வியாழன், 22 டிசம்பர், 2022

பயோமிமிக்கிரி - காப்பியடித்த இன்ஜினியர்கள் !

வணக்கம், 

பள்ளி தேர்வில் மாணவர்கள் காப்பியடித்து மாட்டி கொண்டதை பற்றி அறிந்திருப்போம்; கல்லூரி பரீட்சையில் காப்பியடித்து பெயிலாய் போனவர்களை பற்றியும் நாம் கேட்டிருப்போம்; பெரிய நிறுவனங்களில் உள்ள இன்ஜினியர்கள் அவர்களுடைய போட்டி நிறுவனங்களில் உள்ள தயாரிப்பை காப்பியடித்து, சிறு சிறு மாற்றங்கள் செய்து வெளியிடுவார்கள். அவர்களை பற்றியெல்லாம் இந்த பதிவு இல்லை. இயற்கையை காப்பியடித்த இன்ஜினியர்கள் பலர் இருக்கின்றனர். அந்த இயற்கையையும், காப்பியடிக்கப்பட்ட விஷயத்தையும் பற்றி தான் பார்க்க போகிறோம்.

இயற்கையே அறிவியலின் பிறப்பிடம் என்பதை யாரும் ஒத்துக்கொள்ளாமல் இருக்க முடியாது. பல விஞ்ஞான மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புக்கள் புதிதுபுதிதாய் வந்து கொண்டே இருக்கின்றன. பெரும்பாலானவை இயற்கையை சார்ந்தோ அல்லது அதன் உதவியை கொண்டு தான் கண்டுபிடிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு கண்டுபிடிப்புகளுக்கு பின்னும் ஒரு இயற்கையின் ஊன்றுகோல் உண்டு. அதை காப்பியடித்து தான் பல ஆராய்ச்சிகளும், விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் நடக்கின்றன. காப்பியடித்தல் பல சொல்லிவிட முடியாது; இயற்கையை அடிப்படையை கொண்டு கண்டுபிடிக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். சிக்கலான மனிதப் பிரச்சனைகளை அறிவியல் ரீதியாக தீர்க்க உயிரினங்கள் மற்றும் இயற்கையின் மாதிரிகள், அதன் செயல்பாடுகள் மற்றும் பரிணாம வளர்ச்சிகளை கூர்ந்து கவனித்து, ஆராய்ந்து அவற்றிற்கு ஏற்றார் போல் சரி செய்து தீர்வு காண்பது Biomimicry (உயிரினையாக்கம்) என சொல்லப்படுகிறது.

இயற்கை அதிசயத்தை எடுத்துக்காட்டாய் கொண்டு, பயோமிமிக்கிரி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்கள் பல இருக்கின்றது. அவற்றுள் சிலவற்றை பகிர்கிறேன்.  

Biomimicry examples
Biomimicry examples - click to zoom

ஜார்ஜ் மெஸ்ட்ரால் என்னும் சுவிஸர்லாந்து இன்ஜினியர் ஒருவர், தன் நாயின் மேல் ஒட்டியுள்ள burr என்னும் ஒரு வித பழத்தை (சிறய கொட்டை போல இருக்கும்) மைக்ரோஸ்கோப்பில் ஆராய்ந்து பார்த்து, அதன் மேல்பகுதியில் சிறு சிறு கொக்கி போல இருப்பதை கண்டார். அதுதான் அவருடைய நாயின் தோலில் ஒட்டி கொண்டிருந்தை உத்வேகமாய் கொண்டு வெல்க்ரோ (velcro) என்னும் சாதனைத்தை கண்டுபிடித்தார். அதை வைத்து தான் இப்போது நாம் கட்டிக்கோ, ஒட்டிக்கோ வேஷ்டியும், செருப்பில் வெல்க்ரோ வைத்தும் போட்டுக்கொண்டிருக்கிறோம்.

கீய்க்கோ(Geeko) என்னும் ஒரு வகை பல்லிகள் சுவரிலோ, மரத்திலோ எப்படி கீழே விழாமல் ஏறுகிறது என்பதை ஆராய்ந்தவர்கள், அதன் கால் பாதங்களில் ஒருவகை ரசாயன பிசின் இருப்பதை கண்டு, சுவற்றில்/ பார்சலில் ஒட்டும் டேப்க்கள், காயத்திற்கு ஓட்டும் பாண்ட் எய்ட்கள், கண்ணாடி கட்டிடங்களில் ஏறும் சாதனங்கள் என பலவற்றை கண்டுபிடித்துள்ளனர்.  

உலகின் வேகமான ரயில் என்று சொல்லப்படும் ஜப்பானின் ஷின்காசன் புல்லெட் ரயில் குகைப்பாதைக்குள்ளே சென்று வெளியே வரும்போது பலத்த ப்பூபூ...பூம் என்ற சத்தத்துடன் வருவது பெரும் பிரச்சனையாக இருந்தது. அதை சரி செய்ய மரம்கொத்தி பறவையை (பறவையின் அலகு) எடுத்துக்காட்டாய் கொண்டு கூரான இன்ஜின் முகப்புடன் மாற்றியமைக்கப்பட்டது புல்லட் ரயில். சிறிய மரம்கொத்தி பறவை எப்படி காற்றை கிழித்து கொண்டு போகிறதோ, அதே போல காற்றை கிழித்து கொண்டு குறைந்த அளவில் மின்சார பயன்பாட்டோடும், குகைபாதையிலிருந்து பெரும் சப்தமில்லாமலும் புல்லட் ரயில் சென்றது. இதனால் அந்த சிக்கலும் தீர்ந்தது.

கரையான் புற்றுகள் இயற்கை பேரதிசியம் என்று தான் சொல்ல வேண்டும். வெளியே என்ன வெப்பநிலை/ சீதோஷ்ணமாக இருந்தலும் கரையான் புற்றுக்குள் எப்பொதும் ஒரே அளவு சமமான வெப்ப நிலையியே  இருக்கும். இதை ஆராய்ந்து அறிந்த விஞ்ஞானிகள், அதன் புகைபோக்கி  போலுள்ள நீளமான மண்கூடு தான் இதற்கு கரணம் என அறிந்தார்கள். அதை அடிப்படையாய் கொண்டு மிக் பியர்ஸ் என்னும் கட்டுமான பொறியாளர், ஜிம்பாபே நாட்டில் ஹராரே என்னும் நகரில் Eastgate Centre என்னும் மிக பெரிய கட்டிடத்தை கரையான் புற்றுகள் கட்டியுள்ள அதே தொழில்நுட்பத்தை கொண்டு கட்டினார். அந்த கட்டிடத்தில் இயற்கையாகவே காற்றோட்டமும், வெளிச்சமும் இருப்பதால் மற்ற கட்டிடங்களை காட்டிலும் குறைவான மின்சாரமும், குளிரூட்டலும் தேவைப்பட்டது. 

Humpback Whale என்று சொல்லப்படும் ஒருவகை திமிங்கலத்தின் வளைந்து நெளிந்த துடுப்பும், வாலும் தான் அதனை வேகமாக கடலிலும், அலைகளுக்கு நடுவிலும் நீந்தி செல்ல உதவுகிறது. அதை அடிப்படையாய் கொண்டு தான் windmill bladeகள் தயாரிக்கபடுகிறது. அவ்வளவு உயரத்திலும், வேகமாய் அடிக்கும் காற்றை கிழித்து கொண்டு சுழலும் காற்றாலை தகடுகள் திமிங்கலத்தின் பயோமிமிக்கிரி தான்.   

பறவைகள் பறக்கும் போது இறக்கைகளை மேல்நோக்கி தூக்கி, பின் அழுத்தம் கொடுத்து எம்பி மேலே பறக்கும். அதை அடிப்படையாய் கொண்டு தான் இன்றைய விமானத்தின் இறக்கைகள் உருவாக்கப்பட்டன. புறாக்களின் பறக்கும் திறனை ஆராய்ந்து அதனை அடிப்படையாய் கொண்டு தான் விமானம் உருவாக்கப்பட்டதாக ரைட் சகோதரர்கள் கூறியுள்ளனர். மேலும் 1500களில் லியோனார்டோ டா வின்சி (Leonardo Da Vinc) கிளைடர் விமானத்தின் மாதிரியை வரையும் முன், பறவைகளின் இறக்கை, பறக்கும் திறன், ஆகியவற்றை நன்கு படித்து ஆராய்ந்த பின் செயல்படுத்தினார்.  

இது மட்டுமல்ல.. ஆக்டோபஸ் தோலினை அடிப்படையாய் கொண்டு கேமபிளாக் (Camaflogue) உடை தயாரித்தது; சுறா மீனின் செதில்களை அடிப்படையாய் கொண்டு நீச்சல் உடை கண்டுபிடித்தது; தாமரை இலையில் நீர் ஏப்படி ஓட்டுவதில்லையோ, அதை கொண்டு வாட்டர் ப்ரூப் பெயிண்ட் கண்டுபிடித்தது என இன்னும் நிறைய இருக்கிறது. இதை தவிர நம் எதிர்கால கண்டுபிடிப்புகளுக்கு பல செயல்பாடுகளை/ வடிவங்களை இயற்கை மறைத்து வைத்துள்ளது. அதை நாம் தான் தேடி எடுத்து வெளிக்கொணர வேண்டும்.


நன்றி!!
பி.விமல் ராஜ்  

புதன், 7 டிசம்பர், 2022

பூமர்களின் வாரிசுகள் யார்?

வணக்கம்,  

சில நாட்களாய் சமூக வலைத்தளங்களில் பூம்.. பூம்.. பூமர்... பூமர் அங்கிள் என பலரை பரிகாசம் செய்வதை பார்த்திருப்போம். பொதுவாய் இன்றைய தலைமுறையினருக்கு ஏதாவது அட்வைஸ் கொடுத்தாலோ அல்லது நாங்கெல்லாம் அப்படி இருந்தோம்... இப்படி இருந்தோம் என கதையடிக்க ஆரம்பித்தாலோ அவர்களை பூமர் அங்கிள்/ஆன்ட்டி என சொல்லி விடுவார்கள். இந்த பூமர் என்ற வார்த்தையை நாமும் பல இடங்களில் உபயோகப்படுத்தியிருப்போம். எங்கிருந்து இந்த வார்த்தை வந்தது? இதன் அர்த்தம் என்ன என்பதை சற்று விரிவாக பகிர்கிறேன். 

Generation Gap என்ற வார்த்தையிலிருந்து வருவோம். இந்த வார்த்தையையும் பல இடங்களில் இதை சொல்லியிருப்போம். நமது முந்தைய/பிந்தைய தலைமுறைகளில் யாரேனும் நம்முடைய கருத்து, பழக்கவழக்கம், இசை, ரசனை, கலாச்சாரம் ஆகியவற்றில் முரண்பாடு இருப்பதையே தலைமுறை இடைவெளி என்று சொல்வார்கள். போன தலைமுறையும், இந்த தலைமுறையிலும் நிறைய வேறுபாடுகள்/இடைவெளி உண்டு. உறவு முறைகளில் பெரிய முரண்கள் எப்போதும் உண்டு. உலகமெங்கும் 19ஆம் நூற்றாண்டு வரை தாய் தந்தையர் அல்லது முன்னோர்கள் என்ன சொன்னார்களோ அதே கருத்தை அப்படியே பெரும்பாலும் ஏற்று கொண்டார்கள். பெரிய மாற்று கருத்துக்கள் இல்லை. ஆனால் 19 நூற்றாண்டு முதல் உலகம் பல மாற்றங்களுக்கு உட்பட்டு தலைமுறைகளுக்கிடையே பல தர்க்கமான கருத்துக்களை கொண்டுள்ளது. 1960களில் மேற்கத்திய ஆய்வாளர்கள் மக்களை/ தலைமுறைகளை பிரித்து வகைப்படுத்தி (categorization) காட்ட நினைத்தார்கள். 

generations

The Lost Generation - 1880 முதல் 1900க்குள் பிறந்தவர்கள். முதலாம் உலகப்போரில் (1914-1918) தங்களுடைய ஆரம்ப முதிர்வயது (adulthood)-ல் இருந்தவர்களை குறிப்பிடுவார்கள். 

The Greatest Generation - 1901 முதல் 1925க்குள் பிறந்தவர்கள். இரண்டாம் உலகப்போரின் (1939-1945) போது வாலிப பருவத்தில் இருந்து போரிட்டவர்கள். பல துயரங்கள், பேரிடர்களை சந்தித்தவர்கள்.

The Silent Generation - 1926லிருந்து 1945க்குள் பிறந்தவர்கள். 

Baby Boomers - 1945லிருந்து 1964க்குள் பிறந்தவர்கள். இரண்டாம் உலகப்போருக்கு பின் பிறந்தவர்கள். எப்படி 2020-ல் கொரோனா முழுஅடைப்பில் உலகின் பிறப்பு விகிதம் அதிகமானதோ, அதே போல இரண்டாம் உலகப்போரில் கலந்து கொண்டு, போர் முடிந்த பின் வீடு திரும்பிய வீரர்களுக்கு பிறந்த குழந்தைகள்தான் இந்த பேபி பூமர்ஸ். இவர்களை தான் நாம் பூமர்கள் கிண்டல் செய்து கொண்டிருக்கிறோம்.

Generation X (Gen X) - 1965 முதல் 1980வரை பிறந்தவர்கள். இவர்களுடைய காலத்தில் பல கண்டுபிடிப்புக்கள், ஆராய்ச்சிகள், அறிவியல் முன்னேற்றங்கள் நடந்துள்ளது.

Generation Y (Gen Y/ Millennials) - 1981 முதல் 1996 வரை பிறந்தவர்கள். இவர்களுடைய வாலிப பிராயத்தில் நூற்றாண்டின் மாற்றத்தை பார்த்தவர்கள் என்பதால் இவர்களை Millennials என்றும் கூறுவார்கள். இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமானால் 80's Kids & 90's Kids(இவர்கள் தான் பூமர்களின் வாரிசுகள் 😁)

Generation Z  (Gen Z / Zoomers) - 1997 முதல் 2012 வரை பிறந்தவர்கள். பெரும்பாலானோர் பிறக்கும் போதே கம்ப்யூட்டர், இன்டர்நெட், மொபைல், யுடியூப் என எல்லாவற்றையும் பார்த்து கொண்டே பிறந்தவர்கள். 2K Kids!

Generation Alpha (Gen Alpha) - 2012 முதல் 2025 வரை பிறந்தவர்கள் அல்லது பிறப்பவர்கள். 

நான் Millennials - 90ஸ் கிட்ஸ்... நீங்க??? 😉

இந்த வகைப்பாடுகள் ஒவ்வொரு நாடுகளிலும் சிறியளவு மாற்றங்களோடு இருக்கும். இந்தியாவில் 1920 முதல் 1940கள் வரை பிறந்தவர்கள் பெரும்பாலும் தேசியவாதிகளாகவும், பாரம்பரிய வழியில் நடப்பவர்களாகவும் காணப்படுகின்றனர். 1945 முதல் 1965 வரை பிறந்தவர்கள் இந்தியன் பூமர்கள் என சிலர் அழைக்கின்றனர். இவர்கள் காலத்தில் தான் இந்தியா சுதந்திரத்திற்கு பின் பல மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் கண்டுள்ளது. கடும் பஞ்சம், பசுமை புரட்சி, தொழில் புரட்சி, 1977 அவசர நிலை, அணுசக்தி/மின்னணு வளர்ச்சி என பல சம்பவங்களை கண்டுள்ளனர்.

பெரும்பாலும் பெரு நிறுவனங்கள், அரசு துறைகள் தங்களுடைய வாடிக்கையாளர்களையம், நுகர்வோர்களையும் (audience/ consumers/ customers) கண்டறியவே இத்தகைய தலைமுறைகளின் வகைப்பாடுககளை உபயோகப்படுத்துகிறது.

இந்த generationsகளை தமிழில் தலைமுறைகள் என சொல்வார்கள். பல தலைமுறைகள் ஒரு பரம்பரையாக பார்க்கப்படுகிறது. நாங்க பரம்பரை பரம்பரையாய் இதை செய்து வருகிறோம்; பாரம்பரியமிக்க பரம்பரை நாங்கள் என சொல்லி கேட்டிருப்பீர்கள். அந்த பரம்பரை எண்ணற்ற சொல்லுக்கு அர்த்தம். அது நம்முடைய ஏழாம் தலைமுறையை குறிக்கிறது. 

நாம் - முதல் தலைமுறை
தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை,
பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை,
பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை,
ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை,
சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை,
பரன் + பரை - ஏழாம் தலைமுறை,
பரன் + பரை = பரம்பரை.

வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இல்லை. இதுவும் தமிழுக்கு ஒரு தனிச் சிறப்பு!


நன்றி!!!
பி. விமல் ராஜ் 

சனி, 19 நவம்பர், 2022

மூக்கை மூடிட்டு படிங்க!

வணக்கம்,

இதை பத்தி எப்படி ஆரம்பிக்கலாம் ???
ஆங்...ஒரு ஜோக் சொல்றேன்.
நமக்கும் நீல் ஆம்ஸ்டராங்க்கும் என்ன வித்தியாசம்?
நாம ஒண்ணுக்கும் இரண்டுக்கும் போறோம்..ஆனா அவன் மூ
ணு(னு)க்கே போயிட்டு வந்துட்டான் 😃
ஏழாவது படிக்கும் போது என் நண்பன் ஒருவன் சொன்ன ஜோக் இது.

நாம எல்லாரும் காலையில் எழுந்து ஒண்ணுக்கும் இரண்டுக்கும் போறது தான் தலையாய கடமையாக இருக்கும். அந்த ஒண்ணையும் ரெண்டையும் பத்தி தான் இங்கே பார்க்க ச்சீ.. படிக்க போறோம். நீண்ட நாளாய் இந்த சந்தேகம் பலருக்கு உண்டு என நினைக்கிறேன். யாரிடம் கேட்பது என தெரிந்திருக்காது. 
சிறுநீர் கழிப்பதை ஏன் ஒண்ணுக்குன்னு (Number 1) சொல்றாங்க? மலம் கழிப்பதை ஏன் ரெண்டுக்குன்னு (Number 2) சொல்றாங்க? கூகிளில் ஆராய்ந்த பிறகு, அது 1800 களில் உள்ள French ryhmes-ல் (Le Slang, Lexique de L'anglais Familier Et Vulgaire) "Number 1 for Pee and Number 2 for Poo" என்று பாட்டு வருமாம். அதுவே எல்லோரும் உபயோகப்படுத்தும் குறியீடாகவும் மாறிவிட்டது.

Toilet urgent

பொதுவாக urine அல்லது toilet க்கு போக வேண்டும் என்பதை நேரடியாக பொது இடங்களில் வெளிப்படையாக சொல்லவோ/கேட்கவோ மாட்டோம். சற்றே கூச்சமாக இருக்கும். ஆங்கிலத்திலோ அல்லது சூசக குறியீடுகளிளோ தெரிவிப்போம். அதை பற்றி கொஞ்சம் பார்க்கலாம்...
  • Toilet - Toilette என்னும் என்ற பிரெஞ்சு வார்த்தையிலிருந்து வந்தது. அதற்கு dressing room என்று பொருள் வரும். 'சுத்தமாகி, துணி மாற்றி வரும் இடம்' என்ற அர்த்தம் கொண்டது பின்னாளில் 'வயிறு சுத்தமாகி வரும் இடம்' என்று மாறிபோனதன் காரணம் அறிய முடியவில்லை.
  • Letin - Lavare என்ற லத்தீன் சொல்லிலிருந்து வந்தது தான் latrine. அதற்கு கழுவுதல் என்று பொருள். வெளியே போகவேண்டுமாயின் 'உள்ளே போக வேண்டும்' (Let in) என்பதால் மருவி போனது என நினைக்கிறேன்.
  • Restroom - அமெரிக்கர்கள் உபயோகப்படுத்துகிற வார்த்தை இது. 19ஆம் நூற்றாண்டு வரை toilet என்ற சொல்லை உபயோகப்படுத்தியவர்கள், பின்னாளில் restroom என சொல்ல ஆரம்பித்துவிட்டனர். உள்ளே சென்று அமைதியாக rest எடுக்கும் இடம் என்பதால் போலும். இப்போதெல்லாம் நம்ம ஊரிலும் 1, 2 போறதை ஆங்கிலத்தில் ரெஸ்ட் ரூம் என சொல்லிவிடுகிறார்கள். அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று கார்ப்பரேட் கலாச்சாரம்.
  • Washroom - இதுவும் அமெரிக்க கண்டுபிடிப்பு தான். சுத்தமாக முகம், கை, கால் கழுவும் அறை என்பது பின்னாளில் 'கழுவும் அறை' யாக மாறிவிட்டது.  
  • Bathroom - இது பெரும்பாலும் நம்நாட்டில் சொல்லப்படுவது தான். one-bathroom, two-bathroom என்று ஈசியாக சொல்லி மற்றவருக்கு புரியவைத்து விடுவோம். குளிக்கும் அறையிலேயே attached lavaratoryயும் இருப்பதால் ஒண்ணுக்கும், இரண்டுக்கும் இதையே சேர்த்து சொல்லி விடுகின்றனர் போலும்.
  • Kakhuis  - இது ஒரு dutch வார்த்தை. அதிலிருந்து மருவி வந்தது தான் கக்கூஸ். 
  • Nature call - இயற்கை உபாதை என்று பொருள் வருவதை என்பதை மொழிமாற்றத்தில் மூலம்  அறியலாம். 
இதை தவிர ஒண்ணுக்கு, ரெண்டுக்கு, ஆய், வெளிக்கி, மோண்டு, தூரல், கக்கா, சுச்சா, சுசூ, உச்சா.. (ஹ்ம்.. கருமம்..கருமம்.. எனக்கே நாறுது...) என தமிழிலும் மற்ற இந்திய மொழிகளிலிருந்து கடன் வாங்கி சொல்லி கொண்டிருக்கிறோம். 

நீங்க எந்த வெளிநாட்டுக்கு போனாலும் எல்லா மொழிகாரர்களுக்கும் புரியம் படி சொல்ல/ கேட்க வேண்டுமானால் கை முஷ்டியை மடக்கி சுண்டு விரலை மட்டும் நீட்டி காட்டினால் போதும், உங்கள் அவசரம் புரிந்து விடும். உலகளாவிய சமிஞ்ஜை மொழியில் அதற்கு urine என்று பொருள் உண்டு. சில நாடுகளில் வேறு சில அர்த்தங்களும் உண்டு. சீனாவில் pinky promise என்று அர்த்தமாம்! இந்தியாவில் அடிவயிற்றில் பிடித்து கொண்டு இரு விரல்களை காட்டின்னால் போதும். புரிந்து கொள்வார்கள். இரு விரல்கள் காட்டுவது மேற்கத்திய நாடுகளில் peace/victory (அமைதி/வெற்றி) என்ற பொருளை தரும். 'உள்ளே சென்று மரண போராட்டத்துக்கு பின் அமைதி வருகிறது' என்பதாலோ என்னமோ நாம் இந்த இரட்டை இலை விரல்களை காட்டுகிறோம் !   

பள்ளியில் படிக்கும் போது எல்லார் முன்னாடியும் எப்படி bathroom போகணும் எப்படி கேட்பது? அதிலும் சில பறி பாஷைகள்: 
  • சார்..லண்டனுக்கு போணும் சார்..
  • சார் சார் ஒண்ணுக்கு..  தட்டான் பிள்ளை இரண்டுக்கு...
  • தாயம்  (ஒண்ணுக்கு)
  • கோல்போஸ்ட்  ( ரெண்டுக்கு)
  • வெளியே போய் தண்ணி குடிச்சிட்டு வரேன் மிஸ் ! (இதை நானே பலமுறை சொல்லி இருக்கேன்)
என்னங்க... படிச்சிட்டு போதே உங்களுக்கும் வர மாறி இருக்கா?? ஒரு மனுஷனுக்கு ஒண்ணு வந்தா அது இன்னொரு மனுஷனுக்கு வரது இயற்கை தானே! சரி போய்ட்டு வாங்க, கொஞ்சம் சீரியஸா பேசுவோம்.

World Toilet Day (19 November 2022)

ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய நாடுகள் சபை உலக கழிப்பறை தினம் என ஒன்றை கொண்டாடி வருகிறது. திறந்தவெளியில் மலம்/சிறுநீர் கழிக்கும் மக்களுக்கும், சுகாதாரமில்லாத கழிவறை உபயோகப்படுத்தும் மக்களுமான விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

  • கிட்டத்தட்ட 500 மில்லியன் மக்கள் திறந்த வெளியில் மலம், சிறுநீர் (open defecation) கழிக்கின்றனர். 
  • 3.6 பில்லியன் மக்கள் சுகாதாரமில்லாத கழிவறையை உபயோகிப்பதால் அவர்களுக்கு பலவிதமான நோய்களுக்கு ஆளாகிறார்கள்.
  • ஒரு நாளில் 800 குழந்தைகள் (5 வயதுக்கு உட்பட்ட) சுகாதாரமில்லாத நீரால் பேதி, வயிற்றுப்போக்கு போன்ற வியாதிகளால் இறக்கின்றனர். 
  • சுகாதாரமில்லாத கழிவறை மூலம் அவர்களுக்கு மட்டுமல்ல அதன் மலகழிவுகள் சாலைகளில், ஏரி, குளங்களில் கலந்து நீரையும் அசுத்தமாகி விடுகிறது. அது சுத்தமான நிலத்தடி நீரையும்  மாசுபடுத்தி பெரும் பாதிப்பை தருகிறது. 
பொதுமக்களுக்கு திறந்தவெளி கழிப்பறை மற்றும் சுகாதாரமற்ற, பாதுகாப்பற்ற கழிவறைகளை பயன்படுத்துதல் மூலம் ஏற்படும் பிரச்னைகளை பற்றி எடுத்து சொல்லி விழிப்புணர்வு செய்து வருகின்றனர். ஏற்கனவே நம் நாட்டில் 'சுவச் பாரத்' (Swachh Bharath) திட்டத்தின் மூலம் எல்லோருக்கும் கழிவறை கட்டி தரும் திட்டத்தில் பலர் பலனடைந்துள்ளனர் என்று சொல்லிய போதும், இன்றும் இந்தியா முழுவதும் சரியான கழிவறை வசதி பல கிராமங்களுக்கும், நகர்ப்புறங்களுக்கும் கிடைப்பதில்லை. அனைவருக்கும் நல்ல கழிவறை வசதிகளை மத்திய/மாநில அரசாங்கமே செய்து கொடுக்குமாயின், இது போன்ற போல பிரச்சனைகளை நாம்  தவிர்த்து நோயில்லா எதிர்காலத்தை உருவாக்கலாம்.

இது பற்றிய பழைய பதிவு: 


நன்றி!!!
பி. விமல் ராஜ் 

வெள்ளி, 14 அக்டோபர், 2022

நடு சென்டரில் நிற்போம்!

வணக்கம்,

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. எல்லோருக்கும் அவரவருடைய கருத்துக்களை பொதுவெளியில் சொல்ல முடியும். சொல்லும் கருத்துக்களுக்கு ஏற்றார் போல அதன் எதிர்வினைகள் வரும். சில சமயம் பெரிதாகவும், சில சமயம் அற்பமாகவும் இருக்கும். இதைதான் நாம் இத்தனை ஆண்டுகளாக பார்த்து/கேட்டு வருகிறோம்.   

முன்பெல்லாம் வலதுசாரியோ அல்லது மதவாத கட்சிகளோ பேசுவதை கேட்கும் போது சற்றே முகசுளிப்பு உண்டாகும். இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் போகட்டும்; மசூதிகளை இடித்து எல்லா கோவில்களையும் மீட்போம்; நாங்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள்; நாடு முழுவதும் ஒரே மதம், ஒரே மொழி என அவர்கள் சொல்வதை கேட்கும் போது 50 ஆண்டுகளாய் திராவிட சிந்தனைகளை கொண்ட ஒரு மாநிலத்து மக்களின் மனம் எப்படி வெறுப்படையும் என்பது எல்லோருக்கும் தெரியும்.    

hindutva-dravidam


ஆனால் இப்போதெல்லாம் இடதுசாரி மற்றும் திராவிட சிந்தனை கருத்துக்களை பற்றி சிலர் பேசும்/  போது என்னடா இது... இவர்களும் இப்படி ஆரம்பித்து விட்டார்களே என கோபம் தான் வருகிறது. அதில் ஒரு சில... 

இராஜராஜ சோழன் தமிழ் மன்னர். சைவ மதத்தை கடைப்பிடித்தவர். அவரை இந்து மன்னனாய் காட்ட முயல்கிறார்கள் சிலர் சொல்வதும், எனக்கு வேடிக்கையாகவும், வியப்பாகவும் இருக்கிறது. சைவமும் வைணவமும் சேர்ந்தது தான் இன்றைய இந்து மதம் என எல்லோருக்கும் தெரியும். சோழர் காலத்தில் இந்து என்ற வார்த்தையோ, இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது தான். ஆனால் சைவரும், வைணவரும் கும்பிட்ட அதே சிவனும் பெருமாளும் தான், இன்று இந்து மதத்தில் வணங்கப்படுகிறார்கள். பிறகு எல்லாம் ஒன்று தானே! இந்து மன்னனையும், சைவ மன்னனையும் எப்படி இவர்கள் பிரித்து வித்தியாசம் காட்டுவார்கள் என தெரியவில்லை. அடுத்த சில நாட்களில், விடுதலைக்காகவும், வாடிவாசலுக்காகவும் இவர்களுக்கிடையில் நிற்க வேண்டிவரும் என்று  யோசிக்காமல் வார்த்தையை விட்டுவிட்டு நிற்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.    

அதே போல தெலுங்கு படமான RRR-ல் படத்தில் ஒரு காட்சியில் இராமர் சிலையையும், இராமரை போல கதாநாயகன் வேடம் பூண்டு வில்லன்களை அழிக்கிறார் என காட்டியுள்ளனர்.  இன்னொரு படமான பாகுபலியில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது போலவும் வரும். அதை வைத்து இது இந்துத்வா கொள்கை பரப்பும் படம் என சொல்லி மட்டம் தட்ட ஆரம்பித்துவிட்டனர் சிலர். தீண்டாமை மற்றும் சாதி கொடுமைக்கு ஆதரவாகவோ, சமூக நீதி எதிராகவோ பேசினால் மட்டுமே சொல்ல வேண்டியதை இராமனும், சிவனும் இருந்தாலே அதை சங்கி படம் என சொல்லி சிங்கி அடிக்க ஆரம்பித்து விட்டனர்.

பாரத இதிகாசங்களான ராமாயணமோ/ மகாபாரதமோ இங்கு நடக்கவே இல்லை; அவையாவும் பொய் புரட்டு என சொல்லி கொள்பவர்கள், இராமாயணத்தில் வரும் இலங்கேஸ்வரனான இராவணன் தமிழ் மன்னன் என்று சொல்கின்றனர். இராவணன் வடநாட்டில் உள்ள ரிஷி ஒருவரின் மகன் என புராணம் சொல்கிறது. குபேரனை வீழ்த்தி இலங்கையை கைப்பற்றினான் இராவணன் என்றே சொல்கின்றனர். இதெல்லாம் உண்மையா பொய்யா என்று கூட எனக்கு தெரியாது. கற்பனை கதையான இராமாயணதில் வரும் இராவணன் மட்டும் எப்படி உண்மையான தமிழ் மன்னன் ஆவான் என தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல் இராமாயண போர் என்பது ஆரியருக்கும், திராவிடருக்கும் நடந்த போர் என்றும் சொல்லி வருகின்றனர்.    

ஒரு திராவிட சிந்தனை கொண்ட யூடியுப் சேனல் கந்த ஷஷ்டி பாடலையும், நடராஜர் ஆடலையும் பற்றி பகுத்தறிவாய் விளக்கம் சொல்கிறேன் பேர்வழி என கொச்சையாய் பேசி வாங்கி காட்டி கொண்டது. முதலாமவர் கைது செய்யப்பட்டார், இரண்டாமவர் இன்னும் கைதாக செய்யப்படவில்லை. 

சில நாட்களாய் திராவிட கட்சிகள், சிந்தனைவாதிகளின் செயல்கள் இப்படித்தான் இருக்கிறது. இச்செயல்களால் இந்துதுவாவையும் அதன் கொள்கைகளையும் பிடிக்காதவர்கள் கூட சில நேரங்களில் அவர்களுக்கு ஆதரவாக அல்லது இவர்களுக்கு எதிராக பேச ஆரம்பித்து விடுவார்கள். வார்த்தைக்கு வார்த்தை நாங்கள் இந்துக்களுக்கு விரோதியல்ல என சொல்லிக் கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக விரோதிகளாய் தெரிய ஆரம்பிக்கிறார்கள். ஆகவே திராவிட மக்களே, சிந்தனைவாதிகளே, இடதுசாரி கொள்கை பிடிப்புள்ள அரசியல்வாதிகளே... நீங்கள் ஒரேடியாய் அந்த பக்கமும் இல்லாமல், இந்த பக்கமும் இல்லாமல் நடு சென்டரில் கவனமாய் நில்லுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக மற்ற மாநிலங்களில் அடியெடுத்து வைத்து நாட்டை ஆக்கிரமிப்போருக்கு, இது போன்ற செயல்களால் நம் தமிழ் நாட்டிலும் சிவப்பு கம்பளமிட்டு வரவேற்பது போல ஆகிவிடும். ஒட்டகம் கூடாரத்துக்குள் ஒருமுறை வந்துவிட்டால், பின்பு அதை விரட்டவே முடியாது; நாம் தான் கூடாரத்தை பிரித்து கொண்டு வேறு இடதிற்கு செல்ல வேண்டும்.

முழுவதுமாய் எழுதிய பின்னர் நானே இந்த பதிவை மீண்டும் படிக்கும் போது, லேசான பலமான வலதுசாரி வாடை அடிப்பது போல தான் இருந்தது. ஆனாலும் இக்கருத்தை என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. 


நன்றி!

பி.விமல் ராஜ்

சனி, 1 அக்டோபர், 2022

பொன்னியின் செல்வன் - பாகம் I - விமர்சனம்

வணக்கம்,

கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - இந்த வரலாற்று-கற்பனை புதினத்திற்கு எந்த ஒரு அறிமுகமும் தேவையில்லை. கிட்டதட்ட 70 ஆண்டு கால சினிமா ஜாம்பவான்களின் கனவு  இது. இப்போது மணிரத்னம் இயக்கத்தில் படமாக முதலாம் பாகம் வெளிவந்துள்ளது. பொன்னியின் செல்வனை நாவலை படித்தவர்கள் ஒவ்வொருத்தரின் மனதிலும் அதன் கதாபாத்திரங்களும், உருவங்களும் நிழலாகவே உருவாக்கப்பட்டிருக்கும். அதையெல்லாம் திரைபாத்திரங்களில் மூலம் ஓரளவு சரியாக தேர்ந்தெடுத்துள்ளதாகவே பட போஸ்டர்கள் மூலம் அறியலாம். 

அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, குந்தவையாக திரிஷா, ஆதித்த கரிகாலனாக சியான் விக்ரம், நந்தினியாக ஐஸ்வர்யா ராய், சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜ், பெரிய பழுவேட்டரையராக சரத் குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், ஆழ்வார்கடியானாக ஜெயராம், பார்த்திபேந்திரனாக விக்ரம் பிரபு, பூங்குழலியாக ஐஸ்வர்யா மேனன், பெரிய வேளானாக பிரபு என பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

டிரெய்லரே எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் தான் இருந்தது. கிராஃபிக்சில் சோழ நாடும், பழைய தஞ்சையும் கோட்டையும், இயற்கை வளங்களும், போர் கட்சிகளும் பிரமிக்க வைக்கின்ன்றன. Color tone பற்றி சிலர் குறை கூறினார்கள். எனக்கு அது அவ்வளவு பெரிய தவறாக தெரியவில்லை. திருநீறு பட்டை போடாமல் திலகம் இட்டுள்ளனர் என கூறினார்கள்; அதையும் கிராபிக்சில் சிறிய பட்டையை  போட்டு சமாளித்து விட்டனர்.

ஏ.ஆர். ரகுமானின்  இசையில் எல்லா பாடலும் துள்ளலாகவே இருக்கிறது. எப்போதும் போல பாடல்களில் ஏ.ஆர். ரகுமானின் குரல் முதலில் கேட்க ஒரு மாதிரியாக இருந்தது. பின்னர் கேட்க கேட்க அதுவே favourite லிஸ்டலில் வந்து விட்டது.  'பொன்னி நதி ' மற்றும் 'ராட்சச மாமனே' பாடல்களை திருப்பி திருப்பி கேட்டு கொண்டிருக்கிறேன்.  

ponniyin-selvan-review

நாவல் படிக்காதவருக்கும் கூட அரசல் புரசலாக கதை தெரிந்திருக்கும். கடந்த ஒரு மாத காலமாக எல்லா மீடியா களிலும் இதை பற்றிய ப்ரோமோஷன்தான் ஓடி கொண்டிருக்கிறது.  பொன்னியின் செல்வன் சிறு குறிப்பு வரைக என்று கேட்டால் கதை, கதை மாந்தர்கள், அவர்களின் வரலாறு, என எல்லாவற்றையும் 10 நிமிட விடீயோக்களில் புட்டு புட்டு வைக்கின்றனர். 

கல்கியின் கதையில் பல பாத்திர படைப்புகள் உண்டு, அவை எல்லாவற்றிற்கும் நல்ல அறிமுகமும், முன்கதையும் இருக்கும். ஆனால் இதில் பல கதாபாத்திரங்கள் திடீரென தோன்றி மறைகிறது.  பொன்னியின் செல்வன் என்று சொன்னாலே சில விஷயங்கள் நியாபகம் வரும். ஆடிப்பெருக்கு, வீரநாராயண ஏரி, அனுராதாபுரம், கோடியக்கரை, இன்னும் சில... இதில் ஏதுவுமே படத்தில் இல்லை. இடம் காட்டப்பட்டிருக்கலாம். ஆனால் முக்கியத்துவம் கொடுத்ததாக தெரியவில்லை. எல்லாவற்றையும் சேர்க்க முடியாதுதான்; ஆனாலும் முழுமையாக ஏற்க முடியவில்லை. கதை படித்ததாலயோ என்னவோ?!?! 😬  

வால் நட்சத்திரம் தோன்றலில் உலகநாயகனின் வாயிஸ் ஓவரில் ஆரம்பிக்கிறது சோழ சாம்ராஜ்யத்தின்  கதை. எல்லா அரச கதைகளில் வருவது போலவே இதிலும் வீரம், வஞ்சனை, துரோகம், பாசம், நட்பு, விசுவாசம், காதல் என எல்லாம் இருக்கிறது. நாவலில் இருக்கும் கதையை சற்றே மாற்ற வேண்டிய இடங்களில் மாற்றி மெருகூட்டி எடுக்க முயற்சி செய்துள்ளனர். படம் முழுக்க வந்தியதேவன் முழுக்க வலம் வந்து கார்த்தி நன்றாகவே நடித்துள்ளார். கூடவே வரும் ஆழ்வார்க்கடியான் வந்து நம்மை அவ்வப்போது சிரிக்க செய்துவிட்டு போகிறார். ஆதித்த கரிகாலனாக விக்ரம் எப்போது வீரதாபத்தோடும், கோபத்தோடும் நடிப்பை வெளிப்படியிருக்கிறார். ஜெயம் ரவி அருள்மொழிவர்மன் பாத்திரத்துக்கு அழகும், தேஜஸும் உடைய வீரமான இளவரசராகவே தெரிகிறார். அழகு பதுமைகளாக திரிஷாவும் ஐஸ்வர்யா ராயும் படம் நெடுக ஆக்கிரமித்து செல்கின்றனர். வஞ்சமும், கோபமும் கண்ணிலேயே காட்டி கவர்கிறார் பழுவூர் ராணி. அப்பப்பா!!! எனக்கு என்னவோ பழூவூர் ராணியை விட இளைய பிராட்டி தான் அழகாக கவர்ந்து ஜொலிப்பதாக தெரிகிறார். சரத்குமாரும், பார்த்திபனும் பழுவேட்டரையர்கள் கதாபாத்திரத்திற்கு கனகச்சிதம். மற்ற பாத்திரங்கள் எல்லாம் செம்மையாக அவர்களுக்கு கொடுத்த வேலையை செவ்வனே செய்துள்ளனர். கல்கியின் கதை தெரியாமல் பார்ப்பவர்களுக்கும் கூட புரியும் அளவிற்கு படம் எடுக்கப்பட்டுள்ளது சிறப்பு. இறுதியில் அருள்மொழிவர்மன் கடல் கொண்டு போவதில் முடிகிறது முதல் பாகம். வேறு ஏதாவது இடத்தில முடித்திருக்கலாம் என தோன்றுகிறது. End credit ஆக ஊமை பெண்மணி யார் என காட்டி முடிக்கிறார்கள்!🙏

பொன்னியின் செல்வன் தீம் மியூசிக் ஏற்கனவே நன்கு அறிந்த/கேட்ட இசை போல எனக்கு இருந்தது. என்னவென தெரியவில்லை.  கிராஃபிக்ஸ் காட்சிகளில் நதிக்கரையும், தஞ்சை கோட்டையும், சுழக்காற்றில் கடலும் அலையும் கப்பல் சண்டைகளும் பார்ப்பதற்கு அருமையாக இருத்தது. இலங்கை தீவை மட்டும் வேற இடத்தில காட்டியிருக்கலாம். பார்த்த மாத்திரத்தில் எல்லாரும் சொல்லிவிட்டார்கள் அது புக்கெட் தீவு என்று! 😉  

கதை தெரிந்தவரும், தெரியாதவரும் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம். கண்களுக்கும், மனதுக்கும், விருந்தாகவும், நிறைவாகவும் இருப்பார் நமது பொன்னியின் செல்வன்.! 👌 

இக்காவேரி மைந்தனின் கதை, பல்லவ, பாண்டிய, சோழ நாடுகளை தவிர மற்ற நாடுகளான சேர நாடு, இராட்ஷக்கூடம், பாதாமி, வேங்கிநாடு, மராத்தியம் ஆகியவற்றில் தங்கு தடையின்றி ஓடி, பேசப்படுவது சற்றே சிரமம் என நினைக்கிறேன். என்னதான் இந்திய வரலாற்றின் மாபெரும் சக்ரவர்த்தி என நாம் பெருமைப்பட்டு கொண்டாலும், அவர்களுடைய ஊரில் எடுபடும் என தோன்றவில்லை. அதற்கு முக்கிய காரணம் என நான் நினைப்பது கதையில் வரும் பெயர்கள், கதை நடக்கும் ஊர்கள் மற்றும் கலாச்சாரம். நாம் பெருமையாக பேசி கொள்ளலாம், அவர்களுக்கு புரியுமா/பிடிக்குமா என தெரியவில்லை. உதாரணம் சாயிரா நரசிம்ம ரெட்டி, ருத்ரமாதேவி, கௌதமி புத்ர சத்தகர்னி, பழசி ராஜா, மரைக்காயர், ஜோதா அக்பர் போன்ற படங்கள் அந்த அந்த மொழிகளில் நன்றாக ஓடியது அல்லது மக்களால் ஒத்துக்கொள்ளப்பட்டது; மற்ற மொழிகளில் பெரிதாக பேச படவில்லை. நம் பொன்னியின் செல்வன் விதி விலக்காக இருக்கிறாரா என இரண்டு மூன்று நாட்களில் தெரிந்துவிடும். பாகம் II வெளிவந்த பின் அருள்மொழிவர்மனின் பட்டாபிஷேகத்தை பார்த்து, பொன்னியின் செல்வனை முழுமையாய் உளமார கண்டு சிலாகித்து களிப்படைவோம்.  வெற்றிவேல்! வீரவேல் !! 😀      


நன்றி!!!

பி. விமல் ராஜ் 

திங்கள், 29 ஆகஸ்ட், 2022

எக்ஸ்க்யுஸ் மீ! டைம் பிளீஸ்...

வணக்கம்,

நம் வாழ்க்கையில் நடக்கும் எல்லாவற்றையும் சரியாய் அட்டவணை போட்டு, முறைப்படுத்தி செய்வதற்கு நேரம் (Time) ஓர் முக்கிய இடத்தை வகிக்கிறது. அதன்படி தான் இந்த உலகம் இன்றும் சுழன்று கொண்டிருக்கிறது.

ஒருவனுக்கு நல்லது நடந்தால் good time workout ஆகிறது என சொல்வார்கள்; கெட்டது நடந்தால் timeமே சரியில்லை என சொல்வார்கள். இந்த good time & bad time ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபடுவது போல, மணி நேரம் நாட்டுக்கு நாடு மாறுபடும். வெளிநாட்டில் இருக்கும் உறவுகளுக்கு போன் செய்து எல்லாவற்றையும் பேசி முடித்துவிட்டு கடைசியாக, "இப்போ அங்கே மணி என்னப்பா??" என்று வழக்கமான கேள்வியை கேட்பார்கள். ஒவ்வொரு நாட்டிற்கும் உள்ள நேர வித்தியாசத்தை தான் time zone difference என்று சொல்கிறார்கள். அந்த time zone பற்றிதான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

Time Zone - நாடுகளுக்கிடையே உள்ள நேர வித்தியாசம் தான் இந்த டைம் ஜோன். சாண்ட்ஃபோர்ட் ஃபிளேமிங் (SandFord Fleming) என்னும் ஸ்காட்லாந்து-கனடா நாட்டு ரயில்வே பொறியாளர் தான் முதன் முதலில் நாடுகளுக்கிடையே பயணத்தின் போது வரும் நேர குழப்பத்தை போக்க 24 hrs வழக்கத்தை கொண்டு வந்தார். பின்னர் பொதுவான நேரத்தை அளவீடு செய்ய UTC (Coordinated Universal Time) என்று ஒன்றை கண்டுபிடித்து நிறுவினார். உலக வரைபடத்தை 24 பாகங்களாக பிரித்து, ஒவ்வொரு பாகமும் ஒரு மணி நேரமாக பிரித்தார். நடு பாகத்தில் உள்ள கிரீன்விச் என்னும் நகரை மையமாய் வைத்து Greenwich Mean Time - GMT என்று வைத்தனர். கிரீன்விச் நகரின் வலப்பக்கம் இருக்கும் பாகங்களை (நாடுகளில்) UTC+ என்றும், இடப்பக்கம் இருக்கும் பாகங்களை (நாடுகளில்) UTC - என்றும் வழங்கப்படுகிறது. இந்தியா +5 க்கும் +6 க்கும் இடையே வருவதால் நமக்கு UTC +0530 என்று வழங்கப்படுகிறது. இதை Indian Standard Time என்று சொல்லுகிறோம். இப்போதைக்கு இந்தியாவில் இந்த ஒரே (IST) time zone மட்டுமே நடைமுறையில் இருக்கிறது.

timezone
ஆனால் மற்ற நாடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட time zoneகள் உபயோகத்தில் உள்ளன. அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் 11 time zoneகளும், யுகேவில் 9 time zoneகளும், கனடாவில் 6 time zoneகளும், ஆஸ்திரேலியாவில் 3 time zoneகளும் இருக்கிறது. இந்நாடுகளின் பரப்பளவு தூரம் அதிகமாக இருப்பதால் (கிழக்கு-மேற்கு) பல time zoneகள் பயன்பாட்டில் உள்ளது. இந்த பூமி பந்தானது counter clockwise-ல் சுழலும் போது மேற்கு பக்க நாடுகளை விட கிழக்கு பக்க நாடுகளில் சூரியன் சீக்கிரம் உதித்து மறைந்து விடும். அதேபோல மேற்கு பக்க நாடுகளில் சூரியன் சற்று தாமதமாக உதித்து மறையும். இதனை சரிசெய்யவே ஒரே நாட்டில் பல time zoneகள் இருக்கிறது.

Day Light Saving - மேலும் சில நாடுகளில் குளிர்காலங்களில் கடிகாரத்தில் ஒரு மணி நேரம் பின்னோக்கி வைத்து விடுவார்கள். மீண்டும் கோடை காலங்களில் நேரத்தை சரிசெய்து ஒரு மணி நேரம் முன்னோக்கி வைத்து விடுவார்கள். ஏனெனில் குளிர்காலங்களில் சூரிய வெளிச்சம் மிகவும் கம்மியான நேரத்திலேயே இருக்கும். அதிகபட்சம் 7/8 மணிநேரம் தான் வெளிச்சம் இருக்கும். ஆனால் கோடை காலத்தில் 13/14 வரை வெளிச்சம் இருக்கும். வேலை நேரம், பள்ளி கல்லூரி, வியாபாரம் என எல்லாமே பகல் வெளிச்சம் இருக்கும் போதே நடக்க, இது போன்று நேரத்தை சரி செய்து கொள்வார்கள். இதை தான் Day Light Saving என சொல்கிறார்கள். பொதுவாக இந்த Day Light Saving (DST), மார்ச்-ஏப்ரலில் ஆரம்பித்து அக்டோபர்-நவம்பரில் முடியும். எப்போது நேரத்தை முன்னோக்கி/பின்னோக்கி வைக்க வேண்டும் என்பதை சுலபமாய் நினைவில் வைத்து கொள்ள Spring forward, Fall back என்று சொல்வார்கள்.

DST முதன் முதலில் ஜெர்மனியில் ஏப்ரல் 16, 1916-ல் கடிகார நேரம் முன்னோக்கி வைக்கப்பட்டது. அதற்கு முன் கனடாவில் 1908-ல் Ontario வில் உள்ள Thunder bay என்னும் நகரில் செயல்படுத்தபட்டது. இப்போது 70 நாடுகளில் DST செயல்பாட்டில் உள்ளது.

இப்போது இந்தியாவின் time zone பிரச்சனைக்கு வருவோம். இந்தியாவின் பரப்பளவு மேற்கே குஜராத்திலிருந்து கிழக்கே அருணாச்சல பிரதேசம் வரை கிட்டத்தட்ட 3000 கி.மீ இருக்கிறது.

இந்தியா முழுக்க சூரியோதயம் என்பது காலை 0600-0630 என ஆரம்பித்து, அஸ்தமனம் மாலை 0600-0630 என முடியும். ஆனால் நமது வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், சிக்கிம், மிஸ்சௌரம், மேகாலயா, திரிபுரா மற்றும் நாகலாந்தில் சூரியன் காலை 0430-0500 மணிக்குள்ளே உதயமாகி, மாலை 0430-0500 மணிக்குள் அஸ்தமனம் ஆகிவிடும். இந்திய முழுவதும் ஒரே time zone செயல்பாட்டில் உள்ளதாலும், அவர்களின் அலுவல் நேரம் 9-6 என்றே இருப்பதாலும் அப்பகுதி மக்கள் காலையில் 3 மணிநேரம் ஏதும் செய்யாமலும், மாலையில் 3 மணிநேரம் அதிகமாக விளக்கை பயன்படுத்தியும் தங்கள் வேலைகளை செய்து கொள்கிறார்கள். இதனால் இப்பகுதிகளில் மின்சாரம் அதிகமாக உபயோகபடுத்தப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் 2.7 பில்லியன் யூனிட் மின்சாரம் அதிகமாக பயன்படுத்துவதால் சராசரியாக 30,000 கோடி மேல் செலவாகிறது என ஓர் புள்ளி விவரம் சொல்கிறது.

sunrise-sunset-india

இந்த பிரச்சனைகளை சரி செய்ய CSIR - National Physical Laboratory, இந்தியாவிற்கு இரண்டு time zoneகள் (GMT +0530 & GMT +0630) வைத்து கொள்ளலாம் என்று பரிந்துரைத்துள்ளது.
மேலும் NIAS - National Institute of Advanced Science கூற்றின்படி ஒட்டு மொத்த இந்தியாவின் time zoneஐ GMT +0600 என மாற்றி கொண்டால் இப்பிரச்சனை சரியாகி பண விரயமும், நேர விரயமும் மிச்சமாகும் என சொல்கிறார்கள்.

ஏற்கனவே அசாமில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளிகள், தங்கள் கடிகாரத்தை ஒரு மணி நேரம் கூட்டி வைத்து கொண்டுதான் வேலை செய்கின்றனர். இதனால் அவர்கள் பகல் வெளிச்சத்தில் வேலை செய்ய அதிகம் நேரம் கிடைக்கிறது. அதனை chai bagaan (tea time) என்று சொல்கின்றனர். 

இவ்வாறு time zoneஐ இரண்டாய் பிரிப்பதாலும், மாற்றுவதாலும் நாட்டில் பல குழப்பங்கள் ஏற்படும் என்று சொல்கிறார்கள். ரயில்/விமான நேரங்களிலும், ரயில் டிராபிக்கிலும் பல சிக்கல்கள் இருக்கிறது. தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும் என்றும் சொல்கின்றனர். இதை அரசு எவ்வாறு கையாள போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


நன்றி!!!
பி.விமல் ராஜ்

செவ்வாய், 26 ஜூலை, 2022

ஐ .டி துறையில் நம்பபடும் கட்டுக்கதைகள்!

வணக்கம்,

ஒரு சில விஷயங்களை பலரும் இப்படி தான் இருக்கும், இப்படி தான் நடக்கும் என்று நினைத்து, அதுவே நிஜம் என நம்பி கொண்டிருப்பார்கள். உதாரணமாக அரசாங்க வேலை என்றால் வேலை செய்ய வேண்டுமென அவசியம் இல்லை; தமிழ் படித்தால் வேலை கிடைக்காது; என சில இருக்கிறது. அதில் ஒன்று தான் ஐ.டி வேலை பற்றிய விஷயங்கள்/கட்டு கதைகள். அதை பற்றி எனக்கு தெரிந்ததை பகிர்கிறேன்.

ஐ.டி துறையில் வேலை செய்பவர்கள் Comp.Sc/IT யில் குறைந்த பட்சம் பேச்சிலர் டிகிரியாவது பெற்றிருக்க வேண்டும்.
ஐ.டி இல்லனா கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சவன் தானே ஐ.டில வேலை செய்யணும்.?!? அப்படியெல்லாம் ஒரு அவசியமும் இல்லை. ECE, EEE, Mech, Civil, Biotechnology, Chemical, Viscom, Business Management, என ஐ.டிக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் படித்தவர்களும் ஐ.டி துறையில் வேலை செய்கிறார்கள். On/Off campus -ல் செலக்ட் ஆன Freshers உள்ளே வந்து விடுகிறார்கள். மற்றவர்கள், கொஞ்சம் முன் அனுபவம் உள்ளவர்களோ ஏதேனும் ஒரு புதிய டெக்னாலஜி ஒன்றை படித்துவிட்டு ஐ.டியில் நுழைந்து விடுகின்றனர். பெரும்பாலும் கம்பெனிகளும் என்ன படித்துவிட்டு வருகிறார்கள் கண்டு கொள்வதில்லை.

myths-in-IT-jobs

டெலிவரி மேனேஜர்/ ப்ராஜெக்ட் மேனேஜர்கள் ஆக சம்பந்தப்பட்ட துறையில் Master டிகிரி முடித்திருக்க வேண்டும்.
சாதாரண BSc/BCA டிகிரியே சாப்டவேர் துறையில் நுழைய போதுமானது. சில கம்பெனிகளில் டிப்ளமா படித்தவர்களை கூட சேர்ந்து கொள்கிறார்கள். 10/15 வருட அனுபவத்திற்கு பிறகு உயர்பதவியில் போக சம்பந்தப்பட்ட துறையில் (domain-ல்) certification முடித்திருந்து, அதற்கான வேலை செய்யும்/வாங்கும் திறனும் இருந்தாலே போதும்.  

ஐ.டி வேலை செய்பவர்கள் எல்லாருமே எல்லாம் தெரிந்த அறிவாளியாக தான் இருப்பார்கள்.
சத்தியமாக இல்லை. client க்கு மெயில் டைப் செய்து விட்டு, இது சரியா இருக்கன்னு படிச்சு பாரேன் சொல்பவர்களும்; பத்தாம்/பன்னிரெண்டாம் படிக்கும் பிள்ளைகள் தெரிந்திருக்கும் லேப்டாப்/டெஸ்க்டாப் /சிஸ்டம் பற்றிய  சாதாரண விஷயத்தை கூட தெரிந்து வைத்திருக்காதவர்களும் ஐ.டியில் இருக்கதான் செய்கிறார்கள்.

ஐ.டியில் இருப்பவர்கள் அவர்கள் கம்பெனியில் மற்றவர்களுக்கு refer செய்தால் உதவி வேலை கிடைத்து விடும்.
நமக்கு தெரிஞ்ச பையனுக்கு எங்காவது ஐ .டில வேலை வாங்கி கொடுப்பா என நண்பர்கள்/சொந்தக்காரர்கள்/தெரிந்தவர்கள் என சொல்ல கேட்டிருப்பீர்கள். Refer பண்ண மெயில் / emp. portalலில் பதிவு செய்வதோடு ஐ.டி சாமான்யனின் வேலை முடிந்தது. அதிகபட்சம் ஓரிரு முறை HRக்கு நினைவூட்ட முடியும்.அவ்ளோதான! மற்றவையெல்லாம் HR process-ல் தான் உள்ளது. மற்றபடி சிறிய கம்பெனிகள், பெரிய பொறுப்பில் இருக்கும் மேனேஜர்கள் என ஒரு சிலரால் மட்டுமே referral வேலைக்கான வாக்குறுதியை தர முடியும்.      

ஐ.டி வேலையில் இருப்பவர்கள் எல்லாருமே சேர்ந்து சில வருடங்களிலேயே லட்சக்கணக்கில் சம்பாதிப்பார்கள்.
மிக பெரிய கம்பெனியில் (Tier 1) வேலை புதிதாய் வேளையில் சேருபவர்களுக்கு பிடித்தம் போக அதிகபட்சம் 15,000 முதல் 20,000 தான் கிடைக்கும். Tier 2, Tier 3 கம்பெனிகளில் இன்னும் குறையும். Experience உள்ளவர்கள், முன்னாலில் வேலை செய்த கம்பெனியில் எவ்வளவு வாங்கினாரா அதை பொறுத்து தான் புது கம்பெனியில்  30%-40% வரை சம்பளம் உயர்த்தி தரப்படும். 

ஐ.டியில் இருப்பவர்கள் எல்லாருமே Onsite போவார்கள்.
எல்லாருக்கும் போக ஆசைதான். ஆனால் நடப்பது வேறு. Onsite என்பது அவரர் இருக்கிற project/domain பொறுத்தது. எந்த project-ல் வெளிநாடு சென்று வேலை செய்யும் நிர்பந்தம் வருகிறதோ /தேவைப்படுகிறதோ அவர்களுக்கு மட்டுமே கிட்டும் (எட்டா) கனி அது. நூற்றில் 20 பேருக்கு கிடைத்தால் இனிது.  

ஐ.டி வேலையில் இருப்பவர்கள் ஒரு டெக்னாலஜியில் படித்து அனுபவம் பெறுவதற்குள், அதை விட வேறு ஒரு சிறந்த டெக்னாலஜி வந்து விடும். மாறி மாறி படித்து கொண்டே இருக்க வேண்டும் .
முழுவதும் கதையல்ல..பாதி உண்மை.. இன்று வளர்ந்து வரும் ஐ.டி  துறையில் technology /language  பல வந்து கொண்டே தான் இருக்கும். நாளடைவில் அதன் அடுத்தடுத்த வெர்ஷன்களை அல்லது மாற்று மென்பொருளை கற்று கொண்டு இருக்க வேண்டும்.

ஐ.டியில் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் 40/45 வயதுக்கு மேல் வேலை (நிரந்தரமாக) இருக்காது.
அப்படி இருக்க வாய்ப்பில்லை. 10 வருட அனுபவம் உள்ளவரின் வேலையை ஓரிரு வருட அனுபவம் உள்ளவர் செய்ய முடியாது. அதனால் அனுபவம் கூடும் போது அவர் பதவியும் பொறுப்பும் (சம்பளமும்) கூடி கொண்டே போகும். 

ஐ.டி வேலை நிரந்திரம் இல்லை. எப்பொது வேண்டுமானாலும் வேலை பறிபோக வாய்ப்புண்டு.
உலகமே digital technology, artificial intelligence, cloud computing, IOT என சுழன்று கொண்டிருக்கும் வேளையில், ஐ.டி துறை படுவேகமாக  வளர்்ந்து கொண்டே தான் இருக்கும். கொரோனா காலத்தில் கூட தடைபடாமல் ஓடி கொண்டே இருந்தது (வீட்டிலேயே!) ஐ.டி மக்கள் தான். சில சமயங்களில் recession காலங்களில் சில கம்பெனிகள் அடிவாங்கும். அது கூட தற்காலிகம் தான். மீண்டும் எழுந்து அதே போல வேகமாக முன்னேறி கொண்டே இருக்கும்.

இது போல வேறு ஏதாவது உங்களுக்கு தெரிந்திருந்தால் எனக்கும் சொல்லுங்கள்.


நன்றி!!!

பி.விமல் ராஜ்


செவ்வாய், 28 ஜூன், 2022

யாருக்கான பெருமை இது ? : June Pride

வணக்கம்,

பொதுவாக நம் எல்லோருக்கும் இரு பாலினங்கள் இருக்கிறது என தெரியும். ஒன்று ஆண், இன்னொன்று பெண். சினிமா மூலமாகவும், ஏதாவது ஃபாரம் எழுதும் போதும் ஆண், பெண், திருநங்கை என மூன்றாம் பாலித்னதை பற்றியும் நாம் அறிந்திருப்போம். ஆனால் இந்த மூன்று பாலினத்தையும் தவிர 76 வகையான பாலின வகைகள் இருக்கிறது. அதற்கான மக்களும், அவர்களுக்கான ஆதரவும் உலகெங்கும் பரவி இருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது. இவர்களை பற்றி தான் இப்பதிவில் பார்க்க போகிறோம்.

இந்த ஜூன் மாதத்தை Pride June என்று சொல்கிறார்கள். பல்வேறு நாடுகளில் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள். 1969 களில் மேற்கத்திய நாடுகளில் மாற்று பாலின மக்களுக்கும், அதே பாலினத்தின் மீது விருப்பு கொண்டவருக்கும்சில போராட்டங்களுக்கு பின்னர் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதை கொண்டாடும் விதமாகதான் இந்த ஜூன் மாதத்தில் LGBTQ/ LGBTQIA (Lesbian, Gay, Bisexual,Transgender, Queer, Intersex & Asexual) என்று சொல்லப்படும் திருநங்கைகள், திருநம்பிகள், ஓரின சேர்க்கையாளர்கள், ஈரின சேர்க்கையாளர்கள் என எல்லோரும் ஒன்று கூடி ஊர்வலம் போகிறார்கள். வானவில் நிறங்களில் கொடியேந்தி, முகத்தில் வண்ணம் பூசி ஊர்வலவாக சென்று கொண்டாடுகிறார்கள். 

LGBTQ flag-June pride

கடந்த 10/20 ஆண்டுகளுக்கு முன் வரை இந்த கேளிக்கை கொண்டாட்டங்கள், பாலின சேர்க்கை பற்றிய திரைப்படங்களும், விவாதங்களும், அதற்கான ஆதரவுகளும் வெளிநாடுகளில் மட்டுமே நடந்து கொண்டிருந்தன. ஆனால் சில ஆண்டுகளாக நம் நாட்டிலும் இதற்கான குரல்கள் ஒலிக்க தொடங்கியிருக்கிறது.

இரு நாட்களுக்கு முன் சென்னை, கோவை, மதுரை, ஹைதராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம், புது தில்லி, மும்பை என நாடு முழுவதும் இதற்கான கொண்டாட்ட ஊர்வலங்கள் நடந்து வருகிறது. இதற்கு முன் நம்மூரு மக்களுக்கு இந்த சமாச்சாரம் பற்றி பெரிதாய் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

வடஇந்தியாவில் சில பாலிவுட் படங்கள் மூலமாகவும் (Dostana, Girlfriend, Fire, Monsoon Wedding..), செய்திகளில் சில lesbian மற்றும் gay சம்பவங்களாலும் நமக்கு அறிமுகமாயின. தமிழிலும் ஆங்காங்கே சில படங்களில் இது போன்ற ஓரின சேர்க்கை பற்றி தொட்டும் தொடாமலும் வந்து சென்றது (பொம்மலாட்டம், கோவா, வேட்டையாடு விளையாடு...). மற்ற மொழிகளிலும் இந்த கதையமைப்பை கொண்ட படங்கள் வந்து கொண்டு தான் இருந்தன. ஆனால் இப்போதைய OTT காலத்தில், வெப் சீரிஸ்களிலும், படங்களிலும் நேரடியாக ஓரின சேர்க்கையை ஆதரித்தும், அந்த வாழ்க்கை சரியன்றும் சொல்லி படம் எடுத்துள்ளனர். அப்படங்கள் வந்த இடம் தெரியாமல் போனதும், பெரிதாய் யாரும் கண்டு கொள்ளவில்லை என்றாலும், இது போன்ற படங்கள் எதை ஊக்குவிக்கின்றன என தெரியவில்லை. இதை பார்த்து வருங்காலம் கெட்டுவிடும் என்றோ, கலாசாரம் சீர்கெட்டு போகும் என்பதோ என் வாதம் அல்ல. இதை இப்போது இங்கு ஏன் திணிக்க அல்லது மக்களிடையே பரப்ப முயல்கிறார்கள் என்ற கேள்விதான் எனக்குள் புரியாமல் ஓடிக்கொண்டிருகிறது. 

ஆட்டிசம் என்பது ஒரு கொடிய நோயல்ல; ஓர் மன ரீதியான கோளாறு மட்டுமே என்று சொல்வதை போலவும், கொடும் தொற்று நோயால் பாதிக்கபட்டவர்கள் ஒதுக்கி வைக்க பட வேண்டியவர்கள் இல்லை என்று சொல்வதை போலவும், இது போன்ற ஓரின சேர்க்கை, மூன்றாம் பாலினம் போன்ற பிரச்சனைகள் ஒருவகையான ஹார்மோன் கோளாறு மட்டுமே என்றும், இவர்களை ஒதுக்கி வைக்காமல் ஆதரவு கொடுக்க வேண்டும் என சொல்லி விழிப்புணர்வு செய்ய வேண்டிய சில தனியார் அமைப்புகளும், திரைத்துறையினரும் இதை ஒரு வேறு வடிவில் மார்க்கெட்டிங் ப்ரோமோஷன் செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கான காரணம் தான் ஏன் என புரியவில்லை.

சாதி மறுப்பு திருமணம் செய்தால் சாதி ஒழியும் என சொல்கிறார்கள்; பெண்கள் படித்தால் நாளைய சமூகம் நன்றாக முன்னேறும் என சொல்கிறார்கள். அது போல இந்த LGBTQ ஊர்வலங்கள் எதை குறிக்க ஊர்வலம் செல்கின்றது என இதை பெரிதாய் ஊக்குவிப்பவர்கள் தான் சொல்ல வேண்டும்.

தனி மனித சுதந்திரம் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் இந்த மீடியாக்கள் ஆதரித்து ப்ரோமோஷன் செய்யலாம் என்ற எண்ணம் ஏன்? எப்படி? வந்தது என தெரியவில்லை.    

இது போல எண்ணம் கொண்டவர்கள் அல்லது மக்கள் யாவும் நம்மை போலவே சாதாரண மக்கள் தான். யாரும் தம் குடும்பத்தில் திருநங்கையோ, திருநம்பியோ அல்லது இன்ன பிறபாலினங்களோவோ இருக்க வேண்டும் என்று வேண்டி கொண்டோ, ஆசைப்படுவதோ இல்லை. உடலில் ஹார்மோன் ரீதியான பிரச்சனைகள் காரணமாக இந்த எண்ணங்கள் வருகிறது என சொல்கிறார்கள். அவர்களை வெறுக்காமல் ஆதரவு அளித்து அவர்கள் போக்கில் வாழ விட்டு விடவேண்டும். அதை விடுத்து இது போன்ற கேளிக்கை கொண்டாட்டங்கள் அவர்களுடைய நடைமுறையை ஊக்குவிவைப்பது போலவும், இதை பற்றி தெரியாத மற்றவர்களுக்கு நாமே டமாரம் அடித்து இப்படி இருந்தாலும் பரவாயில்லை.. தப்பில்லை என இயற்கைக்கு மாறான ஒன்றை நாமே சொல்லி கொடுப்பது போல தான் இருக்கிறது.  

இரு நாட்களாய் பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக வரும் வீடியோக்களை பார்த்த பின் தோன்றியதையே இங்கு பகிர்ந்துள்ளேன்.


நன்றி!!!

பி.விமல் ராஜ்

சனி, 4 ஜூன், 2022

விக்ரம் - சினிமா விமர்சனம்

வணக்கம்,

கிட்ட தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பிறகு உலக நாயகனின் படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல் ஹசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சூர்யா என நட்சத்திர பட்டாளத்துடனும், பெரும் எதிர்பார்ப்புடனும் படம் வெளிவந்துள்ளது.

படத்தின் டைட்டில் டீஸரே "Once Upon a Time There Lived a Ghost" என ஆரம்பித்து பலரை விருந்துக்கு அழைத்து, வேட்டு வைப்பது என அதகளமாய் இருந்தது டீசர். ட்ரைலரிலும் மாஸான ஆக்ஷன் த்ரில்லராகவே காட்டியுள்ளனர். மேலும் பல சினிமா டிகோடர்கள் மார்வல் யூனிவெர்ஸ் போலவே லோகேஷ் யூனிவெர்ஸ் இருக்கிறது; இந்த படத்துக்கும் கைதி படத்துக்கும் சில ஓற்றுமைகள், கனெக்ஷன் இருக்க போகிறது என்ன சொல்லி யூகித்து வந்தனர். பகத் பாசில் போலீஸ், கமலின் மகன் தான் சூர்யா, ட்ரைலரில் காட்டிய அந்த குழந்தையே சூர்யா தான் என நாளொரு நாளாய் ஒவ்வொரு புதிய அப்டேட்டுகளை விட்டு கொண்டே இருந்தது விக்ரம் பட டீம்.

இந்த எதிர்பார்புகளையெல்லாம் மனதில் கொண்டு படம் பார்க்கலாம் என நினைக்கும் போது, ரிலீசன்று விக்ரம் படம் பார்க்க வரும் முன் கைதி படத்தை ஒருமுறை பார்த்துவிட்டு வாருங்கள் என இயக்குனர் கோரிக்கை விட, அப்போதே தெரிந்து விட்டது இவை இரண்டுக்கும் கனெக்ஷன் உண்டு என்று. இரண்டு படங்களையும் எப்படி லிங்க் செய்தார்கள்,  கதை எப்படி ஆரம்பித்து முடிகிறது என்பதை பார்ப்போம். ஆரம்பிக்கலங்களா ???

vikram-movie-review

போலீஸ் கையில் பிடிபட்ட பல கோடி மதிப்புள்ள கோகெயின் சரக்குக்காக போலீஸ் அதிகாரி காளிதாஸ் ஜெயராம் கொல்லப்படுகிறார். அதனால் கொண்ட ஆத்திரமும், நாட்டை போதையியில்லா  நாடாக்கும் முயற்சியிலும், தனி மனித புரட்சியாக காளிதாஸின் தந்தையாக உலக நாயகன் கமல் ஹாசனின் அதிரடி வேட்டையே விக்ரம் படத்தின் கதை.  

கைதி படத்தில் உள்ள சம்பவங்களை இதில் சீக்குவலாக சேர்த்துள்ளனர். கைதியில் வில்லனாக வந்த நார்கோட்டிக்ஸ் அதிகாரி, நரேன், திருச்சியில் பிடிபட்ட 1 டன் சரக்கு என சில விஷயங்கள் இதிலும் வருகிறது. போனஸாக அடைக்கலம், அன்பு, டில்லி, காமாட்சி என கிளைமேக்சில் பலரையும் காட்டி இன்னும் பூஸ்டப் கொடுத்துள்ளனர். 

மேலும் அடுத்த சீக்குவலுக்கு இப்போவே லீட் கொடுத்து சூர்யாவை எல்லோருக்கும் மேல் பெரிய வில்லனாக காட்டியுள்ளனர். சூர்யா இதில் நடிக்கிறார் என்பதை படக்குழு சொல்லாமலேயே சஸ்பென்சாகவே வைத்திருக்கலாம். அது இன்னும் அல்டிமேட் ட்விஸ்ட்டாக இருந்திருக்கும்.

இயக்குனரின் மற்ற படம் போலவே பெரும்பாலும் இருட்டிலேயே கதை நகர்கிறது. அன்பரிவின் ஸ்டண்ட்டும் அனிருத் பின்னணி இசையும் அதிரடியாகவும், அட்டகாசமாகவும் இருக்கிறது. படத்தில் எதிர்பாராத இடங்களில் பல ட்விஸ்ட்கள் இருக்கிறது. அதுவே படத்தின் பெரும் பலம். இன்டெர்வல் ட்விஸ்ட், டினா ட்விஸ்ட், வில்லன் ட்விஸ்ட், கிளைமேக்சில் இரு ட்விஸ்ட்கள் என ஹைப்பர் ஏறிக்கொண்டே போகிறது. 

உலகநாயகனின் நடிப்பு சொல்லவே தேவையில்லை. கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம். கருப்பு வெள்ளை தாடியும், முடியுமாய் கரகர குரலில் நடிப்பில் மிரட்டி எடுத்திருக்கிறார். குழந்தையோடு வரும் பாடலிலும், மகனுக்காக அழும் போதும், கோபப்படும் போதும்  வாழ்ந்திருக்கிறார். 

ஃபகத் பாசில் எப்போதும் போல சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். போலீஸ் ஏஜெண்டாக வந்து குற்ற சம்பவங்களை தன் டீமுடன் கண்டுபிடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காயத்ரி. சில காட்சிகள் மட்டுமே வந்து இறந்தும் விடுகிறார். விஜய் சேதுபதி மெயின் வில்லனாக எப்போதும் போல அசத்தியுள்ளார். அவரது அறிமுக காட்சியும், பல்லிடுக்கில் அவர் வைக்கும் போதை மருந்து மேனரிஸமும், வீட்டில் பாம் வைத்துள்ளனர் என்று தெரிந்தவுடன் அவர் பதறும் விதமும் அருமை. 

சில இடங்களில் லாஜிக் சறுக்கல்களும், வேகதடைகளும் இருக்கதான் செய்கிறது. கிளைமேக்ஸில் தீபாவளி கொண்டாடுவது போல குண்டுகள் வெடித்து சிதறிக்கொண்டிருந்தாலும் போலீஸ் அந்த பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. கமல் எப்படி தலைமறைவாகவே இருந்தார்.? ஆயுதங்களை எப்படி அங்கு கொண்டு வந்தார்?? என நீள்கிறது சந்தேகங்கள்... மேலும் படத்தின் வேகதடைக்கு காரணம் கதையின் நீளமா ? இல்லை தொடர் சண்டை காட்சிகளா? என்னவென்று தெரியவில்லை. 

ஆனால் அந்த சறுக்கல்களெல்லாம் கதையின் ஓட்டத்தில் ம(றை)றந்து விடுகிறது. ஏற்கனவே இயக்குனர் கைதி எடுக்கும் போதே சீக்குவலுக்கு யோசித்து தான் எழுதினாரா? இல்லை விக்ரம் கதைக்காக கைதி படத்துடன் சேர்த்து வருமாறு திரைக்கதை எழுதினாரா என தெரியவில்லை. இரண்டுமே நன்றாகவே பொருந்தியிருக்கிறது. விக்ரம் -3 -ல் சூர்யாவின் வில்லத்தனம், அதோடு இன்னும் சில ஆசிரிய திருப்பங்களை வைத்துள்ளாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.


நன்றி!!!

பி. விமல் ராஜ்    


செவ்வாய், 24 மே, 2022

கோவிலா? மசூதியா??

வணக்கம், 

சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்படுவது இந்தியாவில் உள்ள முகலாய காலத்து மசூதிகள், கோவில்களை இடித்து கட்டப்பட்டதா? என்ற பெரும் சர்ச்சை தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஏற்கனவே 1992ஆம் ஆண்டு, அயோத்தியில் உள்ள பாபர் மசூதி (Babar Masjid) ராமஜென்ம பூமியில் கட்டப்பட்டுள்ளது என்று கூறப்பட்டு இடிக்கப்பட்டது. இதன் காரணமாக பல மத கலவரங்கள் நடந்து பலரின் உயிரும், உடமைகளும் பறிபோனது. இந்த வழக்கு 27 ஆண்டுகளுக்கு பிறகு 2019-ல் தீர்ப்பானது. இங்கு இடிக்கப்பட்ட மசூதிக்கு கீழே எந்த இந்து கோவில்களுக்கான கட்டிட அமைப்பும் இல்லை என்றும், சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் இடத்தில ராமர் கோவிலும், அதனருகே சற்று தள்ளி 5 ஏக்கர் இடத்தில் மசூதியும் கட்டி கொள்ளலாம் என கூறியுள்ளது. 

இப்போது அடுத்ததாக சில மசூதிகளையம்/முகலாய கட்டிடங்களையும் சிலர் குறி வைத்துள்ளனர். 

Dispute on Mosques in India

வாரணாசியில் உள்ள ஞானவாபி (Gyanvapi Mosque) மசூதி காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதியை இடித்து கட்டப்பட்டது என்றும், மசூதியில் உள்ள சுவற்றில் இந்து தெய்வங்களின் சிலைகள் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. மேலும் மசூதியிலுமுள்ள கிணற்றில் சிவலிங்கம் ஒன்று உள்ளதாக சொல்கிறார்கள். அதை உறுதி செய்யும் வகையில் சில புகைப்படங்களும் உலா வருகிறன்றன. அவை போலியா? உண்மையா என தெரியவில்லை. வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கு விரைவில் தீர்ப்பாக உள்ளது.

மதுராவில் உள்ள ஷாஹி இடிகா மசூதி ( Shahi Idigah Mosque) அவுரங்கசீப் காலத்தில் கட்டப்பட்டது. இது கிருஷ்ண ஜென்ம பூமியில் கட்டப்பட்டுள்ளதக சொல்கிறார்கள். கிருஷ்ணரின் கொள்ளு பேரன் வஜ்ரநாப் என்பவர் கிருஷ்ணருக்கு இங்கு கேசவ் தேவ் கோவிலை கட்டியுள்ளார். பின்னர் குப்த மன்னரிகளின் காலத்தில் புதுப்பிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. 17ஆம் நூற்றாண்டில் இக்கோவில் இடிக்கப்பட்டு ஷாஹி இடிகா மசூதி கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் 20ஆம் நூற்றாண்டில் பலரின் உதவியால், கேசவ் தேவ் கோவில் புதுப்பித்து மசூதியருகே கட்டப்பட்டு உள்ளது. புராண கதைகளின்படி கிருஷ்ணர் பிறந்த இடமான மதுரா சிறைச்சாலை, சிறுவயதில் வாழ்ந்து விளையாடிய கோகுலம், பிருந்தாவனம் ஆகிய இடங்ககள் என 13.7 ஏக்கர் இடம் சர்ச்சையில் உள்ளது. வழக்கு அலகாபாத் நீதிமன்றத்தில் உள்ளது.

மத்தியபிரதேசத்தில் தர் மாவட்டத்தில் உள்ள போஜ்சாலா - கமால் மௌலா மசூதி (Bhojsala -Kamal Maula Mosque). 2003 வரை இந்துக்கள், வசந்த் பஞ்சமியன்று இசுலாமியர்கள் நமாஸ் படித்த பின்னர் உள்ளே சென்று வழிபட அனுமதிக்க பட்டுள்ளனர். இப்போது இரு தரப்பினரும் இந்த இடத்தை சொந்தம் கொண்டாடுகிறார்கள். 10ஆம் நூற்றாண்டில் பாராமரா வம்சத்தை சேர்ந்த போஜ் மகாராஜா கட்டிய வாகதேவி (சரஸ்வதி கோவில்) என்றும், இது பாடசாலையாக இருந்துள்ளது என்றும் சொல்கின்றனர். பின்னர் டேளவார் கான் கோரி  என்னும் முகலாய அரசன் மசூதியாக மாற்றி காட்டியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த வழக்கும் மத்திய பிரதேச நீதி மன்றத்தில் விசாரணையில் உள்ளது.

அதோடு இல்லை, தில்லியில் உள்ள குதுப் மினார் (Qutub Minar) பல ஜெயின் மற்றும் இந்து கோவில்களை இடித்து முகலாய மன்னர் குதுப்புதின் ஐபக் கட்டியுள்ளார் என்று வழக்கு தொடரப்பட்டிருந்தது. இன்று (மே 24, 2022) தில்லி நீதிமன்றம் குதுப் மினார் தொல்லியல் துறைக்கு சொந்தமான இடமே என்றும், வழிபாடும் இடம் அல்ல என்றும், மீண்டும் இடித்து புதுப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தீர்ப்பை வழங்கியுள்ளது.

உலக அதிசயமான தாஜ் மகாலையும் (Taj Mahal) விட்டு வைக்கவில்லை. அது தேஜோ மஹாளயா  என்னும் சிவன் கோவில் என்றும், அதனை மாற்றி தான் மும்தாஜ் சமாதியை ஷாஜஹான் காட்டியுள்ளார் என்றும், தாஜ்மாகாலுக்கு அடியில் சிவன் கோவில் உள்ளது என்றும் சொல்கின்றனர். அடித்தளத்தில் உள்ள 22 அறைகள் இருப்பதாகவும், அதில் இந்து கோவிலுக்கான ஆதாரங்கள் இருக்கின்றது என சொல்லி வருகின்றனர். அதுபோக ஜெய்ப்பூர் அரச குடும்பத்தின் வாரிசுகளின் ஒருவரான தியாகுமாரி, தங்களின் அரச குடும்பத்துக்கு சொந்தமான இடத்தில் ஷாஜஹான் அபகரித்து தாஜ் மகால் கட்டியுள்ளார் என்று வழக்கு தொடர்ந்துள்ளார்

இன்னும் நிறைய இருக்கிறது, சென்னை மயிலையில் கபாலீசுவரர் கோவில் முன்னர் இருந்த இடத்தில் இருந்து இடிக்கபட்டு இப்போதுள்ள சாந்தோம் சர்ச் கட்டப்பட்டுள்ளது என்று சொல்கின்றனர். பிற்காலத்தில் இப்போதுள்ள இடத்தில கோவில் மாற்றி கட்டப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. 

இந்தியா முழுவதும் இதே போல பல தேவாலயங்களும், பல மசூதிகளும் கட்டப்பட்டுள்ள இடங்கள் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அனைவருக்கும் தெரிந்தது போலவே முகலாய/ஐரோப்பிய படையெடுப்புகள் மூலம் பல செல்வங்கள், வளங்கள், புராதன கோவில்கள், கட்டிடங்கள் என பலவற்றை இழந்துள்ளோம். படையெடுப்பின் போது அழிக்கப்பட்ட/கட்டப்பட்ட கட்டிடங்கள், வழிபாட்டு இடங்கள், அரண்மனைகள் என எல்லாமே சரித்திர நிகழ்வு (பிழை) தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 500 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு வரலாற்று சம்பவத்தினால் மாறிய விஷயங்கள் பல இருக்கிறது. இதை அப்படியே விட்டு விடுவதே சால சிறந்தது. அதை மனதில் கொண்டு, இப்போதுள்ள மக்கள் வழிபடும் இடத்தில் உரிமை கோருவது சிலரின் அறிவிலிதண்மையை காட்டுகின்றது. இது முழுக்க முழுக்க அரசியல் விளையாட்டு என்பதில் எள்ளவும் சந்தேகமில்லாமல் தெரிகிறது.   

1991 ஆம் ஆண்டில் இயற்றிய சட்டத்தின்படி Places of Worship Act, 1991 (வழிபாட்டு தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 1991) பாபர் மசூதி நிலப்பிரச்சினை தவிர்த்து, 15 ஆகஸ்டு 1947 முன்னர் வழிப்பாட்டுத் தலங்கள் எவ்வாறு இருந்ததோ அப்படியே தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும் என்றும், 15 ஆகஸ்டு 1947 நாளுக்கு முன்னர் வழிப்பாட்டு தலத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் அதனை எதிர்த்து வழக்காட முடியாது என்றும் கூறுகிறது. 

ஏற்கனவே அயோத்தியில் ராமர் பிறந்த இடம் என கூறி 450 ஆண்டு கால வரலாற்றை சிறப்பு மிக்க பாபர் மசூதியை இடித்தன் மூலம் இன்றும் மத கலவரங்களும் சர்ச்சைகளும் ஓடி கொண்டே இருக்கின்றது. மீண்டும் இதை தொடர்வோமாயின் இந்தியாவின் பன்முகத்தன்மையும், ஒற்றுமையும், எதிர்கால வளர்ச்சியும் கேள்விக்குறி ஆகிவிடும். 


நன்றி!!!

பி. விமல் ராஜ் 


ஞாயிறு, 15 மே, 2022

சென்னை பகுதிகளின் பெயர் காரணம்!

வணக்கம்,

தமிழ்நாட்டின் வரலாறு மிக தொன்மையானது. தமிழின் வரலாற்றை சொல்லும் போது தஞ்சை, காஞ்சி, திருச்சி, மதுரை, மாமல்லபுரம், நெல்லை என மற்ற மாவட்டங்களை பற்றி பலரும் பேசுவார்கள். ஆனால் சென்னையை பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சென்னை மாநகரம் ஒரு வேகமாக வளரும் நவீன தலைநகரம் என்று வைத்து கொண்டாலும், இதன் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. 

பல்லாவரம் அருகே மலைகளில் கற்கால சான்றுகள் இருக்கின்றன. சென்னையில் உள்ள பல கோவில்கள் 1000-1500 ஆண்டுகள் பழமையானது. அச்சமயத்தில் இந்த இடத்திற்கு சென்னை என பெயர் இருந்திருக்கவில்லை. சோழர் காலத்தில் புலியூர் கோட்டம் என்றும், தொண்டை மண்டலம் என்று அழைக்க பட்டுள்ளது. தர்மாலா சென்னப்ப நாயக்கரிடமிருந்து ஆகஸ்ட் 22, 1639-ல் மூன்று மைல் நீள இடத்தை ஆங்கிலேயர் வாங்கி, சென்னை பட்டணம் என்று பெயரிட்டனர். அதுவே பிற்காலத்தில் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு பின்னர் சென்னை ஆனது.  

ஏற்கனவே தமிழக ஊர்களின் பெயர் காரணம் என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இதில் சென்னையிலுள்ள இடங்களின் பெயர் காரணத்தை பற்றி இப்பதிவில் பார்க்கலாம். சென்னையில் உள்ள பல இடங்கள் (ஏரியாக்கள்), பாக்கம், ஊர், சாவடி, கரை, சேரி, என முடிவது  போல இருக்கிறது.

பாக்கம் என முடியும் பல ஊர்கள், நீர்நிலை (குளம்/ஏரி) அருகே உள்ள ஊராகவோ/இடமாகவோ இருக்கும். சாவடி என முடியும் இடங்கள், சுங்க சாவடி இருந்த இடமாக இருக்கும். கரை என முடியும் ஊர்கள், ஆற்றுக்கு அருகே உள்ள ஊரின் பெயராக இருக்க கூடும். பெரும்பாலான இடங்கள் கோவில் மற்றும் இந்து புராண பின்னணியில் உள்ள பெயராக இருந்திருக்கிறது. சில ஊர்களின் பெயர்கள் 18, 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் உருவாக்கபட்டு பெயர் பெற்றுள்ளது. அவற்றுள் சிலவற்றை பகிர்கிறேன்.

ஆவடி (Avadi)- 'ஆ 'என்றால் பசு, குடி என்றால் வீடு/இடம் என்பதாகும். பசுக்கள் அதிகம் உள்ள இடம் என்பதால், ஆயக்குடி அல்லது ஆவக்குடி என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் ஆவடி என அழைக்கபட்டிருக்கலாம்.

அம்பத்தூர் (Ambattur) - சக்தி பீட கோவில்களில் ஐம்பத்தி ஓராம் (51) ஊர் என்பதற்காக இப்பெயர் பெற்றது.

வில்லிவாக்கம் (Villivakkam) - வில்வ மரங்கள் அதிகம் என்பதால் இவ்விடம் வில்லிவாக்கம் ஆனது.

நடுவான்கரை (Naduvankarai) - கூவம் ஆற்று படுகை அருகே உள்ள கரை என்பதால் இது நடுவான்கரை என பெயர் பெற்றது. இப்போதைய அண்ணா நகர்.

திருவான்மியூர் (Thiruvanmiyur) - வால்மீகி முனிவருக்கு இங்கு கோவில் இருந்தது என்பதற்காக திருவால்மீகியூர் என அழைக்கப்பட்டு, பின்னர் திருவான்மியூர் ஆனது.

மந்தவெளி (Mandaveli) - கூவம் ஆறு அருகே ஆடுமாடுகள் மேயும் மந்தைகள் மிகுந்த பகுதி என்பதால் மந்தைவெளி எனஆனது.

அமைந்தகரை (Amjikarai) - கூவம் ஆற்றின் அருகே இருப்பதால் இது அமைந்தகரை.

அடையாறு (Adyar) - சென்னையில் ஓடும் இரண்டு ஆறுகளில் ஓன்று அடையாறு. அதன் பெயராலேயே இப்பெயர் வந்தது.

பட்டினபாக்கம் (Pattinapakkam) - 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பட்டினத்தார் இங்கு வந்து தியாகராஜ கோவிலில் வழிபட்டு முக்தி அடைந்ததாலேயே பட்டினம்பாக்கம் என பெயர் பெற்றது.

திருவொற்றியூர் (Thiruvotriyur) - 'ஒற்றி ஊர்' என்பதற்கு அடமான இடம் என்று அர்த்தம். பல்லவ மன்னர்கள் காலத்தில் இந்த இடம் அடமானத்தில் இருந்தது என சொல்லப்படுகிறது. அப்பெயர் பின்னாளில் திருவொற்றியூர் ஆனது.

புராண கதையின் படி, பிரளய  காலத்தில்  இந்த உலகை  அழியாமல் காக்கும் பொருட்டு சிவபெருமானிடம் எல்லோரும் வேண்டிக் கலங்கினர்அப்போது தன் நெற்றிக் கண்ணிலிருந்து வெப்பத்தை உண்டாக்கினார்அந்த வெப்பத்தைக் கொண்டு சூழ்ந்திருந்த தண்ணீரை ஒற்றி ஒற்றி எடுத்தார் என்றும் அதனால் இந்த ஊருக்கு 'திரு ஒற்றியூர்'  என்றும் பின்னர் அதுவே திருவொற்றியூர் 
என மருவியதாகவும் சொல்லப்படுகிறது.

வியாசர்பாடி (Vyasarpadi) - வியாச முனிவரின் பெயரால் இப்பெயர் வந்தது என சொல்லப்படுகிறது.

பார்க் டவுன் (Park Town ) - சென்னை சென்ட்ரல் அருகே 1970 முன் வன உயிரியல் பூங்கா ஒன்று இருந்தது. பின்னாளில் இடப்பற்றாக்குறை காரணமாக அது வண்டலூருக்கு மாற்றியமைக்கபட்டது.

கொசபேட்டை(Kosapet) - மண் பபாண்டங்கள் செய்யும் குயவர்கள் பேட்டை என்ற பெயரே கொசப்பேட்டை ஆனது.

தண்டையார்பேட்டை(Tondaiyarpet) - 18ஆம் நூற்றாண்டில் ராமநாதபுரம் மாவட்டதில் தொண்டி என்ற ஊரில் பிறந்த குணங்குடி மஸ்தான் சாஹிப் இப்பகுதியில் வாழ்ந்து மறைந்தார். அதனால் இது தொண்டியார் பேட்டை என அழைக்கப்பட்டு பின்னர் தண்டையார்பேட்டை ஆனது.

வண்ணாரப்பேட்டை (Washermanpet/Vannarapet) - பக்கிங்ஹாம் கால்வாய் அருகே துணி வெளுக்கும் தொழிலாளர்கள் வசித்த இடம் என்பதாலேயே இது வண்ணாரப்பேட்டை என்றானது
சிந்தாதரிப்பேட்டை (Chindadaripet) - துணி நெசவு செய்யும் தொழிலாளர்கள் இருக்கும் இடம். 'சின்ன தறி பேட்டை' என்பதே சிந்தாதரிப்பேட்டை ஆனது.

மயிலாப்பூர் (Mylapore)- மயில் ஆடும் ஊர். மயில் ரூபத்தில் பார்வதி சிவனை வணங்கிய இடம் என்பதால் இது மயிலாப்பூர்.

திருவல்லிக்கேணி (Triplicane) - 'திரு அல்லி கேணி'. அல்லி மலர்கள் அதிகம் பூக்கும் இடம் ஆதலால் இது இப்பெயர் பெற்றது.

எழும்பூர் (Egmore) - சூரியன் முதலில் படும் ஊர் என்பதால் எழுமியூர் என பெயர். பின்னாளில் எழும்பூர் ஆனது.

ராயப்பேட்டை(Royapettah) - தெலுங்கு பேசும் நாயக்க மன்னர்களின் தளபதிகளான ராயர்கள் இருந்த இடம் என்பதால் ராயர் பேட்டை என்று அழைக்கப்பட்டு பின்னர் ராயப்பேட்டை ஆனது.

கொத்தவால் சாவடி (Kotawal Chavadi) - 'கொத்தவால்' என்பதற்கு வரி வசூலிப்பவர் என்று பொருள். வரி வசூல் செய்யும் சாவடி இருந்திருப்பதால் இப்பெயர் வந்தது.

பூந்தமல்லி (Ponnamallee/Poondhamalli) - பூவிருந்த அல்லி - அல்லி மலர்கள் அதிகம் பூத்து குலுங்கும் இடம் அதலால் இப்பெயர் வந்தது.

சேப்பாக்கம் (Chepauk) - Che Bagh. Che -ஆறு ; Bagh - garden (தோட்டம்). ஆறு தோட்டங்கள் உள்ள இடம் என்று பொருள்.

கோடம்பாக்கம் (Kodambakkam) - Ghoda Bagh. Ghoda- குதிரை; Bagh- garden (தோட்டம்). குதிரைகளை கட்டி வைக்கப்பட்ட இடம் என போறும். அதுவே கோடம்பாக்கம் ஆனது.

சேத்துப்பட்டு (Chetpet) - 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து, சென்னையில் பல கட்டிடங்களை கட்டியவர் நம்பெருமாள் செட்டியார். அவர் பெயராலேயே இது செட்டியார் பேட்டை என அழைக்கப்பட்டது. பின்னாளில் சேத்துப்பட்டு என்றானது.

அண்ணா சாலை (Anna Salai/ Mount Road) - செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து செயின்ட் தாமஸ் மலைக்கு செல்லும் பாதை என்பதால் அது மவுண்ட் ரோடு என ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்டது. பின்னர் அது அண்ணா சாலை ஆனது.

மாம்பலம் (Mambalam) - மஹா வில்வ அம்பலம் என்ற பெயர் கொண்ட இப்பகுதி, நிறைய வில்வ மரங்களை கொண்டது. அதுவே பின்னர் மாம்பலம் ஆனது.

தேனாம்பேட்டை (Tennampet) - தென்னம் பேட்டை. தென்னை மரங்கள் அதன் இருக்கும் பகுதியாக இருந்ததால் தென்னம் பேட்டை. அதுவே தேனாம்பேட்டை ஆனது.

நந்தனம் (Nandanam) - பூத்து குலுங்கும் நந்தவனம் இருந்த பகுதி பின்னாளில் நந்தனம் ஆனது.

சைதாப்பேட்டை (Saidapet) - ஆற்காடு நவாபின் தளபதி சையது ஷாவின் பெயரால் இது சையது ஷா பேட்டை என அழைக்கப்பட்டு, பின்னர் சைதாப்பேட்டை ஆனது.

பரங்கிமலை (St. Thomas Mount) - கிருத்துவத்தை பரப்ப வந்த பரங்கியர் வாழ்ந்த /இருந்த மலை என்பதாலேயே இது பரங்கிமலை என அழைக்கப்பட்டது. இன்னொரு சிலர், பிருங்கி முனிவர் செய்த இடம் என்பதாலேயே பிருங்கி மலை என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் பரங்கி மலை ஆனது.

கிண்டி (Guindy) - பிருங்கி முனிவர் தவம் செய்து அவரின் கிண்டி (கமண்டலம்) இருந்த இடம் என்பதால் இது கிண்டி என பெயர் பெற்றது.

நங்கநல்லூர் (Nanganallur) - நங்கை நல்லூர். நங்கை என்பது திருமணம் ஆகாத கன்னி பெண்ணை குறிக்கும். இங்கு நங்கையாக இருக்கும் ராஜராஜகேஸ்வரி அம்மன் பெயராலேயே இப்பெயர் வந்தது.

மீனம்பாக்கம் (Meenambakkam) - இப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் மீன்வளம் அதிகமாக இருந்துள்ளதால் மீனம்பாக்கம் என பெயர் வந்தது.

திரிசூலம் (Thirusoolam) - இங்குள்ள திரிசூலநாதர் கோவில் பெயராலேயே இப்பெயர் வந்தது.

பல்லாவரம் (Pallavaram) - பல்லவர்கள் இருந்த இடம் என்பதால் பல்லவபுரம் என்று குழிக்கஅழைக்கப்பட்டு பின்னர் பல்லாவாம் ஆனது,

கிரோம்பேட்டை (Chromepet) -  தோல் தொழிற்சாலை இருந்த இடம் என்பதால் இது (கிராம் லெதர்) கிரோம்பேட்டை ஆனது.

தாம்பரம் (Tambaram) -  தாமாபுரம் என்ற பெயர் செங்கல்பட்டு திருகச்சூர் சிவன் கோவிலில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதுவே தாம்பரம் என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.  தாம்பு என்பது கயிரு என்று பொருளை குறிக்கும். இங்கு கயிறு திரிக்கும் தொழிற்சாலைகள் இருந்திருப்பதால் தாம்பரம் என பெயர் வந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

மாடம்பாக்கம் (Madambakkam) - திருப்புகழ் நூலில் இந்த இடத்தை பெயரை மாடையாம்பதி என்று அழைக்கப்பட்டுள்ளது. அதுவே பின்னாளில் மாடம்பாக்கம் ஆகியுள்ளது.

ராஜகீழ்ப்பக்கம் (Rajakilpakkam) - சோழ காலத்தில் மன்னர்கள் மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வர் கோவிலுக்கு சென்று விட்டு வரும் வழியில் பள்ளத்தில் இறங்கி மக்களை பார்த்த இடம் ராஜகீழ்ப்பாக்கம் என்று அழைக்கப்படுகிறது. 

பெருங்களத்தூர் (Perungalathur) - ஒரு காலத்தில் நிறைய குளங்கள் இருந்திருக்க வேண்டும். அதனாலேயே இப்பெயர் வந்தது.

இன்னும் சில இடங்களின் பெயர்கள் சமீப காலத்தில் சேர்க்கபட்டதால் காரண பெயர்கள் சரிவர தெரியவில்லை. மேலும் சில இடங்கள் வாய்மொழியின் அழைக்கப்படும் காரணமாக மட்டும் இருப்பதால் சரியான தரவுகள் நமக்குக் கிடைக்கவில்லை.


நன்றி!!!
பி. விமல் ராஜ்