் கட்டிய கல்லணை அதற்கு மிக சிறந்த சான்றாகும். மேலும் 9ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட மிகப்பெரிய வீரநாராயண ஏரி (வீராணம் ஏரி), மதுராந்தகம் ஏரி என பல நீர்நிலைகளை கட்டி வீணாய் கடலில் கலக்கும் நீரை உழவுக்கும், மக்களுக்கும் பயன்படுமாறு செய்துள்ளனர்.

ஆற்று நீர் எப்படி ஒரு இடத்திலிருந்து மறுஇடம் போகிறதோ, அது போல தெய்வங்களும் இடம் பெயர்ந்து போகும் என்பது தமிழர் நம்பிக்கை. தெய்வ வழிபாட்டின் போது கரகம் குடங்களில் மஞ்சள் நீரை ஏந்தி வருவார்கள். மஞ்சள் நீர் கலந்த குடத்தை சாமியாடிகளின் தலையில் ஊற்றி குளிர்விப்பார்கள். அப்படி செய்தால் தெய்வம் குளிர்விக்கும் என்பதும் ஒரு நம்பிக்கை.

தமிழகம் வறண்ட பகுதி என்பதால், நெடுஞ்சாலைகளில் கோடைகாலத்தில் நீர்ப்பந்தல் வைப்பது அக்காலம் முதல் அறமாக பார்க்கப்பட்டது. வீடுகளிலும் செம்பு பாத்திரத்தில் நீரை ஊற்றி பூசை வேளையில் வைப்பார்கள். செம்பு குவளையிலும் நீரில் பூவையும், பூ இதழ்களையும் போட்டு வைப்பார்கள். இன்றளவும் (மஞ்சள்) நீராடுவதை ஒரு சடங்காகவே வைத்திருப்பவர்கள் நம் தமிழர்கள்.

நீரடித்து நீர் விலகாது.
தண்ணீரிலே தடம் பிடிப்பான்.
தாயையும் தண்ணீரயும் பழிக்கலாமா?

இது போன்ற பல பழமொழிகளும், மரபு தொடர்களும் நீரை வைத்து இயன்றளவும் சொல்லப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நம் வாழ்விலும், பண்பாட்டிலும் நீர் எப்படி நீக்கமற நிறைந்துள்ளது என்பதை அறியலாம்.

Neerum soorum

சோறு:
நீரை போலவே தமிழர் பண்பாட்டோடு சோறு (உணவு) எப்படி ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது என்பதை படித்து ருசிகர புசிக்கலாம்.

ஆதி மனிதன் முதல் இன்று வரை அனைவரும் ஓடி திரிந்து வேலை செய்தது உணவுக்காக தான். காற்றையும் வெளிச்சத்தையும் உண்டு உயிர்வாழும் உயிரினங்களுக்கு மத்தியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே புவியியல் நிலைமைகளை அறிந்து உடலுக்கும் மனதுக்கும் ஏற்ற உணவு வகைகளை உண்டு வாழ்ந்துள்ளனர் தமிழர்கள். ஒரு குறிப்பிட்ட மக்களுடைய பண்பாட்டை, தொன்மையை அறிய அவர்தம் உணவு பழக்க வழக்கங்களை கவனிக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. தமிழர்கள் நிலங்களை ஐவகை திணையாய் பிரித்து வாழ்ந்து வந்தவர்கள். அவர்கள் வாழ்கின்ற நிலத்தின் விளைப்பொருட்கள், உற்பத்தி முறை, சமுக பொருளாதார படிநிலைகள் ஆகியவற்றை கொண்டு உணவு பழக்கவழக்கங்கள் அமையும். அத்தகைய சிறந்த வழக்கத்தையே தமிழர்கள் கொண்டிருந்தனர்.

குறிஞ்சித் திணை -  மலைநெல், மூங்கில் அரிசி, தினை

முல்லைத் திணை -  தினை, சாமை, நெய், பால்
மருதத் திணை -  செந்நெல், வெண்நெல், அரிசி
நெய்தல் திணை - மீன், உப்பு விற்று வரும் உணவுப் பொருள்
பாலைத் திணை - வழிப்பறியினால் வரும் பொருள்

இன்று போலவே அன்றும் தமிழர்கள் புலால் உணவான மீன், ஆடு, கோழி, மாடு, பன்றி ஆகிய  இறைச்சி வகைகளை சமைத்து உண்டு கொண்டிருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. 'சமைத்தல்' என்ற சொல்லுக்கு பக்குவப்படுத்துதல் என்று பொருள். அடுப்பில் வைத்து சமைப்பதால் அடுதல் என்றும் பொருள் தரும். சமையல் செய்யும் இடம் காட்டில் அல்லது அடுக்களை என்று அழைக்கப்பட்டது. வீட்டுக்கு கடைசியில் இருப்பதால் அடுப்பாங்கிடை என அழைக்கப்பட்டு பின்னாளில் மருவி அடுப்பங்கரை என ஆனது.  நீரிட்டு அவித்தல், வேக வைத்தால், வறுத்து வைத்தல், சுடுதல், வற்றலாக்குதல், எண்ணெயிட்டு பொரித்தல், ஊறவிட்டு வேகவைத்தல் ஆகியவை சமையலின் முறைகளாகும். 

எளிய மக்கள் நிறைய நீரில் தானியங்களை வேகவைத்து உண்பது கஞ்சியாகும். கஞ்சியினை “நீரடுபுற்கை” என்கிறார் திருவள்ளுவர். கஞ்சியில் சேர்க்கப்படும் மற்றொரு பொருள் மோர். வற்றல் என்பது மழைக்காலத்திற்கு எனச் சேமிக்கப்பட்ட உணவாகும். காய்கறிகள் நிறையக் கிடைக்கும் காலத்தில் உப்புக் கலந்த மோரில் ஊறவைத்துப் பின்னர் வெயிலில் நீர் வற்றக் காயவைத்துச் சேமிப்பர். வெண்டை, மிளகாய், பாகல், சுண்டை, கொவ்வை, கொத்தவரை, கத்தரி, மணத் தக்காளி ஆகியன வற்றலுக்கு உரிய காய்கறிகள். 

காய்கறி என்ற சொல் காய்களையும் மிளகையும் சேர்த்துக் குறிக்கும். கி.பி. 15ஆம் நூற்றாண்டில்தான் சிலி நாட்டில் இருந்து வந்த மிளகாய் தமிழ் நாட்டிற்குள் புகுந்தது. அதுவரை தமிழர் சமையலில் உறைப்புச் சுவைக்காக கறுப்பு மிளகினை மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இறைச்சி உணவிற்கு அதிகமாகக் கறியினைப் பயன்படுத்தியதால் இறைச்சியே “கறி” எனப் பின்னர் வழங்கப்பட்டது. வெள்ளை மிளகினைத் தமிழர் குறைவாகவே பயன்படுத்தியுள்ளனர். பழந்தமிழர் உணவு வகைகளைக் கூர்ந்து கவனித்தால் ஓர் உண்மை புலப்படும். தமிழர் உணவு முறைகளில் வறுத்தும், சுட்டும், அவித்தும் செய்யப்படும் உணவுப் பண்டங்களே அதிகமாக இருந்தன. எண்ணெயில் இட்ட பண்டங்கள் அண்மைக் காலங்களிலேயே மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் தயாரிப்பில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் நிலக்கடலை எண்ணெய்யும் விஜயநகர ஆட்சிக் காலத்திலேயே இங்கு அறிமுகமானது.

அறுவடை செய்யப்பட்ட நெல்லைப் பாதுகாப்பாக சேமித்து வைக்க பெரிய மண் பானைகள், பத்தாயம் அல்லது குதிர் எனும் மரப்பலகைகளால் செய்யப்பட்ட அமைப்பு மற்றும் செங்கற்கள் கொண்டு அமைக்கப்பட்ட நெற்களஞ்சியங்கள் ஆகியவை பண்டைய நாட்களில் இருந்தன.

உப்பு
உணவில் சுவைக்காக சேர்த்து கொள்ளப்படுவது உப்பு. அந்த உப்பு நம் உணவிலும் வாழ்விலும் மனித குல வரலாற்றிலும் பெரும் பங்கு வகிக்கிறது.  மனிதனின் நாகரிக வளர்ச்சியில் நெருப்பை உருவாக்கக் கற்றதுபோல் உப்பினைப் பயன்படுத்தக் கற்றதும் ஒரு முக்கியமான அறிவியல் நிகழ்ச்சிதான். 

உப்பு என்ற தமிழ்ச் சொல்லுக்குச் ‘சுவை’ என்றுதான் பொருள்.  இனிப்பு, கசப்பு, துவர்ப்பு என்று சுவைகளெல்லாம் உப்பு என்ற சொல்லை அடியாகக் கொண்டே பிறந்தவை. சமையலுக்கு பயன்படுத்தப்படும். உப்பிற்கு ‘வெள்ளுப்பு’ என்று பெயர் பழந்தமிழ் நாட்டுப் பொருளாதாரத்திலும் தமிழ் பண்பாட்டிலும் உப்புக்குத் தனி இடம் உண்டு. பழந்தமிழர்களால் சுவையின் சின்னமாகவும் வளத்தின் சின்னமாகவும் உப்பு கருதப்பட்டது. தன் உருவம் தெரியாமல் பிற பொருள்களோடு கலந்து பயன்தருவது வெள்ளுப்பு ஆகும். 

செய்த வேலைக்கு மாற்றாக நெல்லும் (சம்பாவும்) உப்பும் (அளத்தில் விளைவது) கொடுத்த வழக்கத்தினால்தான் ‘சம்பளம்’ என்ற சொல் பிறந்தது என்பர் சிலர். ஆங்கிலத்திலும் Salary என்ற சொல் Salt என்பதன் அடியாகப் பிறந்தது என்றும் கூறுவர்.

ஒருவர் இறந்த எட்டாவது அல்லது பத்தாவது நாளில் இறந்தார்க்குப் படைக்கும் உணவுகளை உப்பில்லாமல் செய்யும் வழக்கம் இன்னமும் பல சாதியாரிடத்து இருக்கின்றது. உப்பு உறவின் தொடர்ச்சிக்கு உள்ள ஒரு குறியீடு ஆகும். இறந்தாரோடு உள்ள தொடர்பை அறுத்துக் கொள்ளவே இவ்வாறு செய்கின்றார்கள். உப்பு நன்றி உணர்ச்சியின் தோற்றுவாய் ஆகவும் கருதப்படுகிறது. தின்ற உப்பிற்குத் துரோகம் செய்வது என்பது நன்றி மறந்ததனைக் காட்டும் வழக்கு மொழி. 'உப்பிட்டவரை உள்ளவும் நினை'; 'உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பான்',  போன்ற பழமொழிகள் மக்களின் வாழ்க்கை முறை உப்போடு கலந்துள்ளதை அறியலாம்.

பழந்தமிழ் நாட்டின் மிகப் பெரிய சந்தைக்குரிய உற்பத்திப் பொருளாக உப்புதான் விளங்கியிருக்கிறது. கடற்கரையில் விளையும் உப்பினை வண்டிகளில் ஏற்றிச் செல்லும் ‘உமணர்’ என்ற வணிகர்களைப் பற்றிய செய்திகள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன. கிறித்துவுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த அழகர் மலைத் தமிழிக் கல்வெட்டு உப்பு வணிகன் ஒருவனையும் குறிக்கிறது. உப்பு விளையும் களத்திற்கு அளம் என்றும் பெயர். பெரிய உப்பளங்களுக்கு அரசர்களின் பட்டப் பெயர்களைச் சூட்டியிருக்கிறார்கள். அவை பேரளம், கோவளம் (கோ+அளம்) என்ற பெயர்களில் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ் நாட்டின் சமூகப் படிநிலைகளை அடையாளம் காட்டும் பொருள்களில் ஒன்றாகவும் உப்பு விளங்கியுள்ளது. ஆக்கிய சோற்றோடு உப்பைச் சேர்த்து உண்பது ஒரு வழக்கமாகும். சாதிய ஒடுக்குமுறை கடுமையாக இருந்த அக்காலத்தில் ஒடுக்கப்பட்ட சாதியார், சோறு உலையில் இருக்கும்போதே அதில் உப்பையிடும் வழக்கத்தைக் கொண்டு இருந்தனர். இலையில் தனியாக உப்பிட்டு உண்ணும் வழக்கம் மேட்டிமையின் சின்னமாகக் கருதப்பட்டது போலும்.

சோறு விற்றல் 
பண்டை காலத்தில் சோறு நீரும் என்றுமே விற்பனைக்கு இருந்ததில்லை. ஏனெனில் பசிக்கும் தாகத்துக்கும் வந்தவரிடம் காசு வாங்குவது பாவம் என்று என்னும் வழக்கம் உடையவர்கள் தமிழர்கள். நெடுந்தூரம் பயணிப்பவர்கள், வெளியூரிலிருந்து வருபவர்கள் என பொதுமக்கள் தங்கவும் இளைப்பாறவும் சத்திரங்களும், சாவடிகளும் இருந்துள்ளன. போன நூற்றாண்டின் இடைப்பகுதி வரை பல உணவு/ அன்னதான சத்திரங்கள் நடைமுறையில் இருந்துள்ளதை அறியலாம். கோவில்களில் வழங்கப்படும் உணவு அடியார்களுக்கும், துறவறம் பூண்டவர்களுக்கும் மடப்பள்ளியில் சமைத்து கொடுக்கப்பட்டது. இடையில் 15-ம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சிக் காலத்தில் ஊர்ச் சத்திரங்களில் சோறு விற்கப்படத் தொடங்கியது. நாயக்கர் ஆட்சிக்குப் பிந்தைய ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஹோட்டல் எனப்படும் உணவு விடுதிகள் உருவாகின. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் நகரங்கள், சிறு நகரங்களில் காசுக்கு சோறு விற்கும் உணவுவிடுதிகள் உருவாகின. ஆங்கிலேயர் காலத்தில் தான் சாவடிகளும், சத்திரங்களும் உணவு விற்கும் சிறு கடைகளாக, ஓட்டல்களாக ஆரம்பிக்கப்பட்டன.

இது போல தமிழ் சமூகம் மற்றும் பண்பாடு சேர்ந்த பல விஷயங்களை நம் பண்டைய உணவு வழக்கங்கள் சொல்கின்றன. இன்று நாம் உணவில் உட்கொள்ளும் பல பதார்த்தங்களும் இத்யாதிகளும் கடந்த சில நூற்றாணடுகளில் சேர்க்கப்பட்டதாகும்.   

மானுடவியல் ஆராய்ச்சியாளர் தொ.ப. அவர்களின் 'பண்பாட்டு அசைவுகள்' மற்றும் தயாளன், ஏ.சண்முகநாதன் அவர்களின் 'மானுட வாசிப்பு-தொ.ப வின் தெறிப்புகள்' ஆகிய நூல்களை படித்து, அதன் மூலம் நான் தெரிந்து கொண்ட தமிழரின் வரலாற்று மற்றும் பண்பாட்டு தொன்மையை உங்களிடம் பகிர்ந்துள்ளேன். இதை போலவே பண்பாட்டில் மாறிய/மாற்றப்பட்ட மாற்றங்களை பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் எழுதுகிறேன்.

தகவல்கள்:
பண்பாட்டு அசைவுகள் - தொ. பரமசிவம்
மானுட வாசிப்பு - தொ.ப.வின் தெறிப்புகள் - தயாளன், ஏ.சண்முகநாதன்


நன்றி!!!
பி. விமல் ராஜ்

செவ்வாய், 14 மார்ச், 2023

உங்க ஊரில் எது பிரபலம் ?

வணக்கம், 

நம் எல்லாருடைய ஊரிலும் ஒவ்வொரு விஷயம் பிரபலமானதாக இருக்கும். அது விரும்பி சாப்பிடும் பொருளாகவோ, விவசாய பொருளாகவோ, உற்பத்தி செய்யும் பொருளாகவோ இருக்க வாய்ப்புண்டு. அத்தகைய பொருளின் தரம், விளையும்/உற்பத்தி செய்யும் எண்ணிக்கை பொறுத்து அப்பகுதிக்கு (கிராமம்/ஊர் /நகரம்/மாநிலம்) புவிசார் குறியீடு (Geographical Indication Tag) வழங்கப்படுகிறது. இந்தியாவில் புவிசார் குறியிடுகள் சட்டம் (பதிவு மற்றும் பாதுகாப்பு) 1999-ல் இயற்றப்பட்டு, 2003 -லிருந்து அளவில் இருந்து வருகிறது. இதனால் புவிசார் குறியீடு (GI Tag) பெற்றுள்ள ஊரை தவிர மற்ற பகுதியில் அந்த பொருளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தினால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.

தமிழ்நாட்டில் பல ஊர்களுக்கு புவிசார் குறியீடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு சில ஊர்களுக்கு, ஒன்றிற்கும் மேற்பட்ட புவிசார் குறியிடுகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி பார்க்கலாம்.

 மாமல்லபுரம் கற்சிற்பங்கள் 
 காஞ்சிபுரம்  பட்டு புடவை 
 ஆரணி  பட்டு 
 வேலூர்  முள் கத்திரிக்காய்
 கள்ளக்குறிச்சி மர வேலைப்பாடு பொருட்கள் (Wood Carvings) 
 சேலம்  வெண்பட்டு,
கைத்தறி 
 கருப்பூர்  கலம்காரி ஓவியம் 
 ஈரோடு  மஞ்சள் 
 பவானி ஜமுக்காளம்
 கோவை கோரா பருத்தி புடவை,
வெட் கிரைண்டர் (Wet  Grinder)
 நீலகிரி     தேயிலை (Orthodox),
தோடா சித்திரத் தையல்  வேலை (Embroidery)
 திருச்சி ஈஸ்ட் இந்தியா தோல் பொருட்கள் (EI Leather)
 நாச்சியார்கோவில் குத்துவிளக்கு 
 தஞ்சாவூர்  தலையாட்டி பொம்மை,
தஞ்சாவூர் ஓவியம்,
கலைத்தட்டுகள்,
வீணை,
நெட்டி மாலை     
 நரசிங்கப்பேட்டை  நாதஸ்வரம் 
 திருபுவனம்  பட்டு புடவை 
 அரும்பாவூர்  மரசிற்பங்கள்,
மர வேலைபாட்டு பொருட்கள் (Wood Carvings)  
 மதுரை  மல்லி,
சுங்குடி சேலை  
 கொடைக்கானல்  மலைப்பூண்டு
 பழனி  பஞ்சாமிர்தம்
 சிறுமலை  மலை வாழைப்பழம் 
 ஸ்ரீவில்லிபுத்தூர்  பால்கோவா
 விருபாக்ஷா   மலை வாழைப்பழம்
 பத்தமடை  பாய்
 செட்டிநாடு  கோட்டான்
 நாகர்கோவில் கோவில் ஆபரணங்கள்
 திண்டுக்கல் பூட்டு,
ஈஸ்ட் இந்தியா தோல் பொருட்கள் (EI Leather)
 திருபுவனம்  பட்டுப்புடவை 
 கோவில்பட்டி  கடலைமிட்டாய் 
 காரைக்குடி  கண்டாங்கி சேலை 
 இராமநாதபுரம்   குண்டு மிளகாய் 
 கன்னியாகுமரி  கிராம்பு
 ஈத்தாமொழி   நெட்டை தென்னை 
 வில்லியனுர் (புதுச்சேரி) டெரகோட்டா 
 திருக்கானுர் (புதுச்சேரி) பேப்பர் வேலைப்பாட்டு பொருட்கள் (Paper Mache Artworks)
கேரளா, கர்நாடகா, 
தமிழ்நாடு  
மலபார் மிளகு 

மேலும் மணப்பாறை முறுக்கு, தூத்துக்குடி மேக்ரூன், பண்ருட்டி முந்திரி மற்றும் பலா, கம்பம் பன்னீர் திராட்சை, உடன்குடி கருப்பட்டி, ஆத்தங்குடி பளிங்கு ஓடுகள் (Tiles), டெல்டா சீராக சம்பா அரிசி, திருநெல்வேலி அல்வா, மார்த்தாண்டம் தேன் ஆகிய பொருட்களுக்கு GI குறியீட்டுக்கான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் அசோகா, ராஜபாளையம் பூட்டு, தஞ்சாவூர் மரக்குதிரை ஆகிய பொருட்களுக்கு GI குறியீட்டுக்கான அனுமதி கோரப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது.

GI-tags-tamilnadu

இந்த பொருட்களெல்லம் எப்போதிலிருந்து செய்ய ஆரம்பிக்கப்பட்டு, எப்படி பிரபலமானது என்பதை தேடி படித்து பார்த்ததில், பெரும்பாலானவை 14-20 நூற்றாண்டு வரை ஏற்பட்ட படையெடுப்பு காலங்களில் குடிபெயர்ந்த மற்ற மாநில (இன) மக்கள் அவர்களுடைய தொழிலை இங்கு செய்ய ஆரம்பித்து மற்றவருக்கும் பயிற்றுவித்தனர். அதுவே இன்றளவும் பெரும் தொழிலாகவும் பலருக்கு வாழ்வாதாரமாகவும் இருந்து வருகிறது. அதில் சிலவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

காஞ்சிபுரத்தில் சங்ககாலம் தொட்டு பட்டுபுடவைகள் நெய்யப்பட்டு வருவதாக சொல்வதுண்டு. மேலும் விஜயநகர பேரரசின் காலத்தில் ஆந்திராவிலிருந்து சாலியர் மற்றும் தேவாங்கர் ஆகிய இரு பட்டு துணி நெய்யும் சாதியினரை அழைத்து வந்து, கோவிலிகளில் உள்ள சிற்பங்களை கண்டு நூலில் கலைவண்ணம் கொண்டு பட்டுபுடவை தறிக்கபட்டது என கூறப்படுகிறது.

ஆரணியில் பட்டு நெய்தல் தொழில் 12ஆம் நூற்றாண்டு தொட்டு நடந்து வருவதாகவும்  சொல்லப்படுகிறது. அப்பகுதியில் உள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக 17 கிராமங்களில் இந்த பட்டு உற்பத்தி செய்யும் தொழிலை செய்து வருகின்றனர். விஜயநகர பேராசின் வீழ்ச்சிக்கு பிறகு சௌராஷ்டிரா நெசவாளர்கள் மஹாராஷ்டிரத்திலிருந்து சிலர் ஆரணி, மதுரை, கும்பகோணம், திருநெல்வேலி என குடிபெயர்ந்து பட்டு நெய்யும் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர் என சொல்கிறார்கள். திருமலை நாயக்கர் காலத்தில் குடியமர்ந்த சௌராஷ்டிரா மக்கள் சேலத்து பட்டும், மதுரை சுங்குடி சேலையும் நெய்து வருகின்றனர். 

மாமல்லபுரத்தில் பல்லவ காலம் முதல் கற்சிற்பங்களுக்கும், கற்கோவில்களுக்கும், குடைவரை கோவில்களுக்கும் பிரசித்தம். அன்று தொட்டு இன்று வரை அந்த சிற்ப பாரம்பரியம் இங்குள்ள கலைஞர்களிடம் தொடர்கின்றது. இன்றும் பெரும்பாலான சிற்பக்கலைஞர்கள் உளியும், சுத்தியலும் கொண்டு தான் சிலை வடித்து கொண்டிருக்கிறார்கள்.

திப்பு சுல்தான் காலத்தில்தான் நகரின் நடுவே உள்ள கோட்டையை பாதுகாக்க திண்டுக்கல் பூட்டு தயாரிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அன்றிலிருந்து இன்று வரை பூட்டுகளும், அலமாரிகளும் செய்யப்படும் பெரும் தொழிலாக இருந்து வருகிறது. 

முந்தைய கேரளாவில் திருவாங்கூர்-கொச்சி மாகாணத்தில் உள்ள நாகர்கோவிலில் உள்ள கம்மாளர் என்ற சாதியினர் பித்தளையை உருக்கி விளக்குகள் செய்து வந்தனர். பின்னர் சரியானபடி வருவாய்  இல்லாததால் கும்பகோணத்திலும், பின்னர் நாச்சியார் கோவிலிலும் குடிபெயர்ந்து தொழிலை மற்ற மக்கள்களோடு சேர்ந்து இன்றளவும் செய்து வருகின்றனர்.  

தஞ்சையில் நாயக்கர் மற்றும் மராத்தியர் ஆட்சி காலத்தில் தங்க மூலம் பூசப்பட்ட தஞ்சாவூர் ஓவிய பாணிகள் வரைய ஆரம்பிக்கப்பட்டன. மேலும் 19ஆம் நூற்றாண்டில் சரபோஜி மன்னரின் காலத்தில் தலையாட்டி பொம்மைகள் செய்ய ஆரம்பிக்கப்பட்டு இன்றளவும் செய்யப்படுகின்றன. தஞ்சாவூர் வீணைக்கு வரலாறு புராண காலம் முதல் சொல்லப்படுகிறது. தியாகராஜ சுவாமிகளுக்கு நாரத முனிவர் ஆசி வழங்கி தரப்பட்டதாக சொல்லப்படுகிறது. பல வடிவங்களை உடைய வீணை, 17ஆம் நூற்றாண்டில் ரகுநாத நாயக்கர் காலத்தில் பொலிவு பெற்று இன்றளவும் புகழ் பெற்று விளங்குகிறது.

ஈஸ்ட் இந்தியா லெதர் (East India Leather) 1856 -ல் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தோல் பதனிடும் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டு, அது சுதந்திரத்திற்கு பின்னரும் தொடர்கிறது. திண்டுக்கலிலும், திருச்சியிலும் தோல் பதனிடப்பட்டு தோல் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

கோவையில் 1955-ல் P.சபாபதி என்பவர் வெட் கிரைண்டர்கள் செய்யும் தொழிலை ஆரம்பித்தார். பின்னர் 1963-ல் P.B. கிருஷ்ண மூர்த்தி என்பவர் லட்சுமி கிரைண்டர்ஸ் என்ற பெயரில் தயாரிக்க ஆரம்பித்து பின்னாளில் இப்பகுதிக்கே மூலதன தொழிலாய் மாறியது.    

1914-ல் தேவ் சிங் என்னும் ராஜபுத்திரர் ஸ்ரீவில்லிபுதிரில் ஆண்டாள் கோவிலருகே லாலா ஸ்வீட்ஸ் என்ற கடையில் கோவிலிருந்து வரும் பிரசாதம் பால், சர்க்கரை போன்றவற்றை சேர்த்து பால்கோவா செய்து விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளார். பின்னர் 1970-ல் ஏற்பட்ட வெண்மை புரட்சிக்கு பிறகு பால் கூட்டுறவு சங்கமும், உள்ளூர் பால் உற்பத்தியாளர்களும் சேர்ந்து பால்கோவா செய்யும் தொழிலை ஆரம்பித்து இன்று வரை செய்து வருகின்றனர்.
  
நாகர்கோவிலில் கோவில் ஆபரணங்கள் செய்யும் தொழில் கிட்டத்தட்ட 9ஆம் நூற்றாண்டு முதல் செய்யப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இன்றளவும் 350 குடும்பங்கள் பாரம்பரிய முறையில் நகைகள் செய்து வருகிறார்கள்.

பல நூற்றாண்டுகளாக பத்தமடையில் பாய் பின்னும் தொழில் நடந்து வருகிறது. தாமிரபரணி ஆற்றங்கரையோரம் முளைத்திருக்கும் கோரை புற்களை கொண்டு பாய் தயாரிக்கும் முறை இருந்து வருகிறது. இதை கோரைப்பள்ளர் என்ற சமுகமே இதை செய்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. பின்னர் 16/17 நூற்றாண்டுகளில் கிட்டத்தட்ட எல்லோரும் இஸ்லாமிய மதம் தழுவியதாக சொல்லப்படுகிறது. சிலர் பத்தமடையில் சயீத் கலீபா மீரான் என்ற லப்பை இன இஸ்லாமிய மத போதகரால் கோரைப்புல்லில் பாய் தயாரிக்கும் தொழில் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் நூற்றாண்டுகளாக பட்டு பாய்கள் செய்யும் தொழில் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

1940-ல் பொன்னம்பல நாடார் என்பவர் கோவில்பட்டியில் அவரது மளிகை கடையில் வெல்லம் மற்றும் கடலை சேர்ந்து மிட்டாய் செய்து வியாபாரம் செய்ய ஆரம்பித்தார். இன்று பல இடங்களில் இதே பாணியில் கடலை மிட்டாய்கள் சுவையுடன் செய்யப்படுகிறது. இக்கடலைமிட்டாய்க்கு தாமிரபரணி ஆற்று தண்ணீரின் சுவையும் ஒரு காரணம் என்று சொல்கின்றனர்.     

இது போல இன்னும் பல பிரபமலமான பொருட்கள் நம் பாரம்பரியத்துக்கும், திறமைக்கும், உழைப்புக்கும், நம் தமிழ்நாட்டின் பெருமைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

தகவல்கள் - கூகிள், விக்கிபீடியா, Geographical Indication Registry   


நன்றி !!!
பி. விமல் ராஜ்